அந்த பிரமாண்டமானக் கூடத்தில் சீர்வரிசைத் தட்டுக்கள் பரப்பபட்டிருக்க அதன் நடுவே ஒய்யாரமாக வீற்றிருந்தது மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்டத் திருமாங்கல்யம். இது விஸ்வநாதனுடைய குடும்ப வழக்கம். நிச்சய தாம்பூலம் மாற்றும் பொழுதே புதிதாக வாங்கப்பட்ட திருமாங்கல்யத்தையும் வீட்டில் வைத்துப் பூஜை செய்து செய்வார்கள்.
அதன் பின் அவர்களுடைய குலதெய்வக் கோவிலில் அம்மன் பாதத்தில் நாற்பத்தி எட்டு நாட்கள் வைத்துப் பூஜை செய்து எடுத்தப் பிறகுதான் அந்தத் திருமாங்கல்யம் மணப்பெண் கழுத்தில் ஏறும். அந்த வழக்கப்படித் திருமாங்கல்யமும் அங்கே வைக்கப்பட்டிருந்தது.
முதலில் தயாராகி வந்தது மித்ரன் தான். வந்து பார்த்திபன் அருகில் அமர்ந்தவன் அங்கு நடக்கும் நிகழ்வுகளை மகிழ்ச்சியுடன் உள்வாங்கத் தொடங்கினான். விஸ்வநாதன் சுஜாதா தம்பதியருக்கு எதிரில் தேஜூவினுடைய பெற்றோர் அமர்ந்திருக்க முதல் முறையாக மித்ரனின் புருவம் யோசனையாகச் சுருங்கியது.
அதையும் கூட தன்னுடைய மாமா இல்லாத காரணத்தினால் இருக்கும் என்று சிந்தித்தவனுக்கு, என்ன முயன்றும் தன்னுடைய தாயாரின் செயலில் இருக்கும் ஒதுக்கத்திற்கும் முகத்தில் வலுக்கட்டாயமாக ஒட்டி வைக்கப்பட்ட சிரிப்பிற்கும் காரணம் கண்டறிய முடியவில்லை. ஏதோ தவறு நடந்திருப்பதாக உள்மனம் சந்தேகிக்கத் தொடங்கியது.
தேஜூ வலுக்கட்டாயமாக நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தாள் அவள் அறையிலிருந்து வெளிவராமல். உடன் சம்ரிதியைத் தவிர வேறு யாரையும் அனுமதிக்கவுமில்லை. சம்ரிதி ஆரம்பத்தில் அவள் மெரூன் நிறத்தில் புடவை அணிவதைப் பார்த்தவள், "தேஜூ ஏன் இந்தக் கலர்? மித்ரன் மாமாவுக்கு லைட் கலர்ஸ் தான் பிடிக்கும்" என்று அவளையும் அறியாமல் சொல்லிவிட,
"உன் மித்ரன் மாமாவுக்கு உன்னைக் கூடத்தான் பிடிக்கும்" என்று தேஜூவிடமிருந்து வந்த பதிலில் அதற்குப் பின் வாயை இறுக மூடிக் கொண்டாள்.
லிங்கேஷ்வரனின் மூத்த மகன் அவர் காதில் ஏதோ சொல்ல, "சரி நாம லக்னப் பத்திரிக்கை வாசிச்சுடலாம். அப்புறம் அவங்க ரெண்டு பேரும் மோதிரம் மாத்திக்கட்டும்" என்று சொன்னவர் லக்னப் பத்திரிக்கையை வாசிக்கத் தொடங்க, மணமகனின் விவரங்கள் கூறி முடித்து மணமகளின் விவரங்களும் சொல்லி சரியாக மணமகளின் பெயரைச் சொல்லும்முன் "நிறுத்துங்க" என்று இரண்டு குரல் ஓங்கி ஒலித்தது.
ஒரு குரல் மித்ரனுக்கு சொந்தமானது. மற்றொன்று சுரேஷ் ஆதித்யாவினுடையது. அங்கிருந்த அனைவரும் இருவரையும் குழப்பமாக மாறி மாறிப் பார்க்க மித்ரன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்துவிட்டான். அப்பொழுது தான் தேஜூவும் சம்ரிதியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து சேர்ந்தாள்.
யாரையும் பார்க்கவுமில்லை யாரிடமும் எதுவும் கேட்கவுமில்லை. அங்கிருந்தத் திருமாங்கல்யத்தைக் கையில் எடுத்தவன் விறுவிறுவென்று சென்று அதை சம்ரிதியின் கழுத்தில் கட்டியிருந்தான். அதை அணிவிக்கும் பொழுது மித்ரன் ஆசையாக சம்ரிதியின் முகத்தைப் பார்க்க அவளோ பயந்து போய் அங்கிருந்த அனைவரையும் பார்த்தாளேயன்றி மறந்தும் மித்ரனின் முகம் காணவில்லை.
நொறுங்கிப் போனான் மித்ரன். அருகில் முகத்தில் மலர்ந்த சிரிப்புடன் நிற்கும் தேஜூவைப் பார்த்தவன், "ஐ எம் சாரி தேஜூ. நான் எப்போதும் உன்னை இந்த மாதிரி கண்ணோட்டத்துல பார்த்ததே இல்ல. நான் செஞ்சது உன் மனசைக் காயப்படுத்தியிருந்தா என்னை மன்னிச்சிடும்மா" உணர்ந்து மன்னிப்பை யாசித்தான் மித்ரன்.
"எனக்கு அது நல்லாவே தெரியும் மாமா. இவகிட்ட படிச்சுப் படிச்சுக் கேட்டேனே, நான் மட்டுமா? கிட்டத்தட்ட எல்லாருமே கேட்டோம். மத்த மூணு மாமா மாதிரிதான் மித்ரன் மாமாவும்னு அடிச்சு சொல்லிட்டா" தேஜூவினுடைய பதிலில் பலத்த அடி வாங்கியது மித்ரனின் காதல்.
காதலிப்பதை விடக் காதலிக்கப்படுவதில் ஒரு தனி சுகம் இருக்கும். இத்தனை நாளாகத் தான் காதலிக்கப்படுவதை எண்ணியெண்ணி சுகமாகக் காதல் வானில் பறந்து கொண்டிருந்தவன், சிறகொடிந்த பறவையாகத் தரையில் வீழ்ந்துத் துடிக்கத் தொடங்கினான் மித்ரன்.
ஒற்றைப் பார்வையிலும் ஒற்றை வார்த்தையிலுமே காதலைப் போற்றி வளர்த்தவனுக்கு சம்ரிதி கூறியதாகச் சொன்ன வார்த்தைகளை ஜீரணிக்கவே முடியவில்லை. இத்தனை நாட்களாக சம்ரிதியின் கண்களில் கண்ட காதலும் உரிமையுணர்வும் நிஜமா அல்லது இப்பொழுது அவள் காட்டும் அந்நியத்தன்மையும் ஒதுக்கமும் நிஜமா என்று பகுத்தறியத் தெரியாமல் திண்டாடிப் போனான் மித்ரன்.
சம்ரிதியோ, மாமன் மகள் என்ற ஒற்றைக் காரணத்துக்காகவே தன்னை விரும்பியவன் உண்மை அறிந்தால் எவ்வாறு நடந்துக் கொள்வானோ? தான் முதலிலேயே உண்மையை மித்ரனிடம் மட்டுமாவது கூறியிருந்தால் இந்த நிச்சயதார்த்தம் நல்ல முறையில் நடந்திருக்கும். இப்பொழுது தேஜூவின் வாழ்க்கையையும் தன்னுடைய மௌனத்தால் கெடுத்து விட்டோமே என்ற குற்றவுணர்வில் தவித்துக் கொண்டிருந்தாள்.
சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த லெக்ஷ்மி சம்ரிதி அருகில் வரவும் சம்ரிதி அழத் தொடங்க, திருமணம் முடிந்ததில் ஒரு நொடி நேர மகிழ்ச்சியைக் கூட அவளிடம் காணாத மித்ரன் இதற்கு மேல் அங்கிருக்கப் பிடிக்காமல் தேஜுவின் தாத்தாவிடமும் பெற்றோரிடமும் சென்று வாய் வார்த்தையாக இல்லாமல் கைக் கூப்பி மன்னிப்பை வேண்டிவிட்டு விறுவிறுவென்று கோபமாக வெளியேறிவிட்டான்.
செல்லும் முன் தன்னுடைய தாயையும் தந்தையையும் கோபமாக முறைக்கத் தவறவில்லை. ஏற்கனவே சில பல கீறல்களுடன் இருந்த தந்தை மகன் உறவில் பெரிதாக ஒரு விரிசலே விழுந்தது. அனைவரும் செய்வதறியாமல் திகைத்து நிற்க பார்த்திபன் மட்டும் மித்ரன் பின்னோடு ஓடிச் சென்றான்.
"நாங்க உள்ள வரலாங்களா?" அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது சுரேஷ் ஆதித்யாவினுடைய தந்தையின் குரல். மித்ரனை அடித்து நொறுக்கும் வெறியுடன் கிளம்பிய தன் பேரன்களை சமாதானப்படுத்திக் கொண்டிருந்த லிங்கேஷ்வரன் இவர்கள் புறம் திரும்பி உள்ளே வருமாறுத் தலையசைத்து வரவேற்றார்.
"ஐயா என் பேரு விக்ரமாதித்யாங்க. கேள்விப் பட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன் ஆதித்யா க்ரூப் ஆஃப் கம்பெனிஸ் பத்தி. இது என் ஒரே மகன் பேரு சுரேஷ் ஆதித்யா.
இப்பக் கொஞ்ச நேரத்துக்கு முன்ன திடீருன்னு வந்து அப்பா நான் ஒரு பொண்ணை விரும்புறேன்ப்பா. இன்னைக்கு அந்தப் பொண்ணுக்கு நிச்சயதார்த்தம். வாங்கப்பா நாம போய் பொண்ணு கேட்கலாமுன்னு சொன்னான்.
என்னப்பா நீயே அந்தப் பொண்ணுக்கு இன்னைக்கு நிச்சயதார்த்தமுன்னு சொல்லிட்ட. இப்பப் போய் எப்படிப்பா நாம கேட்குறதுன்னு கேட்டேங்க. அந்தப் பொண்ணு தான்ப்பா என் வாழ்க்கையே. பரீட்சையே எழுதாம என் வாழ்க்கையில தோத்துப் போக நான் விரும்பலைப்பான்னு சொன்னான்.
அதான் இங்க வந்து உங்ககிட்ட பேசிப் பார்க்கலாமுன்னு வந்தோம். வந்துப் பார்த்தா நீங்க பார்த்திருந்த மாப்பிள்ளைத் தம்பியே எங்க வேலையை சுலபமாக்கிட்டாருங்க.
என் பையன்ங்குறதுக்காக சொல்லலீங்க. தங்கமான பையன். உங்க பொண்ணை ஆயுசுக்கும் கண்ணுக்குள்ள வைச்சுப் பார்த்துப்பான். நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். இதுக்கு மேல பெரியவங்க நீங்க தான் சொல்லணும்." தேஜூ வரச்சொன்னதாகக் காட்டிக் கொள்ளாமலே தான் சொல்ல வேண்டியதைச் சொல்லி முடித்தார் சுரேஷ் ஆதித்யாவின் தந்தை விக்ரமாதித்யா.
தன்னைக் காட்டிக் கொடுக்காமல் பேசிய விதத்திற்காகவே அந்த மனிதர் மேல் பெருமதிப்பு உண்டாகிப் போனது தேஜஸ்வினிக்கு. மெல்ல தன் தாத்தாவிடம் சென்றவள் அவரருகில் அமர்ந்து,
"தாத்தா நான் அன்னைக்குப் பேசும் பொழுது சொன்னது இவரை மனசுல வைச்சுதான். மூணு வருஷத்துக்கு முன்னாடியே வந்து என்கிட்ட காதலிக்கிறதா சொல்லிட்டாங்க. நான் அப்ப மறுத்துட்டாலும் என் மனசுல எனக்கே தெரியாம இவர்தான் தாத்தா இருந்திருக்காரு. உங்க கிட்ட சொல்ல சங்கடப்பட்டுக்கிட்டுதான் மித்ரன் மாமா பேரை சொல்லிட்டேன். நான் பண்ணது தப்புதான் என்னை மன்னிச்சிடுங்க தாத்தா. இப்பக்கூட நான் சொல்லிதான் இவங்க வந்திருக்காங்க. அதைக் கூட சொல்லாம உங்க கிட்ட பேசுற இந்தக் குணம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு தாத்தா" அவருக்கு மட்டும் கேட்கும் வண்ணம் மெல்லிய குரலில் சொல்லி முடித்தாள் தேஜூ.
பேத்தியின் மகிழ்ச்சியே தன் ஒரே குறிக்கோளாக எண்ணி வாழ்ந்த மனிதருக்கு, அந்த ஆசைப் பேத்தியின் இந்த நியாயமான கோரிக்கையை நிராகரிக்க மனம் வரவில்லை. அதுவுமில்லாமல் தான் தேடிய அத்தனைத் தகுதிகளோடு ஒருவன் கண்ணெதிரில் நிற்கையில் மறுக்கக் காரணமும் இல்லை. அதன்பிறகு சுமூகமான முறையில் சிறப்பாக நடைப்பெற்றது சுரேஷ் ஆதித்யா மற்றும் தேஜஸ்வினியினுடைய நிச்சயதார்த்தப் பெருவிழா.
நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு, "தாத்தா நான் உங்கப் பேத்திக்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்" கம்பீரமாக அனுமதி கேட்டவனுக்கு "தேஜூ மாப்பிள்ளைக்கு வீட்டைச் சுத்திக் காட்டும்மா" என்று உடனடியாக அனுமதி கிடைத்தது.
ஒரு தலையசைப்புடன் முன் நடந்தத் தேஜூவைப் பின் தொடர்ந்தான் சுரேஷ் ஆதித்யா. வேறெங்கும் அழைத்துச் செல்லாம்ல நேரடியாகத் தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்று, "இது தான் என்னோட ரூம்" என்று அலட்சியமாகத் தோளைக் குலுக்கிச் சொன்னவளைக் குறும்பாகப் பார்த்தவன்,
"உன்னை வீட்டைத் தானே சுத்திக் காட்ட சொன்னாங்க, நீ என்னடான்னா உன் ரூமை சுத்திக் காட்டுற" குறும்புச் சிரிப்புடன் வினவினான் சுரேஷ் ஆதித்யா.
"வேணாட்டி போ" என்று சிறுபிள்ளையென முகம் தூக்கிச் செல்பவளைக் கரம் பிடித்துத் தடுத்தவன், "தேவதை மாதிரி இருக்க இந்தப் புடவையில" ஆழ்ந்த குரலில் கூறினான்.
பெண்ணவள் வெட்கப்பட்டுத் தலைக் கவிழ்ந்து கொள்ள அவள் அருகில் நெருங்கி வந்தவன் அவள் தாடையைப் பற்றி நிமிர்த்தி, "வெட்கமெல்லாம் படத் தெரியுமா உனக்கு ஹ்ம்ம்?" என்று குறும்பாக வினவ, அவன் மார்பிலேயே சாய்ந்துத் தன் முகத்தை மறைத்துக் கொண்டாள் அவனின் தேவதை.
"இப்பவாவது சொல்லேன் நீயும் என்னை லவ் பண்றியா?" அவளை மென்மையாக அணைத்துக் கொண்டே ஹஸ்கி வாய்சில் வினவ, அவன் மார்பிலேயே மேலும் கீழுமாக முகத்தைப் புரட்டினாள்.
"என்னைத் தேடுனியா?" இந்தக் கேள்விக்கு இடவலமாகத் தலை அசைந்தது. அவள் தன் நெஞ்சில் முகத்தைத் திருப்பத் திருப்ப இவன் தன்னுடைய அணைப்பை இறுக்கிக் கொண்டே இருந்தான்.
"ஆனா நான் பார்த்திருக்கேனே. நான் எப்பவெல்லாம் உன்னை மறைஞ்சிருந்து பார்க்குறேனோ அப்பவெல்லாம் உன் கண்ணு ரெண்டும் சுத்திச் சுத்தி என்னைத் தேடுனதைப் பார்த்திருக்கேனே" என்று கூற அவள் தலை நிமிர்த்தி ஆச்சரியமாக அவனை விழி விரித்துப் பார்த்தாள். அந்தக் கண்களில் மென்மையாக முத்தம் வைத்தான்.
கண்கள் சுருக்கி உதடு குவித்து அடுத்த முத்தத்திற்கு மன்னவன் அனுமதி கேட்க, வெட்கப் புன்னகையையேப் பதிலாகத் தந்தாள் அவனது இதய ராணி. அவளதுப் புன்னகையைத் தன்னுடைய இதழுக்கு மாற்றிக் கொண்டான் அவளது காதல் மன்னவன்.
தன்னுடைய காதல் நிறைவேறுமா என்று தத்தளித்த ஒருவன் தானும் காதலிக்கப்பட்டுள்ளோம் என்று காதல் வானில் சிறகடித்துப் பறக்கத் தொடங்க, ஏற்கனவே பறந்து கொண்டிருந்த ஒருவனோ சிறகொடிந்துத் தரையில் வீழ்ந்திருந்தான். காதல் விந்தையானது தான்.