பாக்கெட்டில் பாலும்
பாட்டிலில் வாட்டரும் குடித்து...
கார்டு ஹோட்டல்களிலும்
ஸ்விக்கி ஊபரிலும் சாப்பிட்டு...
கம்ப்யூட்டரை தட்டி கொண்டு
இயந்திரமாய் உருமாறி...
சிரிக்க மறந்து
சிந்தனை இழந்து...
கான்கிரீட் கட்டிடத்திற்குள்
வாழ்நாள் கைதியாகி...
மனித தன்மையை இழந்து
வாழும் கோமாளிகளாய் மாறி விட்டாயே!
வயிற்றை நிரப்பும் உணவு படைக்கும்
விவசாயியின் வலி குறைக்க ஓடி வா...
வீட்டின் அறையை போல
மன கதவையும் அடைக்காதே!
ரோட்டில் ரத்தம் சிந்துபவரோடு
செல்பி எடுத்து போஸ்ட் செய்யும்
அநியாயம் செய்யாதே!
பேஸ்புக் லைக் செய்து பழகி
சுற்றி உள்ளவரின் முகத்தை மறக்காதே!
போதும் மனிதா
போட்டியிடும் போக்கு...
இயந்திர போக்கை அழித்து
மனிதனாய் மீண்டு வா...
நாட்டின் செல்வத்தை
அந்நியர் களவாடலாம்...
எஞ்சியுள்ள மனித தன்மையையும்
களவாட விட்டு விடாதே!
நல் உலகத்தை படைக்க
வீறுகொண்டு எழுந்து வா...