வணக்கம்,
’கற்கக் கற்கண்டாய்’ இழையின் பின்னூட்டத்தில் ஒரு சகோதரி குழப்பம் விளைக்கும் சொற்களையும் நாளுக்கு நான்காய்ப் பதிவிடுக என்று கேட்டிருந்தார். அதுவும் சரிதான் என்று தோன்றியது.
ஆனால், அது என் ஒருவனால் மட்டுமே செவ்வனே செய்து முடித்துவிடக் கூடிய செயலன்று. அதற்கு உங்கள் அனைவரின் உதவியும் தேவை.
நீங்கள் கவனித்த சொற் குழப்பங்களை, எழுத்துப் பிழைகளை இங்கே சுட்டிக்காட்டுங்கள். அவற்றை விவாதித்து நாம் அனைவரும் கற்போம்!
அச்சகோதரி
‘போனாள் - போனால்’ குழப்பத்தைக் குறிப்பிட்டிருந்தார்.
நான் பொதுவாகத் தமிழ் வினைச்சொற்களின்
’விகுதி’ பற்றி இப்பதிவில் பேச விழைகிறேன்.
தொல்காப்பிய இலக்கணம் சொல்லைச் சொல்லாகத்தான் கையாள்கிறது. ஆனால், பின் வந்த நன்னூலில் சொல்லைக் கூறுபோட்டுப்
‘பகுபதம்’ & ‘பகாபதம்’ என்று இலக்கணம் கூறப்படுகிறது.
ஒரு தீவிர தொல்காப்பியர் இரசிகனாய் எனக்கு நன்னூலாரின் முறையில் முழுமையான உடன்பாடில்லை என்றாலும், தொடக்க நிலை மாணவர்களுக்கு நன்னூல் இலக்கணம் ஒரு எளிய வழி என்பதை மறுக்க இயலாது.
View attachment 11235
நன்னூல் முறையில் சொல்லைத் துண்டு துண்டாக வெட்டுகையில் சொல்லின் முதலில் உள்ளது
பகுதி என்றும், இறுதியில் உள்ளது
விகுதி என்றும் அழைக்கப்படும்.
ஒரு சொல்லில் பகுதி விகுதிகளுக்கிடையே பிற கூறுகளும் இருக்கலாம்.
அவையாவன:
இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் ஆகியன.
பகுதி: இது சொல்லின் அடிப்படை உறுப்பு.
வேர்ச்சொல்லாகவோ,
அடிச்சொல்லாகவோ இருக்கும்.
ஏவல் வடிவில் இருக்கும் (நட, படி, ஓடு, வா, இரு, எழுது...)
விகுதி: இது சொல்லின் இறுதி. இது
மூவிடம் (தன்மை, முன்னிலை, படர்க்கை)
ஐம்பால் (ஆண், பெண், பலர், ஒன்று, பல)
எண் (ஒருமை, பன்மை) ஆகியவற்றைக் குறிக்கும்.
இடைநிலை: இது பொதுவில்
காலம் காட்டும் (
த், ட், ற் - இறந்தகாலம்;
கிறு, கின்று, இன்று - நிகழ்காலம்;
ப், வ் - எதிர்காலம்)
சாரியை: இதற்குத் தனியே பொருள் இருக்காது. இது விகுதிக்கு முன் வரும். விகுதியை அதற்கு முன் உள்ள உறுப்போடு இயல்பாக
ஒட்ட வைக்கப் பயன்படுகிறது.
சந்தி: இது
புணர்ச்சி. இரண்டு உறுப்புகள் இணைகையில் அவற்றுக்கேற்ற புணர்ச்சி. (வல்லினம் மிகுதல், தோன்றல், திரிதல் போன்ற மாற்றங்கள்)
விகாரம்: இது
உருமாற்றம். பகுதியோ, இடைநிலையோ, சந்தியினாலோ எழுத்துகள் மாறுதல் விகாரம் எனப்படும்.
கீழுள்ள படத்தில் இவற்றைக் காட்ட முயன்றுள்ளேன்.
‘வந்தனர்’ என்ற சொல் பகுபத உறுப்பிலக்கண முறையில் எப்படிப் பிரிகிறது என்று பாருங்கள்.
View attachment 11236
சரி, நாம்
விகுதிக்கு வருவோம்.
தமிழ்
வினைச்சொற்களின் மிக முக்கியமான உறுப்பு இந்த விகுதிதான். இது நமக்குப் பல தகவல்களைத் தருகிறது.
நான் மேலேயே குறிப்பிட்டதைப் போல, விகுதி நமக்கு இடம், திணை, எண் ஆகிய மூன்று தகவல்களையும் தரும்.
எடுத்துக்காட்டாய்:
View attachment 11237
விகுதியின் இந்த சூக்குமத்தைப் புரிந்துகொண்டால் ‘போனால் / போனாள்’ குழப்பமே வராதுதானே?
போனால் - இங்கு விகுதி
‘ஆல்’, இது
'if' என்ற பொருளுடையது.
(மழை வந்தால் குடைபிடி! வீட்டுக்குப் போனால் சாப்பிடு!)
போனாள் - இங்கு விகுதி
‘ஆள்’, இது உயர்திணைப் பெண்பால் வினைமுற்று விகுதி.
(மேலே இருக்கும் அட்டவணையைக் காண்க!)
போ+ன்+ஆள்: போதாலாகிய செயலைச் செய்தது
ஒரு பெண் என்ற தகவலைப் பெறுகிறோம்.
வந்தால் / வந்தாள்
செய்தால் / செய்தாள்
படித்தால் / படித்தாள்
எல்லாம் இவ்வாறே பொருள் தரும்.
இனி இந்தக் குழப்பம் உங்களுக்கு வராதுதானே?
(மேலே காட்டிய பகுபத இலக்கணம் அனைத்தும்
‘வினைமுற்று’ என்றவகை வினைச்சொற்களுக்கானவை. மேலே காட்டிய அனைத்துத் தகவல்களையும் முற்றாகத் தருவது ‘வினைமுற்று’ ஆகும். இதில் சில தகவல்களைத் தராமல் எஞ்சி இருக்கும் வினைச்சொற்கள்
‘வினையெச்சம்’ எனப்படும். அவற்றை நாம் நமது வல்லினம் மிகுதல் பகுதிகளில் பார்ப்போம்!)
பயிற்சி: ஏதேனும் கதையை எடுத்துக்கொண்டு அதில் வரும் வினைமுற்றுச் சொற்களைப் பட்டியலிடுக்கள்.
பின் அச்சொற்களின் விகுதிகளைத் தனியாக எழுதி அது தரும் தகவல்கள் என்னென்ன என்று அலசுங்கள் (இதைத் தனியாக எழுதத் தேவையிருக்காது, வேண்டுமானால் எழுதிப் பாருங்கள்!)
----
கொசுறு: என் மனைவி குறிப்பிட்டது (அவளும் இத்தளத்தின் வாசகி. சொல்லப்போனா
ல் (
’சொல்லப்போனாள்’ அல்ல!) இத்தளத்தை எனக்கு அறிமுகம் செய்தவளே அவள்தான்!)
சில இடங்களில் ‘தமயன்’ / ‘தனயன்’ குழப்பத்தைக் கண்டதாக அவள் சொன்னாள்.
தமயன் / தமையன்: இது தூய தமிழ்ச் சொல். இதன் பொருள் ‘
அண்ணன்’ (மூத்த சகோதரன்) என்பது.
[இதே அடிப்படையில் ‘
தமக்கை’ என்ற சொல்லும் உள்ளது. இது ‘
அக்கா’வைக் குறிக்கும்.]
தனயன்: இது சமற்கிருதச் சொல். இதன் பொருள் ‘
மைந்தன் / மகன்’ என்பது.
[இதனை ‘
தனையன்’ என்றும் எழுதுகின்றனர். அவ்வாறே ‘
தனயள்’ என்பது மகளைக் குறிக்கும்!]
[’
சகோதரன்’ என்ற சொல்லும் சமற்கிருதம்தான்! ‘உதரம்’ என்றால் வயிறு, ‘சக+உதரன்’ - ஓரே வயிற்றில் பிறந்தவன் என்று பொருள்! தமிழில் இதனை ‘
உடன்பிறப்பு’ என்றோ ‘கூடப் பிறந்தவன்’ என்றோ சொல்கிறோம்!]
-----
(அடுத்த பதிவில் ‘
கள்’ விகுதியைப் பற்றிப் பேசுவோம், இதிலும் பலருக்குப் பல குழப்பங்கள் இருப்பதாகத் தெரிகிறது!)
உங்கள் கருத்துகளை / வினாக்களைத் தயங்காது கூறுங்கள் / வினவுங்கள்..
நன்றி,
-வி