Padmamohan
அமைச்சர்
Nice start sis
Semma starting pa ???View attachment 12816இரவு நேரம்.. பௌர்ணமி வானம்..! மொட்டை மாடி தனிமை.. தேகம் தீண்டும் தென்றலின் குளுமை..! நானாக இருந்தால் இக்கணம் உறைந்து போகும் வரமொன்றை என் இஷ்ட தெய்வத்திடம் கேட்டிருப்பேன்..
ஆனால் அவன்.. ப்ரியன்.. நிலவொளியும் உடலில் படாதவாறு சுவரோரமாய் சுருண்டு படுத்திருந்தான். ஹெட் ஃபோன் வழியாக கசிந்து, அவன் காதின் நரம்புகளில் தன் கம்பீரக் குரலைக் கடத்திக் கொண்டிருந்தார், ஹரிஹரன்..!
“வெண்ணிலவே.. வெண்ணிலவே...
என்னைப் போலத் தேயாதே..
உன்னோடும் காதல் நோயா..?”
ரிப்பீட் மோடில் போட்டு விட்டு வானில் காயும் நிலாவை வெறித்துக் கொண்டிருந்தான்.
எங்கே பிழை செய்தான்..? தன் தோழன் என்று முழு நம்பிக்கையை அவன் மேல் வைத்தது தான் பிழையா? அன்றி இனி தன் வாழ்க்கை முழுதும் அவளொருத்தியின் புன்னகையில் மட்டுமே என்று ஒட்டுமொத்த அன்பையும் அவள் மேல் கொட்டியது பிழையா?
ப்ரியனின் தோழன் விஷ்வா. இருவரும் சேர்ந்து ஆரம்பித்த நிறுவனம் ‘பிவி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’. நன்றாக சென்று கொண்டிருந்த நட்பு எப்போது, எங்கே தடம் புரண்டதெனத் தெரியவில்லை.. விஷ்வா.. கொஞ்சம் கொஞ்சமாக கம்பெனி சொத்துக்களைத் தன் பெயருக்கு மாற்றிக் கொண்டு.. இன்று மொத்தமாக முதுகில் குத்தி விட்டான்.
கம்பெனி ப்ரியனிடம் இல்லை எனத் தெரிந்த கணம்.. தன் காதல் பொய்யென்று உரைத்துச் சென்று விட்டாள், ப்ரியனின் ப்ரியமானக் காதலி ப்ருந்தா..!
அடுத்தடுத்த அடிகளால் மீள விரும்பாமல் உடைந்து போய், இருளோடு இன்பம் தேடிக் கொண்டிருக்கிறான், இவன்.
திடீரென அந்த அந்தகாரத்தைக் கிழித்துக் கொண்டுக் கேட்டது ஒரு கிசுகிசுக் குரல்..! பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்தவன் முதலில் கவனிக்கவில்லை. இப்போது இரு குரல்கள் வழக்கடித்துக் கொண்டிருந்தன.
புருவம் சுருக்கியவன்.. தலையை லேசாகத் திருப்பி, சுவற்றின் அலங்கார துளை வழியாகக் குரல் வந்த திசையில் பார்த்தான். அவனின் சுருங்கியப் புருவங்கள் அழகாய் விரிந்தன, ஆச்சர்யத்தில்..!
இதென்ன.. இன்று இவனுக்கென்று ‘இரட்டை நிலவுகளின்’ தரிசனமா!!! ஆம்! அந்த பௌர்ணமி நிலவிற்குப் போட்டியாக வெள்ளை நிற நைட் ட்ரெஸ்ஸில் நின்றப் பெண்ணவள் தான்.. அடுத்த மாடியில் நின்று அந்த வீட்டு பொடிப் பயல் தருணுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள்.
காலையில் வேலைக்கு கிளம்பும் அவசரத்தில்.. அன்னை, பக்கத்து வீட்டில் அவர்களின் சொந்தக்காரப் பெண் வந்திருப்பதாகக் கூறியத் தகவலை.. தான் அரைகுறையாகக் காதில் வாங்கியது.. லேசாக நினைவடுக்கில் படிந்திருந்தது.
இருவரும் கைகளில் எதையோ பிடித்து இழுத்து கொண்டிருந்தனர்.
“சொல்றதக் கேளுடா குட்டி சாத்தான்.. நான் ஃபர்ஸ்ட் விடறேன்.. கொஞ்சம் மேலப் போனதும் உன்கிட்ட தந்துடறேன்.”
“முடியாது.. நீ ஜாலியா விட்டுட்டு இருப்ப.. அதுக்குள்ள யாரும் வந்தா என்னை டீல்ல விட்டுட்டு நீ நல்ல பொண்ணு மாதிரி எஸ்கேப் ஆகிடுவ..”
“ஷ்ஷ்.. கத்தாதடா.. அப்டிலாம் பண்ண மாட்டேன்..”
“முடியாது குடு. வெண்ணி.. பன்னி”
“ஏய்… இன்னொரு வாட்டி பன்னி சொன்ன.. வாயத் தச்சிடுவேன்..”
“ நீ மட்டும் என்னைக் குட்டி சாத்தான் சொல்லல?”
“சரி இனி சொல்ல மாட்டேன்.. இப்ப அத என்கிட்ட குடு..”
“நீ யார் வந்தாலும் என்னை விட்டு போக மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணு..”
“ப்ராமிஸ் பண்ணா.. உனக்கு கேர்ள் ஃப்ரெண்ட் கிடைக்க மாட்டாளாம்டா பரவாயில்லயா?”
பிஞ்சு விரலை, நாடியில் வைத்து யோசித்தவன்.. “நிஜமாவா பன்னி?” கேட்டான், தீவிரமான முகபாவனையோடு..!
அவள் முறைத்துப் பார்த்ததும்.. “சரி சரி.. வெம்மதி..” என்றான், சமாதானமாக..!
“ஹய்யோ… வெம்மதி இல்லடா.. வெண்மதி..” என்றாள்.
இங்கே இவன் இதழ்கள் பிரிந்து.. மிகமிக மென்மையாக உச்சரித்தது.. “வெண்மதி” என்று..!
அவர்கள் இருவரும் ஒரு வழியாக சமாதானமாகி.. பட்டம் விட ஆரம்பித்திருந்தனர். பட்டம் விடத் தான் இந்த ஆர்பாட்டம் போலும்.
ப்ரியன் தன் மொபைலில் நேரம் பார்த்தான். இரவு மணி ஒன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. புன்னகையோடு அவர்களைப் பார்த்து விட்டு திரும்பிப் படுத்தான்.
தன் மனதைக் கூறுப் போட்டுக் கொண்டிருக்கும் ப்ருந்தாவின் நினைவுகளில் மூழ்க ஆரம்பித்த நேரம்.. மீண்டும் இருவரிடையே சலசலப்பு.. ‘இப்ப என்னவாம்..?’ யோசித்தவாறேத் திரும்பிப் பார்த்தவன்.. பீறிட்டு வந்த சிரிப்பை அடக்க முடியாமல் கைகளால் வாயை இறுக மூடிக் கொண்டான்.
பட்டத்தின் நூல் அறுந்து எதிர் வீட்டின் மாமரத்தில் சிக்கிக் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. தருண், பெரிய மனித தோரணையோடு.. இருக் குட்டிக் கைகளையும் மார்பின் குறுக்கேக் கட்டி.. குற்றம் சாட்டும் பார்வையைப் பார்த்திருந்தான். அவள், இருக் காதுகளையும் பிடித்துக் கொண்டு.. அவன் முன்னால் தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்தாள்.
“போதுமா..? கால் வலிக்குது தருண்.. ப்ளீஸ்டா.. சாரிடா..”
“எனக்கு என் பட்டம் வேணும்.. இப்பவே வேணும். அதில்லாம நான் சாப்ட மாட்டேன்.. தூங்க மாட்டேன்.. யாரோடயும் பேச மாட்டேன்.”
“டேய் செல்லோ.. அப்டிலாம் சொல்லக் கூடாதுமா.. வெண்மதி நாளைக்கு வேற செஞ்சு தருவாளாம்.. தருண் ஜாலியா பட்டம் விடுவானாம்.. ஓகேவா?”
“முடியாது.. நான் எவ்ளோ கஷ்டப்பட்டு அத செஞ்சேன் தெரியுமா? நம்ம ரொம்ப டெடிகேட்டிவா.. கஷ்டப்பட்டு செய்ற விஷயம் எப்பவும் நம்மள விட்டு போகாதுனு எங்க ஹேமா மேம் சொல்லிருக்காங்க. இப்.. இப்ப.. இப்ப மட்டும் ஏன் போச்சாம்? சொல்லு வெம்மதி..” என்று கண்களில் நிறைந்து விட்ட நீரோடு உதட்டைப் பிதுக்கினான்.
“இங்க பாரு.. இப்ப என்ன? நீ கஷ்டப்பட்டு செஞ்ச உன்னோட பட்டம் உனக்கு வேணும். அவ்ளோ தான?”
“ம்ம்..”
“அதுக்கு இப்டி அழுதுட்டு மூலைல உட்கார்ந்தா ஆச்சா? உன்னை விட்டு போன உன் பொருள மீட்டெடுக்க.. என்ன ஸ்டெப் எடுக்கலாம்னு யோசிக்கணும். கவலைய மறந்துட்டு அது கிடைக்கற வரை விடாம போராடணும். சரியா?” என்று அவனின் சுருள் கேசத்தைக் கலைத்து விட்டாள்.
ப்ரியனின் கரங்கள் தானாக.. மொபைலில் ப்ளே லிஸ்ட்டில் இருந்த பாடலை டெலிட் செய்தது.
“எப்டி..? அந்த ஆன்ட்டிக்கும் அம்மாவுக்கும் சண்டையாச்சே.. அவங்க காம்பவுண்ட்டுக்குள்ள விட மாட்டாங்க.”
“யோசிப்போம்டா வெல்லக்கட்டி.. ஏதாவது ஐடியா மாட்டும்.. கண்டிப்பா நமக்கு வழியில்லாம போகாது. அங்க பாரு.. மாங்கா பறிக்க பெரிய கம்பு மரத்துலயே சாய்ச்சு வச்சிருக்காங்க. அத வச்சு பட்டத்த எப்டியும் எடுத்துடலாம்..”
“நிஜமா?”
“ம்ம்.. உன் பட்டம்..! உன் உரிமை..!! தடை அதை உடை..!!!”
இவன் பரபரவென தன் லேப்டாப்பை விரித்து.. கம்பெனியில் தான் ஏமாற்றப்பட்ட விவரங்களை மீண்டும் ஒருமுறை பார்வையிட்டான். நிச்சயம் நமக்கான வழி எங்கேனும் இருக்கும் என்று மனம் கூவியது..!
“அது சரி.. இப்ப நம்ம எப்டி அங்கப் போறதாம்?”
“அது தான்டா இப்ப நம்ம ப்ரச்சனை..” என்று நெற்றியைத் தேய்த்து விட்டு கொண்டாள்.
“ரொம்ப நல்லவ மாதிரி நடிக்காத வெம்மதி.. நீ சுவரேறி குதிச்சு உங்க பக்கத்து வீட்டு அண்ணாவோட புது ஷர்ட்ல போஸ்டர் கலர்ஸ கொட்டி வச்சியாமே.. பெரிம்மா சொன்னாங்க..”
“ஹிஹி.. சொல்லிட்டாங்களா? அவன் நான் கடைக்கு போகும் போது என் ஷால புடிச்சி இழுத்தான்டா.. சும்மா விட சொல்றியா?”
“அப்டியா செஞ்சான்? அப்ப நீ அவனோட ஷர்ட்ட கிழிச்சு விட்ருக்கலாம் தான?”
“ரௌடி பயலே.. இப்ப அந்த பக்கம் எப்டி போகலாம்னு பார்ப்போம் வா..”
“தருண்..” - ப்ரியன்.
குரல் வந்த திசையைத் திரும்பி பார்த்தவன்.. திகைப்பாய், “ப்ரியண்ணா.. அது வந்து.. இந்த வெம்மதி தான் சாக்லேட் வாங்கி தரேன். நிலா வெளிச்சத்துல பட்டம் விட்டா செமயா இருக்கும் வா னு.. குட்டிபையன் தானனு என்னை ஏமாத்திக் கூட்டிட்டு வந்துட்டா..” என்றான், பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டு..!
“அடப்ப்ப்பாவி.. குட்டிச்சாத்தான்..” - வெண்மதி.
சிரிக்கும் விழிகளோடு, “வெய்ட் பண்ணு.. உன் பட்டத்த நான் எடுத்து தரேன்.” என்றான்.
சொன்ன கையோடு நொடியில் கீழே சென்று, அந்தப் பக்கம் தாவி குதித்து.. சரசரவென மரமேறி, பட்டத்தை பத்திரமாக எடுத்து அணிந்திருந்த டீ-ஷர்டுக்குள் வைத்து, அடுத்த ஐந்தாவது நிமிடம் மாடியேறி வந்து.. அவர்கள் முன்னால் நின்றான்.
அவனின் செய்கைகளை விழிவிரித்துப் பார்த்து கொண்டிருந்த இருவரும் அவன் பட்டத்தைத் தந்ததும்.. சந்தோஷத்தில் துள்ளி குதித்து ஆர்பரித்தனர்.
பட்டத்தைப் பெற்றுக் கொண்ட தருண், “தாங்க்யூ ப்ரியண்ணா..” என்று கூறியவாறே கீழே ஓடி விட்டான்.
“தாங்க்ஸ் அ பன்ச்..” என்றாள், வெண்மதி.
“ம்ஹூம்.. நான் தான் உங்களுக்கு தாங்க்ஸ் சொல்லணும்..”
புரியாமல் புருவம் சுருக்கியவள், “நீங்க எதுக்கு சொல்லணும்?” கேட்டாள்.
“தொலைச்சத மீட்டெடுக்க வழி காமிச்சதுக்கு..”
இப்பவும் புரியாமல் விழித்தவள்.. தோள்களைக் குலுக்கி விட்டு, “ பை தி வே.. திஸ் இஸ் வெண்மதி..” என்று நட்புப் புன்னகையோடு வலக்கையை நீட்டினாள்.
இருளின் பிண்ணனியில் பூமியில் நின்ற.. வெண்மதியெனும் அந்த இரண்டாம் நிலவின் நட்புக்கரத்தைப் பற்றிக் குலுக்கினான், ப்ரியன்..!
திடீரென மாடியின் பக்கவாட்டு சுற்றுச்சுவரின் மீது இரு கைகள் முளைத்ததைத் தொடர்ந்து.. ஒருவன் மேலேறி வந்து.. இவர்கள் முன் மூச்சு வாங்க நின்றான்.
வந்தவன் இருக்கைகளால் இடுப்பைப் பிடித்துக் கொண்டு.. மாயக்கண்ணனைப் போல.. கன்னக்குழி சிரிப்போடு, வெண்மதியைப் பார்த்து.. “ஹாய் போங்கு” என்றான், முத்துப் பற்கள் மின்ன..!
அவனைப் பார்த்து வாயில் கை வைத்து அதிர்ந்த வெண்மதி, “என்ன கொடுமைடா இது?” என்றாள்.
புரியாமல் இருவரையும் மாறி மாறி பார்த்து நின்றான், ப்ரியன்.