எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள்
[“காய் காய் மா மா” அரையடி வாய்ப்பாடு]
[“காய் காய் மா மா” அரையடி வாய்ப்பாடு]
ஒன்றாகப் பணியாற்றும் தோழர் இருவர்
---ஒருமாலை வண்டியிலே தத்தம் இல்லம்
சென்றடையச் சென்றுக்கொண் டிருந்த வேளை
---தென்றலதும் தீப்பிடிக்கக் காய்ந்த வெயிலால்
நண்பரிலே ஒருவருக்கு வேட்கை மீற
---நாடினர்மற் றவரைத்தன் தாகம் தீர்க்க
அன்னவரோ பைக்குள்ளே வைத்துக் கொண்டே
---”அடடாஇன் றென்னிடமும் தண்ணீர் இல்லை” [1]
எனச்சிறிதும் கூசலின்றிப் பொய்யு ரைத்தே
---’என்நீரை இவனுக்கேன் தரனும்’ என்று
மனத்திற்குள் எண்ணிக்கொண் டமர்ந்தி ருந்தார்
---வாயவர்க்கும் வறண்டதுவே மெல்ல மெல்ல
‘முனர்கேட்ட போதில்லை என்று விட்டு
---மூடிவைத்த நீரைஇவண் குடித்தல் ஆமோ?’
எனவெண்ணி நீரிருந்தும் பருகி டாதே
---ஏறிடும்வேட் கையினிலே தவித்தார் அன்னார்! [2]
வறள்கின்ற நாவைவிட பைக்குள் இருந்தும்
---மனங்குளிரப் பருகவிய லாத நீரால்
பிறக்கின்ற துன்பமது பெரிதென் றுணர்ந்தார்
---பெரியமனம் இல்லாத அந்த நண்பர்;
பிறர்க்குதவ மனமின்றிப் பதுக்கி வைத்தால்
---பின்னரது தனக்குமொரு பயன்தா ராதே;
அறக்கடவுள் ஆமையென நடப்பான் சிலபோழ்(து)
---ஆனாலும் அவனடிகள் ஆணி வேரே! [3]
======================================
பதம்பிரித்து, புரிய எளிதான ஓட்டத்தில்:
ஒன்றாகப் பணியாற்றும் தோழர் இருவர் ஒரு மாலை வண்டியிலே தம் தம் இல்லம் சென்று அடையச் சென்றுக் கொண்டிருந்த வேளை,
தென்றல் அதும் தீப் பிடிக்கக் காய்ந்த வெயிலால் நண்பரிலே ஒருவருக்கு வேட்கை (தாகம்) மீற (அதிகமாக) நாடினர் மற்றவரைத் தன் தாகம் தீர்க்க,
அன்னவரோ (அவரோ) பைக்குள்ளே வைத்துக்கொண்டே ”அடடா! இன்று என்னிடமும் தண்ணீர் இல்லை”
எனச் சிறிதும் கூசல் (கூச்சம்) இன்றிப் பொய் உரைத்தே, ’என் நீரை இவனுக்கு ஏன் தரனும் (தர வேண்டும்)’ என்று
மனத்திற்குள் எண்ணிக்கொண்டு அமர்ந்து இருந்தார், [*மெல்ல மெல்ல] வாய் அவர்க்கும் வறண்டது(வே) [*],
‘மு(ன்)னர் கேட்டபோது ”இல்லை!” என்றுவிட்டு, மூடி வைத்த நீரை இவண் (இப்போது) குடித்தல் ஆமோ (சரிப்படுமோ)?’ என எண்ணி நீர் இருந்தும் பருகிடாதே, ஏறிடும் வேட்கையினிலே தவித்தார் அன்னார்!
வறள்கின்ற நாவைவிட பைக்குள் இருந்தும் மனங்குளிர பருக இயலாத நீரால் பிறக்கின்ற துன்பம் அது பெரிது என்று உணர்ந்தார், பெரிய மனம் இல்லாத அந்த நண்பர்;
பிறர்க்கு உதவ மனம் இன்றிப் பதுக்கி வைத்தால் பின்னர் அது தனக்கும் ஒரு பயன் தாராதே!
அறக்கடவுள் ஆமை என நடப்பான் சிலபோழ்து, ஆனாலும் அவன் அடிகள் ஆணிவேரே!
(அறத்தின் கடவுள் சில சமயம் ஆமை போல மெதுவாகச் செயல்படுவான், ஆனால் அவனது அடிகள் ஒவ்வொன்றும் ஆணிவேர் போல ஆழமானவை, உறுதியானவை!)
*****************
நன்றி,
விசய்