MithraPrasath
SM Exclusive
இடைவிடாத இன்னல்கள்
அத்தியாயம் 16
மீனாட்சிக்கும் ஆனந்திற்கும் திருமணம் என்று நிச்சயித்த நாளில் இருந்து ஆனந்திற்கு தலை கால் புரியவில்லை. பொழுது மொத்தத்தையும் மீனாட்சியுடனே செலவிட்டான். கல்லூரி, வீடு அனைத்தையும் மறந்து சுற்றினான். அது கல்லூரி விடுமுறை நாட்கள் என்பதால் அவனுக்கு அதில் எந்த பிரச்சனையும் அமையவில்லை.
பெற்றோர்கள் ஏதாவது சொல்வார்கள் என்பதற்காகவும், கல்யாணம் செய்யாமல் ஒன்றாக இருக்க கூடாது என்று சொன்னதாலும் இரவு நேரத்திற்கு மட்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான்.
அது இன்று வரை மாறவில்லை. நாளை திருமணம் என்ற போதிலும் கூட அவன் இங்கு சுந்தரத்தின் வீட்டிற்கு மீனாட்சியிடம் பேச வந்திருந்தான். அவனை பார்த்ததும் மீனாட்சிக்கு முகம் மலர்ந்தது. வெட்கத்தில் சிவந்தது. அருகில் இருந்த தோழிகளை, தங்கையை மறந்து ஆனந்தையே பார்த்து கொண்டிருந்தாள்.
தோழிகளின் கிண்டலையும் பொருட்படுத்தாமல் அவனையே ரசித்து கொண்டிருந்தாள். காதல் கனிந்த நிலையில் இருந்தனர் இருவரும். தன்னால் இனி அவன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைமை இப்போது அவளுக்கு. தன்னை இந்த ஒரு மாதத்திலே மொத்தமாக மாற்றி விட்டான் என்று சில நேரம் எண்ணி சிரித்து கொள்வாள் தனக்குள்ளே.
அப்போது உள்ளுக்குள் இருந்து வந்த சுந்தரமும், விக்னேஷும் ஆனந்தை பார்த்தனர். சுந்தரம் ஆனந்தை பார்த்து சிரித்து விட்டு அங்கிருந்து அகன்று விட்டான். அவனுக்கு இது புதிது இல்லை என்பதால் கண்டு கொள்ளவில்லை. விக்னேஷ் பார்த்தவுடன் ஆச்சர்யமாக பார்த்தான்.
“என்னடா வந்துருக்க..?!! என்னை பார்க்க வந்தயா..?” என்று நண்பனின் அருகில் செல்ல, அவனின் பார்வை வேறு எங்கோ இருப்பதை கவனித்து திரும்பி பார்த்தான். ஆனந்த் மீனாட்சியை பார்த்து கொண்டு இருப்பது தெரிந்தது.
“ஓகோ... இதுக்கு தானா... கொஞ்சமாது பொறுப்போட இரு... கிளம்பு வீட்டுக்கு...” என்று விக்னேஷ் சொல்லவும், சட்டென திரும்பி, “எதுக்கு...?” என்று அவசரமாக கேட்டான் ஆனந்த்.
“டேய்.. நீ வீட்டுக்கு ஒரே பிள்ளை. உங்க அப்பாவே எத்தனை வேலை பார்ப்பார்...? போய் பொறுப்பான பிள்ளையா எல்லா வேலையும் நீ பாரு.. நாளைல இருந்து மீனாட்சி உன் கூட மட்டும் தான் இருப்பா... அப்போ பார்த்துக்கலாம் நல்லா... இப்போ கிளம்பு..” என்று கூறி கொண்டே அவனை இழுத்து கொண்டே வெளியே வந்தான்.
மீனாட்சியை மலரும் வந்து வலுகட்டாயமாக உள்ளே இழுத்து சென்று விட்டாள். ஆனந்த் சென்று விட்டதால் அவளும் சலித்து கொண்டே சென்றாள்.
“விடுடா... அதெல்லாம் அப்பா தனியா பார்க்கல.. அவர் அண்ணன் பையன் தான் இருக்கானே...” என்று சொல்லி கொண்டே உள்ளே மறுபடியும் செல்ல பார்க்க,
“ஏய்..! என்ன நான் சொல்லிட்டே இருக்கேன்... போடா.. இல்ல மரியாத குறையும் அப்பறம்..” என்று சொல்லி சிரித்தான்.
பெரும்பாடு பட்டு ஆனந்தை அங்கிருந்து அனுப்பி வைத்தான் விக்னேஷ்.
சுந்தரம் ஓடி ஓடி தங்கையின் கல்யாண வேலைகளை கவனித்தான். சிவாவும் அவன் பங்குக்கு வேலைகளை செய்தான். அழகனுக்கு சௌந்தர்யாவின் குழந்தையை கவனிக்கவே சரியாக இருந்தது. அக்காவும், தங்கையும் சேர்ந்து மீனாட்சியை அலங்கரித்து கொண்டிருந்தனர்.
மாலை அனைவரும் கல்யாண மண்டபத்திற்கு செல்ல தயாராகினர். சுந்தரம் பட்டு வேட்டி அணிந்து வந்ததை பார்த்ததும், அழகன்,
“என்ன அண்ணா... இன்னைக்கே பட்டு வேட்டிய கட்டிடீங்க..?” என்று கேட்டான்.
விக்னேஷ், “அவன் எப்போவுமே வேட்டி கட்டுவான். இன்னைக்கு அதுவும் பங்க்சன்... பட்டு வேட்டி தான் கட்டுவான். அது உனக்கு தெரியாதா..?” என்று அழகனிடம் கேட்டான்.
“இல்ல அண்ணா இது தான் நாளைக்கு கல்யாணத்துக்கு எடுத்தது. இது நாளைக்கு கல்யாணத்தப்போ கட்டாம இப்போவே கட்டுராறேன்னு கேட்க வந்தேன்..” என்று வருத்தமாக சொல்லி சுந்தரத்தை பார்த்தான்.
“நாளைக்கு நான் அப்பாவோட வேட்டி இருக்கு, அத கட்ட போறேன்.. அதான் இன்னைக்கு இத கட்டினேன்..” என்று சொன்னான்.
“அப்போ எங்களுக்கு எல்லாம் அப்போவோட வேட்டி கிடையாதா..?” என்று கேட்டு கொண்டே உள்ளிருந்து வந்தான் சிவா.
“இருக்கு... நீங்க தான் வேண்டாம்ன்னு அன்னைக்கு சொன்னீங்க.. இப்போ கூட ஒன்னும் இல்ல... நான் எடுத்து தர்றேன் கட்டுறியா..?” என்று கேட்டாம் சுந்தரம்.
“இல்ல இப்போ வேண்டாம் அண்ணா... அடுத்த கல்யாணத்துக்கு கட்டிக்குறேன்... ஒரு நாளுக்கே எப்டி இருக்குமோ.. இதுல ரெண்டு நாளும் கட்டினா, நான் எந்த வேலையும் செய்ய மாட்டேன் அப்பறம்..” என்று சொல்லி சிரித்தான்.
“சரி.. சரி... கிளம்பலாமா... எங்க தங்கச்சி எல்லாரையும் காணோம்..?” என்று கேட்டான் சுந்தரம்.
“அவங்க கிளம்பி வர லேட் ஆகும் அண்ணா... இங்க மாமா இருக்காரு.. அவரு வண்டில வருவாங்க.. நாம கிளம்பலாம்..” என்று சிவா சொன்னான்.
சுந்தரம் கிளம்ப போகும் போது, “அண்ணா... ஒரு நிமிஷம்.. இந்தாங்க..” என்று பெல்ட் ஒன்றை கொடுத்தான் அழகன்.
“எதுக்குடா..?” என்று யோசித்து கொண்டே கேட்டான் சுந்தரம்.
“வேட்டிக்கு மேல கட்டிக்கோங்க.. இல்ல யார் காலாது பட்டு கழண்டு விழுந்துட போகுது...” என்று கூறி அழகன் கிண்டலாக சிரித்தான்.
உடனே மற்ற இருவரும் சேர்ந்து சிரிக்க, சுந்தரம் கடுப்பாகி, “கொழுப்புடா உனக்கு.. நீ என்னை கிண்டல் பண்றியா..? உனக்கு இதெல்லாம் எப்டி தெரியும்..? இவன் தான சொன்னது..” என்று கூறி விக்னேஷை முதுகில் அடித்தான்.
அனைவரும் சந்தோஷத்தில் சிரித்து மகிழ்ந்தனர். கடந்த இரண்டு வருடங்களாக சுந்தரம் இத்தனை சந்தோஷமாக இருந்தது இல்லை. அதுவும் தந்தையின் இறப்பின் பிறகு நடந்தவை அவனையும், குடும்பத்தையும் ஒரு சேர சோகத்தின் பிடியில் சேர்ந்திருந்தது. இப்போது தான் குடும்பம் மறுபடியும் சந்தோஷத்தை அனுபவிக்க ஆரம்பித்திருந்தனர்.
கிளம்ப தயாராக இருந்தவர்களை சௌந்தர்யா ஒரு நிமிடம் நிறுத்தி, கண்ணு பட கூடாது நம்ம குடும்பத்துக்கு என்று கூறி அனைவருக்கும் சுற்றி போட்டாள். பின் கிளம்பி மண்டபத்திற்கு சென்றனர்.
அனைத்து ஏற்பாடுகளும் வெகு விமர்சியாக நடந்தது. நிச்சயம் இன்னும் சிறிது நேரத்தில் நடை பெற இருக்கும் நிலையில் மண்டபமே சொந்தங்களினால் நிறைந்து இருந்தது. மனமே ஆனந்தமாக இருந்தது சுந்தரத்திற்கு. சுந்தரமும், சிவாவும் ஓடி ஓடி வேலை செய்தனர்.
வந்தவர்களுக்கு அறுசுவையில் விருந்து ஏற்பாடு செய்திருந்தனர். அது சற்று பெரிய மண்டபம் என்பதால் ஆட்களின் கூட்டத்திற்கு ஏற்றார் போல பந்தி பரிமாற இட வசதியும் இருந்தது. சுந்தரம் மேலே பந்தி பரிமாறும் இடத்திற்கு சென்றான். சமையல் காரர் படிக்கட்டுக்கு அருகில் நின்று போன் பேசி கொண்டிருக்கவும் அருகில் சென்றான் பேசுவதற்கு.