Annapurani Dhandapani
மண்டலாதிபதி
இது இருளல்ல!
24.
தன்னுடைய தாயைப் பற்றியும் தன் பிறப்பின் ரகசியத்தையும் யாமினியிடம் கூறி முடித்தான் வாசுதேவன்!
அவனுடைய மடிக்கணிணியில் பத்மினி பேசிய வீடியோ பதிவு ஓடி முடிந்திருந்தது!
கண்கள் கசிய கேட்டிருந்தாள் யாமினி!
பத்மினியின் படத்தை அவனுடைய மடிக்கணிணியில் பார்த்து அதிர்ந்தே போனாள் யாமினி!
அவளுடைய படத்தைப் பார்த்தால் குழந்தை என்றுதான் கூற முடியும்! படத்தில் கள்ளம் கபடம் அறியாத குழந்தையாய் சிரித்துக் கொண்டிருந்தாள் பத்மினி! கொஞ்சம் சௌமியின் சாயலும் தெரிந்தது!
வீடியோ பதிவில் இளைத்து கருத்து கன்னங்கள் ஒட்டி கண்கள் உள்ளே போய் வாடி வதங்கியிருந்த பெண்ணுக்கும் இவளுக்கும் சம்மந்தமே இல்லாமல் இருந்தது!
யாமினியால், படத்திலிருக்கும் குட்டிப் பெண்தான் தன் மாமியார் என்று நம்பக் கூட முடியவில்லை!
இவளுக்கா? கள்ளம் கபடமில்லாத இந்தக் குழந்தைக்கா? இந்த சின்னப் பொண்ணுக்கா இந்த நிலை வர வேண்டும்? கடவுளே! உனக்கு கண்ணேயில்லையா?
இவளுக்கு நேர்ந்த கொடுமையை வைத்துப் பார்த்தால் தனக்கு நடந்தது ஒன்றுமேயில்லை என்று எண்ணிக் கொண்டாள் யாமினி!
வாசு வருத்தம் தோய்ந்த முகத்துடன் இறுகிப் போய் அமர்ந்திருந்தான்!
"இப்ப நீதான் யாமினி முடிவு பண்ணனும், என்ன நீ ஏத்துக்கறதா வேண்டாமான்னு...." என்றான் விரக்தியாய்!
அவள் பதிலொன்றும் கூறாமல் அவனிடம் தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்தாள் யாமினி!
அவளிடம் வேண்டாம் என்று தலையசைத்தான். அவனுடைய அறைக்கதவு தட்டப்பட்டது!
யாமினி தன் கண்ணைத் துடைத்துக் கொண்டு கதவைத் திறக்க, அறை வாசலில் ஐஷுவும் சௌமியும் கண்ணீர் வழிய நின்றிருந்தனர்!
யாமினி கதவைத் திறந்ததும் ஓடி வந்து வாசுவைக் கட்டிக் கொண்டு அழுதாள் ஐஷு!
"ஒனக்குள்ள இவ்ளோ சோகம் வெச்சிகிட்டு..... சாரி.... சாரிண்ணா.... நா.... உன்கிட்ட ரொம்ப விளையாடிட்டேன்.... சாரிண்ணா...." என்று கதறியழுதாள்.
சௌமியோ,
"வாசுண்ணா.... அத்தைக்கு எவ்ளோ பெரிய கொடுமை நடந்திருக்கு.... ரொம்ப பாவம்ண்ணா பத்மினி அத்தை.... நெனச்சுப் பாக்கவே கொடுமையா இருக்குண்ணா.... எப்டிண்ணா... எப்டி.... எல்லாம் தெரிஞ்சும் எப்டி நீங்க அமைதியா இருந்தேள்..."
வாசுவால் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் உடைந்து போய் அழுதான்!
இத்தனை நாட்களாக தங்கைகள் முன்னால் வெளிப்படையாக அழ முடியாமல் தேக்கி வைத்திருந்த கண்ணீரையெல்லாம் கொட்டித் தீர்த்தான்!
மூவரும் அழுவதைக் காணச் சகியாமல் அவர்களைத் தடுக்கவும் தெரியாமல் அந்த அறையை விட்டு வெளிய வந்த யாமினி மேலும் அதிர்ந்தாள்!
அங்கே கிருஷ்ணாவும் பவதாரிணியும் ருக்மணி மாமியும் ஆளுக்கு ஒரு பக்கம் அமர்ந்து வாயில் கை வைத்தபடி சத்தமில்லாமல் அழுது கொண்டிருந்தனர்!
யாமினி மெதுவாக சமையலறைக்குச் சென்று பால் காய்ச்சி எல்லாருக்கும் எடுத்து வந்து கொடுத்தாள்!
முதலில் யாரும் அவள் கொடுத்ததை வாங்கவில்லை! ஆனால் அவள் வற்புருத்தி எல்லாரையும் குடிக்க வைத்தாள்!
ஐஷு கேட்டாள்!
"அண்ணா! நா அந்த வீடியோவ பாக்கலாமா?"
"வே.... வேணாம்.... வேணாம்மா..."
"இல்லண்ணா.... இவ்ளோ நேரம் நீயும் அண்ணியும் பேசினது எல்லாம் கேட்டுகிட்டுதான் இருந்தோம்! அந்த வீடியோ சத்தம் கூட தெளிவா கேட்டுச்சு.... எனக்கு உன்னோட அம்மாவ பாக்கணும்ணா...."
அரை மனதாக வாசு திரும்பவும் தன் மடிக்கணிணியில் இருந்த அந்த வீடியோ பதிவை தங்கைகளுக்காக ஓடவிட்டான்! இருவரும் கண்கள் கசிய பார்த்து முடித்தனர்!
அது முடிந்ததும் சௌமி தன் தந்தையை நன்றாகத் திட்டினாள்!
"இந்த அப்பாவுக்கு எவ்ளோ ஒரு கல் நெஞ்சம்..... அத்தை கேக்கும் போது நா வளக்கறேன்னு ஒத்துக்க மனசிருந்ததா.... இதுல எப்ப பாத்தாலும் அண்ணாட்ட அதிகாரத்த காட்ட வேண்டியது..... அப்பா ரொம்ப மோசம்..... நீ ஏம்மா எல்லாம் தெரிஞ்சிருந்தும் அப்பாவ எதிர்த்து ஒரு வார்த்தை கூட சொல்லல..... நீ இப்ப காட்டின கோவத்த அன்னிக்கே காட்டியிருந்தேன்னா.... அண்ணாவுக்கு இவ்ளோ மன உளச்சல் இருந்திருக்காது....." என்று தன் மனதில் இருந்த ஆதங்கத்தைக் கொட்டினாள்!
மற்றவர்கள் எல்லாரும் அவள் பேசுவதை ஒன்றும் சொல்லாமல் கேட்டிருக்க, யாமினியால் அப்படி இருக்க முடியவில்லை!
"என்ன பேசற சௌமி? உங்கப்பா கல் நெஞ்சக்காரரா? பாவம் சௌமி அவரு!"
"என்ன மன்னி, நீங்க? இப்பவும் அப்பாவுக்காக பரிஞ்சி பேசறீங்க? அப்பா வாசுண்ணாவ எவ்ளோ கீழ்த்தரமா நெனச்சிருந்தா அண்ணாவ வளக்க மாட்டேன்னு சொல்லியிருப்பார்!"
"நீ உங்கப்பாவ புரிஞ்சிகிட்டது அவ்ளோதான்!" என்று யாமினி கூறியதும் எல்லாருமே யாமினியை அதிசயமாகப் பார்த்தனர்!
"என்ன யாமினி சொல்ற? எல்லாம் தெரிஞ்சும் அவர் என்ன வளக்க ஒத்துக்கல.... நீ பாத்தல்ல... அந்த வீடியோல.... எவ்ளோ கடுமையா பேசினார்னு... எங்கம்மா என்ன கடவுளா பாத்தாங்க.... ஆனா இவர் என்ன கீழ்த்தரமாதான் நெனச்சார்....." என்று கோபமாகச் சொன்னான் வாசு!
"தயவு செஞ்சி அப்டி சொல்லாதீங்க..... அவர் உங்க நல்லதுக்காகதான் அப்டி இருந்திருக்கார்! அவர் உங்கள கண்டிப்பா கீழ்த்தரமா நெனக்கவேயில்ல! சொல்லப் போனா உங்கள ஒரு உத்தம புத்திரன்னு.... உத்தமி பெத்த புத்தின்னுதான் அவர் நெனக்கிறார்! எப்பவுமே நெனப்பார்!"
"இது என்ன புதுக்கதை?"
"ஆமா வாசு! உங்க மேல ஒரு குற்றம் குறை கூட கிடையாதுன்னு அவர் நெனக்கறதுனாலதான் அவர் என்ன வெரட்டணும்னு சொல்றார்! தன் தங்கை மகன் ஒரு உத்தம புத்திரன்ங்கிறதுனாலதான், கெட்டுப் போன நான் உங்களுக்குத் தகுதியானவள் கிடையாதுன்னு அவர் தன்னோட மகள உங்களுக்கு கட்டி வெக்கணும்னு துடிக்கறார்!"
கேட்டிருந்த எல்லாருக்குமே யாமினி பேசுவது ஆச்சர்யமாக இருந்தது!
"நெனச்சு பாருங்க.... அவர் உங்கள ஏத்துகிட்டு வளத்திந்தா நீங்க அவர அப்பான்னு கூப்பிட்டிருக்க மாட்டீங்க.... மாமான்னுதான் கூப்பிட்டிருப்பீங்க... உங்களுக்கு அப்பா-அம்மாவோட பாசம் முழுமையா கெடைக்காம போயிருக்கும்! அது கெடைக்கணும்னுதான் அவர் உங்கள ஏத்துக்கல!
உங்கள ஏத்திகிட்டு வளக்கும்போது இன்னும் பிரச்சனைகள் வரும்! உங்கம்மாவ பத்தி, அதாவது அவரோட தங்கைய பத்தி எல்லாரும் தப்பு தப்பா பேசி உங்கள அவமானப்படுத்துவாங்க! நீங்க மனசொடஞ்சி போயிருப்பீங்க! நீங்க அப்டிலாம் மனசொடிஞ்சி போய்டக் கூடாதுன்னுதான் அவர் உங்கள வளக்க முன்வரல!
சும்மாவே அவருக்கு கோவம் அதிகம்! இதுல நீங்க குழந்தைத்தனமா குறும்பு செய்யறச்சே அவர் தன்னோட வேதனைய கோவமா உங்ககிட்ட காட்டலாம்.... உங்க குழந்தைப் பருவம் முழுசும் பெத்தவங்க பாசத்துக்காக ஏங்கிப் போயிருக்கும்!"
"ஆங்.... ஒருவேள என்ன கிருஷ்ணாப்பாவும் ஏத்துக்காம போயிருந்தா.... அப்பவும் இந்த நிலை வந்திருக்கும்தானே...."
"திரும்பியும் தப்பா சொல்றீங்க! உங்க பாஸ்கர் மாமாவுக்கு தன்னோட நண்பர் கிருஷ்ணாவையும் சரி, அவங்க மனைவி பவதாரிணியையும் சரி, ரெண்டு பேரையும் பத்தி ரொம்ப நல்லா தெரியும்! எப்படியும் கிருஷ்ணா மாமா உங்கள மனப்பூர்வமா ஏத்துகிட்டு நல்லபடியா வளப்பார்னு அவர் புரிஞ்சி வெச்சிருந்தார்! அதுவும் கிருஷ்ணா மாமாவோட அம்மா அதாவது உங்க பாட்டி, எவ்ளோ கோவப்பட்டாலும் பவதாரிணி அத்த ஒருநாளும் உங்கள கைவிடவே மாட்டாங்கன்னு அவருக்குத் தெரியும்! அதான் அவர் கல் நெஞ்சா நடந்துகிட்ட மாதிரி நடிச்சார்! நடிச்சிகிட்டும் இருக்கார்...."
"இது......" வாசு தடுமாறினான்!
"ஆமா வாசு! யோசிச்சி பாருங்க! அவர் பெரிசா இழந்திருக்கார்! அடுத்தடுத்து தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, தங்கை, ஆச ஆசயா பெத்துக்கணும் நெனச்ச தன்னோட குழந்தை எல்லாத்தையும் இழந்திருக்கார்! எவ்ளோ துடிச்சிருப்பார்..... எத்தன வேதனைய மனசில சுமந்துகிட்டு அவர் நடமாடிட்டிருக்கார்...
இதுல அவருக்கு ஒரே சந்தோஷம் நீங்க மூணு பேர்! நீங்க மூணு பேர் அதாவது, வாசு, ஐஷு, சௌமி, நீங்க மூணு பேர் மட்டும்தான் அவரோட ஒரே சந்தோஷம்! உங்ககிட்ட அதிகாரத்த காட்டற மாதிரி அவர் உங்கள கிண்டறார்.... நீங்க அவர்கிட்ட கோவத்த காட்றேன்னு எதிர்த்து பேசறீங்க.... உண்மைலயே அவர் உள்ளுக்குள்ள ரசிச்சிகிட்டு வெளிய உங்ககிட்ட சண்டை போடறதா நாடகம் ஆடிகிட்டு இருக்கார்!"
கேட்டிருந்த வாசுவும் அவன் தங்கைகளும் கொஞ்சம் கொஞ்சமாக தெளியத் தொடங்கினார்கள்!
"எந்தக் கவலையும் இல்லாம அம்மா அப்பா தாத்தா பாட்டி தங்கைன்னு ஒரு அழகான கூட்டுக்குள்ள செல்லமா வாழ்ந்தவர்! திடீர்ன்னு அவர இருட்டுல காட்டுக்குள்ள தன்னந்தனியா விட்டுட்ட மாதிரி எல்லாரும் ஒரே நேரத்தில அவர விட்டுட்டு போய்ட்டாங்க! அவர் அந்த இருட்டில விளக்கா நெனச்சி பயணம் பண்ணினதே உங்கள மட்டும்தான்! நீங்க தான் அவரோட விடிவௌக்கா இருந்திருக்கீங்க! இன்னமும் இருக்கீங்க வாசு!" என்றாள் யாமினி அழுத்தம் திருத்தமாக!
ருக்மணியைப் பார்த்துக் கேட்டாள் யாமினி!
"அம்மா! அவர் எவ்ளோ வேதனப்பட்டார்ன்னு பக்கத்தில இருந்து பாத்தவங்க நீங்க! உங்களுக்குக் கூட அவரோட கோவம் புரியலையா?" என்று யாமினி ருக்மணியைக் கேட்க,
"ரொம்ப சந்தோஷம் யாமினி! இந்த சின்ன வயசிலயே இவ்ளோ தூரம் தீர்க்கமா யோசிச்சு நல்லது கெட்டது புரிஞ்சிக்கற! பாக்கவே சந்தோஷமா இருக்கு!" என்றவள் சிறிது இடைவெளி விட்டு சொன்னாள்,
"நீ சரியாதான் சொல்ற யாமினி! அவரோட வேதனைய நா பக்கத்தில இருந்து பாத்தவதான்! அதனாலதான் அவரோட எப்பவும் துணையா நின்னேன்! ஆனா... அந்த மனுஷன்..... அந்த மனுஷனாலதான் பத்மினிக்கு இப்டி ஆனதே..... அவரும் அவரோட அப்பா, தாத்தா மூணு பேர்தான் பத்மினி வாழ்க்கை சீரழிஞ்சி போனதுக்கு முக்கிய காரணம்...." என்று கோபமாகச் சொன்னாள்!
யாமினி அதிர்ச்சியாகப் பார்க்க, வாசுவும் மற்றவர்களும் வேதனையுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்!
"ஏம்மா இப்டிலாம் சொல்றீங்க... அவருக்கு தங்கை மேல எவ்ளோ பாசம் இருந்துச்சு...." என்று கேட்டாள் யாமினி.
"ஆமா யாமினி! பாசம் இருந்துச்சுதான்... இல்லங்கல.... ஆனா..... ஆனா.... வெறும் பாசம் மட்டும் போறுமா யாமினி...... கண்மூடித்தனமான பாசம் மட்டுமே ஒரு பொண்ண காப்பாத்த முடியுமா? இவா பண்ணின தப்பு, அந்தக் குழந்தை வாழ்க்கைல மண்ணள்ளிப் போட்டுடுத்து...."
"அம்மா அப்டிலாம்......."
"இரு யாமினி! இவ்ளோ நேரம் நீ சொன்னத நாங்க கேட்டோம்ல.... இப்ப நா சொல்றத நீ முழுசா கேளு....." என்றவள் தொடர்ந்து பேசினாள்.
"எங்க வீட்டு ஆம்பளைங்களுக்கு என்னிக்குமே பொம்பளங்களை மதிக்கத் தெரியாது! பொம்பளைங்க எல்லாம் இவாளப் பொறுத்த வரைக்கும் கைல வெச்சி வெளையாடற பொம்மைகள்! இவா சந்தோஷமா இருக்கறப்ப பொம்மை மாதிரி அலங்காரம் பண்ணிப் பாப்பா... இவாளுக்கு கோவம் வரச்சே மொத்தக் கோவத்தையும் அந்த பொம்மைகள் மேல காட்டுவா... பெண்களுக்கும் மனசிருக்கு; அவாளுக்கும் உணர்வுகள் இருக்கு; வலி இருக்கு; வேதனை இருக்குன்னு என்னிக்குமே புரிஞ்சுக்க மாட்டா; அப்டியே புரிஞ்சுண்டாலும் அது அவாளுக்கு ஒரு பெரிய விஷயமே இல்ல!
அதே மாதிரி பொம்பளைங்க மேல நம்பிக்கையும் கிடையாது! நம்பிக்கைன்னா, பொம்பளைங்களோட டேலண்ட்ஸ் (talents) மேல, அவங்களோட கேபாசிட்டி (capacity) மேல எந்த நம்பிக்கையும் கிடையாது! பொம்பளைங்களால எந்த பிரச்சனையையும் சால்வ் பண்ண முடியும்ங்கற நம்பிக்கை எங்காத்து ஆம்பிளைங்களுக்கு கிடையாது! அவாளப் பொறுத்த வரைக்கும் பொம்பளைங்களுக்கு சமைக்கவும் சாப்பிடவும் அழகா உடுத்திகிட்டு மினுக்கவும் மட்டும்தான் தெரியும்; மத்தபடி பொம்பளைங்களுக்கு மூளையே கிடையாதுன்னுதான் எப்பவுமே நெனப்பா.
வீட்டு வேலை தவிர மற்ற வெளி வேலை எல்லாத்தையும் நாம சரியா செஞ்சாலும் அதப்பத்தி நூறு கேள்வி கேட்டு, இல்லல்ல.... நோக்கு இதல்லாம் தெரியாது! விடு நா பாத்துக்கறேன்... அப்டீன்னுதான் சொல்வா....