மது, ஸ்ரீதர் மற்றும் வினித் தன் எதிரில் நிற்கவும் அதிர்ச்சி பாதி குழப்பம் பாதியாக அவர்களை பார்த்து கொண்டு நின்றான் அருள்.
"மது நீ இங்க எப்படி????" என்று அருள் ஆச்சரியமாக கேட்கவும்
தன் கையில் இருந்த கிஃப்ட் பாக்ஸை அவன் கைகளில் வைத்தவள்
"நாம முதல் முதலாக மீட் பண்ணி இன்னையோட மூணு வருஷம்....அதுக்கு சர்ப்பரைஸ் தரலாம்னு நானும், ஸ்ரீயும் வந்தோம். ஆனா இங்க எனக்கு அதை விட பெரிய சர்ப்பரைஸ் காத்துட்டு இருந்துருக்கு" என்று உடைந்து போன குரலில் கூறியவள் கால்கள் தொய்ந்து போக அருகில் இருந்த கதிரையில் தொப்பென்று அமர்ந்தாள்.
"ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம்??? நான் யாரையும் மனசால கூட தண்டிக்க விரும்புனது இல்லையே....ஆனா என்னை சுற்றி வந்த பாதி பேர் எனக்கு கஷ்டம் மட்டுமே தரணும்னு இருக்காங்களே ஏன்??? போன ஜென்மத்தில் நான் என்ன பாவம் பண்ணுணனோ தெரியல இந்த ஜென்மத்தில் அவஸ்தை படுறேன்" என்று குரல் கம்ம கூறிய மதுவை ஆதரவாக அணைத்துக் கொண்டான் அருள்.
"நீயே அப்படி யோசிக்காதே மது! கடவுள் நல்லவங்களுக்கு நிறைய கஷ்டங்களை தருவாரு. அதை பார்த்து நாம பின்வாங்கவோ, பலவீனமாகவோ கூடாது. எதிர்த்து நின்னு போராடணும்...நம்ம தைரியமாக எல்லாவற்றையும் சமாளிக்கணும்....என்னோட மது எந்த பிரச்சினை வந்தாலும் அசால்டா தூக்கி தூரப் போட்டுட்டு எதிர்த்து நிற்குறவ....அவ இப்படி மனசு உடைஞ்சு போய் பேசலாமா??" என்று அருள் கேட்கவும்
இல்லை என்பது போல தலை அசைத்தவள் மெல்ல எழுந்து ஷோபாவின் அருகில் சென்றாள்.
"என்னோட வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கஷ்டம் தந்தீங்க. எல்லாமே கடைசியில் எனக்கு ஒரு விஷயத்தை நல்லா புரிய வைச்சது. அருள் மேல நான் எந்தளவு அன்பு வைச்சிருக்கேன், அவர் என் மேல எந்தளவுக்கு அன்பு வைச்சிருக்கார்னு ஒவ்வொரு நாளும் எனக்கு புரிய வைக்குறீங்க....ரொம்ப தாங்க்ஸ்..." என்று மது கூறவும் வியப்பாக அவளை பார்த்தாள் ஷோபா.
"எனக்கு அகிலா அத்தை மேலயோ, உன் அம்மா மேலயோ, கார்த்தி மேலயோ, உன் மேலயோ எந்த கோபமும் இல்லை. இன்பாக்ட் உங்க எல்லாருக்கும் நன்றி தான் சொல்லணும். என்னோட அருளை எனக்கு கொண்டு வந்து சேர்த்ததுக்கும், அவரோட காதலை எனக்கு நல்லா புரிய வைச்சதுக்கும்" என்று அருளை காதலோடு பார்த்து கொண்டே மது கூற சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனான் அருள்.
"மது....." என்று கூவலோடு அவளைத் தாவி அணைத்துக் கொண்ட ஷோபா
"ஸாரி....ஐ யம் ஸாரி....ஸாரி..." என்று கூறி கொண்டு இருக்க அவள் தோளில் தட்டி கொடுத்தாள் மது.
"இப்போ எதுக்கு இவ்வளவு ட்ராமா போடுறா இவ???" என்று கேட்டது வேறு யாரும் அல்ல ஸ்ரீதர் தான்.
ஸ்ரீதரின் கேள்வியில் திடுக்கிட்டு அவனை நிமிர்ந்து பார்த்த ஷோபா அவனது முகத்தில் தெரிந்த வெறுப்பை பார்த்து நொறுங்கி போனாள்.
"என்ன பேசுற ஸ்ரீ???" என்று மது கேட்கவும்
அவள் முன்னால் வந்து நின்றவன்
"உனக்கு மனசுல என்ன பெரிய அன்னை தெரேசானு நினைப்பா?? யாரு வந்து என்ன சொன்னாலும் நம்பிடுவியா?? இவள் எப்பேர்பட்ட மோசடி பண்ணிட்டு இங்க வந்து நல்ல பொண்ணு மாதிரி நடிக்குறா இவளைப் போய் எல்லோரும் நம்புறீங்களே!!! உன்னையும், என்னையும்....சே....எப்படி உன்னால இவளை மன்னிக்க முடிஞ்சது மது??? என்று கேட்க அவனைப் பார்த்து தலை குனிந்து நின்றாள் ஷோபா.
''அவர் சொல்லுறதும் சரி தான் மது....நான் பண்ணது மன்னிக்க கூடிய தப்பு இல்லையே" என்று ஷோபா கூறவும்
"நல்லா நடிக்க கத்து வைச்சுருக்கா....இவள் எல்லாம் காலை சுற்றுன பாம்பு மாதிரி....வெளியில் ஒரு வேஷம் உள்ளுக்குள் ஒரு வேஷம்னு எல்லோரையும் ஏமாத்துரவ....ஏமாற்றுப் பேர்வழி" என்று கூற மெளனமாக அழுது கொண்டு நின்றாள் ஷோபா.
"ஸ்ரீ...." என்று மது அதட்டலாக கூறவும்
அவளை திரும்பி பார்த்தவன்
"என்னை எதுக்கு மிரட்டுற??? இப்படியே எல்லோரையும் தலையில் தூக்கி வைச்சுக்க...நல்லா மிளகாய் அரைச்சுட்டு போவாங்க." என்று ஸ்ரீதர் கூறவும்
அவனைப் பார்த்து சிரித்த மது
"யாரையும் இது வரைக்கும் நோகடிக்குற மாதிரி பேசாத ஸ்ரீதர் இன்னைக்கு இப்படி எடுத்தெறிந்து பேசுறான்னா அவன் மனசுல ஏதோ ஒண்ணு இருக்கணுமே..."என்று கூற அதிர்ச்சியாக அவளைப் பார்த்தான் ஸ்ரீதர்.
"நீ சொல்லலேனா எனக்கு தெரியாதுனு நினைச்சியா? உன் கூட எத்தனை வருஷமாக பழகுறேன். உன்னை பற்றி எனக்கு தெரியாதா??" என்று மது கேட்கவும் வாயடைத்துப் போய் நின்றான் ஸ்ரீதர்.
"ஏன் ஸ்ரீ ஒரு வேளை ஷோபா இடத்தில் நான் இருந்திருந்தாலும் நீ இப்படி தான் சொல்லி இருப்பியா??" என்று மது கேட்கவும்
"அதெப்படி??? நீ இந்த வேலை எல்லாம் பண்ண மாட்ட..." என்று ஸ்ரீதர் மறுக்க
"பண்ணி இருந்தா...." என்று அழுத்தமாக கேட்டாள் மது.
என்ன சொல்வது எனப் புரியாமல் ஸ்ரீதர் விழித்த வண்ணம் இருக்க
அவனருகில் வந்த அருள்
"உன் மனசுக்குள்ள ஷோபா மேல் அளவு கடந்த அன்பு இருக்கு ஸ்ரீ....அதனால தான் அவ பண்ண ஒவ்வொரு தப்பும் உன்னை ரொம்ப பாதிச்சுருக்கு" என்று கூற முற்றிலும் குழம்பி போனான் ஸ்ரீதர்.
"அத்தான் நான் கிளம்புறேன்...." என்று விட்டு செல்ல போன ஷோபாவை
"ஒரு நிமிஷம்...." என்று கை பிடித்து தடுத்தாள் மது.