காலச்சக்கரமே
கடத்திப்போ ஒருமுறை
மீண்டுமாய் வேண்டும்
நான் காதலித்த காலம்
வீதியில் எனைத்தேடி அவன்
விழிக்குள் சிக்க வைக்கும் விந்தை
உயிர்வரை ஊடுருவி
உள்ளம் சிலிர்க்கவைக்கும்
அவனின் ஒற்றைப் பார்வை
விழி நிறைய கனவு சுமந்து
விடிய விடிய விழித்திருந்த
அவன் காதல் சொன்ன தினம்
மருதாணி கரம் அவன் பற்ற
மயங்கி நான் நிற்க
முதல்முதலாய் தந்த முத்தம்
கல்தூண் மறைவில் வைத்து
கண்ஜாடை காட்டி சென்ற
கண்ணாடி தாஜ்மஹால்
ஆளில்லா ஆற்றங்கரையில்
அணைத்திருந்த அந்த நொடி
நிலா சாட்சி வைத்து
நெற்றியில் இட்ட நீள் முத்தம்
இன்றும் இதழ் நுனியில்
இனிக்கும் முதல் இதழ் தீண்டல்
இன்று என்னவன்தான்
ஆனால் எங்கே அவன்
என்னவனுக்குள் தேடுகிறேன்
என் அவனை
ஆதலால்
காலச்சக்கரமே
கடத்திப்போ ஒருமுறை
மீண்டுமாய் வேண்டும்
நான் காதலித்த காலம்
Last edited: