காப்பு
ஆத்திச் சூடி அருளும் இறையது
காட்சிக் கடங்கா கரிமுக மைந்தனை
நாற்றி சையும் சூழத் தொழுக
ஏத்திக் காப்பான் நமை!
நூல்
அன்புக் காதலே
ஆழ்மனத் துறவே
இல்லா இடையே
ஈர்த்திடும் விழியே!
உன்முகம் கண்டிடின்
ஊருலகம் மறப்பேன்
என்னவள் உன்னை
ஏத்துவேன் நெஞ்சில்!
ஐயம் வேண்டாம்
ஒன்றே என்தொழில்
ஓர்காதல் நீயே
ஔவினேன் நின்னையே (ஔவுதல் - பற்றுதல்)
இஃதே என்நிலை!
கண்களே என்நிலம்
காதலே என்தொழில்
கிழமை உன்னோடே (கிழமை – உரிமை)
கீழ்மை எனக்கில்லை!
குறுக்கம் குறையேன் (குறுக்கம் – அருகிலிருத்தல்)
கூர்விழி அகலேன்
கெண்டை விழிகாணின்
கேட்டிலும் குலையேன்!
கைகளில் படையின்றி
கொடும்போர் புரிந்திடும்
கோடாரி கண்களால்
கௌவ்விடும் வலியுமினிதே!
ஙனம் எனக்குன் நெஞ்சே! (ஙனம் - இடம்)
சச்சிரவின்றி என்னோடு
சாதல்வரை வாழ்ந்திடு
சின்னசின்ன சண்டையால்
சீண்டிவிளை யாடியிரு!
சுருங்காது என்காதல்
சூளுரைப் பேனதை
செந்நீரில் உயிராய்
சேர்ந்து விட்டாயேநீதான்!
சைத்தன்யம் இழக்கினும் (சைத்தன்யம் - உயிர்நிலை)
சொன்னசொல் மாறேன்
சோர்வது வரினும்நின்
சௌக்கியம் குறைக்கேன்!
ஞமலி நின் எழில் (ஞமலி - மயில்)
ஞாயிறு நின் நுதல்!
ஞிமிர் நீயென் பாக்கு (ஞிமிர் - ஓசை)
ஞெகிழும் அதன் பொருள்! (ஞெகிழும் - நெகிழும்)
ஞேயம் உனதின்றி (ஞேயம் - நேயம் - அன்பு)
ஞொள்குவேன் ஞானே! (ஞொள்குதல் - இளைத்தல்/வலுவிழத்தல்)
அ
டம்பிடிக்கும் என்மனம்
வி
டாது உனைக்கான!
ம
டிமேல் இதமாய்
ப
டுத்துறங்க இறைஞ்சுமே!
க
டெனென கிடக்குமே
க
டைவிழியின் காட்சியில்,
விட்
டொரு நொடியும்
கொ
டோர் காதலை
அ
டௌவாது என்விழிகளே! (அடௌவாது - விலகாது)
தமிழெனும் வானின்
தாரகை சொற்களால் (தாரகை - விண்மீன்)
திகழ்கவி யாத்து
தீருவேன் தவிப்பை!
துன்பம் எனக்கேதடி
தூக்கு நல்லழகே
தெள்ளிய நின்முகத்தை
தேயாது கண்டிருந்தால்!
தையலே உன்னை (தையல் - பெண்)
தொடுத்திட்டேன் உயிரோடு
தோல்வி எனக்கில்லை
தௌவ்விடும் காதலில்! (தௌவ்வுதல் - செழித்தல்)
நன்றாய் இருக்குதடி
நான்செய்யும் காதல்
நித்தம் எனக்கிங்கே
நீதரும் புதுமையினால்!
நுதல்காணின் நற்றமிழ் (நுதல் – நெற்றி)
நூல்கற்றது போலே
நெகிழுதடி என்நெஞ்சம்
நேர்மை யிதுநம்பு!
நைந்தும் போகாதே
நொடித்தும் வீழாதே
நோக்கம் நன்றாமே
நௌனாதே என்றும்! (நௌனுதல் - குறையுதல்)
பங்கஜத்தின் காதலெனும் (பங்கஜம் - தாமரை)
பாலதை வேண்டி
பிள்ளையென என்மனம்
பீறிட்டு அழுகுதடி!
புள்ளென்றால் அன்றில்நீ (புள் - பறவை)
பூவென்றால் கமலம்நீ (கமலம் - தாமரை)
பெண்ணென்றால் தமிழவள்நீ
பேரின்பப் புதையல்நீ!
பையவென் உள்ளத்தில்
பொருந்திவிட்ட மெல்லழகே
போழ்தெல்லாம் எனக்கினி
பௌர்ணமியே என்வானில்!
மனதிற் கினியவளே
மாங்கனியே தேன்பலாவே
மிஞ்சுதடி என்னாசை
மீண்டும் மீண்டும் உனைநாட!
முக்கண் சிவன்போலே
மூக்கின் மேல்கோவம்
மெல்லினமே உனக்கெதற்கு
மேகம்போல் குளிர்ந்தேயிரு!
மைவிழியின் காட்சிக கள்ளை
மொந்து மனம்பருகும் - அது
மோகத்தில், மோனத்தில், உன்
மௌனத்தில் தாகம் தீர்க்கும்!
யத்தனை பெண்கண்டேன்
யாரிடமும் வீழ்ந்ததில்லை
யின்று உனைக்கண்டே
யீராயிரம் முறைவீழ்ந்தேன்!
யுந்தன் நெஞ்சமதை
யூகிக்க இயலாமல்
யெந்தன் மனம்தானே
யேங்கிப் போனதே!
இ
யைந்து விடுவேனே
யொன்றாய் உன்னோடு
யோகம் அதுவேயென்
யௌவனத்தின் யோகமடி!
ரவியொன்று சட்டென்று
ராத்திரியில் உதித்ததுபோல் பு
ரிந்திட்ட புன்னகையில்
ரீங்காரம் கண்டுகொண்டேன்!
ருசிதானே எந்தன் கண்ணுக்குன்
ரூபமும் கருத்திற்குன் நினைவும்!
ரெண்டு கண்களும் கலங்கரை சுட
ரேபோன் றவயேயென் கப்பல்மனதிற்கு!
க
லங்கிடச் செய்கிறாயே
க
லாபமயிலே என்நெஞ்சை!
மெ
லிந்துபோ கும்மனம்
க
லீர்சிரிப் பைகேளாது!
வந்துவிடு என்வாழ்வை
வாழ்விக்க வந்துவிடு!
விட்டுவிலகி நீசென்றால்
வீணாகும் என்னுயிரே!
வெண்ணிலவும் எனக்கிங்கு
வேகுதடி உன்பிரிவால்!
வையமே நிலையாத
வோர்கனவாய் தோன்றுதடி!
அகர முதல எழுத்தெல்லாம் காதலி
முகம் மலர வைத்தேன் பாட்டில்!
-வி
(இதை இயற்றி சுமார் பத்தாண்டுகள் ஆகிவிட்டன!)