கல்லூரி தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாத காலம் முடிவடைந்துவிட்டது.இந்த ஒரு மாதத்தில் அனன்யாவும் வீட்டிற்கு அழைக்கவில்லை அவர்களும் இவளிடம் பேசவில்லை.
ஆனால் அதற்காக அவள் சிறிதும் வருத்தப்படவில்லை.அவளின் கல்லூரி வாழ்க்கையை சந்தோசமாக அனுபவித்துக் கொண்டிருந்தாள்.
இங்கு அவளை அதட்டி மிரட்டுபவர் யாரும் இல்லை.அவள் இஷ்டம் போல் இருந்தாள்.அவளுக்குப் பிடித்ததைச் செய்தால்,அவள் இஷ்டம் போல் உண்டாள்,நினைத்த நேரத்திற்கு தூங்கி எழுந்தாள்.பத்து வருடங்களுக்குப் பிறகு சுதந்திரமாக இருந்தாள்.
அவள் மகிழ்ச்சியாக இருந்ததற்கு காரணம் அது மட்டும் இல்லை..அவள் வாழ்வில் வந்த இரண்டு புதிய நபர்களும் தான்.
கல்லூரி வந்த சிறிது நாட்களிலையே சிநேகா அவளின் உயிர்த் தோழியாக மாறிவிட்டாள்.அவள் அம்மா இறந்தவுடன் சித்தியின் சதியால் அவளுக்கு நண்பர்கள் என்பவர்கள் இல்லாமல் போயினர்..அதனால் எப்பொழுதும் தனித்திருக்கும் சூழல்.
பள்ளியில் அவள் தோழி தெரியாத்தனமாக அவள் மீது மையை சிந்திவிட்டாள்.இவளும் அதைப் பெரிது படுத்தவில்லை.ஆனால் வீட்டிற்குச் சென்றதும் அவள் சித்தி கத்திய கத்தில் அவள் பயந்தே போய் விட்டாள் “ஏன் டி நான் என்ன உனக்கு வேலைக்காரியா? நீ எவ்வளவு அழுக்குப் பண்ணிட்டு வந்தாலும் துவைக்கறதுக்கு...” என்று தீட்டியவர் சாட்டையால் அவளை அடி வெளுத்துவிட்டார்.
பின்பு மை கொட்டிய தோழியின் வீட்டிற்கும் சென்று அவள் வீட்டாருடன் சண்டைப் போட்டு விட்டு வந்தார்.சின்னக் குழந்தை தெரியாமல் மை சிந்திய சின்ன விஷயத்திற்கு எதற்கு அந்தப் பெண் இவ்வளவு சண்டை போடுகிறாள் என்று நினைத்த பெற்றோர் அதற்குப் பிறகு அந்தப் பெண்ணை அனன்யாவிடம் பேச அனுமதிக்கவில்லை.
வீட்டிற்கு வந்தவுடன் “இனிமேல் நான் உன் துணிய துவைக்க மாட்டேன்..நீயே துவைச்சுக்கோ..அப்ப தான் புத்திவரும்” என்றவர் அன்றிலிருந்து அனன்யா துணியை அவளையே துவைக்க வைத்தார்.
எட்டு வயது குழந்தையை துணி துவைக்கச் சொன்னால் அக்குழந்தை எப்படி செய்யும்?ஆனாலும் அனன்யா அதைச் செய்தாள்.அவள் சித்தி எப்படி துணி துவைக்கிறாள் என்பதைப் பார்த்து அவளும் அப்படியே செய்தாள்.
ஆனால் எட்டு வயதுக் குழந்தை தன் பஞ்சுக் கரத்தால் துணி துவைத்தால் துணியிலுள்ள அழுக்குப் போய் விடுமா என்ன?அழுக்குப் போகாத உடையை அப்படியே அணிந்து கொண்டு பள்ளிக்குச் சென்றாள்.
அதனால் பள்ளியில் அவள் பெயர் “டர்ட்டி கேர்ள்” (dirty girl) என்றானது.அதனால் மற்ற குழந்தைகள் அவளிடம் இருந்து விலக ஆரம்பித்தனர்.எப்பொழுதும் அவளைக் கேலி செய்து விளையாடுவர்.
இதை எல்லாம் வந்து அவள் தன் சித்தியிடம் சொல்ல அந்தோ நடந்ததோ பரிதாபம்..அவர் அவளை மேலும் இரண்டு சாத்து சாத்தி “ஏன் டி எட்டு வயசு ஆச்சு..இன்னும் உன் துணியை கூட உன்னால துவைக்க முடியாதா?என்ன தான் உங்க அம்மா உன்ன வளர்த்துனாளோ...போறவ உன்னையும் கூட்டிட்டு போகாம என் தலையில கட்டி விட்டுட்டு போயிட்டா..” என்று கத்தினார்.
அவர் பேசியது அனன்யாவிற்கு புரியவில்லை என்றாலும் தன் அன்னையைப் பற்றி அவர் ஏதோ தப்பாக சொல்கிறார் என்பதை அவர் சொல்லிய விதத்தில் கண்டுபிடித்தவள் “என் அம்மா ரொம்ப நல்லவங்க..அவங்கள எதுவும் சொல்லாதிங்க..நான் இனிமேல் ஒழுங்கா துணி துவைக்குற..” என்று வாயைப் பிதுக்கி அழுதவள் கஷ்டப்பட்டு தன் துணியை நன்றாகத் துவைக்கக் கற்றுக் கொண்டாள்.
அவள் நன்றாக துணியை துவைக்கக் கற்றுக் கொண்டாள் என்பதை விட அழுக்கு செய்யாமல் இருக்கக் கற்றுக் கொண்டாள் என்று சொல்வதே மிகப் பொருந்தும்.
ஆனால் இங்கு வந்ததிலிருந்து அவளைக் கேட்பவர் யாரும் இல்லை.அதனால் சிநேகாவுடன் தன் பொழுதுகளைச் சந்தோசமாகக் கழித்தாள்.சிநேகாவும் இவளும் உயிர்த் தோழிகள் ஆகினர்.
அனன்யா சிநேகாவிடம் தன் குடும்பத்தைப் பற்றிச் சொல்லவில்லை அவளும் இவளிடம் அதைப் பற்றி கேட்கவில்லை.ஆனால் சினேகா தன்னைப் பற்றி எல்லாவற்றையும் அனன்யா விடம் பகிர்ந்து கொண்டாள்.ஒட்டிப் பிறந்தவர்கள் போன்று இருவரும் எப்பொழுதும் ஒன்றாகச் சுற்றிக் கொண்டிருந்தனர்.
தினமும் மதிய இடைவெளியின் பொழுது அந்த சீனியர் இவர்களைப் பார்க்க வந்துவிடுவான்.எப்பொழுதும் அனன்யாவைப் பார்த்ததும் அவன் கேட்கும் முதல் கேள்வி “சாப்டியா?” என்பது தான்.இந்தக் கேள்வியை அவன் கேட்பதினாலையே அவளுக்கு அவனைப் பிடித்துவிட்டது.
_---__________________________
சிநேகா அன்று மிகவும் உற்சாகமாக இருந்தாள்.அவள் படிக்க விரும்பிய சித்த மருத்துவத்திற்கான கவுன்சிலிங்கிற்கு அழைப்பு வந்திருந்தது.அவளுக்கு சிறு வயதிலிருந்தே சித்த மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசை.
ஆனால் மதிப்பெண் சற்று கம்மி ஆகிவிட்டதால் தான் வேறு வழி இன்றி இந்தத் துறையை தேர்ந்து எடுத்தாள்.ஆனால் இப்பொழுது இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கிற்கு அவளுக்கு அழைப்பு வந்திருந்ததால் அவள் கனவு நினைவாகப் போகும் சந்தோஷத்தில் இருந்தாள்.