அனோன்ஸ்மெண்ட் வந்தவுடன் மனைவிக்கு போன் செய்து விசயத்தை சொல்லிவிட்டு, சற்றே மனமறியா சஞ்சலத்துடன், மகளை தனியாக அனுப்பியது தவறோ என்று எண்ணியவாறு அமர்ந்திருந்தார்.
தாய் மும்பை செல்ல வேண்டாம் என்று சொல்வது சரியென்றாலும், அலுவலகத்தில் தன்னை அனுப்ப எண்ணுவதிலும் தவறில்லை என்பது புரிந்தாலும், இப்படி ஒரு இக்கட்டான சூழலை எதிர்பார்க்கவில்லை, காதம்பரி.
சற்றே ஆறப்போட்டாள், பிறகு தான் போயாக வேண்டிய கட்டாயத்தினையும் எடுத்துக் கூறினாள்.
“எங்க ஆஃபீஸ் சார்பா நான் அனுப்ன டிசைன் செலக்ட் ஆகி இருக்குமா”
“அதுக்கு ..... பத்து நாள்ல கல்யாணத்தை வச்சிட்டு உன்ன அனுப்ப முடியுமா?”
“அம்மா...... இது யாரும் இப்டி எதிர்பாக்கல.... ஆனா .... செலக்ட் ஆன அஞ்சு டிசைன்ல என்னோடதும் ஒன்னு....... இந்த டிசைன் ரிலேட்டடா குவஷின் பண்ணுவாங்கம்மா.... அப்பொ டிசைன் பண்ணவங்களாலதான ஆன்சர் பண்ணமுடியும்.....
அந்த வெரிஃபிகேஷன் அன் டெஸ்டிங் செஷன்ல.....நிறைய பில்டர்ஸ் கலந்துப்பாங்க.... அப்பொ எல்லா வகையிலயும் எந்த டிசைன் ஆப்டா இருக்கோ அதுக்கு பெஸ்ட் டிசைனர் அவார்டு கிடைக்கும்,
அதுக்கப்பறம் எங்க கம்பெனியோட ப்ளேஸ் இன்னும் முன்னாடி வரும், எங்களுக்கு இன்னும் நிறைய ஆர்டர்ஸ் வரும், சம்பளம் கூடும், இப்டி இன்னும்..... எனக்கும், எங்க கம்பெனிக்கும் நிறைய பெனிஃபிட்ஸ் கிடைக்கும்...”
“அது யாருக்கு இப்பொ வேணும்”
“அம்மா.... அப்டி போகலனா நஷ்ட ஈடு எங்க கம்பெனிக்கு கொடுக்கணும்..... அப்றம் வேற எங்கயும் என்ன ப்ளேஸ் ஆக விடமாட்டாங்க”
“நீ வேலைக்கு போகணும்னு ஒன்னு இல்ல அங்க”
“அதுக்காகவா நான் படிச்சேன்”
“சொன்னா புரிஞ்சுக்கோ காதம்பரி”
“வேலய விட்டு நிக்கறதா இருந்தா... த்ரீ மந்த்ஸ் முன்னாடியே இன்ஃபார்ம் பண்ணனும்.... அப்டிதான அக்ரீமெண்ட் சைன் பண்ணி அங்க ஜாப் போனேன்.... இல்லனா நஷ்ட ஈடா எத்ன இலட்சம் கேட்டாலும் கொடுங்க......”
“அப்பாவை விட்டு பேச சொல்றேன்”
“அவங்க தெளிவா அக்ரீமெண்ட் போட்டு தான் வேலைக்கு சேர்த்திருக்காங்கம்மா...”
சிதம்பரம் மிகவும் யோசித்து, பிறகு மகளிடம்
“கண்டிப்பா வேலைக்கு போகணுமாம்மா”
“ஆமாப்பா....”
“இல்ல அவங்களுக்கு பெனால்டியா.... எவ்வளவு கேப்பாங்கனு தெரியுமாமா?”
“அவங்களுக்கு இந்த ப்ரொஜெக்ட் செலெக்ட் ஆனா எவ்வளவு வருமானம் வருமோ அவ்வளவு எதிர்பார்ப்பாங்கப்பா...”
“அப்டியா...உங்க MD ட்ட பேசி பாக்கவாம்மா...”
“வேணாம்பா.....”
“முன்னாடியே தெரிஞ்சிருந்தா.... கல்யாணத்தை கொஞ்சம் லேட்டா ஃபிக்ஸ் பண்ணீருக்கலாம்..... இப்பொ பத்திரிக்கை அடிச்சு எல்லா சொந்த பந்தங்களுக்கும் கொடுத்து முடிச்சாச்சு.... இன்னும் கல்யாண வேலைலாம் பாக்கி இருக்கு..... இல்லனா நானு உங்கூட வந்துருவேன்.... யோசிப்போம்.....”
மகளிடம் சொல்லாமல், அவளின் MD வசம் சிதம்பரம் பேசினார். அதற்கு அவர், அவளுக்கு நல்ல ஆபர்சூனிட்டி அவர்களின் நிறுவனம் மூலம் கிடைத்திருப்பதாகவும், இந்த விழா, கான்ஃபரன்ஸ் மற்றும் டெஸ்டிங்க் செஷன் அனைத்திலும் மொத்தம் ஐந்து நபர்கள் தங்களின் நிறுவனம் சார்பாக கலந்து கொள்வதாகவும், அதனால் பயப்படாமல் அனுப்பி வைக்குமாறும் கூறினார்.
ஒரு மனதாக மனைவியிடமும் விசயத்தினைக் கூறி சம்மதிக்க வைத்திருந்தார்.
சரியாக இரவு ஒன்பது மணிக்கு வந்த காதம்பரியை நேரில் பார்த்த பிறகே நிம்மதியாக உணர்ந்தார், சிதம்பரம். வீட்டிற்கு வர இரவு பத்தரை ஆகிவிட்டது.
“ஏன்மா ரொம்ப டல்லா இருக்க”
“ஒன்னுல்லப்பா” , அதற்கு மேல் பேசாமல் உடன் வந்த மகளை கவனிக்க இயலாத அளவிற்கு ட்ராஃபிக்.
வீட்டிற்கு வந்த பிறகும் இருவரது கேள்விகளுக்கும், ஒற்றை பதிலை கொடுத்தவள், அமைதியாக உண்டு விட்டு படுக்கச் சென்றுவிட்டாள்.
நேரமானதால் மகளிடம் அதிகமாக எதுவும் பேச்சு கொடுக்காமல் கமலாவும், சிதம்பரமும் திருமண வேலைகளைப் பற்றி பேசியபடி உறங்கச் சென்றனர்.
அடுத்த நாள் வழக்கம்போல எழுந்து வேலைகளை கவனித்த கமலத்திற்கு ஏழு மணியாகியும் எழாத மகளை எண்ணியவாறு, அவளின் அறைக்குச் சென்றார்.
“காதம்பரி................... என்னம்மா இன்னும் எழாம இருக்க....?”
“ம்.... ம்ம் ....”
“காதம்பரி......”
“ம்......ம்.....”
“என்னடா செய்யுது”, என பதறியபடி மகளின் படுக்கை அருகே வந்தவர், மகளின் கை தொட்டார்..... கை சில்லென்று இருந்தது......
பதறியவர்.. கன்னங்களில் தட்டி..... மகளை அழைத்தார்.
ம்.... என்பதற்கு மேல் அவளால் பேச இயலவில்லை. ஆனால், அவள் மூடிய இமைகளுக்குள் இருந்து கண்ணீர் வந்தபடி இருந்தது.
கமலத்தின் சத்தம் கேட்டு பதறியபடி வந்த சிதம்பரம், மகளின் நிலை புரியாமல், உடனே அம்புலன்ஸிற்கு போன் செய்தார். சற்று நேரத்தில் பிரபல மருத்துவமனையின் எமெர்ஜென்ஸி வார்டில் அட்மிட் செய்யப்பட்டாள் காதம்பரி.
மருத்துவர்கள் அவர்கள் இருவரிடமும் சில முக்கியமான விசயங்களைக் கேட்டறிந்துவிட்டு, அவளின் சிகிச்சைகளைக் கவனிக்கச் சென்று விட்டனர்.
மகளுக்கு என்ன செய்கிறது என்பதை டாக்டர்கள் கூறுவார்கள் என இருவரும் காத்திருந்து அன்று மாலையானது. அதுவரை அவர்களிடம் எதுவும் கூறாததால் அவர்களே டாக்டரிடம் சென்று கேட்டார்கள்.
அனைத்து டெஸ்ட்களும் எடுத்திருப்பதாகவும், சற்று பொறுமையுடன் கோ-ஆபரேட் செய்யுமாறும் கூறிச் சென்றார்கள்.
அதன்பின், சிதம்பரம் தனது தாயை போனில் அழைத்து மகளுக்கு சற்று உடல் நலக்குறைவாக இருப்பதால் சென்னை கிளம்பி வருமாறு கூறினார்.