சின்ன நெஞ்சிலே 7
இன்னமும் தாமுவுடைய மகன் தான் என்றால், இவனுக்கு அர்த்தம் புரியவில்லையா? தாமுவின் சொந்தம் என்பதால் தானே இந்த பிரச்சனையே! தாமு மாமா தான் ஆத்தாவை உறவே வேண்டாம் என்று விட்டாறே! இவன் என்ன சொல்கிறான்!
“தாமு மாமா பாட்டியை வேண்டாம்ன்னு…”
“அது அப்பா தன்னிச்சையா எடுத்த முடிவு! எனக்கு அதில் எந்த உடன்பாடுமில்லை”
“என்ன அதையே சொல்றே இந்திரன்? உன் அப்பாவை வச்சிதானே நீ? என்னவோ நீ ஒரு தனியாள் மாதிரி பேசுறே!”
அவன் பதில்கூறும் முன்
அவளின் போன் அழைத்தது!இந்தியாவிலிருந்து பாட்டியோ என்ற நினைப்பில் அதை எடுக்க,
“நிலாம்மா நான் சங்கர் பேசுறேன்!”
“சொல்லுங்க, எல்லாரும் நல்லா இருக்கீங்களா? ஆத்தா நல்லா இருக்கா?”
இத்தனை அதிகாலையில் ஏன் போன் செய்கிறார்? பாட்டிக்கு என்னவோ என மனம் அடித்துக் கொள்ள,
“வயக்காட்டுக்கு வந்தேன் மா, இன்னிக்கி சீக்கிரம் மோட்டர் போட்டு தண்ணீ பாய்ச்சலாம்னு. ஆத்தாவுக்கு தெரியாம உன் கூட பேச வேண்டியிருக்கு, இப்ப பேசலாமா?”
எழுந்து இவள் பக்கம் வந்த இந்திரன் அவள் போனை வாங்கி, இல்லை பறித்து ஸ்பீக்கரில் போட்டான். இவள் எதிர்ப்புகளை எல்லாம் முறியடிப்பது எப்போதும் அவனுக்கு கை வந்த கலை!
“ஹலோ நிலா மா, லைனில் இருக்கியா?”
இவன் செய்த ராசாபாசாங்கில் அவர் சொன்னதை தவறவிட்டாள்.
“ஏதோ சிக்னல் பிராப்ளம், இப்ப சொல்லுங்க”
“ஆத்தா தாமு வீட்டுக்கு போகணும்னு சொல்லுது. அங்கே போறது சரின்னு எனக்கு படலை! இன்னும் ரகளை அதிகமாகுமே தவிர என்னைக்கும் தீராது. நீ என்ன தாயி சொல்லுதே!”
நிலாவும் இந்திரனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்!
“நிலா நிலா…”
“ஹாங் கேட்டிட்டு தான் இருக்கேன்...சொல்லுங்க”
“அந்த இந்திரன் தம்பியை மறுபடியும் ஆத்தா பார்த்தா என்ன செய்யும்மின்னு தெரியாது மா! நீயும் இங்கென இல்ல! எனக்கு அவுகளை அங்க அழைச்சிட்டு போக கொஞ்சமும் இஷ்டமில்லை. சொன்னாலும் கேட்குறாவுளா, ஒத்தையில போறேன்னு நிக்கிறாங்க! என்ன செய்யன்னு சொல்லு!”
“அவர்...வந்து அந்த இந்திரன் அங்க சென்னையில் இல்ல!”
அவனை தயக்கமாய் நிமிர்ந்து பார்த்து அவள் சொல்ல, அவனோ இல்லாத சட்டை காலரை தூக்கி விட்டுக் கொண்டான்!
“அப்படியா அந்த தம்பி இப்ப எங்க இருக்காப்ல, அவரை பத்தி உனக்கு எதுவும் தெரியுமா நிலாம்மா?”
என்ன பொய் சொல்லலாம் என்று அவள் யோசித்த அந்த நொடியில் அவனோ,
“அசோக், நான் இந்திரன் பேசுறேன். நீ எங்கே டா இருக்கே? ஜப்பான்லையா, நானும் அதே ஜப்பான்ல தான் டா இருக்கேன். தனியா இல்ல டா என் பொண்டாட்டி கூட தான்!”
வேண்டுமென்றே வராத போன் காலில் சத்தமாய் பேசியபடி அவ்விடத்திலிருந்து நகன்றான்.
‘டேய் சும்மா இருடா’ அவள் சின்ன குரலில் சொன்னது அவனுக்கு கேட்கவில்லை! ஆனால் அந்த பக்கம் இருந்த சங்கரனுக்கு கேட்டது! பத்தவச்சிட்டு போயிட்டியே டா பாவி!
அந்த பக்கமிருந்த அமைதியில் நிலாவின் இதயத் துடிப்பு எகிறிப்போயிருந்தது!
சூழ்நிலையை புரிந்துக் கொண்டார் சங்கரன்!
“நிலா மா, நீ இப்ப மாப்பிள்ளை கூடத்தான் இருக்கியா?”
பதில் சொல்லவில்லை அவள். ஏதோ அவளை சார்ந்தவர்களை ஏமாற்றிவிட்ட குற்ற உணர்வு தாக்கியது!
“இதை பத்தி உங்ககிட்ட சொல்லணும்! வந்து…”
“இல்ல, இனி சொல்லி சங்கடப் பட வேணாம், நான் அப்புறம் பேசுறேன்…வைச்சிடுறேன் மா!”
அவனை தேடி போனாள்.
“நீ என்ன வேலை செஞ்சியிருக்கே தெரியுமா!”
“என்ன!” ஒன்றுமே அறியாததை போல் தன் சட்டையை இஸ்தரி செய்துக் கொண்டிருக்க,
“நான் என்னவோ கள்ளத்தனம் செய்ற மாதிரி அவர்கிட்ட படம் போட்டு காட்டிட்டே! நான் விளக்கம் சொல்றதுக்கு முன்னாடி மனுஷன் போனை வச்சிட்டார்! ஏன் இப்படியெல்லாம் செய்றே இந்திரன். எல்லாமே உனக்கு விளையாட்டா போச்சா!”
“நான் விளையாடலை நிலா, என்ன நடக்கும்னு தெரிஞ்சி தான் இதை பண்ணேன்! எப்படியும் அவங்க என் அப்பாவை போய் பார்த்தா எல்லாம் சொல்லிட போறார்!”
“நீ என்ன காரணம் சொன்னாலும் நீ செஞ்சது தப்பு! நானா சொல்றதுக்கும் நீயா போட்டு கொடுக்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு!”
“அப்படியா?”
“என்ன அப்படியா? முட்டாளா நீ”
கோபத்தில் சிவந்திருந்த அவளின் முகம் கூட அவனுக்கு அழகாய் தெரிந்தது. காலையிலிருந்தே சுத்தி சுத்தி வந்து என்னை இம்சை செய்றா. நினைத்தவாக்கில் இப்போது அவளை நெருங்கியிருந்தான்!
“நானா, நீயான்னு நீ பேசினதில் ஒரு உண்மை இருக்கு நிலா! நீயா எதுவும் செய்யப் போறதில்லை, ஸோ இப்பவும் நானா…”
அவள் முகத்தை கையில் ஏந்தியவன் அவள் என்னவென்று உணரும் முன் கன்னம் கன்னமாய் முத்தமிட்டான்.
அத்தியாயம் 4:
விமானம் கிளம்பும் வரைக்கும் காத்திருக்கலாம் என்று நினைத்திருந்தவளை போனில் அழைத்தான் இந்திரன்!
“நிலானி கார் பார்க்கிங் வந்திடுறீங்களா? நான் இன்னமும் அங்க தான் நிக்கிறேன்!”
இவன் கூட மறுபடியும் சென்றாக வேண்டுமா? வேண்டாமே!
“இல்ல நான் வேற இடத்துக்கு கிளம்புறேன். நீங்க எனக்காக காத்திருக்க வேண்டாம்!”
“அப்படியா சரி! ஆனா, உங்க ஹேண்ட்பேக் வேண்டாமா? வண்டியில் விட்டிட்டு போயிட்டீங்களே”
“அச்சோ! சுத்தமா மறந்துட்டேன். இதோ வந்து எடுத்துக்குறேன்!”
அத்தனை பெரிய விமான நிலையத்தின் பார்க்கிங்கும் அதைப் போலவே பெரியது. வாரக்கணக்கில் ஜப்பானின் பயணிகள் அவர்களின் சொந்த வாகனத்தை கூட அங்கே பாதுகாப்பாய் விட்டுவிட்டு செல்லவும் வழிவகை செய்திருந்தனர்.
அவள் அவன் இருக்குமிடம் கண்டுபிடித்து போகையில் காரின் மேல் சாய்ந்து நின்றுக் கொண்டிருந்தான்.
“நீங்க வருவீங்கன்னு தான் இத்தனை நேரமும் காத்திருந்தேன். வரலைன்ன முதலிலேயே சொல்லியிருந்தா இந்நேரம் வீட்டுக்கே போயிருப்பேன்...ம்ம்ச்”
அவள் முகம் பார்க்காமல் அவன் சொல்ல அவளுக்கு சங்கடமானது நிஜம். அவன் கூட போவதை தவிர்பதற்காகவே அப்படி சொன்னது, இப்போது தவறோ எந்த தோன்றியது. வராதவளுக்காக இரண்டு மணி நேரம் நின்றிருக்கிறான், எரிச்சல் வரத் தானே செய்யும்.
“நீங்க போற வழியில் என்னை விட்டிருங்க. உங்களால் முடியுமா?”
“முடியும்...வாங்க”
அவன் எதிர்பார்த்ததை போல் பின்னிருக்கையில் போய் அமர்ந்துக் கொண்டாள். சற்று நேரம் அமைதியாக போய் கொண்டிருக்க, அதை விரும்பாதவன் போல் பாடல்களை ஒலிக்க விட்டான்.
வந்த முதல் பாடலே வினையை கூட கூட்டி வரும் போலிருந்தது.
‘எந்திர லோகத்து சுந்தரியே’
அவள் அதனைக் கண்டுகொள்ளாமல் விட்டாலும், ஏனோ அப்பாட்டை மாற்றிவிட்டான்.
அடுத்து வந்தது அதை விடக் கொடுமை!
‘ஒரே ஒரு பார்வை தந்தாலென்ன தேனே!
ஒரே ஒரு வார்த்தை சொன்னாலென்ன மானே!’
அந்த வரியோடு பாட்டையே நிப்பாட்டி விட்டான். அவன் செய்கையில் தனக்குள் சிரித்துக் கொண்ட நிலானி, வெளியில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
எப்போது தூங்கினாளோ தெரியாது.
‘நிலானி...நிலா’ அவன் தோள் தட்டி எழுப்பவும் தான் வீடு வந்த விஷயமே அவளுக்கு புரிந்தது.
அரக்க பறக்க எழுந்தவள், இறங்கியதும் “ரொம்ப நன்றி இந்திரன்” என்றாள். அவன் தலையசைக்கவும் அடுத்த வார்த்தை பேசாமல் கிளம்பிவிட்டாள்.
அதன் பின் இரண்டொரு நாளில் மெஸேஜ் செய்தான், நிவேதாவின் கணவரின் நிலை என்னவென்று அறிந்து கொள்ள! பதில் சொன்னதுடன் நிவேதாவின் இந்திய நம்பரையும் அவனுக்கு அனுப்பிவிட்டாள்!
இந்திரனை பற்றிய நிலாவின் எண்ணம் இந்த சில நாளில் சற்று வேறுபட்டிருந்தது. நிவேதாவுடனான ஒரு நாள் நட்புக்காக இத்தனை மெனக்கெடுவானேன்! ஒரு வேளை நல்லவன் தானோ! சந்தேகமாய் பார்த்தது அவள் தவறோ! தன்னிடமும் அளவுக்கு அதிகமாய் பேச முயல்வதில்லை, காரண காரியங்களுக்கு மட்டும் தான்!
நிவேதாவின் கணவருக்கு கொஞ்சம் அடி பலம் தான்! ஹாஸ்பிட்டலில் ஒரு மாதம் வரைக்குமே இருந்தார். நிவேதா அது வரையிலும் விடுப்பெடுத்து, அதன் பின்பும் சென்னை அலுவலகத்தில் ஒரு மாதம் போல் பணிக்கு வருவதாக ஒத்துக் கொண்டாள்!
மறுபடியும் தனியாக இருக்க வேண்டிய நிலையில், நிலானிக்கு போர் தான்! கிடைத்த இந்த நேரத்தில் எதையாவது ஒழுங்கே செய்வோம் என்ற எண்ணம் தோன்ற, இந்த ஊரின் லைசன்ஸ் வாங்கினால் தான் என்ன என்ற சிந்தனை!
பல டிரைவிங் ஸ்கூல்களில் போன் செய்து விசாரித்தால், அவர்கள் சொல்லும் காசை கட்டி அப்படி இந்த காரை ஓட்டத் தான் வேண்டுமா என்ற எண்ணம்!
அதே யோசனையில் ஒரு சனிக்கிழமை மாலை நடைப்பயில போக, அங்கே இந்திரனைக் கண்டாள். இவன் எங்கே இங்கே! எல்லாம் நிவேதா வீடு பார்த்து வைத்த வேலை என்பது மெதுவாய் புரிந்தது!
அவளைப் பார்த்து சினேகமாய் புன்னகைத்தவன்,
“ஹலோ நிலானி, நல்லாயிருக்கீங்களா?”
“ஃபைன். இந்த ஏரியாவுக்கு வந்தாச்சா?”
“ஆமாங்க...ஓகே...பார்போம்”
அதன் பின் பல நாள் அவனை மெட்ரோவிலும், கடையிலும் பார்த்துவிட்டு ஒரு புன்னகையோடு கடந்திருக்கிறாள்!
ஓட்டுனர் உரிமம் பற்றிய சிந்தனை அதிகமானதில் அவனிடம் கேட்க முடிவெடுத்தாள்!
“இங்கே லைசன்ஸ் வாங்க நான் ஹெல்ப் பண்றேன் நிலானி! எனக்கு சொல்லித் தந்தவர் ஜாப்பனீஸ் தான் ஆனா அவருக்கு இங்லிஷ் கூட தெரியும். ரெண்டு கிளாஸ் போனா போதும் பிராக்டிக்கல் கிளியர் பண்ணிடுவீங்க! அவர் போன் நம்பர் உங்களுக்கு அனுப்புறேன், பேசி பாருங்க!”
முதல் நாள் அவளுடன் அந்த இடம் வரையிலும் கூட போனதும் அவனே!
“டெஸ்டுக்கு வர சூப்பர்வைசர்ஸ் எல்லாம் முன்னால் போலிஸ் அதிகாரிங்க! கொஞ்சம் ஸ்டிரிக்டா தான் இருப்பாங்க!”
முதல் முறை டிரைவிங் டெஸ்ட் போய் மண்ணை கவ்விவிட்டு வந்திருந்தாள், அதை மெசேஜில் அறிந்து அவளுக்கு போன் செய்தவன்,
“முதல் தடவை கிடைக்குறது ஈசி இல்லைங்க. பரவாயில்லை அடுத்த முறை வாங்கிடலாம்!”
அவள் மாட்டேன் என்றா சொன்னாள்! விட்டால் தானே! ஏற்கனவே நடுங்கி போய் அடுத்த டெஸ்டுக்கு போயிருப்பவளை,
“ஏன் இத்தனை மெதுவா போறே!
லேன் மாத்து! கண்ணாடி பாரு!
நில்லு என்ன அவசரம்!” இப்படியெல்லாம் சொல்லி இரத்தகொதிப்பை ஏற்றிவிட்டனர் அங்குள்ளவர்கள்!
எல்லாம் முடித்து கடைசியில் பாஸ் என்பதற்கு அறிகுறியாய் அந்த பிங்க காகிதத்தை வாங்கிய பின் தான் நிம்மதி!
அந்த திசைக்கே ஒரு பெரிய கும்பிடு போட்ட பின்னரே கிளம்பினாள். மகிழ்ச்சியாய் இருந்தது, ஏதோ பெரிய சாதனை புரிந்தது போல்!
இத்தனை கெடுபிடி செய்து இந்த லைசன்ஸ் கொடுப்பதால் தான் இந்த ஊரில் எல்லாருமே ரூல்ஸ் ராமானுஜம் போல் இருக்கின்றனர் போலவே.
“ஏதோ உங்க உதவியால் சீக்கிரம் வாங்கிட்டேன், ரொம்ப தான்க்ஸ் இந்திரன்”
“என்னங்க தான்க்ஸ்னு சிம்பிலா முடிச்சிட்டீங்க!”
“வேற என்ன செய்யணும்?”
“லன்சுக்கு வெளியே போலாமே, உங்க டீரிட்!”
“ம்ம் ஓகே...அடுத்த வாரம் போலாம்”