Ranji Swami
புதிய முகம்
Interesting beginning.
Nice Start Dear....படத்திற்குச் சென்று விட்டாலும், பவித்ராவின் இதயம் லப்டப்… லப்டப்… என்று வேகமாக ஓடியது. பவித்ராவின் முகம் பார்த்து, "அம்மா கிட்ட சொல்லிட்டேன். யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க." என்று அக்கறையாகக் கூறினான் வாசுதேவன்.
பவித்ராவின் முகத்தில் கேலி புன்னகை தவழ்ந்தது. திரை அரங்கின் இருட்டில், அந்தப் புன்னகை இருளுக்குள் மறைந்தது.
இரவு பத்து மணி, உத்தமி பட்டாளையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.
பவித்ராவின் கைகள் சில்லிட்டது.
தலையைச் சரித்து வீட்டுச் சூழ்நிலையை பார்த்தாள். 'ஐயோ அத்தை தூங்கலை. சும்மாவே மகன் வந்த உடன் சிண்டு முடிந்து விடுவது தான் வேலை. இன்னைக்கு சொல்லாமல் படத்துக்கு வேற போயிருக்கோம். பவி நீ செத்த டி.' என்ற எண்ணம் தோன்ற பவித்ராவின் தலை விண்வினென்று வலித்தது.
"வாங்க... வாங்க... உங்களுக்காகத்தான் காத்துகிட்டு இருக்கேன்." என்று கூறி அவர்களை அன்பாக அழைத்து உணவு பரிமாறினார் உத்தமி.
பவித்ரா தன் உணவை முடித்துவிட்டு, சமையலறைக்குள் சென்று வேலைகளைப் பார்த்தாள்.
உத்தமி சில நிமிடங்கள் மகனிடம் பேசினார். அதன் பின் உத்தமி பவித்ராவிடம், "வெளிய போயிட்டு வந்து, ஏன் இவ்வளவு வேலை பார்க்கணும்? போய் படு." என்று அன்பாக தன் மகனுக்குக் கேட்கும் படி கூறினார்.
"சரி... அத்தை." என்று கூறி தங்கள் படுக்கையறைக்கு சென்றாள் பவித்ரா.
"நாளைக்கு தங்கச்சி வீட்டுக்கு வரா." என்று வாசுதேவன் படுக்கையில் சாய்ந்தபடி கூற, "சுபா வாராளா?" என்று ஆனந்தமாகக் கேட்டாள் பவித்ரா.
வாசுதேவன் தன் தலையை மேலும் கீழும் அசைத்து, "அம்மா உன்னை அதனால் தான் கோவிலில் இருந்து சீக்கிரம் வர சொன்னங்க போல. நீ மறந்திருப்பன்னு நான் சொன்னேன்." என்று வாசுதேவன் பவித்ராவுக்கு வக்காலத்து வாங்கியதைப் பெருமையாக கூறினான்.
பவித்ரா அவனை அதிர்ச்சியாகப் பார்த்தாள்.
"நாம ஆசைப்பட்டு சினிமா போய்ட்டோமுன்னு அம்மா பெருந்தன்மையா ஒன்னும் சொல்லலை. நீ இனி இப்படி மறக்காத பவித்ரா. கொஞ்சம் பொறுப்பா இருக்கனும்." என்று அவளைப் பார்த்து கண்டிப்போடு கூறினான் வாசுதேவன்.
பவி , பவித்ரா ஆனதை மனதில் குறித்துக் கொண்டு, 'ஆக... சில நிமிடத்தில் சிண்டு முடிக்கும் வேலை செவ்வனே நடந்துவிட்டது.' என்று பவித்ரா அவனை வெறுமையாகப் பார்த்தாள்.
"ஒருவேளை அத்தை என்கிட்டே சொல்லாமல், சொன்னதாக நினைத்திருந்தால்?" என்று தன் வாதம் தோல்வியில் தான் முடியும் என்றறிந்தும் நிதானமாகக் கேட்டாள் பவித்ரா.
"அம்மா சுபா வருவதைச் சொல்ல மறப்பாங்களா? என்ன தப்பை நீ பண்ணிட்டு, அம்மா மேல் குறை சொல்ற?" என்று சலிப்பாக கேட்டான் வாசுதேவன்.
"நான் உங்களை எங்கயும் கூட்டிட்டு போங்கன்னு கேட்கலை. நான் உண்டு... என் வேலை உண்டுன்னு போட்டதை சாப்பிட்டுட்டு அமைதியாகத் தானே இருக்கேன்." என்று பவித்ரா கோபமாக கேட்டாள்.
"என்ன டி... வாய் ரொம்ப நீளுது. உனக்கு என்ன குறை. வீட்டு வேலை செய்ய வேலை ஆட்கள். வகைவகையாக சேலை... நகை... எதுவும் நீ வேண்டும் என்று கேட்காமலே வாங்கி தரேன்... உன்னைக் கொஞ்சம் பொறுப்பா நடந்துக்கோன்னு சொன்னால்..." என்று வார்த்தைகளைக் கடித்து துப்பினான் வாசுதேவன்.
மெத்தையில் உறங்கிக் கொண்டிருந்த மகனை வெறுமையாகப் பார்த்தாள் பவித்ரா.
'உண்மை தான்... எனக்கு என்ன குறை? ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத தன்னை மட்டும் நினைத்துக் கொண்டிருக்கும் கணவன். வசதிக்கு ஒரு குறை கிடையாது. அதுவும் தான் ஆசைப் பட்ட கணவர்! ஆனால் இந்த வாழ்வில் தனக்கு ஏன் இத்தனை வெறுப்பு?' இந்தக் கேள்வி பவித்ராவிற்குள் பூதாகரமாக எழுந்தது.
"உன்னை நான் வேறு என்ன கேட்டேன். அம்மா சொல்றதை கேட்டு நடக்க வேண்டியது தானே?" என்று அவன் குரல் அந்த அறையில் எதிரொலித்தது.
'இங்கு தான் பிரச்சனை ஆரம்பமாகிறது. இவர் மட்டும் கேட்டால் போதாது. நானும் கேட்க வேண்டும்... கேள்... கேள் என்றால், எதைக் கேட்பது. எத்தனைக் குற்றச்சாட்டுகளை சுமப்பது? தன்னை ஒரு முட்டாள் போல் பாவித்து, தன்னை அடக்கி ஆள நினைத்தால்… அதைக் கணவனும் புரிந்து கொள்ளவில்லை என்றால்... எனக்கென்று விருப்பு... வெறுப்பு இருக்க கூடாதா? நான் நினைப்பது... செய்வது சரியாக இருக்காதா? ' என்ற எண்ணம் மேலோங்க பவித்ரா வாசுதேவனை வெறுப்பாகப் பார்த்தாள்.
"இப்படி வாயை மூடிக்கிட்டு இருந்தால் என்ன அர்த்தம்?" என்று வாசுதேவன் கடுமையாக கேட்க, "எதிரே இருப்பவருக்கு நான் பேசுவதை புரிந்து கொள்ளும் அறிவு இல்லைன்னு அர்த்தம். உங்க அம்மா சொன்னது மட்டும் தான் புரியும்ன்னு அர்த்தம்." என்று அவள் காட்டமாக கூற, அவள் கழுத்தை பிடித்தான் வாசுதேவன்.
"சங்கை நெரிச்சிருவேன் பார்த்துக்கோ. நாம ரெண்டு பேர் பேசும் பொழுது, அம்மாவை ஏன்டி இழுக்கிற?" என்று கர்ஜித்தான் வாசுதேவன்.
"உண்மையைச் சொன்னால், இப்படி தான் கட்டுக்கடங்கா கோபம் வரும்." என்று அவன் கழுத்தை பிடித்திருந்தாலும் திமிறிக் கொண்டு அழுத்தமாகச் சொன்னாள் பவித்ரா.
"ச்ச..." என்று கையை உதறினான் வாசுதேவன். அவன் வேகத்தைத் தாள முடியாமல் கீழே விழுந்தாள் பவித்ரா. பவித்ரா கீழே விழுந்த உடன் மனம் தாங்காமல், அவளைத் தூக்கி தன் தோள் மேல் சாய்த்துக் கொண்டு, "கொஞ்சம் மறதி இல்லாமல்... பொறுப்பா நடந்துக்கோ." என்று அவள் தலை தடவி மென்மையாகக் கூறினான் வாசுதேவன்.
'ஐயோ. அத்தை என்கிட்டே சொல்லவே இல்லை. எனக்கு மறதி இல்லை. நான் பொறுப்பாகத்தான் இருக்கிறேன்.' என்று கத்த வேண்டும் என்ற எண்ணம் பவித்ராவுக்கு மேலோங்கியது.
'ஆனால் சத்தம் செய்து என்ன பயன்? இதை எல்லாம் ஒரு பிரச்சனை என்று சொன்னால் இந்த உலகம் நம்புமா? இல்லை இது ஒரு பிரச்சனை என்று தாய் வீட்டுக்குச் செல்ல முடியுமா?' என்ற எண்ணம் தோன்ற கண்ணீர் மல்க வாசுதேவன் தோள் சாய்ந்து அழுதாள் பவித்ரா.
பவித்ராவுக்கு பல அறிவுரைகள் கூறி, படுக்கச் சென்றான் வாசுதேவன்.
எதிர்த்துப் பேசும் வகை தெரியாமலும், பொறுத்துப் போனால் எல்லாம் சரி ஆகிரும் என்ற அறிவுரையோடு வளர்ந்ததாலும், உறங்கிவிட்ட கணவனை மௌனமாக ஆழமாகப் பார்த்தாள் பவித்ரா.
'ஒரு வார்த்தை உன்னிடம் அம்மா சொன்னாங்களா? என்று கேட்டிருக்கலாமே…' என்று பவித்ராவின் மனம் ஊமையாக அழுதது. இப்படிப் பல "...லாமேக்கள்..." பவித்ராவின் மனதில் தேங்கி நின்றது.
இந்த "...லாமேக்களை..." வாசுதேவனின் அன்பின் முன் மறந்து போக பழகி இருந்தாள் பவித்ரா. 'ஆனால் எத்தனை முறை?' சின்ன பிரச்சனை தானே என்று ஆரம்பத்தில் எண்ணியது இப்பொழுது தனக்கு எதிராக திரும்பிக் கொண்டிருப்பது போல் தோன்றியது பவித்ராவுக்கு.
இது போல் எத்தனைச் சம்பவங்கள், என்றெண்ணி தூக்கம் வராமல் மெத்தையில் புரண்டாள்.
மணி இரவு பன்னிரண்டை எட்டியது.
'பெண்ணுக்கு எதிரான வன்முறை. அவளை உடல் ரீதியாகப் பாதிப்பது மட்டும் தானா? மன ரீதியாக அவளுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வே கிடையாதா?' என்று எண்ணி மனக்குழப்பத்தோடு அவர்கள் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த பவித்ரா, தன் மேலே கோபம் கொண்டு அதை வெளியிட தைரியம் இல்லாமல், சுவர் ஓரமாக ஒரு பென்சில் காகிதத்தோடு சாய்ந்தமர்ந்தாள்.
அதே நேரம்,
மெத்தையில் ஆழ்ந்த நித்திரையில் இருந்த நந்தினி, "அக்கா..." என்று அலறிக் கொண்டு எழுந்து அமர்ந்தாள்.
"அக்கா... கண் இல்லாமல்.... அக்கா.. கண் இல்லாமல்..." என்று திக்கி திணறி மூச்சு வாங்கிக் கொண்டு பயத்தோடு முணுமுணுத்தாள் நந்தினி.
இரண்டல்ல ஒன்று இணையாக பயணிக்கும்…