Annapurani Dhandapani
மண்டலாதிபதி
இது இருளல்ல!
21.
"யாமினி! இப்ப இருக்கற சூழ்நிலைல நா உனக்கு வாழ்க்கை குடுத்ததா நீ நெனச்சிகிட்டு இருக்க! ஆனா அது உண்மையில்ல! நீதான் எனக்கு வாழ்க்கை தரணும்! நீ எனக்கு வாழ்க்கை தரலாமா வேண்டாமான்னு நா சொல்றத முழுசா கேட்டப்றமா முடிவு பண்ணு!"
பீடிகையுடன் வாசு கூற ஆரம்பித்ததை அவள் மிகவும் கவனமாகக் கேட்கத் தொடங்கினாள்!
1990 வருடம்!
"பத்மினீ....."
"ஆயிடுத்தும்மா.... அஞ்சு நிமிஷம்....."
"அஞ்சு நிமிஷம்... அஞ்சு நிமிஷம்னு கிட்டதட்ட ரெண்டு மணி நேரமா வெளிய நின்னுண்டிருக்கடீ.... சீக்கிரம் முடிச்சுட்டு வா..... ட்யூஷனுக்கு நேரமாச்சு...."
பத்மினியின் அம்மா மைதிலி சமையலறைக்கும் வாசலுக்கும் ஓடிக் கொண்டிருந்தாள்!
"இதோ! முடிச்சுட்டேன்மா!" என்று கூறிக்கொண்டே ஒரு கையில் காலியான வாளியையும், மறு கையில் துடைப்பத்தையும், எடுத்துக்கொண்டு உள்ளே வந்தாள் பத்மினி!
அவள் உள்ளே வருவது கண்டு வெளி வாசலை எட்டிப் பார்த்தாள் மைதிலி!
சாலையை அடைத்து பெரியதாகப் போடப்பட்டிருந்த படிக்கோலத்தைப் பார்த்து மனதுக்குள் மகிழ்ந்தாலும், வெளியே முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொண்டு கூறினாள்!
"எதுக்குடீ இன்னிக்கு இவ்ளோம் பெரிய கோலத்தப் போட்டிருக்க? சின்னதா ஒரு இழு இழுத்துட்டு வாடீன்னுதானே சொன்னேன்!" என்றபடியே அவளிடம் காபியை நீட்டினாள்! வாளியையும் துடைப்பத்தையும் உரிய இடத்தில் வைத்துவிட்டு தன் கைகளை சுத்தமாகக் கழுவிக் கொண்டு வந்த பத்மினி தன் தாய் நீட்டிய காபியை எடுத்து மெதுவாக உறிஞ்சத் தொடங்கினாள்!
"எச்ச பண்ணி குடிக்காதன்னு எத்தன வாட்டி சொல்லியிருக்கேன்! பாட்டி பாத்தா திட்டப் போறா!" என்று மெல்லிய குரலில் மகளைக் கடிந்து கொண்டே அவள் தலையில் கட்டியிருந்த துண்டைக் கழற்றிவிட்டு,
"ஏண்டீ இப்டி ஈரத்தலையோட பனியில் நின்ன... ஜலதோஷம் பிடிச்சுடாதா..... தலைய ஆறவிட்டுண்டே கோலம் போடப்படாதா? ரெண்டு மணி நேரமா......" என்று குறைபட்ட படியே மகளுடைய ஈரக்கூந்தலை ஆறவிட்டாள் மைதிலி!
"ம்மா.... துண்டக் கழட்டிட்டா குனிஞ்சு கோலம் போடும்போது முடியெல்லாம் முன்னால வந்து விழுந்து கோலம் போடறச்சே டிஸ்டர்ப் ஆகுதும்மா...." என்றாள் மகள்!
"என்னமோ போ.... பரிட்சை நேரத்தில ஒடம்புக்கு வரப்போறது.... எதுக்கு இன்னிக்கு இவ்ளோம் பெரிய கோலம்...."
"மைதிலி! அவளுக்கு கோலம் போடப் பிடிக்கும்னு ஒனக்கு தெரியும்தானே! அதுவும் மார்கழி மாசம் வேற! அவ போடாம இருப்பாளா? அப்றம் ஏன் இப்டி ஒரு கேள்வி கேக்கற?" என்றபடியே அங்கு வந்த மைதிலியின் மாமியார் காமாட்சி, வெளி வாசலை எட்டிப் பார்த்துவிட்டு, தன் பேத்தியை திருஷ்டி வழித்துக் கொஞ்சினாள்!
"என் கண்ணே பட்டுடும்! ரொம்ப ஜோரா போட்டிருக்க பத்தூ... சீக்கரம் கௌம்பு! ட்யூஷனுக்கு டைமாச்சு!"
"சரி! பாட்டீ!" என்றபடியே தன் நீண்ட அடர்ந்த கூந்தலை ஒரு க்ளிப்பில் அடக்கிவிட்டு தன்னுடைய புத்தகப் பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்!
"வரேம்மா!" என்று கூறிவிட்டு தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு தான் போட்ட கோலத்தை மிதிக்காமல் வெகு கவனமாக ஓரமாகவே அதை உருட்டிக் கொண்டு போகிறவளைப் பார்த்து சிரித்துக் கொண்டனர் மாமியாரும் மருமகளும்!
"ஆச்சு! இவ கௌம்பிட்டா.... இனி அவன எழுப்பணும்!" என்றபடியே உள்ளே போனாள் மைதிலி!
"பாஸ்கரா..... டேய்! பாஸ்கரா! எழுந்திருடா! மணியாகறது..... எழுந்திருடா! ஒனக்கு வேலைக்கு நேரமாகலையா....." என்று கூவியபடி தன்னை எழுப்பும் அம்மாவை அரைக்கண்ணை விழித்துப் பார்த்தான் பாஸ்கரன்!
"ம்மா... போம்மா.... தூக்கம் வரது.... தூங்க விடும்மா...." என்று அலுத்துக் கொண்டே திறந்த கண்களை மூடிக்கொண்டு இன்னும் கொஞ்சம் வசதியாக படுத்துக் கொண்டு போர்வையை தன் தலை வரை போர்த்திக் கொண்டான்!
"நேக்குத் தெரியாது! பூஜை பண்ணறதுக்கு இப்ப அப்பாவும் தாத்தாவும் வரப்போறா! அவா வந்து உன்னப் பாத்து கத்தறதுக்குள்ள எழுந்து வா!" என்று மகனை மிரட்டினாள் மைதிலி.
"ம்ச்.... தெனமும் இதே பாட்டு பாடாதம்மா..." என்று கூறிக் கொண்டே எழுந்து அமர்ந்தான் பாஸ்கரன்!
"நீ தெனமும் என்ன இதே பாட்ட பாட வெக்காத! எழுந்து போய் பல் தேச்சி குளிச்சிட்டு வா!" என்றுவிட்டு வெளியேறினாள் மைதிலி!
"அவ எங்கமா? எழுந்துட்டாளா?"
"அவ காத்தால நாலு மணிக்கே எழுந்து, குளிச்சு, வாசல்ல கோலம் போட்டுட்டு ட்யூஷன் கௌம்பி போய்ட்டா! நீதான் இன்னும் சந்தி பண்ணாம இருக்க...." சமையலறையிலிருந்து வந்த அம்மாவின் செய்தி வாசிப்பில் முகம் சுளித்தான் மகன்!
"இவ எதுக்கு இவ்ளோ கரெக்ட்டா வேல செய்யறா? இவ கரெக்ட்டா இருக்கறதுனாலதான இவால்லாம் என்ன திட்றா....." என்று மனதுக்குள் கடுத்தபடி படுக்கையிலிருந்து எழுந்தான் பாஸ்கரன்!
"அப்டியே போகாத! படுக்கைய மடிச்சி வெச்சுட்டுப் போ!" கட்டளையாய் வந்த மைதிலியின் குரலில் வெறுப்படைந்தாலும் வேறு வழியில்லாமல் தான் படுத்திருந்த படுக்கையை ஏனோ தானோவென்று சுருட்டி மடித்து அலமாரியில் அதற்குரிய இடத்தில் சொருகிவிட்டுப் போனான்!