Last edited:
nice start Aniசின்ன நெஞ்சிலே-1
“ஆத்தா விடு ஆத்தா! என்ன செய்றே நீ?”
அவர் கையிலிருந்த அந்த பழமையான துப்பாக்கியை பறிக்க முயன்று தோற்றுப் போனாள் நிலானி!
“நீ சும்மா இருட்டி! பெரிய்ய கம்பியூட்டர் வேலை பார்க்குறியேன்னு உன்னை சப்பானுக்கு அனுப்பினா, நீ இந்த நன்றிக் கெட்ட குடும்பத்து பையனை கல்யாணம் செய்திட்டு வந்திருக்கிறியே, கூறுகெட்டவளே!”
அதிர்ந்தாள்.
ஆத்தாவுக்கு இவனை ஏற்கனவே தெரியுமா!
“நீ என்ன சொல்றே ஆத்தா? எனக்கு புரியலை. முதலில் அந்த துப்பாக்கியை கீழே போடு”
“இவன் ஜோலியை முடிச்சிட்டு வாரேன். எட்டிப் போ புள்ள, குறுக்கே நிக்காதே!”
பாட்டி முறைத்த முறைப்பை சட்டை செய்யாமல் அந்த துப்பாக்கியின் முனையை பற்றினாள் நிலானி.
“ஆத்தா நான் சொல்றது உனக்கு புரியுதா இல்லையா, இப்ப அவர் என் புருஷன். ஆசிர்வாதம் வாங்க வந்தவங்களை நீ ...”
நிலானிக்கு அழுகை சாமானியத்தில் வராது. ஆனால் இன்று நினைத்தாலும் நிறுத்த முடியவில்லை.
“நிலா நீ தள்ளி போ, பாட்டி கிட்ட நான் பேசுறேன்”
மனைவியின் தோள் அணைத்து சொன்னவன் இப்போது பாட்டியை நெருங்கி அந்த துப்பாக்கியை பறிக்க முயன்றான்.
அப்படியெல்லாம் முடியுமா? வேகமாய் அதை திருப்பி அவனை தடுமாற செய்தவர், சட்டென்று அவன் நெஞ்சில் குறி வைத்திருந்தார்.
“டேய் சங்காரா இவனை பிடில. இப்ப இங்க ஒரு பொணம் விழுகணும்!”
ஆங்காரத்தில் இருந்தாள் ஆவுடை பாட்டி. அவர்கள் நின்றுக் கொணடிருந்தது பாட்டியின் வீட்டில்! முற்றம் வைத்து அழகாய் கட்டப்பட்டிருந்த மிகப் பழமையான வீடது! பாட்டிக்கும் அந்த வீட்டைப் போல் எழுபது வயது இருக்கலாம்! அவர் தோளின் சுருக்கங்களும், தலைமுடி நரையும் அவள் அனுபவத்தை பறைசாற்றின. வயதானது என் தோற்றத்தில் மட்டுமே ! என் மனதில் அல்ல என்பதாய் இருந்தது அவரின் பேச்சும், தோரணையும். அது அவர் எதிரிலிருந்த இருவரையும் பயம் கொள்ள வைத்ததென்னவோ உண்மை.
“ஆத்தா ப்ளீஸ், என்னன்னு எனக்கு புரியுற மாதிரி சொல்லு. உனக்கு இவரை ஏற்கனவே தெரியுமா? எப்படி?”
பதிலில்லாமல் அவனிடம் திரும்பியவள்,
“நீயாவது சொல்லு”
அவளை தொட்டுத் தாலி கட்டியவன் வாயைத் திறக்காமல் ஒரு குற்றவாளியை போல் நின்றுக் கொண்டிருந்தான். வீரன், தீரன் என்ற அவளின் கற்பனையில் இப்போது மண் அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தான். தவறிழைத்தவன் போல் அவன் நின்ற கோலம் அவள் மனதை கலங்கடித்தது.
“அவனை என்னட்டி கேட்குறே! சொல்ற முகரையா இருந்தா முன்னமே சொல்லியிருக்க மாட்டானா? இவன் தான் உன் ஓடுகாளி மாமன் அந்த சேவியரோட மவன்”
அவன் இத்தனை நாளும் அவளுக்கு அளித்திருந்த நம்பிக்கையெல்லாம் இந்த ஒரு வாக்கியத்தில் வீணாகி போயிருந்தது. நிலானி அவனை வெறித்துப் பார்க்க அவள் பார்வையில் உள்ள வேறுபாட்டை உணர்ந்து,
“நிலா இந்த விஷயமா உன்கிட்ட நிறைய சொல்லணும், என் கூட நம்ம ரூமுக்கு வா. இவங்க சொல்றதை வச்சி இப்ப எந்த முடிவுக்கும் வராதே”
ஆதரவாய் அவள் கை பற்ற முனைய அவன் கையைத் தட்டிவிட்டாள். அவன் பதட்டமே அவளுக்கு பாட்டி சொன்னவை அனைத்தும் மெய் என்றது.
“என்னை பார்த்து சொல்லு, ஆத்தா சொல்றது உண்மையா இல்லையா?”
தலைக்குனிந்திருந்தவன் சற்று நேர மௌனத்தின் பின், ஆம் என்பதாய் தலையசைக்க,
“ஏன் டா, ஏன்? என்கிட்ட எதுக்கு இந்த விஷயத்தை மறைச்சே! என்னை ஏமாற்றி அப்படி நீ என்ன சாதிச்சிட்டே”
“இல்லடி ஏமாத்தணும்னு எல்லாம் நினைக்கலை”
பாட்டியின் முறைப்பு அவனை மேலும் தொடர விடாமல் செய்ய,
“இங்க வச்சி அதையெல்லாம் பேச முடியாது. நீ என் கூட வா மா”
வலுக்கட்டாயமாய் மனைவியின் கரங்களை பற்றி அழைத்தவனை,
“சே, விடு லே அவ கையை. என் பேத்தி கையை தொட்டியோ சுட்டிடுவேன் ராஸ்கல்”
பாட்டி சொன்ன வார்த்தையில் நெஞ்சத்தில் அடி வாங்கினாள் நிலானி. கணவன் என்ற உரிமையை எடுத்துக் கொண்டவனிடம் பாட்டி என்ன பேசுகிறாள்!
“நீ கிளம்பு! எனக்கு இவங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” அவனை பாராமல் வேறு யாருக்கோ சொல்வதை போல் சொன்னாள்.
பாட்டி ஆர்ப்பாட்டம் போட்டதில் வீட்டிற்கு வெளியில் இருந்தவர்கள் எல்லாம் வாசலில் எட்டி பார்க்க ஆரம்பித்து விட்டனர். இவன் இன்னமும் இங்கே நிற்பது சரியில்லை எனப் பட்டது நிலானிக்கு!
“ஏலேய் என்ன லே இங்கன வேடிக்கை! போய் வேலையை பாருங்க லே. கூலியை மட்டும் சரியா வாங்கிட்டு அப்பப்ப சோமாரிகிட்டு திரியிறவ...!”
ஆவுடை பாட்டி போட்ட போடில் கூட்டம் கலைந்திருந்தது. இன்னமும் துப்பாக்கியை அவனை நோக்கி உசத்தி பிடித்திருந்தார்!
அவன் நிலாவை பார்த்த பார்வையில் ‘என்னை நம்பலையா நீ! நான் அப்பாவி’ என்பதாக இருந்தது.
“ஏலே சங்கரா இவனை சும்மா விட நினைச்சாலும் நவுராம நிக்கான். நீ ஈம காரியத்துக்கான ஆளுங்களை வரச் சொல்லு. இன்னிக்கி இவனை அவன் முறைப்படியே புதைச்சிடுவோம்”
“ஆத்தா நம்ம நிலா …” தயங்கியபடி பாட்டியை நெருங்கிய அந்த சங்கரன் அவர் சுதாரிக்கும் முன் அந்த துப்பாக்கியை பிடுங்கி விட்டார். கிழவி அவர் முதுகில் வைத்த அடியெல்லாம் ‘எனக்கு பழக்கம் தான்’ என்பது போல் அந்த ஆயுதத்தோடு அடுத்த அறைக்குள் சென்று மறைந்தார்.
பாட்டி அத்தனை நேரம் கத்தியதில் அழுப்பாகி, இப்போது அவரின் சாய்வு நாற்காலியில் அமர, நிலானியோ செய்வதறியாது அப்படியே நின்றுக் கொண்டிருந்தாள். அவள் கண்ட கனவெல்லாம் வீணாகிப் போனது! அதற்கு காரணமானவனை பார்க்கவே பிடிக்கவில்லை.
“நிலா, வா போலாம்” அவன் மறுபடி அழைக்க,
“நிலா என்ன உன் வீட்டு நாய்குட்டியா லே? நீ கூப்பிட்டதும் உன் பின்னயே வர?”
அவன் பொறுமை பறந்திருந்தது!
“ஏய் கிழவி கொஞ்சம் சும்மா இருக்கியா, நான் என் பொண்டாட்டி கிட்ட பேசிட்டிருக்கேன்”
“அடி செருப்பால! யாரை பார்த்து கிழவிங்குறே! வெளியே போலே. என் பேத்தி பக்கம் இனி வந்தியோ உன்னையும் உன் குடும்பத்தையும் ஒழிச்சு கட்டிருவேன்.”
ஆவுடையம்மாள் ஆங்காரமாய் கத்த, இனியும் இங்கே நிற்பது அவன் தன்மானத்துக்கு இழுக்காய் தோன்றியது.
நிலானியை பற்றி அவனுக்கு தெரியும்.
கட்டாயம் அவனிடம் திரும்ப வருவாள்! அந்த நம்பிக்கையில் ஒன்றும் சொல்லாமல் வெளியேறிவிட்டான். அவன் போவதை பார்த்தபடியிருந்த அவன் மனைவியோ பக்கத்து அறைக்கு ஒதுங்கிப்போனாள்.
தளர்ந்த நடையில், அழுகையை அடக்கிக் கொண்டு நிலானி போனதை கண்ட அந்த முதியவளோ தாயில்லா தன் பேத்தியின் நிலையை கண்டு செய்வதறியாமல் அமர்ந்திருந்தார்.
ஆனால் அவனின் நம்பிக்கையை மட்டும் வீணாக்காமல் அடுத்த நாளே அவன் இருப்பிடம் வந்தாள் நிலானி! காலை வேளையில் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு வந்தவள் அவன் கதவை திறந்த நொடி,
“ஏன் டா இப்படி செஞ்சே?”
தன் புத்தம் புது மனைவி, கண்களில் கண்ணீரைக் தேக்கி கொண்டு கேட்ட கேள்வி அவன் மனதை நொறுக்கியது!
எதையும் வெளிக்காட்டும் நேரமில்லை!
“ஷ்...ஷ், இது காரிடர் இங்க வச்சி கத்தாதே! உள்ள வா” அவள் கைபற்றி அறையினுள் இழுத்தவன் கதவை அடைத்திருந்தான்.
ஏதோ அவளுக்கு சற்றும் பொருந்தாத ஒரு சுடிதாரில் வந்திருந்தாள். அவன் இரண்டு நாட்களுக்கு முன் கட்டிய தாலி கழுத்தில் மின்னிக் கொண்டிருக்க, எப்போதும் அவனைக் கண்டால் சந்தோஷம் குமிழ ஆரம்பிக்கும் முகத்தில், இன்று சோகமும், கோபமும் மட்டுமே இருந்தது.
அவள் முகத்தைக் கண்டவன்,
“நீ மட்டும் தான் என் மனைவியா வரணும்னு முடிவெடுத்திருந்தேன் நிலா! அதுக்காக நான் எந்த பொய்யும் சொல்லலை. ஆனா உண்மையை உன் கிட்ட மறைச்சது தப்புதான்!”
“நீ மட்டும் முடிவெடுத்தா போதுமா? அதுக்காக இப்படி திருட்டுத்தனம் செய்வியா?”
“நான் நினைச்சேன் தான். ஆனா, நாம கல்யாணம் பண்ணிக்கலாமான்னு நானா கேட்டேன்? ரெண்டு பேரில் அதை முதலில் சொன்னது யாருன்னு கொஞ்சமே கொஞ்சம் யோசிச்சு பாரு”
அவளே தான் கேட்டாள், முந்திரிக்கொட்டை தனமாய்!
“எனக்கு நீ தாமு மாமா பையன்னு தெரியாது...நீ ஏன் அவர் பையன்ற விஷயத்தை என் கிட்ட மறைச்சே? தெரிஞ்சா அப்படி கேட்டிருப்பேனா?”
இதற்கு மேலும் என்னால் விளக்கமளிக்க முடியாது என்பது போல் வாயைத் திறவாமல் நின்றவனை பார்வையால் எரித்து கொண்டிருந்தாள். அவனைத் தாண்டி தன் பெட்டி பக்கம் போனவள், வெளியே கிடந்த அவளின் துணிகளையும், லாக்கரில் இருந்த நகைகளை எடுத்து அதனுள் வைத்தாள்.
“என் பாஸ்போர்டை எங்கே வச்சே?”
அவள் செய்கையை பார்த்திருந்தவன்,
“அது என் கிட்டையே இருக்கட்டும்! டிக்கெட் புக்கிங்கப்போ தேவைப்படும்!”
“என் டிக்கெட்டை வாங்க எனக்கு தெரியும், நீ உன் வேலையை மட்டும் பார். அதை இப்ப கொடு”
அங்கே எவரும் இல்லாததை போல அவன் பாட்டுக்கு டிவியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான். நிலானி பொறுமை இழந்தவளாய்,
“சீக்கிரம் கொடு, நான் திருப்பி அம்பாசமுத்திரம் வரைக்கும் போகணும்!”
“உன்னை நானா அங்கேயிருந்து லெட்டர் போட்டு வரச் சொன்னேன்!? வந்த வேலை முடிஞ்சதா, அப்போ கிளம்பு!”
அவள் செய்வதறியாது அப்படியே நிற்க,
“என் பொண்டாட்டி பாஸ்போர்ட் என் கிட்ட தான் இருக்கும்! நாம சேர்ந்து தான் ஊருக்கு போறோம்! அதில் எந்த மாற்றமுமில்லை! வேற ஏதாவது கேட்கணுமா? நான் குளிக்க போகணும்”
‘என்னை விரட்டுறியா! உன்னை!!!’
தூக்க முடியாத அந்த கனமான பெட்டியை தள்ளாடியபடி சுமந்தவள், விறுவிறுவென்று அறையின் வாசல் பக்கம் வந்தாள். அவனை திரும்பி பார்க்க எத்தனிக்க அதற்குள் அவளை பின்பக்கமாய் அணைத்திருந்தான் அவளவன்!
“என்னை விடுறா! பிராடு, 420”
அவன் கையை பிரித்து விட முயன்றது, அவள் திமிரியது எதற்கும் அவன் அசரவில்லை!
அவளின் தோளில் தன் முகத்தை வைத்தவன்,
“நேத்தெல்லாம் நீ என் பக்கத்தில் இல்லாம நான் தூங்கவேயில்ல தெரியுமா டி! வாழ்நாள் முழுசுக்கும் என் கூட இருப்பேன்னு கோவிலில் சத்தியம் செய்ததை மறந்திட்டியா? என்னை விட்டிட்டு இருந்திடலாம்னு பிளான் பண்றியா நிலா?”
அதே குரல், அதே ஸ்பரிசம்!
அவளை கட்டிப் போட்டது அவன் உண்டாக்கியிருந்த அந்த சூழல்! கண் மூடி அவன் வார்த்தைகளில் லயித்திருந்தாள். அவளுக்கும் அவன் வேண்டும்!
எல்லாம் சற்று நேரம் தான்!
அவளின் முடிய கண்ணுக்குள் ஆவுடை பாட்டி துப்பாக்கியுடன் காட்சியளிக்கவும்,
“செய்றதை எல்லாம் செஞ்சிட்டு நடிக்கிறியா! என்னை விடுறா! நான் போகணும்!”
அவன் அப்போதைக்கு அவளை விடும் உத்தேசத்தில் இல்லை. நீண்ட நேர போராட்டத்தின் பிறகு அவனிடமிருந்து தன்னை விடுவித்தவள், அவனை திரும்பியும் பாராமல் வந்த வழியே கிளம்பிவிட்டாள்.