Annapurani Dhandapani
மண்டலாதிபதி
இது இருளல்ல!
23.
கிருஷ்ணா-பவதாரிணியின் நிச்சயதார்த்தத்துக்கு ஏற்பாடு செய்தனர் அவர்களுடைய பெற்றோர்!
அவர்களும் மனதளவில் இதை எதிர்பார்த்தாலும் பாஸ்கரனையும் பத்மினியையும் நினைத்து, இப்போது இது தேவையா என்ற எண்ணமே இருவருக்கும் முதலில் வந்த எண்ணம்!
ஆனால் பெற்றோர் ஏற்பாடு செய்துவிட்டனர்! இதையும் நாம் சந்தித்துதானே ஆக வேண்டும் என்று தங்களைத் தாங்களே சமாதானமும் செய்து கொண்டார்கள்!
நிச்சயதார்த்தத்துக்கு முந்தைய நாள் பிற்பகல் வேளையில் கிருஷ்ணாவைத் தேடி ஒரு பெண், அவன் வேலை செய்யும் காவல் நிலையத்துக்கு வந்தாள்!
அவள் அவனிடம் ஒரு கைக்குட்டையைக் கொடுத்து,
"நா .... பக்கத்தில ஒரு பிரைவேட் ஆஸ்பிடல்ல நர்ஸா வேல பண்றேன்! இத இந்த போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கற கிருஷ்ணராஜ்ங்கற போலீஸ்காரர் கிட்ட குடுத்துடுங்கன்னு ஒரு பொண்ணு குடுத்துச்சி! அவ கால்ல ஏதோ காயம்னு கட்டு போட்டுக்க வந்திச்சி! இத நீயே குடுக்கலாமேன்னு நா கேக்கும் போதே, அவ கூட வந்தவங்க மருந்து வாங்கிட்டு வந்துட்டாங்க! அந்தப் பொண்ணு, என்னப் பாத்து, அக்கா! இது உங்க கர்சீப்! கீழ விழுந்திடுச்சின்னு சொல்லி என் கைல வெச்சி அழுத்திச்சி! அது ஏதோ பிரச்சனைல இருக்கு போலன்னு புரிஞ்சிகிட்டேன்! அவளப் பாக்க பாவமா இருந்திச்சி! அதான், இன்னிக்கு லீவ் போட்டுட்டு உங்கள பாக்க வந்தேன்!" என்று கூறிவிட்டு "என்ன எந்த பிரச்சனைலயும் மாட்டி விட்டுடாதீங்க சார்!" என்று கோரிக்கையையும் வைத்தாள்!
அவளுடைய பெயர், முகவரி மற்றும் அவளிடம் கைக்குட்டையைக் கொடுத்தவளின் விவரங்களை வாங்கிக் கொண்டு அவளை அனுப்பி வைத்தான் கிருஷ்ணா!
அது பெண்கள் பயன்படுத்தும் வெள்ளை நிறக் கைக்குட்டை! ஆனால் அது மிகவும் அழுக்காகியிருந்தது! அவன் அதைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான்! அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை!
அவள் கூறியதை நினைத்துப் பார்த்தான்! அந்தப் பெண் யாராக இருக்கும் என்று அவனால் ஊகிக்க முடியவில்லை!
அவள் கொடுத்தவற்றை அப்படியே தன்னுடைய மேஜையின் உள்ளறையில் வைத்துப் பூட்டிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினான்!
அந்தக் குழப்பத்துடனேயே வீட்டுக்கு வந்தவன் அதைப் பற்றியே நினைத்துக் கொண்டு தூங்கிவிட்டான்! மறுநாள் அவனுக்கும் பவதாரிணிக்கும் நிச்சயதார்த்தம்!
விடியற்காலை வழக்கம்போல அவன் எழுந்து தன் காலைக் கடன்களை முடிப்பதற்காக வீட்டின் கொல்லைப்புறம் செல்ல, அங்கே அவர்கள் வீட்டு வேலையாள் பழைய படுக்கை விரிப்பைத் துவைப்பதற்காக எடுத்து வந்தான்!
அந்த நீல நிறத் துப்பட்டியானது பல முறை துவைத்ததினால் நிறம் மங்கி வெளுத்துப்போய் அதிலிருந்த ஓவியங்கள் எல்லாம் அழிந்து மிகவும் பழையதாகிப் போயிருந்தது!
அந்த வேலையாள் அதை எடுத்துத் தண்ணீரில் நனைத்ததும் அதில் அழிந்து போயிருந்ததாக நினைத்த ஓவியம் தெளிவாகத் தெரிந்தது!
இதைப் பார்த்த கிருஷ்ணாவுக்கு பொறி தட்ட, அவசர அவசரமாகக் கிளம்பி நேராக பவதாரிணியிடம் சென்று, அவசர வேலை என்று மட்டும் கூறிவிட்டு காவல் நிலையம் விரைந்தான்!
அங்கு சென்று தான் நேற்று மாலை பத்திரப்படுத்தி வைத்த அந்த அழுக்குக் கைக்குட்டையை எடுத்து, தண்ணீரில் நனைத்தான்!
தண்ணீரில் நனைந்து ஈரமான அந்த கைக்குட்டையில் குட்டிக் குட்டியாக நிறைய படிக்கோலங்கள் வரையப்பட்டிருந்தது மங்கலாகத் தெரிந்தது!
இது... இது.... ஐயோ பத்மினி! நீயா? நீயாம்மா? கடவுளே! உனக்கு நன்றி! என்று கடவுளுக்கு நன்றியுரைத்தபடியே அந்த நர்ஸ் கொடுத்த தொலைபேசிக்கு அழைக்கலாம் என எண்ணி தொலைபேசியின் அருகில் செல்ல, இறைவனே வரம் கொடுத்தது போல அந்த நர்ஸே அப்போது அவனை அழைத்தாள்!
"ஹலோ சார்! எங்கிட்ட கர்சீப் குடுத்திச்சே, அந்தப் பொண்ணுக்கு ஜொரம்னு இன்னிக்கு இங்க வந்திருக்கு சார்! அதுக்கு டெம்பரேச்சர் அதிகமா இருக்கறதால இன்னிக்கு அட்மிட் பண்ணி ட்ரிப்ஸ் போடச் சொல்லி எங்க பெரிய டாக்டர் சொல்லிருக்கார்னு இப்ப அட்மிஷன் போட்டிருக்காங்க! அந்தப் பொண்ணு, உங்ககிட்ட எதோ சொல்லணும்னு தவிக்கிது சார்! அதும் நேர்லதான் சொல்லணும்னு சொல்லுது சார்! நீங்க உடனே வாங்க சார்! ப்ளீஸ்!" என்று படபடப்பாய்க் கூறி முடித்தாள்!
கிருஷ்ணா, அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண்ணைப் பற்றிய அங்க அடையாளங்களக் கேட்க, அவள் கூறிய விவரங்கள் எதுவும் பத்மினியின் அடையாளங்களுடன் ஒத்துப்போகவில்லை! எனினும், இந்தப் பெண்ணுக்கு பத்மினியைப் பற்றி ஏதோ தெரிந்திருக்க வேண்டும்! அதைத்தான் இவள் என்னிடம் சொல்வதற்காக இவ்வளவு தவிக்கிறாள் என்று கிருஷ்ணாவின் போலீஸ் மூளை அவனுக்கு உணர்த்தியது!
அதன் பிறகு அவன் சற்றும் தாமதியாமல் பாஸ்கரனுக்கு அழைத்து விவரம் கூறிவிட்டு வீட்டுக்கு வந்து பவதாரிணியை அழைத்துக் கொண்டு பத்மினியைத் தேடிச் செல்ல ஆயத்தமானான்!
எதற்கும் இருக்கட்டும் என்று தன் உயரதிகாரியிடம் முறைப்படி அனுமதி வாங்கவும் அவன் மறக்கவில்லை!
பாஸ்கரனும் தன் மனைவி ருக்மணி மற்றும் தாய் மைதிலியுடன் கிளம்பினான்!
பவதாரிணி ஒரு மருத்துவச் செவிலி என்பதால் ஒரு வேளை பத்மினிக்கு மருத்துவ உதவி எதுவும் தேவைப்படுமோ என்று நினைத்தே அவன் அவளை அழைத்துச் சென்றான்!
அந்தப் பெண் கூறிய ஊர் சென்று அவள் கூறிய மருத்துவமனையைக் கண்டுபிடித்து அங்கு சென்று சேர மதியம் ஒன்றாகிவிட்டது!
கிருஷ்ணா எதிர்பார்த்தது போல கைக்குட்டை கொடுத்த பெண்ணுக்கு பத்மினியைத் தெரிந்திருக்கிறது! அவள் இருக்கும் இடத்தைப்பற்றி அந்தப் பெண் கூற, கிருஷ்ணா கவனமாகக் கேட்டுக் கொண்டான்!
"....... அந்த தெருவுக்குள்ள போனா, மூணாவதா சிவப்பும் மஞ்சளுமா பெயின்ட்டு பண்ணின சின்னதா ஒரு வீடு...... அதுக்குள்ள மாடியில ஒரு ரூம்லதான் அந்தப் பொண்ண முந்தா நேத்தி பாத்தேன்...."
மிக கவனமாக அந்தப் பெண் கூறியதைக் கேட்டுக் கொண்ட கிருஷ்ணா, பாஸ்கரனுடன் அங்கு சென்றால், அவள் கூறியது போல வீடு அங்கு இல்லவேயில்லை!
இருவரும் குழம்பிப் போனார்கள்!
கடவுளே! இதென்ன சோதனை! என் தங்கையை என் கண்ணில் காட்டு! ப்ளீஸ்! என்று பாஸ்கரன் மனமுருகி வேண்டியபடியே சுற்று முற்றும் பார்க்க, அங்கே ஒரு வீட்டில் புதிதாகப் பெயின்ட் செய்து கொண்டிருந்தார்கள்! அதுவும் அந்தப் பெண் கூறியது போல சின்ன வீடுதான்! அது மாடி வீடு போலதான் இருந்தது!
ஒரு வேளை, இதுவாக இருக்குமோ என சந்தேகம் வர, கிருஷ்ணாவிடம் கூறினான்!
அவனுக்கும் இந்தச் சந்தேகம் வந்திருந்தது! போலீஸ் மூளையாயிற்றே!
சட்டென்று முடிவெடுத்து, அங்கிருக்கும் காவல் நிலையத்தினைத் தொடர்பு கொண்டு தன்னைப்பற்றிக் கூறி, தான் வந்த விஷயத்தையும் கூற, அந்தக் கடவுளின் அருளால் அவனுக்கு அங்கிருந்து உதவி கிடைத்தது!
அவர்களே நேரில் வந்து அந்த வீட்டை சோதனை போட, அங்கே பத்மினி இருந்தாள்!
ஆம்! பத்மினி இருந்தாள், குற்றுயிரும் குலையுயிருமாக!