Annapurani Dhandapani
மண்டலாதிபதி
இது இருளல்ல!
26.
பாஸ்கர் மாமா மிகவும் சீரியஸாக இருப்பதாக ஆகாஷ் வாசுவிடம் தெரிவிக்க, அனைவரும் அரக்கப் பரக்க மருத்துவமனைக்கு விரைந்தனர்!
அங்கே மாமா மூச்சுக்குத் திணறிக் கொண்டிருக்க, பத்மினி.... வாசூ.... என்று முனகியபடியே இருந்தவரைக் கண்டு ருக்மணி கண்ணீர் சிந்தினாள்.
கடவுளே..... இவரோட வேதனைய இப்பவாவது குறைக்க வழி செய்ய மாட்டியா? என்று மனதுக்குள் புலம்பினாள்!
என்னதான் எல்லாருக்கும் பாஸ்கர் மாமாவின் மீது கோபமிருந்தாலும் அவர் அவஸ்த்தைப்படுவதை அவர்களால் பார்த்துக் கொண்டிருக்கவும் முடியவில்லை!
வாசு தன் மாமாவின் கைகளை மெதுவாகப் பற்றிக் கொண்டு அவரருகில் அமர்ந்தான்!
"மாமா! என்ன மன்னிச்சிடுங்க! உங்ககிட்ட நா ரொம்ப கோவமா பேசிட்டேன்.... அப்டி பேசியிருக்கக் கூடாதுதான்.... என்ன மன்னிச்சிடுங்க மாமா.... உங்க சொந்த புள்ளைன்னு நெனச்சி என்ன மன்னிச்சிடுங்க...." என்று கூறி அவன் கண்ணீர் சிந்த, இவனுடைய குரல் அவரை எட்டியதோ என எண்ணும்படி அவர் மெதுவாகக் கண் விழித்து அவனைப் பார்த்தார்!
அவனைப் பார்த்ததும் அவருடைய மூச்சு சீராகத் தொடங்கியது! ரத்த அழுத்தமும் இதயத் துடிப்பும் சரியாக இயங்கத் தொடங்கியது!
"மாமா..... உங்களுக்கு ஒண்ணுல்ல மாமா..... எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்.... சீக்கிரமே.... நம்ம வீட்டுக்கு போவோம்....." என்றான்.
மாமா அவனைப் பார்த்து மெதுவாகக் கேட்டார்!
"நா வீட்டுக்கு வரேன்...... ஆனா என் பொண்ணுதான் உன் பொண்டாட்டி.... சரியா....." என்றார்!
வாசுவுக்கு வந்ததே கோபம்!
"யோவ்... யோவ்.... என் வாயில நல்லா வருதுய்யா....." என்று கத்தத் தொடங்க,
ருக்மணி மாமியும் சௌமியும் தலையில் அடித்துக் கொண்டனர்!
சௌமி, "ஏம்மா... ஏம்மா, இந்தப்பா என் வாழ்க்கையோட இப்டி விளையாடறார்.... நா என்னம்மா பாவம் பண்ணினேன்...." என்று கண்ணீருடன் கேட்டாள்!
"இந்த மனுஷன் திருந்தவே மாட்டார்டீ!" என்று ருக்மணி மாமி கோபமாகச் சொன்னாள்.
"மாமா... ஏதோ போனாப் போகட்டும்! வயசனவராச்சேன்னு பாத்தா.... என்ன ஓவரா பண்றீங்க..." என்று ஐஷு மாமாவை அதட்டினாள்!
"அடிப்போடீ...." என்று மாமா அவளிடம் முகம் திருப்பினார்!
ஆகாஷுக்கும் ரொம்ப கோபமாய் வர, அவன் தன் கோபத்தை, அவருக்குப் போடும் ஊசியில் காட்டினான்!
ஆ..... என்று கத்தினார் மாமா!
"அடேய்.... ஊசி போட்டு என்ன கொன்னுடாதடா..... எனக்கு முடிக்க வேண்டிய முக்கியமான வேலை இன்னும் பாக்கியிருக்கு....." என்றார் மாமா!
உன்ன முடிக்கறதுதான் என் வேலை கிழவா! என்று ஆகாஷ் தன் மனதுக்குள் எண்ணிக்கொண்டான்!
"சொல்லு வாசு.... என் பொண்ணுதான் உன் பொண்டாட்டி.... சரீன்னு சொல்லு....." என்று திரும்பவும் மாமா நச்சரிக்க, இப்போது யாமினிக்குமே பாஸ்கர் மாமாவின் மீது கோபம் வந்தது!
"யாமினி! என்னமோ மாமாவுக்காக அவ்ளோ பரிஞ்சி பேசினியே.... பாத்தியா மாமாவோட லட்சணத்த...... இந்த மனுஷன் நல்லவரே கெடையாதுன்னு ஒவ்வொரு இடத்திலயும் நிரூபிச்சிகிட்டே இருக்கார் பார்!" என்றான் வாசு யாமினியிடம்!
"ஓஹோ.... ஏ பொண்ணு.... நீயும் இங்கதான் இருக்கியா.... வா... வா.... நீ தான் இங்க முக்கியமான ஆள்... நீயில்லாம என் வாசு கல்யாணம் நடக்காது.... எங்க கூடவே இருந்து வாசுவோட கல்யாணத்த முன்ன நின்னு நடத்தி குடுக்கணும்.... சரியா....." என்றார் யாமினியிடம்!
எல்லாருக்கும் மாமாவின் மீது வெறுப்பு வர, அனைவருமே அங்கிருந்து சென்றுவிட்டனர்!
"டேய்... வாசூ..... என் பொண்ணுதாண்டா உம்பொண்டாட்டி....." என்று கத்தினார் பாஸ்கர் மாமா! அப்படிக் கத்தியதால் அவருக்கு மூச்சு வாங்கியது!
இந்த கெழவன் இப்டி கத்தி கத்தியே சாகப் போறான் என்று நினைத்துக் கொண்டான் ஆகாஷ்!
ஆனால் விந்தையிலும் விந்தையாக இரண்டு தினங்களில் பூரண குணம் பெற்று வீடு வந்துவிட்டார் மாமா!
வீடு வந்தவரை யாரும் வரவேற்கத் தயாராக இல்லை! ஆனால் அவர் அதைப் பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளவேயில்லை!
எங்கோ வெளியில் போவதும் வருவதுமாக இருந்தார்! துணையாக கிருஷ்ணாவைக் கூட அவர் கூட்டிச் செல்லவில்லை! அந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமையன்று அதிகாலையிலேயே எழுந்து எல்லாரையும் எழுப்பி விட்டார்!
"ம்... இன்னும் என்ன தூக்கம்.... எல்லாரும் எழுந்திரிங்கோ.... ஆத்ல இன்னிக்கு முக்கியமா ஒரு பூஜையிருக்கு.... என் வாசுவுக்காக..... எல்லாரும் எழுந்து போய் குளிச்சிட்டு வாங்க.... சௌமி, ஐஷூ... ரெண்டு பேரும் என்ன வேடிக்கை பாக்கறேள்... வீட்ட நன்னா பெருக்கி துடைச்சி மாக்கோலம் போடுங்கோ... டீ.... ருக்மணீ..... வாசல்ல நன்னா பெரிசா படிக்கோலம் போடு..... ஹாங்... சொல்ல மறந்துட்டேன் பாரு.... நீ குளிச்சிட்டு வந்து மடிசார் கட்டிக்கோ.... புரியறதா.... வாசு, கிருஷ்ணா... எல்லாரும் ரெடியாகுங்கோ... ம்மா பவி.... நீ சமையல் ஒண்ணும் பண்ண வேண்டாம்... எல்லாம் நா கேட்ரிங்க்ல சொல்லியாச்சு..... ம்... ம்... போங்கோ... போங்கோ... குளிச்சி ரெடியாகி வாங்கோ... சாஸ்த்ரிகள் இப்ப வந்துடுவார்.... ஆங்... யாமினீ... நீயும் நன்னா தலைக்கு குளிச்சிட்டு நல்லதா ஒரு புடவை கட்டிண்டு ரெடியாகு...." என்று மூச்சு விடாமல் விரட்டினார்!
வாசு அசையாமல் அமர்ந்திருப்பதைக் கண்ட கிருஷ்ணா, அவனை சமாதானம் செய்து அனுப்பினார்!
"அப்பா... என்னப்பா... அவர்.... இப்டி பிஹேவ் பண்றார்...."
"என்ன மீறி உனக்கோ யாமினிக்கோ ஒரு கெடுதல் நடக்காது! நடக்கவும் விட மாட்டேன்! இது என் ப்ராமிஸ்! போ! போய் ரெடியாகு!" என்று கூறி அனுப்பினார்!
ஐஷுவும் சௌமியும் தங்கள் பங்குக்கு பிடிவாதம் பிடித்தனர்!
"இங்க பாரும்மா சௌமி! உங்கப்பா உனக்கு எந்தக் கெடுதலும் பண்ண மாட்டார்! அவர எனக்கு நல்லா தெரியும்! இருந்தாலும் இப்ப ஏன் இப்டி நடந்துக்கறான்னு எனக்குப் புரியல! உனக்கு நா ஒரே ஒரு வாக்குறுதி தரேன்! உன் விருப்பமில்லாம உன் கல்யாணம் நடக்காது! அதே மாதிரி வாசு, யாமினிக்கு எந்தக் கெடுதலும் நடக்க விடமாட்டேன்! சரியா? போய் குளிச்சிட்டு வா!" என்றார் கிருஷ்ணா!
சௌமியும் மெதுவாக எழுந்து குளிக்கச் சென்றாள்!
எல்லாரையும் இதைச் சொல்லியே சமாதானம் செய்து அனுப்பி தயாராகச் சொன்னார்!
அவர் சொல்படி அனைவரும் குளித்து தயாராகி வந்தனர்! மற்றவர்களிடம் கோலம் போடச் சொன்ன பாஸ்கர் மாமாவே வீட்டு வாசலில் பெரியதாக இல்லாமல் சின்னதாய் அழகாய் ஒரு படிக்கோலம் போட்டுடிருந்தார்! அது மட்டுமல்லாமல், சமையல் செய்யப் பயன் படுத்தும் ஜல்லிக் கரண்டியால் அரிசி மாவினால் வீட்டுக்குள்ளும் கோலம் வைத்து முடித்தார்! அவர் முடிக்கவும் சாஸ்த்திரிகள் வரவும் சரியாக இருந்தது!
பாஸ்கர் ருக்மணியை கைபிடித்து அழைத்துச் சென்று மனையில் அமர்த்தி வைத்து விட்டு அவளருகில் தானும் அமர்ந்து கொண்டார்!
யாமினியை தன்னருகில் அழைத்தார்!
சாஸ்த்திரிகளைப் பார்த்து கம்பீரமாய்க் கூறினார்!
"இங்க பாருங்கோ! இந்தப் பொண்ணு பேரு யாமினி! இவ தாய் தோப்பனார்ல்லாம் யாருன்னு தெரியாது...." என்று அவர் ஆரம்பித்தார்!
வாசுவுக்கு கண்கள் கோபத்தில் சிவந்தது! யாமினி வேதனையுடன் தலை குனிந்து நின்றிருந்தாள்!
பாஸ்கர் மாமா தொடர்ந்தார்!
"இவள நா என் பொண்ணா ஸ்வீகாரம் பண்ணிக்கப் போறேன்! நீங்க அத நல்லபடியா நடத்திக் குடுங்க!" என்றார்!
கேட்டிருந்த அனைவருமே இன்பமாய் அதிர, ருக்மணியின் கண்கள் ஆனந்தமாய் நிறைந்தது!
பாஸ்கர் மாமா, வாசுவைப் பார்த்து,
"என்ன வாசு! என்னோட இந்தப் பொண்ணு யாமினிதான் உன் பொண்டாட்டியா இருக்கணும்! எவளோ ஒரு அநாதையில்ல.... சரியா! டீல் ஓகேயா?" என்றார் கம்பீரம் குறையாத குரலில்!
"டபுள் ஓகே மாமா!" என்றபடியே கண்களில் கசியும் ஆனந்தக் கண்ணீருடன் ஓடி வந்து மாமாவின் அருகில் அமர்ந்து அவருடைய கையைப் பிடித்துக் கொள்ள, அவர் வாஞ்சையுடன் தன் மருமகனின் தலையைக் கோதிவிட்டார்!
"அப்பா! அதுக்காக என்ன இப்டி பயமுருத்தியிருக்க வேணாம்!" என்று சௌமி சொல்ல,
"பின்ன... பாஸ்கரன்னா எல்லாருக்கும் ஒரு பயம் வர வேணாமா...." என்று சொல்லி பெரிய குரலில் சிரித்தார் மாமா!
"ஆனா நா உங்களப் பாத்து பயப்பட மாட்டேன் மாமா!" என்று ஐஷூ நக்கலாகக் கூற,
"நீ மட்டும் விதிவிலக்குடீ.... ஏன்னா, நாந்தான் உனக்கு பொம்மையாச்சே... எங்கியாவது குழந்தைங்க பொம்மைய பாத்து பயப்படுமா.... உன்னோட செல்ல பொம்மை நாந்தான்... உண்மைய சொல்லணும்னா... நாந்தான் உன்னப் பாத்து பயப்படணும்....." என்று சிரித்தார் மாமா!
"ஆங்.... அந்த பயமிருக்கட்டும் மாமா....." என்று ஐஷு கெத்து காட்டினாள்!
பார்த்திருந்த பவதாரிணியும் கிருஷ்ணாவும் உடன் சேர்ந்து சிரித்தனர்!
யாமினி எதுவும் சொல்லத் தெரியாமல் பனித்த கண்களுடன் அதற்கு நேர் மாறாய் இதழ்களில் பூத்த புன்னகையுடன் ருக்மணி மாமியின் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்!
பாஸ்கர் மாமா யாமினியை தன் மகளாய் தத்து எடுத்துக் கொண்ட பின், தொடர்ந்து வரும் சுப முஹூர்த்த தினத்தில் மயிலை கபாலீஸ்வர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அந்த கற்பகாம்பாளின் முன்னிலையில் வாசுவுக்கும் யாமினிக்கும் ஒரு தோஷ நிவர்த்தி போல திரும்பவும் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது!
கிருஷ்ணாவும் பவதாரிணியும் கல்யாண ஏற்பாட்டை கவனித்தனர்!
வாசுவின் தங்கைகள் இருவரும் லெஹங்காதான் வேண்டுமென்று அடம்பிடித்தனர்! அவர்கள் விருப்பப்பட்டதை பாஸ்கர் மாமா பெரிய மனதோடு வாங்கித் தர, இளையவர்கள் இருவரும் மயக்கம் போடாத குறையாய் மகிழ்ந்தனர்! அதற்கு மேல் ருக்மணி மாமிக்கு பிடித்த புடவையை பிடித்த நிறத்தில் அவர் தேர்ந்தெடுத்த போது மாமி, ஆ.... வென்று வாய் பிளந்து ஆச்சர்யம் காட்டினாள்!
"என்னடீ.... உங்கப்பா.... இப்டி மாறிட்டாரு....." என்று சந்தோஷமாய் சொல்லிக் கொண்டாள்!
"ஒனக்கு என்ன பிடிக்கும்னு எனக்கும் தெரியும் ருக்கு.... வா..." என்று அவளுடைய கை பிடித்து நகைக் கடைக்கு அழைத்துச் சென்ற மாமாவை,
"ஐயோ... விடுங்கோ... எல்லாரும் நம்மளையே பாக்கறா...." என்று செல்லமாக கோபமும் பட்டாள்!
"எவன் பாக்கறான்... எம் பொண்டாட்டி கைய நா புடிக்கறேன்... எவனாவது எதாவது கேள்வி கேட்டா.... அவன் வாய் மேலயே போடுவேன்..." என்றார் மாமா!
ருக்மணி சிரித்தபடி அவருடன் நடந்தாள்!
திருமணத்துக்குத் தேவையான தாலிக் கொடி, திருமாங்கல்யாம், மற்றும் யாமினிக்கு நகைகள் என்று வாங்கிய பாஸ்கர் மாமா, ஐஷுவுக்கும் சௌமிக்கும் சேர்த்தே வாங்கினார்! அதே நேரத்தில் ருக்மணிக்குப் பிடித்த நகைக் கலெக்ஷனை வாங்கவும் அவர் தவறவில்லை!
ருக்மணி தன் கண்களை அகல விரித்து அதிசயமாய்ப் பார்க்க,
"நாம ரெண்டு பேரும் எவ்வளவோ சந்தோஷமா இருந்திருக்கணும்.... சாரி... இனி மேலாவது உன் மனசுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்க முயற்சி பண்றேன்!" என்று கூறி தன் மனைவியை அழைத்துச் சென்றார் மாமா! ருக்மணி பல காலத்துக்குப்பின் மகிழ்ச்சியாய் உணர்ந்தாள்!
யாமினிக்கு பிடித்த மாதிரி பட்டுப் புடவையை வாசு வாங்கித் தர, அதற்காக டிசைனர் ப்ளவுஸை அவளே தன் கையால் அலங்கரிக்க, அவளுடைய கையில் மற்றவர்கள் மருதாணியிட்டு அலங்கரித்தனர்!