வல்லினம்: க், ச், ட், த், ப், ற்
ஆகிய 6 மெய்யெழுத்துகளும்தான் வல்லினம் எனப்படுகின்றன.
மொழியியலில் இவற்றை ‘
வெடிப்பொலிகள்’ (plosives) / ‘
அடைப்பொலிகள்’ (stops) என்போம்.
இவற்றை உச்சரிக்கையில் நமது
குரல் நாண் (vocal cord / tract) முற்றாக மூடிக் கொள்ளும். எனவேதான் வல்லினம் மிகுதல் தேவையாகிறது. (இல்லையென்றால் உச்சரிப்பில் ஒரு இடைவெளி தோன்றும்!)
வல்லினம் மிகுதல் சிலருக்கு (பலருக்கு?) வேப்பங்காயாய் இருப்பதன் காரணம் நமது இலக்கண நூல்களில் இவை
தொகுத்து வழங்கப் பெறவில்லை என்பதே!
தொல்காப்பியம் நன்னூல் முதலிய இலக்கணங்கள் வல்லினம் மிகுதலை ஒரு தனி தலைப்பாகவோ இயலாகவோ அலசவில்லை. அவை அடிப்படையில் புணர்ச்சிகளைத்தான் அலசுகின்றன (
புணர்ச்சி = இரண்டு சொற்கள் சேர்கையில் இடையில் நிகழும் மாற்றம்).
நாம் அவற்றிலிருந்து திரட்டி வல்லினம் மிகும் / மிகா இடங்களைத் தனிப்படுத்திக் காண்போம்.
வல்லினம் மிகுதலின் இன்னொரு சிக்கல், இது வெறும் எழுத்தமைப்பை மட்டுமே வைத்துத் தீர்மாணிக்கப்படும் விதி அல்ல என்பதே!
வல்லினம் மிகுதலில் சொற்களின் (அவை அமையும் சொற்றொடரின்)
பொருளையும் நோக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாய்:
1- “முருகா, வேலைக் கொடு!”
2- “முருகா, வேலை கொடு!”
1 - ‘வேலைக் கொடு’ என்று 2ம் வேற்றுமையால் வல்லினம் மிகுந்தது. ‘முருகா, உன் கையில் இருக்கும் வேல் என்ற ஆயுதத்தைக் கொடு’ என்று பொருள் தரும்.
2 - ‘வேலை கொடு’ என்றால் ‘முருகா, எனக்கு ஒரு நல்ல உத்தியோகம் (வேலை) ஏற்பாடு செய்துகொடு’ என்று பொருள் தரும். (இதையே ‘வேலையைக் கொடு’ என்று 2ம் வேற்றுமையாக எழுதினால் வல்லினம் மிகுவதைக் காண்க!)
ஆக, வல்லினம் மிகுதல் கொஞ்சம் இடியாப்பச் சிக்கல்தான்!
ஆனால் கவல்க! (கவலைப்படாதீர்கள்! டரியல் ஆவாதீங்கோ! மெர்சல் வோணாங்கோ!)
ஒரு
சில எளிய விதிகளை நன்றாகக் கற்றுக் கடைப்பிடிப்பதன் மூலம் ஏறத்தாழ 95% வல்லினம் மிகுதல் / மிகமைப் பிழைகளைக் களைந்துவிடலாம் என்று அடியேன் (சில இலக்கண நூல்களின் துணையோடு) கண்டறிந்துள்ளேன்.
அவற்றை உங்களுக்கும் கற்றுத் தருவதுதான் எனது முதல் நோக்கம்.
அவற்றில் முதல் விதியாக
2ம் 4ம் வேற்றுமை உருபுகளை அடுத்து வல்லினம் மிகும் என்பதைக் கற்போம்:
‘
வேற்றுமை’ என்பது சொற்றொடரில் ஒரு
பெயர்ச்சொல்லின் பங்கை எடுத்துக்காட்டும் அமைப்பு.
1- “இராமன் சீதையை மணந்தான்”
2- “சீதை இராமனை மணந்தாள்”
இரு தொடர்களும் ஒரே பொருளைத்தான் கூறுகின்றன என்று தோன்றினாலும் அவற்றின் அமைப்பில் வேறுபாடு இருக்கிறதல்லவா?
1-இல் ‘மணந்தான்’ என்று ஆண்பால் வினைமுற்றும் (ஆன்), 2-இல் ‘மணந்தாள்’ என்று பெண்பால் வினைமுற்றும் (ஆள்) ஏன் வந்தன?
‘இராமன்’, ‘சீதை’ இரண்டுமே பெயர்ச்சொற்கள்தான், ஆனால், 1, 2 ஆகிய தொடர்களில் இவற்றின் பங்களிப்பு / பயன்பாடு வெவ்வேறாக இருப்பதை உணர முடிகிறதல்லவா?
1ம் தொடரில் ‘மணத்தல்’ ஆகிய செயலைச் செய்பவன் இராமன் - இங்கு இராமன் எழுவாய் (’மணந்தான்’ என்ற வினைச்சொல்லை ‘பயனிலை’ என்போம்!).
இத்தொடரில் ‘இராமன் யாரை மணந்தான்?’ என்ற வினாவின் விடைதான் ‘சீதை’ என்ற பெயர்ச்சொல், இதனை இங்கே ‘செயப்படுபொருள்’ என்போம்.
ஆனால், 2ம் தொடரில் இராமன் செயப்படுபொருளாகவும் சீதை எழுவாயாகவும் இருக்கின்றனர்.
இப்படி சொற்றொடரில் ஒரு பெயர்ச்சொல் அமையக்கூடிய
வேறு வேறு இலக்கணப் பொருள்களை எடுத்துக்காட்ட பயன்படும் அமைப்புதான் ‘வேற்றுமை’ (case / noun case) என்பது. (பெயர்ச்சொல்லின் இலக்கண வேற்றுமை!)
தமிழில் இவ்வேற்றுமையைக் குறிக்க சில பின்னொட்டுகள் (suffixes) பயன்படுத்தப்படுகின்றன.
அவற்றைத்தான்
‘வேற்றுமை உருபுகள்’ (case markers) என்கிறோம்.
வேற்றுமைகள் மொத்தம் 8 வகை. (இவற்றை முதல், இரண்டாம், மூன்றாம்... எட்டாம் என்று எண்ணுப்பெயரிலேயேதான் அழைப்போம்!)
நாம் இப்போதைக்கு 2ம் 4ம் வேற்றுமைகளை மட்டும் காண்போம். (அவற்றில்தான் வல்லினம் மிகும்!)
2ம் வேற்றுமை:
இதை நாம் ஏற்கனவே நமது எடுத்துக்காட்டுகளில் பார்த்துவிட்டோம்.
இது ஒரு பெயர்ச்சொல்லைச் ‘செயப்படுபொருளாக’க் காட்டும்.
இதன் உருபு ‘ஐ’ என்பது.
1- ‘முருகா, வேலைக் கொடு’
2- ‘இராமன் சீதையை மணந்தான்’
3- ‘சீதை இராமனை மணந்தாள்’
வேலை = வேல்+ஐ
சீதையை = சீதை+ஐ (இடையில் ‘ய்’ என்ற உடம்படுமெய் வந்துள்ளது!)
இராமனை = இராமன்+ஐ
இவ்வாறு ‘
ஐ’ உருபு சேர்ந்து வரும் பெயர்ச்சொற்கள் எல்லாம் 2ம் வேற்றுமையில் அமைவன.
இவற்றின் இலக்கணப் பொருள்
இவை மீது வினை (பயனிலை) நிகழ்கிறது என்பதுதான்.
எல்லாச் சொற்றொடரும் ஒரு வினைச்சொல்லை அடிப்படையாகக் கொண்டே அமைகின்றன*.
(சொற்றொடரின் இந்த ஆதார வினைச்சொல்லைத்தான் ‘பயனிலை’ என்கிறோம்!)
தொடரின் மற்ற பகுதிகள் எல்லாம் அந்த வினைச்சொல்லைச் சார்ந்த வினாக்களுக்கு விடைகளைத் தருவனவே.
அதாவது,
4- ‘நான் கண்ணனைக் கண்டேன்’
இதில் ‘கண்டேன்’ என்ற வினைச்சொல்தான் பயனிலை.
யார் கண்டது? - நான்!
யாரைக் கண்டாய்? - கண்ணனை
’நான்’ எழுவாய், ‘கண்ணன்’ செயப்படுபொருள்.
‘காண்டல்’ ஆகிய வினையை ‘நான்’ செய்கிறேன், அதை எதன் / எவர் மீது செய்கிறேன்? கண்ணன் மீது!
எனவேதான் ‘கண்ணன்’ செயப்படுபொருள்! 2ம் வேற்றுமை!
(இதில் மேலும் வினாக்கள் எழுந்தால் தயங்காது கருத்தில் வினவுக...)
எடுத்துக்காட்டுகள்:
1- ‘எழிலி ஓவியத்தைத் தீட்டினாள்’
2- ‘கந்தன் பந்தைப் பிடித்தான்’
3- ‘இலக்குவன் கோட்டைக் கிழித்தான்’
4- ‘கோதை மாலையைச் சூடினாள்’
5- ‘அன்பு பரிசைப் பெற்றான்’
சரி, இப்போது இவற்றைப் பாருங்கள்:
1அ- ‘எழிலி ஓவியம் தீட்டினாள்’
2அ- ‘கந்தன் பந்து பிடித்தான்’
3அ- ‘இலக்குவன் கோடு கிழித்தான்’
4அ- ‘கோதை மாலை சூடினாள்’
5அ- ‘அன்பு பரிசு பெற்றான்’
அ-வரிசைத் தொடர்களில் ஏன் வல்லினம் மிகவில்லை?
அ-வரிசையில் ஏதோ மாறியிருக்கிறதல்லவா?
ஆம், அவற்றில் 2ம் வேற்றுமை உருபான ‘ஐ’ இடம்பெறவில்லை!
ஆனாலும் பொருள் மாறவில்லையே? எந்தக் குழப்பமும் வரவில்லையே!
காரணம் ‘எழிலி ஓவியம் தீட்டினாள்’ என்பதில் இருக்கும் இரண்டு பெயர்ச்சொற்களில் (எழிலி, ஓவியம்) ‘தீட்டுதல்’ என்ற வினையை யார் செய்திருப்பர், யார் மீது செய்திருப்பர் என்று நமக்குத் தெளிவாகத் தெரிந்திருப்பதால்தான்!
‘எழில் ஓவியம் தீட்டினாள்’ என்பதை ‘ஓவியம் எழிலியைத் தீட்டியது’ என்று நாம் ஒரு போதும் பொருள்கொள்ள மாட்டோம்!
மேலும், இவற்றில் ‘தீட்டினாள்’ ‘பிடித்தான்’ போன்ற வினைச்சொற்களில் இருக்கும் வினைமுற்றுகள் அவ்வினையை யார் செய்தது என்று தெளிவாகக் காட்டிவிடுவதால் 2ம் வேற்றுமை உருபு இல்லாமலே எது எழுவாய், எது செயப்படுபொருள் என்று நமக்குப் புரிகிறது!
6அ- ‘நான் இராமன் கண்டேன்’
என்றாலும் ஓரளவு புரிந்துகொள்கிறோம். ஆனால், இங்கு சொற்றொடர் முழுமை பெறாததாகவே தோன்றுகிறது!
6- ‘நான் இராமனைக் கண்டேன்’ என்றால்தான் நமக்குத் திருப்தி!
(கண்டேன் என்ற வினைச்சொல்லின் ‘ஏன்’ வினைமுற்று தன்மை ஒருமை விகுதி, இதன் எழுவாய் ‘நான்’ஆக மட்டுமே இருக்க இயலும்! ‘இராமனைக் கண்டேன்’ என்றாலும் நமக்குப் புரியும், ‘நான்’ தேவையில்லை!)
7- ‘மீன் தின்ற பையன்’
இது தெளிவாகப் புரிகிறதா? இல்லை!
‘மீனைத் தின்ற பையன்’, ‘மீனால் தின்னப்பட்ட பையன்’ என்று இரண்டு பொருள்களை இத்தொடர் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது! இவற்றில் எதை எடுத்துக்கொள்வது? (’பையன்’ எழுவாயா? செயப்படுபொருளா? குழப்பம்!)
எனவே, இது போன்ற நிலைகளில் நம்மால் 2ம் வேற்றுமை உருபையோ (அல்லது பிற வேற்றுமை உருபுகளையோ) கைவிட இயலாது!
ஆனால், மேலே சொன்ன 1அ முதல் 5அ வரை உள்ள சொற்றொடர்களைப் போல வேற்றுமை உருபு இல்லாமலும் குழப்பமின்றிப் பொருள் புரியும் இடங்களில் நாம் வேற்றுமை உருபுகளைக் கைவிட்டுவிடலாம்.
இவ்வாறு வேற்றுமை உருபு இல்லாமல் அமையும் தொடர்கள் ‘
வேற்றுமைத் தொகை’ எனப்படும்.
இவற்றில் வேற்றுமை உருபு மறைந்து (தொக்கி) இருக்கும்.
வேற்றுமை உருபை வெளிப்படையாகக் கொண்ட தொடர்கள் ‘
வேற்றுமை விரி’ எனப்படும்.
[Reusing examples! he he!]
வேற்றுமை விரி: [வல்லினம் மிகும்]
1- ‘எழிலி ஓவியத்தைத் தீட்டினாள்’
2- ‘கந்தன் பந்தைப் பிடித்தான்’
3- ‘இலக்குவன் கோட்டைக் கிழித்தான்’
4- ‘கோதை மாலையைச் சூடினாள்’
5- ‘அன்பு பரிசைப் பெற்றான்’
வேற்றுமைத் தொகை: [வல்லினம் மிகாது]
1அ- ‘எழிலி ஓவியம் தீட்டினாள்’
2அ- ‘கந்தன் பந்து பிடித்தான்’
3அ- ‘இலக்குவன் கோடு கிழித்தான்’
4அ- ‘கோதை மாலை சூடினாள்’
5அ- ‘அன்பு பரிசு பெற்றான்’
ஆக,
2ம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்.
(2ம் வேற்றுமை உருபான ‘ஐ’யைத் தொடர்ந்து வல்லினம் மிகும்.)
2ம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகா.
இதுதான் முதல் விதி. (குறித்துவைத்துக் கொள்ளுங்கள்!)
பயிற்சி:
2ம் வேற்றுமை விரியாகவும் தொகையாகவும் 5 முதல் 10 தொடர்களை எழுதி அவற்றில் வல்லினம் மிக்கதா இல்லையா என்று குறிப்பிடுக.
எடுத்துக்காட்டு:
1- ‘இராமன் சரமாரி பெய்தான்’ - மிகாது
1அ- ‘இராமன் சரமாரியைப் பெய்தான்’ - மிகும்
2- ‘சீதை ஓவியம் வரைந்தாள்’ - மிகாது
2அ- ‘சீதை ஓவியத்தை வரைந்தாள்’ - மிகாது^
(^ ஏன் மிகவில்லை? ‘வரைந்தாள்’ என்ற வருமொழி வல்லினத்தில் தொடங்கவில்லையே! இங்கே வல்லினம் மிகுமா மிகாதா என்ற வினாவிற்கே இடமில்லை!)
---
*எல்லா தொடரிலும் வினைச்சொல் இருந்தே ஆக வேண்டுமா? ஆம்!
‘அவன் ஒரு மருத்துவன்’ இதில் எது வினைச்சொல்?
‘நீ நல்லவள்’ இதில் எது வினைச்சொல்?
சிந்தித்துப் பாருங்கள்!
---
அடுத்த பதிவில் சந்திப்போம், 4ம் வேற்றுமையுடன்...
நன்றி
--வி