• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அழகுக்கு அழகு சேர்க்க- தொடர்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
நரை முடியை தடுக்கும் கடுகு எண்ணெய்

வாரம் இருமுறை கடுகு எண்ணெயை தலையில் தேய்த்து குளித்தால் வயதானாலும் நரை முடி எளிதில் வராது. கடுகு எண்ணெயை லேசாக சூடுபடுத்தி தலையில் மசாஜ் செய்தால் நரை முடி மறையும்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த எண்ணெயை உபயோகித்தால் கூந்தல் அடர்த்தியாக வளரும். வட இந்தியர்களில் கூந்தல் அழகிற்கு இதுதான் காரணம்.

கடுகு எண்ணெய் பயன்படுத்துவதால் ஈரப்பதம் அதிக நேரம் கூந்தலில் நீடிக்கும். எளிதில் வறட்சி அடையாது.

பொடுகு அரிப்பினால் கூந்தல் ஆரோக்கியமற்றதாக காணப்பட்டால் கடுகு எண்ணெய் கொண்டு தினமும் மசாஜ் செய்ய குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

மெலிதான கூந்தல் இருந்தால் வாரம் மூன்று நாட்கள் கடுகு எண்ணெய் கொண்டு ஆயில் மசாஜ் செய்து குளித்து வர கூந்தல் அடர்த்தி அதிகரிக்கும்.

கூந்தலில் நுனி அடிக்கடி பிளவு உண்டானால் அதிகமாக முடி உதிர்தல் ஏற்படும். இதனை தடுக்க கடுகு எண்ணெயால் மசாஜ் செய்து வர நுனி பிளவு நீங்கும்.

பொடுகை விரட்டும் வேப்பிலை நீர்

பொடுகு என்பது சற்று தொல்லை தரும் விஷயம்தான். அடிக்கடி அரிக்கும். நாளுக்கு நாள் பொடுகு அதிகரிக்குமே தவிர என்ன செய்தாலும் குறையாது. தண்ணீர் மாறினாலும் பொடுகுத் தொல்லை உடனே வந்துவிடும்.

பொடுகை சரியாக கவனிக்காவிட்டால் பின்னாளில் உங்கள் கூந்தலின் வேர்க்கால்களை தாக்கி பலமிழக்கச் செய்யும். இதன் விளைவு எப்போதும் முடி மெலிதாய் பார்ப்பதற்கு அசிங்கமாய் காட்சி அளிக்கும். வேப்பிலையால் பொடுகை ஓட விரட்டமுடியும். அது எப்படி என பார்க்கலாம்.

வேப்பிலை நீர்

தேவையான பொருட்கள் :


வேப்பிலை - இரண்டு கைப்பிடி

நீர் - ஒரு லிட்டர்

தேன் - ஒரு ஸ்பூன்

செய்முறை :


நீரை நன்றாக கொதிக்க வையுங்கள். பின்னர் அடுப்பை அணைத்து அதில் இரண்டு கைப்பிடி வேப்பிலையை போட்டு இரவு முழுவதும் அப்படியே ஊற விடுங்கள்.

மறுநாள் காலையில் வேப்பிலை வடிகட்டி அந்த நீரை பத்திரமாய் எடுத்து வையுங்கள். இப்போது ஊறிய வேப்பிலையை அரைத்து அதனுடன் தேன் கலந்து தலையில் தடவுங்கள். முப்பது நிமிடங்கள் கழித்து தலையை அலசியபின் அந்த ஊறிய வேப்பிலை நீரால் இறுதியாக அலசுங்கள். பொடுகு தூர ஓடிடும். இதனை வாரம் மூன்று முறை செய்ய வேண்டும். இரண்டு வாரங்கள் தொடர்ந்து செய்து வந்தால் நல்லபலனை காணலாம்.

வேப்பிலை மாஸ்க்

தேவையான பொருட்கள் :


வேப்பிலை - இரண்டு கைப்பிடி

வெந்தயம் - இரண்டு ஸ்பூன்

யோகார்ட் - அரை கப்

எலுமிச்சை சாறு - ஒரு ஸ்பூன்.

செய்முறை :


வெந்தயத்தை முன்தினமே ஊற வைத்திடுங்கள். பின்னர் ஊறிய வெந்தயத்துடன் வேப்பிலை கலந்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் யோகார்ட், எலுமிச்சை சாறு கலந்து, தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலசவும். இந்த இரண்டு குறிப்புகளுமே மிகவும் பயனளிக்கும். உபயோகித்துப் பாருங்கள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
முடி உதிர்வை முற்றிலும் தடுக்கும் நெல்லிக்காய் எண்ணெய்

இன்றைய காலத்தில் ஒவ்வொருவருக்கும் தலைமுடி பிரச்சனை உள்ளது. இதற்கு மோசமான உணவுப் பழக்கங்கள், அதிகப்படியான மன அழுத்தம், மாசடைந்த சுற்றுச்சூழல் போன்றவை காரணங்களாகும். மேலும் தலைமுடிக்கு கிடைக்க வேண்டிய சத்துக்கள் சரியான அளவில் கிடைக்காமல், தலைமுடி வலுவிழந்தும், ஆரோக்கியமிழந்தும் உள்ளது.

எனவே முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்களால் தலைமுடியைப் பராமரிக்க வேண்டியது அவசியம். அதில் ஒன்று தான் நெல்லிக்காய் எண்ணெய். இந்த எண்ணெயால் தலைமுடி பிரச்சனைகள் நீங்குவதோடு, தலைமுடியின் ஆரோக்கியமும் மேம்படும்.

இப்போது நெல்லிக்காய் எண்ணெயைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்தால் பெறும் நன்மைகள் குறித்து காண்போம்.

தலைமுடி அதிகம் உதிர்ந்தால், ஷாம்புவுடன் சிறிது நெல்லிக்காய் எண்ணெய் சேர்த்து கலந்து பயன்படுத்துங்கள். இதனால் ஸ்கால்ப் வறட்சியடைந்து, முடி உடைவது தடுக்கப்படும்.

தலைக்கு ஷாம்பு பயன்படுத்திய பின், நீரில் சிறிது நெல்லிக்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, தலையில் தடவி மசாஜ் செய்து பின் அலச வேண்டும். இதனால் முடி பட்டுப் போன்று இருக்கும்.

தலைக்கு ஷாம்பு பயன்படுத்ய பின், சிறிது நெல்லிக்காய் எண்ணெயை முடியின் முனைகளில் தடவ வேண்டும். இதனால் முடி வறட்சியடைந்து மென்மையிழந்து காணப்படுவதைத் தடுக்கலாம்.

நெல்லிக்காய் எண்ணெய் நரைமுடியைப் போக்கும் திறன் கொண்டது. மேலும் பழங்காலத்தில் இருந்து நரைமுடியைப் போக்க நெல்லிக்காய் எண்ணெய் தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆகவே நெல்லிக்காய் எண்ணெயைக் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து வர, முடி நரைப்பதைத் தடுக்கலாம்.

பொடுகுத் தொல்லையால் அடிக்கடி அவஸ்தைப்படுபவர்க்ள, நெல்லிக்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து ஒரு மணிநேரம் ஊற வைத்து அலச வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், பொடுகு வருவதை முற்றிலும் தடுக்கலாம்.

நெல்லிக்காய் எண்ணெய் முடி வெடிப்பைப் போக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு நெல்லிக்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தினமும் முடியின் முனைகளில் தடவி வர, பாதிக்கப்பட்ட முடியின் முனைகள் சரிசெய்யப்பட்டு, முடி வெடிப்பது தடுக்கப்படும்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
சுருட்டை முடியை பராமரிக்க டிப்ஸ்

சுருள் முடி உள்ளவர்கள் தங்களின் முடிகளை எளிமையாக கையாள முடியாது. ஏனெனில் அவர்களின் முடிகள் அடர்த்தியாக காணப்பட்டாலும், முடிகளின் நுனிகளில் பிளவுகள் அதிகமாக ஏற்பட்டு, வேகமாக வறண்டு, அடிக்கடி சிக்கல் விழும்.

இதன் காரணமாக எந்த ஹேர் ஸ்டைலும் ஒத்து வராமல் இருக்கும். பார்ட்டிகள் அல்லது விழாவிற்கு செல்லும் போது சுருள் முடியானது நம் கைகளுக்கு அடங்காமல் இருக்கும்.

சுருள் முடியை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை கீழே பார்க்கலாம்.

சுருள் முடி உள்ளவர்கள் தங்கள் கூந்தலுக்கு பொருத்தமான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். இதனால் கூந்தல் வறட்சியை தடுக்க முடியும்.

தினமும் தலைக்கு குளிப்பதால், முடிகளில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் சுருள் முடி உள்ளவர்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குளித்தால் போதுமானது.

அடர்த்தியாக இருக்கும் சுருள் முடியானது, தலைக்கு அலங்காரம் செய்யும் போது, கைகளுக்கு பிடிபடாமல் இருக்கும். இதனால் முடிகளுக்கு அலங்காரம் செய்வதற்கு முன் சிலிக்கான் சீரம் தலையில் தடவினால், கூந்தல் அடங்கி நீளமாகவும் தெரியும்.

தலைமுடி உதிர்ந்த இடத்தில் முடி வளர எளிய இயற்கை வழிமுறைகள்

சாதம் வடித்த நீருடன் (வடிகஞ்சி) சிகைக்காய் பவுடரைக் கலந்து தேய்து வாரம் இருமுறை குளித்துவர, முடி அடர்த்தியாக வளரும்.

ஆலிவ் எண்ணெய் சிறிது சூடாக்கி, தினசரி தேய்த்து ஆறு மணி நேரம் கழித்து குளித்துவிடவும். முடி பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

கூந்தல் வளர்ச்சிக்கு உடல் போஷாக்கு மிகமிக முக்கியம். விதவிதமான கூந்தல் தைலங்களை உபயோகிப்பதைவிட சத்தான ஆகாரங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது.

கறிவேப்பிலை உணவில் தாராளமாய் சேர்த்துக்கொள்ளுங்கள் தலைமுடி செழிப்பாய் வளரும்.

செம்பருத்திப்பூவை கசக்கிச் சாறு எடுத்து முடி உதிர்ந்து சொட்டையாகியுள்ள இடத்தில் தேய்த்துவர முடி வளர ஆரம்பிக்கும்.

தாமரை இலையை அரைத்துச் சாறெடுத்து நல்லெண்ணெய்யுடன் கலந்து தைலமாக காய்ச்சிக் கொள்ளவும். இதனை தலை சொட்டையான இடத்தில் தேய்த்துவர, அந்த இடத்தில் முடி கருகருவென வளர்ந்துவிடும்.

மருதாணி இலையை தேங்காய் எண்ணெயிலிட்டு காய்ச்சி வடிகட்டி வைத்துகொள்ளுங்கள். இதனை தினசரி தலைக்குத் தடவிவர செம்பட்டை மாறி முடி கருமையாகும்.

வெந்தயத்தை தண்ணீர்விட்டு விழுதாய் அரைத்து தலையில் தேய்த்து, அரைமணிநேரம் வைத்திருந்து குளித்துவிடுங்கள். அடிக்கடி பயன்படுத்திவர, முடி வளரும், முடி கொட்டுதல் நீங்கும்.

ஒரு ஸ்பூன் இஞ்சில்ச் சாற்றில் சிறிது தேன் கலந்து அதிகாலையில் சாப்பிட்டுவர, பித்த நரை, மற்றும் இளநரை மறையும்.

பாதாம் எண்ணெயினால் தினசரி தலையில் வேர்க்காலில் குறைந்தது பதினைந்து நிமிடங்கள் மசாஜ் செய்துவர முடி வளர்ச்சி அதிகமாகும்.

பச்சைக் காய்கறிகளை நிறைய சாப்பிடுவதும் பால், பழங்கள், முளைக்கட்டிய தானியங்கள், வெண்ணெய், கோதுமை உணவுகள், சோயாபீன்ஸ், பருப்பு வகைகளை நிறைய உணவாகக் கொள்வதும் முடியை நன்கு வளர்த்திட ஏதுவாகும்.

முடி நன்கு வளர முடி சார்ந்த பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க, இயற்கை முறை ஷாம்புகளையே உபயோகியுங்கள்.

தலைமுடியை நெல்லிக்காய் பொடி அல்லது சிகைக்காய் கொண்டு மசாஜ் செய்து அலசிவாருங்கள். முடி வளர்ச்சி உண்டாகும்.

அடிக்கடி ஆயில் மசாஜ், முடியின் வேர்க்காலுக்கு செய்து வாருங்கள்.

உடம்பில் மலச்சிக்கல் உண்டானால், உடல் உஷ்ணம் அதிகமாகி, உடம்பில் பித்தம் அதிகரித்து, தலைமுடி கொட்ட ஆரம்பித்துவிடும். எனவே மலசிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

கொத்தமல்லி இலைச்சாற்றினைக் கொண்டு, தலைமுடியின் வேர்க்காலில் மசாஜ் செய்துவர தலைமுடி கருமையாய் வளரும்.

தேங்காய் எண்ணெய்யுடன் சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து தலையில் மசாஜ் செய்துவர, முடி நன்கு வளரும்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
வீட்டிலேயே தயாரிக்கலாம் நேச்சுரல் ஹேர் மாஸ்க்குகள்

கண்ட கெமிக்கல் கலந்த பொருட்களைக் கொண்டு தலைமுடியைப் பராமரிப்பதற்கு பதிலாக, நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு பராமரித்தாலே போதும். இங்கு தலைமுடியின் பொலிவை அதிகரிக்கும் மற்றும் தலையில் உள்ள நரைமுடியைப் போக்கும் சில ஹேர் மாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தேவையான பொருட்கள்:


முட்டை வெள்ளைக்கரு – ஒன்று

ஆலிவ் ஆயில் - ஒரு டேபிள் ஸ்பூன்

தேன் - ஒரு டேபிள் ஸ்பூன்

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும், மிக்ஸியில் போட்டு அனைத்தையும் அரைத்து ஸ்கால்ப்பில் தடவி முப்பது நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு வெவவெதுப்பான நீரில் அலச வேண்டும். இதனால் தலைமுடி பட்டுப் போன்று மென்மையாகவும், பொலிவோடும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

ஹேர் கண்டடிஷனர் - இரண்டு டேபிள் ஸ்பூன்

பட்டைத் தூள் - நான்கு டேபிள் ஸ்பூன்

தேன்- மூன்று டேபிள் ஸ்பூன்

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து, பின் அதனை ஈரமான தலைமுடி மற்றும் ஸ்கால்ப் மற்றும் தலைடியின் நீளத்திற்குத் தடவி, பிளாஸ்டிக் கவர் பயன்படுத்தி, தலையைச் சுற்றி, இரண்டு மணிநேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இப்படி தினமும் பின்பற்றி வந்தால், தலைமுடி ஆரோக்கியத்துடனும், நரைமுடி நீங்கியும் காணப்படும்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பெண்களுக்கு ஏற்படும் வழுக்கை பிரச்சனையும் தீர்வும்

பொதுவாகப் பெண்களுக்கு இருக்கக்கூடிய பல்வேறு முடி பிரச்சனைகளில் ஒன்று தான் பெண்களின் தலை வழுக்கைப் பிரச்சனை.

பரம்பரை அல்லது பெண்களின் குடும்ப வழி வந்த வழுக்கை

வயது முதிர்தல்

அறுவை சிகிச்சை மற்றும் மருந்துகளின் பக்க விளைவுகள்

மாதவிடாய் நிறுத்தம்


இதுபோன்ற வழுக்கைப் பிரச்சனைக்கு ஒரு நல்ல சரும சிகிச்சை நிபுணரை அணுகி இதற்கான காரணங்களை ஆராய்ந்து ஆலோசனைப் பெற்று அதற்குத் தகுந்த சிகிச்சையை பெற வேண்டும். இந்தத் துறையில் நல்ல அனுபவம் வாய்ந்த மருத்துவர் அல்லது ஆலோசகரைப் பார்ப்பதும் சரியாக இருக்கும்.

இவ்வகை வழுக்கை ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருபாலரிடமும் இருந்தாலும், வழுக்கைத் துவங்கும் இடம் இருவருக்கும் வேறுபடும். ஆண்களுக்கு உச்சந்தலையிலும், பெண்களுக்கு வகிடு எடுக்கும் இடத்திலும் வழுக்கை விழத் தொடங்கும். இது தொடர்ந்த பரவலான முடி உதிர்விற்கும் வழிவகுக்கும். இந்த முடி உதிர்வினால் நீங்கள் மன நெருக்கடிகளுக்கும் உள்ளாக நேரிடலாம்.

சிகிச்சைகள்


முடியைப் பிரிக்கும் பெர்ம் எனப்படும் சிகிச்சை, லோஷன்கள் மற்றும் பிற அழகுப் பொருட்களை உபயோகித்து உங்கள் முடியை அடர்த்தியாகவும் பரவலாகவும் காட்டலாம்.

இதற்கென பிரத்தியேகமாக உள்ள தேர்ச்சி பெற்ற நிபுணர்களிடம் ஆலோசனையை தொடர்ந்து பெற்று வழுக்கையை தவிர்க்க சிகிச்சை செய்து கொள்ளலாம்.

முடிகளை சேர்த்தல் முறை மூலம் அதிகப்படுத்த முயற்சி செய்யலாம். இது முடி பரவலை இயற்கையாகக் காட்டும். நீங்கள் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க நிபுணரைச் சந்தித்து ஆலோசனைப் பெறுங்கள்.

முடி மாற்று அறுவை சிகிச்சை வழுக்கைக்கு வேறொரு வழியாகும்.

புதிய நவீன சிகிச்சைகள் மிகவும் மேம்பட்டவைகளாக இருப்பதுடன் நல்ல பலன் தருவதாக உள்ளன என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வழுக்கைத் தலையாவதை தடுக்கும் பாட்டி வைத்தியம்

இன்றைய தலைமுறையினருக்கு வழுக்கைத் தலை இளமையிலேயே வந்துவிடுகிறது. இங்கு வழுக்கைத் தலையாவதைத் தடுக்கும் சில பாட்டி வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வைத்தியங்கள் தலைமுடி உதிர்வதைத் தடுப்பதுடன், மயிர்கால்களை வலிமைப்படுத்தி, முடியின் வளர்ச்சியைத் தூண்டும்.

தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடேற்றி, அத்துடன் வெந்தயத்தை சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கி, அந்த எண்ணெயை தொடர்ச்சியாக தலைக்கு தடவி வந்தால், தலைமுடி உதிர்வது தடுக்கப்படும்.

பூண்டை வெயிலில் நன்கு உலர்த்தி, பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அதனை தேன் கலந்து, வழுக்கை விழும் இடத்தில் தடவி வர, வழுக்கை விழுந்த இடத்திலும் முடி நன்கு வளருமாம்.

சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி பதினைந்து நிமிடம் ஊற வைத்து, பின் சீகைக்காய் போட்டு அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வர, நல்ல பலன் கிடைக்கும்.

பூண்டு பற்களை தட்டி தேங்காய் எண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, குளிர்ந்த பின் அந்த எண்ணெயால் ஸ்கால்ப்பை மசாஜ் செய்து, முப்பது நிமிடம் கழித்து, ஷாம்பு போட்டு அலச வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வர, தலைமுடி உதிர்வது தடுக்கப்பட்டு, வழுக்கை ஏற்படுவதும் தடுக்கப்படும்.

செம்பருத்தி பூக்களை அரைத்து நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு கலந்து, அதை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் படும்படி தடவி சில மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இதனால் முடி உதிர்வது குறைவதோடு, நரைமுடியும் தடுக்கப்படும்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
கூந்தல் பிரச்சனையை தீர்க்கும் சீயக்காய் பொடி அரைப்பது எப்படி?

கூந்தல் பிரச்சனை இருப்பவர்கள் வாரம் இருமுறை சீயக்காய் போட்டு தலைக்கு குளித்து வரலாம். சீயக்காயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் உதிர்வது, இளநரை, பொடுகு, அரிப்பு போன்ற கூந்தல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

இப்போது சீயக்காய் அரைக்க என்னனென்ன பொருட்களை அதில் போட வேண்டும் என்பதை பார்க்கலாம்.

சீயக்காய் பொடி அரைக்க தேவையான பொருட்கள் :

சீயக்காய் - ஒரு கிலோ

வெந்தயம் - நூறு கிராம்

பயத்தம் பயிறு- ¼ கிலோ

காய்ந்த நெல்லி - நூறு கிராம் (கொட்டை எடுக்கவும் )

கார்போக அரிசி - நூறு கிராம்

பூவந்திக் கொட்டை - நூறு கிராம் ( கொட்டை எடுக்கவும் )

அனைத்து பொருட்களையும் வெயிலில் இரண்டு நாட்கள் வைத்து நன்றாக காய்ந்த பின் மிஷினில் கொடுத்து அரைத்து கொள்ள வேண்டும்.

வெட்டி வேர், ஆவாரம்பூ, செம்பருத்தி பூ, இலை, பெருமாளுக்கு சார்தின ரோஜா பூக்கள், தவனம், மரிக்கொழுந்து போன்றவற்றை காயவைத்து மில்லில் அரைக்கலாம்.

தலையில் எண்ணெய் தடவி பத்து நிமிடம் கழித்து, சீயக்காய் குழைத்து பதினைந்து நிமிடங்கள் ஊறவைத்து, அலசினால் ஷாம்பூ தோற்றுவிடும்.வாசனையாக இருக்கும்.

வெள்ளை முடியை கருமையாக மாற்றும் இயற்கை வழிகள்

அவுரி பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இயற்கையாக இது கருமை நிறத்தை தரும். இதனை முடிகேற்ற அளவில் எடுத்து, சம அளவு மருதாணிபொடியுடன் அல்லது மருதாணி இலையுடன் அரைத்து தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து குளித்தால் முடி கருமை நிறத்தில் மாறும்.

தேயிலையை பொடியை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து அரைமணி நேரம் கழித்து அதனை அரைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். இதனை தலையில் தடவி அரைமணி நேரம் ஊற வைத்து பின் குளித்தால் நரை முடி கருமையாக மாறும்.

ஒரு கொத்து கருவேப்பிலையுடன் இரண்டு டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி மற்றும் இரண்டு டீ ஸ்பூன் பிராமி பொடி ஆகியவற்றை கலந்து அரைத்துக் கொண்டு, இந்த கலவையை உங்கள் வேர்கால்களில் படும்படி தலையில் தடவ வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு தரமான ஷாம்பு அல்லது சீகைக்காய் உபயோகித்து குளிக்க வேண்டும். இந்த முறை வாரம் இரண்டு முறை பயனளிக்கும்.

தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தடவுங்கள். இது தலையில் ரசாயன விளைவுகளை ஏற்படுத்தி, முடியை கருமையாக்குகிறது. வாரம் இருமுறை செய்தால் கூந்தல் கருமை நிறத்தில் கட்டாயம் மாறும்.

ஒரு இரும்பு வாணலியில் ஒரு கப் நெல்லிக்காய் பொடியை வறுக்க வேண்டும். அது சாம்பலாகும் வரை வறுத்து அதில் ஐநூறு மி. லி. தேங்காய் எண்ணெயை விடவும். அடுப்பை குறைந்த தீயிலேயே வைத்திருக்க வேண்டும். இருபது நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்க வேண்டும். இந்த எண்ணெயை குளிர வைத்து ஒரு நாள் முழுவதும் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர் அதனை வடிகட்டி அந்த எண்ணெயை வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து மசாஜ் செய்து குளித்தால் நரை முடி நாளடைவில் கருமையாகிவிடும்.

வம்சமும், தலை முடியும்

மனிதனின் தலையில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்தில் இருந்து இரண்டு லட்சம் வரை தலைமுடிகள் இருக்கின்றன. அவை ஒரு மாதத்துக்குள் ¼ சென்டி மீட்டர் நீளம் வளர்கின்றன. எல்லா தலைமுடியும் பாலிக்கில்ஸ் என்ற தனிப்பட்ட நுட்பமான பைகளில் இருந்துதான் வளர்கின்றன. இவை அனைத்துமே செல்கள்தான்.

இந்த ‘பாலிக்கில்ஸ்’ பை மேல் தோலில் இருந்து கீழ் தோலை துளைத்து இருக்கும். ஒரு மனிதனுக்கு இந்த பைகள் எத்தனை இருக்க வேண்டும், அதில் இருக்கும் முடிகளின் அடர்த்தி எவ்வளவு என்பதையெல்லாம் நம்மால் தீர்மானிக்க முடியாது. நமது வம்சம்தான் தீர்மானிக்கும். வம்ச வகை என்பது நமது மரபணுக்களில் உள்ளது. ரோமப்பைகள் என்பது ஒரு குழந்தை கருவாக உருவான இரண்டாவது மாதத்தில் இருந்து ஐந்தாவது மாதத்துக்குள் தீர்மானமாகி அமைந்து விடுகின்றன.

தலைமுடியுடன் நிறமும் பிறப்பிலேயே தீர்மானிக்கப்படுகிறது. கருமை, பிரவுன், வெள்ளை என்று பல நிறங்கள் தலை முடிக்கு உண்டு. முடியின் உண்மையான நிறம் வெள்ளைதான். மெலனின்தான் முடியை கருப்பாக்குகிறது. வயது ஆக, ஆக மெலனின் சுரப்பது குறைகிறது. அதனால் தலைமுடியின் உண்மை நிறமான வெள்ளை வெளியே தெரிகிறது.

ஒவ்வொரு தலைமுடிக்கும் தனிப்பட்ட வாழ்நாள் இருக்கிறது. அதனால் தான் தினமும் முடி உதிர்கிறது. ஒரு நாளைக்கு நாற்பது முதல் நூறு முடிகள் வரை உதிர்வது சாதாரண நிகழ்வு. அதே வேளையில் சில ரோமங்கள் அதற்கு இணையாக புதிதாக முளைப்பதால் ரோம அடர்த்தி எப்போதும் நமக்கு ஒரே மாதிரியாக தெரிகிறது.

முடி வளரும் வேகமும் ஆளுக்கு ஆள் மாறுகிறது. அவ்வளவு ஏன், ஒரு மனிதனின் உடலிலேயே கூட ஒவ்வொரு இடத்திலும் ரோமங்களின் வளர்ச்சி ஒவ்வொரு விதமாக இருக்கிறது. முடி இழப்பு என்பது பெரும்பாலும் ஆண்களின் பிரச்சினைதான். பெண்களுக்கு குழந்தை பிறந்த பின்னும், மெனோபாஸூக்கு பிறகும் முடி உதிரும்.

கர்ப்பமாக இருக்கும் போது முடி மிக அடர்த்தியாக வளரும். குழந்தைப் பிறந்த பின் வாரத்துக்கு ஆயிரம் என்ற கணக்கில் முடி கொட்டும். வழுக்கை என்பது பரம்பரை சமாச்சாரம்தான். ஆண் தன்மையை அதிகப்படுத்தும் ‘ஆண்ட்ரோஜன்‘ ஹார்மோன் சுரப்பு அதிகம் இருந்தாலும் முடி உதிரும். அதனால் வழுக்கை தலையர்கள் காதலில் கில்லாடியாக இருப்பார்கள் என்பது ஓரளவிற்கு உண்மையே!

-நாளை தொடரும்
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
கூந்தல் பிசுபிசுக்கான காரணமும் தீர்வும்

தலைமுடியின் வேர்கால்களில் சுரக்கப்படும் அதிகப்படியான எண்ணெயே பிசுபிசுப்பான கூந்தலுக்கு காரணம். செபேஷியஸ் சுரப்பிகளின் தூண்டலே இதற்குக் காரணம். செபேஷியஸ் சுரப்பி சுரக்கும் எண்ணெய் கூந்தலை வெளிப்புற மாசிலிருந்தும் தொற்றுக்களிலிருந்தும் பாதுகாக்கும். அதுவே அளவுக்கதிகமாக இந்த எண்ணெய் சுரந்தால், கூந்தலில் பிசுபிசுப்பான நிலையை கொண்டு தரும். இதனால் பொடுகு, அரிப்பு, முடி உதிர்தல் ஆகியவை அதிகமாக ஏற்படும்.

எண்ணெய் பசைக் கூந்தலுக்கான ஷாம்பு உபயோகித்து வாரம் மூன்று முறை கூந்தலை அலச வேண்டும். உங்கள் கூந்தல் ரொம்பவும் எண்ணெய் பசையுடன் இல்லை என்றால், ஷாம்பு குளியலுக்குப் பிறகு மிதமான கண்டிஷனர் உபயோகிக்கலாம்.

கூந்தலுக்கு எண்ணெய் வைக்கக் கூடாது. இவை கூந்தலை பலவீனமாக்கும். முடியை வேகமாய் உதிரச் செய்யும். அதேபோல் அதிகமாய் கூந்தலை சீவுதல் கூடாது. அது எண்ணெய் சுரப்பிகளைத் தூண்டி, எண்ணெய் சுரப்பை அதிகப்படுத்தும்.

தினசரி உபயோகத்துக்கேற்ற வகையில் மைல்டான ஷாம்புவாக தேர்ந்தெடுக்கவும்.

நீரில் கால் கப் ஓட்ஸை போட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கபும். ஆறியபின் வடிகட்டி அந்த நீரை தலையில் தடவுங்கள். பதினைந்து நிமிடங்கள் கழித்து, தலையை அலசவும். இவ்வாறு செய்தால், அதிகப்படியான எண்ணெய் சுரப்பது குறையும்.

பதினைந்து நாட்களுக்கொரு ஒருமுறை தலைக்கு ஹென்னா உபயோகிப்பதும், அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும். அதே போல் அதிகப்படியான எண்ணெய் கூந்தலில் சுரந்தால் எலுமிச்சை சாறினை தலையில் தேய்த்து அலசினாலும் கட்டுப்படும்.

எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளுக்கும், பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கும் இடம் அளிக்காதீர்கள். தினசரி உணவில் நிறைய பழங்களும் காய்கறிகளும் எடுத்துக் கொள்ளுங்கள். உலர்ந்த திராட்சை, பாதாம், பெர்ரி மற்றும் நிறைய பழ ஜூஸ் சேர்த்துக் கொள்ளவும்.

படுக்கும் முன் கூந்தலை பராமரிக்கும் வழிமுறைகள்

தினமும் படுக்கும் முன் ஐந்து முதல் பத்து நிமிடம் வரை கூந்தலை சீவ வேண்டும். அதுவும் சீவும்போது, கூந்தலை பின்புறமாகவும், முன்புறமாகவும் போட்டு, மெதுவாக மேலிருந்து கீழாக சீவ வேண்டும். அவ்வாறு செய்வதால் கூந்தலில் இருக்கும் தூசி, அழுக்கு மற்றும் வலுவில்லாத இறந்த முடிகள் வந்துவிடும்.

படுக்கும் முன் கூந்தலுக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் போல் செய்யவேண்டும். இவ்வாறு மூன்று வாரம் தொடர்ந்து செய்தால் கூந்தல் உதிர்வது நின்றுவிடும். மேலும் கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும்.

வாரத்திற்கு ஒரு முறை எண்ணெயை சூடு செய்து தடவி, எண்ணெய் குளியல் எடுக்கலாம். இரவில் எண்ணெய் தேய்த்து மறுநாள் ஷாம்பு போட்டு குளித்துவிடலாம்.

கூந்தல் நன்கு வளர படுக்கும் முன் கூந்தலை நன்கு சீவி கட்டிக் கொண்டு படுக்க வேண்டும். அதனால் கூந்தலானது அதிகம் உடையாது மற்றும் உதிரவும் செய்யாது.

நீண்ட கூந்தலை கொண்டவர்கள் கூந்தலின் முனையை மறக்காமல் துணியால் சுற்றிக்கொண்டு படுக்கலாம். அவ்வாறு செய்வதால் கூந்தலின் முனைகள் சிக்கு அடையாமல், முடிச்சுகள் எதுவும் வராமல் இருக்கும். மேலும் கூந்தலின் முனைகள் வெடிக்காமலும் இருக்கும். ஏற்கனவே வெடிப்புகள் இருந்தால், இனிமேல் வெடிப்புகள் வராமல் தடுக்கும்.

வழுக்கை தலையில் முடி வளர இயற்கை வழிகள்


ஆளிவிதை : விதையில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டீன் ஏராளமாக உள்ளது. இவை தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, முடியின் வளர்ச்சியைத் தூண்டும். அதற்கு மூன்று டேபிள் ஸ்பூன் ஆளி விதையை, இரண்டு கப் நீரில் போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். அப்படி கொதிக்கும் போது, அதிலிருந்து ஓர் ஜெல் போன்று வரும், அப்போது இறக்கி குளிர வைத்து, அந்த ஜெல்லை தலையில் ஸ்கால்ப்பில் படும்படி தடவி பத்து நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

சின்ன வெங்காயம் : சின்ன வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி, இருபது நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும். இதற்கு முக்கிய காரணம் வெங்காயத்தில் உள்ள சல்பர் தான்.

இளநீர் : இளநீரில் உள்ள வெள்ளை நிறப் பகுதியை அரைத்து சாறு எடுத்து, அதனை ஸ்கால்ப்பில் படும்படி தடவி ஒரு மணிநேரம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இந்த முறையும் தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும்.

விளக்கெண்ணெய் மற்றும் நெல்லி எண்ணெய் : விளக்கெண்ணெய் மற்றும் நெல்லிக்காய் எண்ணெயை ஒன்றாக கலந்து, இரவில் படுக்கும் முன், தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், முடி நன்கு அடர்த்தியாக வளர்வதோடு, வழுக்கை உள்ள இடத்திலும் முடி வளர ஆரம்பிக்கும்.

நெல்லிக்காய் : நெல்லிக்காய் தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஓர் சிறப்பான பொருள். இது தலையில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கக்கூடியது. எனவே 6-7 உலர்ந்த நெல்லிக்காயை இரண்டு கப் சுடுநீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை வடிகட்டி, நெல்லிக்காயை அரைத்து, அத்துடன் இரண்டு டீஸ்பூன் தேங்காய் எணணெய் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி முப்பது நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனால் முடியின் வளர்ச்சி தூண்டப்படும்.

அதிமதுர வேர் : இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த அதிமதுர வேருக்கு தலைமுடி உதிர்வதைத் தடுத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் சக்தி உள்ளது. எனவே ஒருஃநான்கு கப் அதிமதுர வேர் பொடியை சிறிது பால் மற்றும் இரண்டு டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, வழுக்கை உள்ள இடத்தில் தடவி பதினைந்து நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி செய்வதால் தலையில் உள்ள பல பிரச்சனைகள் அகலும்.

செம்பருத்தி பூ : செம்பருத்திப் பூவை அரைத்து ஃபேஸ்ட் செய்து, அத்துடன் விளக்கெண்ணெய் சிறிது சேர்த்து கலந்து ஸ்கரப்பில் தடவி, பதினைந்து நிமிடம் ஊற வைத்து தலையை குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனால் செம்பருத்திப் பூ மயிர்கால்களை வலிமைப்படுத்தி முடி உதிர்வதைத் தடுக்கும் மற்றும் பொடுகுத் தொல்லை, நரைமுடி போன்றவற்றையும் போக்கும்.

முட்டை மாஸ்க் : முட்டையில் புரோட்டீன் ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே அத்தகைய முட்டையை இரண்டு எடுத்து அதன் வெள்ளைக்கருவை தனியாக ஒரு பௌலில் ஊற்றி, அத்துடன் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, ஸ்கரப்பில் படும்படி தடவி இருபது நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். இதனால் முடிக்கு வேண்டிய புரோட்டீன் கிடைத்து, முடியின் வளர்ச்சி தூண்டப்படும்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
தலை அரிப்பு, கூந்தல் வறட்சிக்கு என்ன செய்யலாம்

தலை எப்போதும் சுத்தமாக இல்லாவிட்டால், அது குப்பைக் கூடையாகி அரிப்பு ஏற்படும். இந்த அரிப்பை அடியோடு அகற்றுகிறது இந்த சிகிச்சை. அதற்கு தேவையான பொருட்கள் என்னவென்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

உலர்ந்த ஆரஞ்சு தோல் - நூறு கிராம்

வெந்தயம் - நூறு கிராம்

பிஞ்சு கடுக்காய் - பத்து கிராம்

வால் மிளகு - பத்து கிராம்

பச்சை பயறு - கால் கிலோ

எல்லாவற்றையும் கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். இதை வாரம் இருமுறை தலையில் நன்றாகத் தேய்த்துக் குளியுங்கள். அரிப்பு போவதுடன் சுத்தமும், வாசனையுமாகக் கூந்தல் பளபளக்கும்.

தலையின் வறட்டுத்தன்மையைப் போக்கி, ஜொலி ஜொலிக்க வைக்கிறது ஆரஞ்சு தோல் சிகிச்சை.

உலர்ந்த ஆரஞ்சு தோல், துண்டுகளாக்கிய வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான் கிழங்கு, கடலை பருப்பு, பயத்தம் பருப்பு, கசகசா.

இவை ஒவ்வொன்றும் நூறு கிராம் எடுத்து, மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப்பவுடரை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளியுங்கள். இப்படி செய்வதால் முடி பளபளப்பாகவும், வாசனையாகவும் இருக்கும். இதையே உடம்புக்குத் தேய்த்துக் குளிக்கும் வாசனை பவுடராகவும் பயன்படுத்தலாம்.

கூந்தலை பலமாக்கும் இயற்கை முறைகள்


இந்த கோடையில் பல பிரச்சினைகள் மக்களை வாட்டுவிப்பது போல் மிகவும் அதிகமாக முடி கொட்டுகின்ற பிரச்சினையும் அநேகரை வருத்துகின்றது. இதற்கு ஏதாவது வழி சொல்லுங்களேன் என கேட்க ஆரம்பித்தவர்களின் எண்ணிக்கை கடந்த பதினைந்து நாட்களில் கூடிக் கொண்டே போனது. மண்டைக்கு உள்ளே இருக்கும் மூளையைப் பற்றியும், வெளியே இருக்கும் தலைமுடி பற்றியும் பல பல ஆண்டுகளாக ஆய்வுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. முடியைப் பற்றி கவலைப் படாத ஆணும் இல்லை பெண்ணும் இல்லை எனலாம்.

உடலில் ஏற்படும் எந்த மாறுதல்களுக்கும் முதலில் மருத்துவ ரீதியான காரணங்களை அறிய வேண்டும். இளமைக் காலத்தில் முடி கொட்டுவதற்கான பொதுவான காரணங்கள்.

அதிக உடல் உழைப்பு

மனஉளைச்சல்

பரம்பரை

கூடும் வயது

ரத்த சோகை

ஹார்மோன்களின் மாறுபாடு

அதிக நாள் நோய் தாக்குதல்

வைட்டமின் பி6, போலிக் ஆசிட் குறைபாடு

தைராய்டு பிரச்சினைகள்

ஸ்டைல் என்று முடியினை கெடுத்துக் கொள்ளுதல்


இவையெல்லாம் மருத்துவ காரணங்கள் :

இவற்றிற்கு மருத்துவ ரீதியான ஆலோசனைகள் தேவை. மருத்துவ ரீதியாக பல மருந்துகள், தலைக்கு தடவும் லோஷன் என ஆய்வுகளின் வெளிப்படாக பல கண்டு பிடிப்புகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆயினும் அவற்றினை பொதுவில் எழுத முடியாது. அதற்கும் மருத்துவ ஆலோசனை தேவை. ஆகவே அவரவர் வீட்டில் செய்து பயன்பெறக் கூடிய சில எளிய முறைகளை பார்ப்போம். இவற்றின் விஞ்ஞான ரீதியாத உண்மைகளையும் அறிவோம்.

தலைமுடி கொட்டுவதற்கு பொடுகு தொல்லை, சுகாதாரமின்மை, கிருமிகள் தாக்குதல், தரமில்லாத ஷாம்பூ இப்படி சில காரணங்கள் இருக்கலாம். எனவே முதலில் முடியினை பலமாக்கும் முறையினைப் பார்ப்போம்.

தேங்காய் பால் :

சுத்தமான ஒரு கப் தேங்காய் பாலினை உங்களாலேயே வீட்டில் தயாரித்துக் கொள்ள முடியும். பால் தண்ணியாக இருக்கக் கூடாது. அடர்த்தியாக இருக்க வேண்டும். தலைக்கு உபயோகிக்கும் ‘டை’ போடும் ப்ரஷ் கொண்டு தலை முடியினை நன்கு அகற்றி மண்டையில் முடியின் கால்களில் நன்கு படும்படி தடவவும். இதனை அப்படியே ஒரு டவல் கொண்டு சுற்றி இருபது நிமிடங்கள் வைக்கவும். அதன்பின் குளிர்ந்த நீரில் மென்மையான ஷாம்பூ கொண்டு கழுவி விடவும். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்ய வேண்டும். சரி இவ்வாறு செய்வதால் என்ன பலன்.

தேங்காய் பாலில் வைட்டமின் ஈ சத்து அதிகம். ஆகவே நல்ல ஆரோக்கியத்துடன் முடியினை வைக்கும். இதிலுள்ள பொட்டாஷியம் சத்து முடி நன்கு வளர உதவும். மேலும் இதன் கிருமி நாசினி குணம் முடி பாதிப்பு ஏற்படாமல் காக்கும்.

வேப்பிலை :

பத்து-பன்னிரண்டு வேப்பிலை இருந்தால் போதும். இதனை இரண்டு டம்ளர் நீரில் போட்டு ஒரு டம்ளர் நீர் ஆகும் வரை கொதிக்க வைக்கவும். வடிக்கட்டி ஆறவிடவும். இதனை தலை சுத்தம் செய்யும் போது தலையில் பொறுமையாக ஊற்றி பின்னர் நீரில் தலையை அலசவும். இதனை தலையை ஷாம்பு கொண்டு சுத்தம் செய்த பிறகு தலையில் ஊற்றவும். பின்னர் மறுபடியும் நீர் கொண்டு சுத்தம் செய்யவும்.

ஏன் இப்படி செய்ய வேண்டும்? இது மிகப் பெரிய கிருமி நாசினை பொடுகினை நீக்கி விடும். தலை சுத்தமாவதால் முடி வளர்ச்சி கூடும். மேலும் இது தலைக்கு ரத்த ஓட்டத்தினைத் தூண்டும் மேலும் ஈறு, பேன் இவைகளையும் நீங்கும். இதனை வார ஒருமுறை செய்தால் போதும்.

சீப்பினை இதே முறையில் சுத்தம் செய்யுங்கள்.

பொடுகு இருக்கும் தலையில் வேப்ப நீர் படும் பொழுது சில நேரங்களில் கண் எரிச்சல் ஏற்படலாம். பொதுவில் வேப்ப நீர் கொண்டு தலை அலசும் பொழுது கண்களில் படாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

சோற்றுக் கற்றாழை :


நகர்புறம் தாண்டி இருப்பவர்களுக்கு இது எளிதில் கிடைத்து விடும். நகரங்களில் இதன் விலை மிகவும் அதிகம். இருப்பினும் இது மிக உபயோகமான சிகிச்சை என்பதால் இதனை குறிப்பிடுகின்றேன். சோற்றுகற்றாழையினை நன்கு கழுவி முட்களை நீக்கவும். பின் அதன் சதைப் பற்றினை நன்கு எடுத்துக் கொள்ளவும். தலையினை ஈரமாக்கிக் கொள்ளவும். பின்னர் இந்த விழுதினை முடியினை நீக்கி மண்டையில் நன்கு படுமாறு தேய்க்கவும். இருபது நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். பின்னர் தலையினை சுத்தமான நீர் கொண்டு அலசி விடவும்.

இதனை வாரம் மூன்று முறை செய்யலாம். ஏன் செய்ய வேண்டும்?


இதில் உள்ள மருத்துவ குணத்தினால் தலைமுடியின் வேரினில் ஊடுருவிச் சென்று முடி வளர்ச்சியினை தூண்டும். உடலை குளுமையாய் வைக்கும்.

சோற்றுக் கற்றாழை மஞ்சள் நிறத்தில் ஓரங்களிலோ அல்லது உள்ளோ இருந்தால் அதனை உபயோகப்படுத்தக் கூடாது. அது தீங்கு.

வெந்தயம் :

ஒரு கப் வெந்தயத்தினை முதல் நாள் இரவு நீரில் ஊற வைக்கவும். இதனை மிகவும் நைசாக அரைத்துக் கொள்ளவும். இதனை தலையில் நன்கு தடவி ஒருமணி நேரம் நன்கு ஊற வைக்கவும். குளிர்ந்த நீரில் நன்கு அலசவும். வாரம் இருமுறை செய்யலாம்.

நெல்லிக்காய் :


பொதுவில் நெல்லிக்காயினை தேங்காய் எண்ணெயில் இட்டு காயச்சி உபயோகப்படுத்துவர். நான்கு-ஐந்து நெல்லிக்காயினை காய வைத்து பின் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி சற்று கறுத்த நிறம் வந்தவுடன் அதனை அப்படியே ஒரு பாட்டிலில் மாற்றி வைத்து தலைக்கு தடவுவர். நெல்லிக்காயில் வைட்டமின் ‘சி’ சத்து அதிகம். முடியினை நன்கு வலுவாக்கும். ‘இ’ சத்து கொலஜன் உற்பத்திக்கு உதவுவதால் முடி செழிப்பாய் இருக்கும். இதுவே நெல்லிக்காய் எண்ணையின் ரகசியம்.

தயிர் :


இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரும், சிறிது எலுமிச்சையும் கலந்து தலையில் தடவி இருபது நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் நன்கு கழுவி விடலாம். தயிரில் பிஐந்து வைட்டமின் சத்து அதிகம். இது முடியினை நன்கு வளரச் செய்யும். இதனை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

வெங்காய ஜூஸ் :

எத்தனை பேருக்கு இது அதிசயமாக இருக்கும் எனத் தெரியவில்லை. ஆனால் இது உண்மை. சின்ன வெங்காயத்தினை நன்கு உரித்து சிறிதும் நீர் சேர்க்காமல் அதனை துருவி பிழிந்து சாறு எடுத்தும் கொள்ளவும். பஞ்சு கொண்டு அந்த சாறினை தலையில் முழுவதும் தடவவும். இருபது நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முடியினை நன்கு அலசி விடவும். ஷாம்பு பயன்படுத்தவும். இதனை வாரம் ஒருமுறை செய்யலாம்.

வெங்காயம் கிருமி நாசினி. இது முடிக்கு மிகவும் சிறந்தது. மேலும் இதில் உள்ள சல்பர் ரத்த ஓட்டத்தினை கூட்டி பாதிக்கப்பட்ட முடி கால்களை வலுவாக்கி நல்ல முடி வளர்ச்சியினை ஏற்படுத்தும்.

தேங்காய் எண்ணெய் :

ஆலிங் எண்ணெய் பாதாம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது கிருமிகளை நீக்கும். ரத்த ஓட்டத்தினை தூண்டும். ஆனால் எண்ணெய் வைத்த ஒரு நாள் முழுவதும் அப்படியே இருந்தால் அதில் மாசு படியும். இரவில் தடவி காலையில் குளித்து விடுவது நல்லது.

இரண்டு முட்டையின் வெள்ளைக் கருவினை எடுத்து தலை முடியினை பிரித்து பிரித்து பிரஷ் மூலம் முடிகால்களில் நன்கு படும்படி தடவவும். இருபது நிமிடங்கள் கழித்து தரமான ஷாம்பு கொண்டு சுத்தம் செய்யவும். வாரம் இருமுறை கூட இதனைச் செய்யலாம். இதிலுள்ள புரதம், வைட்டமின் பி சத்துக்கள், முக்கிய சத்துக்கள் முடியினை அற்புதமாய் வளரச் செய்யும்.

ஒரு உருளைக்கிழங்கினை நன்கு கழுவி தோல் சீவிக் கொள்ளவும். பின் அதனைத் துறுவி சாறு எடுத்து தலை முழுக்க தடவவும். இருபது நிமிடங்கள் சென்று தலையை நன்கு அலசி விடவும். இதனை வாரம் ஒருமுறை செய்யலாம். பொட்டாசியம் சத்தும், வைட்டமின் சி சத்தும் மிகுந்தது. இது முடி கொட்டாமல் இருக்க பெரிதும் உதவும்.

எலுமிச்சை சாறு :

இரண்டு-மூன்று எலுமிச்சை பழங்களைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சிறிதளவு வெது வெதுப்பான நீர் கலந்து வைத்துக் கொள்ளவும். நீங்கள் தலைக்கு குளிக்கும்போழுது தலையினை நன்கு சுத்தம் செய்த பிறகு இச்சாறினை தலை முழுவதும் தடவி ஐந்து நிமிடங்கள் மென்மையாய் மசாஜ் செய்து சுத்தமான நீரில் தலை முடியினை நன்கு அலசி விடவும்.

முடி கொட்டுவதனை வெகுவாய் நிறுத்தும். பொடுகினை நீக்கி விடும். ஆரோக்கியமாய் முடியினை பராமரிக்கும். கண்களில் பட்டால் மிகவும் எரிச்சல் கொடுக்கும். தீங்கு இல்லை எனினும் எரிச்சல் மிகுதியாய் இருக்கும். எனவே இதனை உபயோகிக்கும்போது கவனம் தேவை. கண்ணில் பட்டால் சுத்தமான நீர் கொண்டு கண்ணை கழுவி விடவும்.

இந்த முறைகளை நம் முன்னோர்கள் காலம் காலமாக சொன்னதுதான். செய்ததுதான். இன்று நாம் விஞ்ஞான ரீதியாக இதனை ‘ஆமாம்’ போட்டு கற்றுக் கொள்கின்றோம். ஆனால் அவர்கள் எவ்வாறு இதனையெல்லாம் கண்டு பிடித்தார்கள் என்பது ஆச்சர்யமே.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அனைத்து வகையான சருமத்தினரும் எலுமிச்சை சாறு பயன்படுத்தலாமா?

எலுமிச்சை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் பலவித நன்மைகளை வழங்கும் என்பது அனைவரும் அறிந்த விஷயமே.

ஆனால் இந்த எலுமிச்சை அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது அல்ல. குறிப்பாக சென்சிடிவ் சருமத்தினர் மற்றும் வறட்சியான சருமத்தினர், எலுமிச்சையைப் பயன்படுத்தினால், பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

இதன் காரணமாக பலரது மனதிலும் சரும அழகைப் பராமரிக்க எலுமிச்சையைப் பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் எழும். இங்கு எலுமிச்சையை சருமத்திற்கு பயன்படுத்தினால் எந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்பதை பார்க்கலாம்.

எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, முகத்தில் தடவி பத்து நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். எலுமிச்சையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, சருமத்தில் பருக்களுக்கு காரணமான பாக்டீரியாக்களை அழித்து, அடிக்கடி பருக்கள் வருவதைத் தடுக்கும்.

ஒரு எலுமிச்சையை சாறு எடுத்து, அத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், ஐந்து டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் மட்டுமின்றி, கை, கால்களிலும் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இறந்த செல்களை நீக்க எலுமிச்சை பெரிதும் உதவியாக இருக்கும்.

முகத்தில் அதிகம் எண்ணெய் வழிந்தால், அதனைத் தடுப்பதற்கு எலுமிச்சை உதவி புரியும். அதற்கு தினமும் எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, அதனை பஞ்சில் நனைத்து, முகத்தைத் துடைத்து எடுத்தால், எண்ணெய் சுரப்பு குறையும்.

முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் கருமையான தழும்புகள் இருந்தால், அதனைப் போக்க சிறந்த பொருள் என்றால் அது எலுமிச்சை தான். அதற்கு எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தினமும் இரவில் படுக்கும் முன் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
நம் வயதை காட்டும் கண்ணாடி- கண்கள்

கண்கள் தான் அழகின் முதல் அஸ்திரம். கண்கள் ஒருவரின் வயதை கணித்து சொல்லும் முதல் உறுப்பு. பிறகு தான் சருமம் வெளிப்படுத்தும். கண்களை இளமையாக பாதுகாத்தால் பாதி வயது குறைந்தது போல் இருப்பீர்கள்.

வெகுநேரம் கணனியை பார்த்துக் கொண்டிருந்தால், நரம்புகள் சோர்ந்து போகும். இதனால் அங்கே தளர்வடைய ஆரம்பிக்கும். இரத்த ஓட்டம் குறைந்து, அங்கே நச்சுக்கள் தங்கி, வயதான தோற்றத்தை அளிக்கும். இப்படிதான் சருமம் முதிர்வடைதல் ஆரம்பிக்கிறது.

வொயிட் ஐ-லயனர்:


கண்ணின் கீழ் பகுதியில் வொயிட் ஐ லயனர் பயன்படுத்துவது மூலம் கண்கள் பளிச்சென தெரிவதுடன் பெரியதாகவும் தெரியும்.

கருவளையம் :


கண்கள் பெரியதாக தெரிய வேண்டுமெனில் கருவளையம் இருக்க கூடாது. சரியான தூக்கம் இல்லாமல் இருந்தால், கண்களில் ஈரப்பதம் குறைந்து கண்களில் கருவளையம் தோன்ற ஆரம்பிக்கும். இதற்கு நல்ல தரமான கன்சீலரை பயன்படுத்தலாம்.

ஹைலைட்டர் :


வொயிட் ஹைலைட்டரை புருவத்திற்கு கீழேயும், கண்ணீர் பையின் அருகேயும் பயன்படுத்துவதால் கண்கள் பெரிதாக தெரியும்.

இமைமுடி :

மஸ்காரா உபயோகிப்பதால் கண்கள் பெரிதாக தெரிய வாய்ப்புகள் அதிகம். மஸ்காரா பிடிக்காதவர்கள், செயற்கை இமைமுடியை பயன்படுத்தலாம்.

நீர்ப்பை :

கண்களுக்கு கீழே உள்ள நீர் பைகளால் கண்கள் சிறிதாக தெரியும். இதனை தடுக்க நன்றாக உறங்க வேண்டும், நீர் பைகள் உள்ள இடத்தில் குளிர் தேநீர்பையை வைக்கவும்.

புருவம் :


மெலிதான புருவம் இருந்தால் கண்கள் பெரிதாக தெரியாது. புருவசீரமைப்பை தொடர்ந்து மேற்கொள்வதால் புருவம் அழகாக தெரியும், கண்களும் அழகாகும்.

கூந்தலுக்கு போடும் சாயம் பக்க விளைவை ஏற்படுத்துமா?

நரையால் பாதிக்கப்படும்போது ஆண்களும், பெண்களும் தலைக்கு சாயம் பூசுகிறோம். நமது உடலில் சுரக்கும் ‘மெலனின்’ என்ற நிறமிதான் முடியின் கருமை நிறத்துக்குக் காரணம். நாற்பது வயதுக்கு மேல், இந்த நிறமிகளை ‘டிரையோஸின்’ என்ற என்ஸைம் தடை செய்கிறது. இதனால் முடி நரைக்கிறது.

சிலருக்கு இளமையிலேயே நரைப்பதற்குக் காரணம், தவறான உணவுப்பழக்கமும் மன அழுத்தமும்தான். சுற்றுச்சூழல் மாசுக்களால் தலையில் படியும் தூசி, தலையில் எண்ணெயே வைக்காததால் ஏற்படும் வறட்சி போன்றவையும் இளநரைக்கு காரணம்.

இதனை மறைப்பதற்காக, நாம் பயன்படுத்தும் தலைமுடி சாயத்தில் சில்வர், மெர்குரி, லெட் போன்றவை உள்ளது. தொடர்ந்து ரசாயனம் கலந்த தரமற்ற தலைமுடி சாயத்தை பயன்படுத்தும் போது கூந்தல் வறண்டு போய், முடி உடைதல், உதிர்தல், பொடுகு, இளநரை ஏற்படும். வழுக்கை விழவும் வாய்ப்புகள் அதிகம்.

சருமத்தில் நெற்றி, முகம் ஆகியவை சிவந்துபோதல், அரிப்பு ஆகியவை ஏற்படும். மேலும் கண் எரிச்சல், கண் பார்வை மங்குதல், சருமத்தில் புற்றுநோய் போன்ற நோய்கள் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம். நமது உடலில் தலை முதல் பாதம் வரை உள்ள சருமத்தில் துவாரம் இருக்கிறது. தலையில் அடிக்கப்படும் டை சருமத்தின் வழியாக ரத்தத்தில் கலக்கக்கூடும்.

அது உள்ளே சென்றால் சுவாசத்தில் தடை, பார்வை குறைபாடு, வயிற்று வலி, வாந்தி, பேச்சில் உளறல் போன்றவை தோன்றும். மீசைக்கும் கலர் சாயம் பூசும்போது அதில் இருக்கும் விஷத்தன்மை எளிதாக நாசியை அடைந்து உடலுக்குள் புகுந்துவிடும்.

பெண்கள் கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் புகட்டும் காலத்திலும் டை அடிப்பதை தவிர்க்கவேண்டும். தலைமுடி சாயம் உபயோகிக்கும்போது ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால், அதைனை பயன்படுத்துவதை நிறுத்திவிடுங்கள். உடனடியாக, பயன்படுத்திய தலைமுடி சாயம் பாக்கெட்டுடன் மருத்துவரை சந்திக்கவேண்டியது அவசியம்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top