அத்தியாயம் - 16
அரண்மனையப் போலிருந்த அந்த வீட்டில் தன்னுடைய சிம்மாசனமான சாய்வு நாற்காலியில் ஏதோ தீவிரமாக சிந்தித்தபடி அமர்ந்திருந்தார் லிங்கேஷ்வரன். தேஜூவினுடைய தாத்தா. வயது எண்பதைத் தாண்டிய பொழுதும் பேச்சிலும் பார்வையிலும் கூர்மை குறையாமல் இருந்தது. தங்களுடைய பிள்ளைகளே தோளைத் தாண்டி வளர்ந்து விட்ட பிறகும் கூட இன்னமும் அப்பா என்றால் சிம்ம சொப்பனம் தான் மகன்கள் மூவருக்கும் அந்த வீட்டில்.
அந்த வீட்டிற்கு வந்த மருமகள்கள் மூவருமே குணவதிகளாக அமைந்துவிட இன்று வரை அந்தக் கூட்டுக் குடும்பம் கட்டுக் குலையாமல் பாதுகாக்கப்பட்டு வந்தது. கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு அந்த வீட்டில் உதித்தப் பெண் வாரிசு தேஜஸ்வினி. அதுவும் தன் காதல் மனைவியை அப்படியே அச்சாகக் கொண்டுப் பிறந்தவள் மீது கொள்ளைப் பிரியம் பெரியவருக்கு.
தன்னுடைய ஆசைப் பேத்திக்குத்தான் வரன் தேடும் படலம் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது கடந்த ஒரு வருட காலமாகவே. தேஜூ பிகாம் முடித்த கையோடு வரன் பார்க்கத் தொடங்கியவர்களுக்கு இன்னும் ஒன்றும் திருப்திகரமாக அமையவில்லை.
அவளும் சம்ரிதியுடன் இணைந்து விளையாட்டாக சி.ஐ.எம்.ஏ இன்டர் வெற்றிகரமாக முடித்திருந்தாள். அடுத்து ஆறு மாத காலமாவது ஆர்டிகள்ஷிப் செய்தால் தான் பைனல் எக்சாம் எழுத முடியும் என்பதால் இவர்களுடைய ஆடிட்டர் மூலமே அதற்கும் ஏற்பாடு செய்து இப்பொழுது சமீபமாக பெண்கள் இருவரும் அதற்கு செல்லத் தொடங்கியிருந்தார்கள்.
வரும் வரன் எதுவுமே திருப்திகரமாக இல்லை பெரியவருக்கு. என்னதான் பாரம்பரியமிக்கக் குடும்பமாக இருந்தாலும் தந்தையின் தயவை எதிர்பார்க்காமல் சுயம்புவாக முன்னேறிய ஒருவனைத் தேடிக் கொண்டிருந்தார் லிங்கேஷ்வரன். மகன்கள் மூவருமே ஆள் மாற்றி ஆள் கொண்டு வரும் ஜாதகத்திலெல்லாம் ஏதாவது ஒரு குறை கண்டுபிடித்துக் கொண்டிருந்தார் மனிதர்.
குணமிருப்பவனிடம் புத்திக் கூர்மை இல்லை. இது இரண்டும் இருந்தால் ஆள் பார்க்கத் தோரணையாக இல்லை. பேச்சு சாமர்த்தியம் இல்லை. இப்படி பல இல்லைகள் தொல்லைகளாக மாறி அவரை இம்சித்துக் கொண்டிருந்தது. இது அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றவனாக இருந்தால் அவன் இந்நாட்டிலேயே இல்லை.
லிங்கேஷ்வரன்தான் எல்லைக் கோடு விதித்திருந்தாரே பேத்தியைத் திருமணம் முடித்து அனுப்ப. மாப்பிள்ளை உள்ளூரைச் சேர்ந்தவனாக இருக்க வேண்டும் அதாவது திருச்சிக்குள்ளேயே மாப்பிள்ளை இருக்க வேண்டும். அதிகபட்ச தூரமென்றால் கரூர், தஞ்சாவூர் வரைதான். அதையும் தாண்டியெனறால், பேத்தியை அவ்வளவு தூரமாக எல்லாம் கட்டிக் கொடுக்க மனம் வரவில்லை கிழவனாருக்கு.
இந்தச் சிந்தனையிலேயே அமர்ந்திருந்தவரைக் கலைத்தது ஆசைப் பேத்தியின் குரல். "தாத்தா என்ன யோசனையெல்லாம் பலமா இருக்கு?" என்று கேட்டபடியே அவர் கால்களுக்கருகில் வந்தமர்ந்தாள் தேஜூ.
"எல்லாம் உன் கல்யாண விஷயம்தான் ராஜாத்தி" பரிவுடன் அவள் தலைக் கோதியவாறே தொடர்ந்தார் பெரியவர்.
"வர வர திருச்சியில பயலுகளுக்குப் பஞ்சமாகிப் போச்சு போல... தோரணையா ஒருத்தன் சிக்க மாட்டேங்குறான். அதான் என் பேத்திக்கின்னு பிறந்த மகராசா எங்கய்யா இருக்க நீ ன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்."
"பேசாம எனக்கு வீட்டோட மாப்பிள்ளையா பார்த்திடுங்க தாத்தா." சலுகையாக அவர் மடியில் தலை சாய்த்துக் கொண்டே கூறினாள் தேஜூ.
"ஆங் அது சரி வராது ராஜாத்தி. வீட்டோட இருந்துட்டா நாளைப்பின்ன இந்தப் பயலுக அவரை மதிக்காமப் போயிட்டானுங்கன்னா? உன் மாப்பிள்ளை ஒத்த வார்த்தை சொன்னா அதுக்கு மறுப்பா மூச்சு கூட விடக்கூடாது இவனுங்க ஆறு பேரும். அப்படித் தோரணையான ஒருத்தனைத் தான் தேடுறேன். ஒன்னும் சிக்க மாட்டேங்குது"
"என் வீட்டுக்கே வந்து என்னையவே கட்டிக்கிட்டு என் அண்ணன் தம்பிங்களையே மிரட்டிருவானா அவன்? விடுவேனா நானு? கண்ணுக்குள்ள விரலை விட்டு ஆட்டிட மாட்டேன்" கையில் அணிந்திருந்த வளையலை மேலேற்றி விட்டவாறு சிலிர்த்துக் கொண்டு பதிலளித்தாள் தேஜூ.
"அதுக்கில்ல ராஜாத்தி, உங்க ஏழு பேருக்கும் பெருசா வயசு வித்தியாசம் கிடையாது. எல்லாரும் அடுத்தடுத்துப் பிறந்துட்டீங்க. உனக்குப் பார்க்குற மாப்பிள்ளையாவது கொஞ்சம் தலைமைப் பண்பு இருக்குறவனா பார்த்துட்டோமுன்னா எங்க காலத்துக்கு அப்புறமும் மாப்பிள்ளை நம்ம குடும்பத்தைப் பார்த்துக்கிடுவாருல்ல."
அதட்டியும் பேசத் தெரியணும் அனுசரிச்சும் போகத் தெரியணும். அந்தக் குணம் எல்லாருக்குமெல்லாம் வந்துடாது. உங்கப்பாமார் மூணு பேரும் கொண்டு வந்த வரன்கள்ல ஒன்னுல கூட அந்த மாதிரி இல்ல. ஒருத்தன் முகத்தைப் பார்த்தா தெரியாது அவன் குணம் என்னன்னு, கண்ணே காட்டிக் கொடுத்துடுமே குணத்தை" மூச்சு வாங்கப் பேசி முடித்தார் லிங்கேஷ்வரன்.
கண்களைப் பற்றிப் பேச்சு வந்ததும் தேஜூவின் மனதிற்குள் பளிச்சென்று மின்னி மறைந்தது தன்னை ஆழ்ந்து நோக்கும் ஒரு ஜோடிக் கண்கள். சுரேஷ் ஆதித்யாவின் கண்கள். கண்ணில் படாதது கருத்தில் பதியாது என்று தான் அவளும் நினைத்திருந்தாள்.
ஆயினும் தூக்கத்தில் கூட அவளை அந்தக் கண்கள் இம்சித்துக் கொண்டுதான் இருந்தன. தூக்கத்தில் மட்டுமல்ல சம்பந்தமேயில்லாமல் சம்ரிதியுடன் கிளாசுக்கு செல்லும் பொழுது, ஐஸ்க்ரீம் பார்லரில், இவ்வளவு ஏன் வீட்டுத் தோட்டத்தில் உலவும் பொழுது கூட அந்தக் கண்கள் அவளை உற்று நோக்குவதாய் தோன்றும். சுற்றி வரத் தேடியும் பார்ப்பாள். யாரும் இருக்க மாட்டார்கள். தலையில் அடித்துக் கொண்டு பிரமை என்று எண்ணிக் கொள்வாள்.
இன்று தாத்தாவும் கண்களைப் பற்றிப் பேசவும் அவளுக்கு சுரேஷ் ஆதித்யாவின் நினைவுதான் வந்தது. அந்த நினைவுடனே, "அப்ப நீங்க அவனைத்தான் பார்க்கணும் தாத்தா. நீங்க கேட்குற க்வாலிபிகேஷன்ஸ் எல்லாம் அவன் கிட்ட மட்டும் தான் இருக்கு" மனதிற்குள் பேசுவதாக எண்ணிக் கொண்டு வாய்விட்டே சொல்லியிருந்தாள் தேஜூ.
"யாரை ராஜாத்தி சொல்ற?" என்று தாத்தா வினவவும் முதலில் திருதிருத்தவள் பின் சுதாரித்துக் கொண்டு, "அதான் தாத்தா மித்ரன் மாமா... அவங்க தான் நீங்க கேட்குற மாதிரியே இருப்பாங்க. ஆனா என்ன இருக்குற ஊருதான் சிங்கப்பூர். நீங்கதான் சிங்காரத்தோப்பு தாண்டக் கூடாதுன்னு சொல்லியிருக்கீங்களே, அதனால் அவரும் ரிஜெக்டட்" என்று கூறிவிட்டு விட்டால் போதுமென்று அந்த இடத்தைக் காலி செய்திருந்தாள் தேஜூ.
இதற்கு மேல் அங்கு அமர்ந்திருந்தால் கிழவர் தன் வாயாலேயே எல்லாம் வரவழைத்துவிடுவார் என்று தோன்றியதால் வாய்க்கு வந்ததை உளறிவிட்டுப் பறந்திருந்தாள். தாத்தாவோ இது ஏன் நமக்குத் தோணாமல் போனது என்று யோசிக்கத் தொடங்கிவிட்டார்.
ராஜன் இறந்த வீட்டில் தான் மித்ரனை அவரும் கொஞ்சம் ஊன்றிக் கவனித்திருந்தார். அன்பு, பாசம், அழகு, கருணை, கம்பீரம், பொறுப்புணர்வு, ஆளுமைத்திறன், சுறுசுறுப்பு அனைத்தையும் ஒருங்கே பெற்றவன். இப்பேற்பட்ட மாப்பிள்ளை எங்கு தேடினாலும் கிடைப்பது கஷ்டம்தான்.
கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு இத்தனை நாள் நெய்க்கு அலைந்திருக்கிறோமே என்று நொந்து கொண்டவர் இதற்கு மேலும் தாமதிக்க விரும்பாமல் உடனடியாக தேஜூவின் தந்தையை அழைத்துவிட்டார் இது குறித்துப் பேசுவதற்கு.
'சம்ரிதி இருக்கும் போது நம்ம பொண்ணுக்கு எப்படிப்பா கேட்கறது' என்று தேஜூவின் தந்தை வெகுவாகத் தயங்க, "யார்றா இவன் சுத்த கூறு கெட்டவனா இருக்கான். அவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினா நாம நடுவுல போறது தப்பு. கேட்டுப் பார்ப்போம். அப்படி எதுவும் இல்லைன்னா நாம நம்ம பிள்ளைக்குக் கேட்குறதுல என்ன தப்புங்குறேன்?" என்று அடித்துப் பேசினார் கிழவர்.
தூரத்தைத் தவிர மித்ரனிடம் சொல்வதற்குக் குறையாக ஒன்றும் இல்லையே. அதுவும் கூட திருமணத்திற்குப் பிறகு சென்னைக்கே வந்துவிடுமாறு கொஞ்சம் தயவாக அழைப்பு விடுத்தால் மித்ரன் ஒப்புக் கொள்வதற்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கருதினார் லிங்கேஷ்வரன்.
"சரி நான் உங்க மருமகள்கிட்ட சொல்லி லெக்ஷ்மி அண்ணிகிட்ட பேசச் சொல்றேன்ப்பா" என்று அப்போதைக்கு அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் தேஜூவின் தந்தை. ஆனால் தந்தை மறுநாளே கல்யாணப் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு வருவார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.
சுஜாதா, லெக்ஷ்மி மற்றும் சம்ரிதியைப் பார்க்கவென சென்னையிலிருந்து கிளம்பி வந்திருந்தார். இம்முறை உடன் விஸ்வநாதனும் வந்திருந்தார். சம்ரிதி தேஜூவுடன் ஆர்ட்டிகள்ஷிப் ட்ரெயினிங்கிற்கு சென்றுவிட இவர்கள் மூவருமாக மட்டும் கிளம்பி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்திருந்தார்கள்.
பெண்கள் இருவரும் சக்கரத்தாழ்வாரை வணங்கிவிட்டு வருவதாகக் கூறிச்செல்ல விஸ்வநாதன் மட்டும் கோவில் மண்டபத்தில் அமர்ந்திருந்தார். சரியாக அந்த நேரம் அங்கு வந்து சேர்ந்தார் லிங்கேஷ்வரன். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து முடித்தவுடன் பேச்சைத் தொடங்கினார் லிங்கேஷ்வரன்.
"விஸ்வநாதா உன் கடைசிப் பையனுக்கு எதுவும் வரன் பார்க்குறியாப்பா?"
"இன்னும் அந்தப் பேச்சே ஆரம்பிக்கலீங்க மாமா. அவன் ரொம்ப பிசியாவே இருக்கான். கொஞ்சம் ப்ரீயாகட்டும்னு பார்க்குறேன்" யோசனையாகப் பதிலளித்தார் விஸ்வநாதன்.
"வெளியில பார்க்குறீங்களா இல்ல சம்ரிதியையே முடிக்கலாமுன்னு இருக்கீங்களா?"
"இல்லயில்ல வெளியிலதான் பார்க்கணும். சம்ரிதியைப் பேசி முடிக்கிற மாதிரியெல்லாம் எந்த ஐடியாவும் இல்லை" அவசரமாக மறுத்தார் விஸ்வநாதன்.
"நாங்க என் பேத்தி தேஜஸ்வினிக்கு மாப்பிள்ளை பார்க்கிறோம். அதான் உங்க பையனைக் கேட்கலாமுன்னு" என்று கூறி சற்று நிறுத்தியவர், "உனக்கு விருப்பமில்லைன்னாலும் உன் வீட்டம்மாவுக்கு ஆசை இருக்கலாம் இல்லையா? தன் தம்பி மகளைத் தன் பையனுக்குக் கட்டி வைக்கணுமுன்னு, அதுனால நீ வீட்ல கலந்து பேசிட்டு சொல்லு. எல்லாருக்கும் விருப்பம்னா நாம மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பத்திப் பேசலாம்" என்று முடித்தார் பெரியவர்.
விஸ்வநாதன் யோசிக்க தொடங்கினார். தேஜஸ்வினி நல்ல கலகலப்பான பெண். மார்டனாகவும் இருப்பாள். மித்ரனுக்கு எல்லாவிதத்திலும் பொருத்தமாக இருப்பாள் என்று தோன்றியது. தான் எதிர்பார்த்தது போல் பிசினஸ் பின்புலமும் இவர்களுக்கு இருக்கிறது. என்ன நாம் கணினித்துறையில் எதிர்பார்த்தோம் இவர்கள் ஜவுளி மற்றும் நகைக்கடை வைத்திருக்கிறார்கள். ஆனாலும் பரவாயில்லை இந்த சம்பந்தத்தையே முடித்துவிடலாம் என்று முடிவு எடுத்துக் கொண்டார் விஸ்வநாதன்.
தன் பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்த பெரியவரிடம் "எல்லாரும் கோவிலுக்கு தான் வந்தோம் சுஜாதாவும் லெக்ஷ்மியும் இப்ப வந்திடுவாங்க. அவங்க கிட்டயே கேட்கலாம்" என்றும் கூறிவிட்டார்.
சற்று நேரத்தில் சுஜாதாவும் லக்ஷ்மியும் வந்துவிட அனைவரும் ஒன்றாகவே வீட்டிற்கு கிளப்பினார்கள். வீட்டிற்கு வந்தவுடன் மறுபடியும் ஒருமுறை தேஜஸ்வினியின் தாத்தா அனைத்தையும் விளக்கிக் கூற கேட்ட சுஜாதாவிற்கும் லக்ஷ்மிக்கும் கொஞ்சம் கதி கலங்கித் தான் போனது.
முதலில் சுதாரித்த சுஜாதா, "மித்ரன் நியூசிலாந்து போய் இருக்கான். அவன் வரட்டும். அவன் கிட்ட கேட்டுட்டு முடிவு எடுக்கலாம் பெரியப்பா" என்று கூறினார்.