Paadhellam panitu Vasu ku paatu kekudho?"பவி... எவ்வளவு நேரம் இப்படியே உட்காந்திருப்ப? வந்து படு..." என்று தோரணையாக கூறினான் வாசுதேவன்.
பவித்ரா வாசுதேவனைக் கூர்மையாக பார்க்க, வாசுதேவனின் கண்களில் குறும்பு மின்னியது.
அப்பொழுது காற்று வேகமாக வீச, ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்த காற்று அவர்களை தீண்ட பவித்ராவின் உடல் குளிரில் நடுங்கியது.
"என்னைத் தொடும் தென்றல் உன்னைத் தொடவில்லையா?
என்னைச் சுடும் காதல் உன்னைச் சுடவில்லையா?"
என்று வாசுதேவன் ஏக்கமாகப் பாட, பவித்ரா அவனை மௌனமாய் பார்த்தாள்.
"கடலா புயலா இடியா மழையா
என்னை ஒண்ணும் செய்யாதடி...
ஆனால் உந்தன் மௌனம் மட்டும்
ஏதோ செய்யுதடி, என்னை ஏதோ செய்யுதடி... "
என்று வாசுதேவன் பவித்ராவை சமாதானம் செய்ய, பவித்ரா அவனை யோசனையாக பார்த்தாள்.
'காலையில் இருந்து கல்யாணத்தில் அவ்வளவு வேலை பார்த்தாங்க... நான் உனக்காகத் தானே பார்த்தேன்னு சொல்லலாம்... ஆனால் சொல்லி காட்ட மாட்டாங்க... என் அத்தான்...' என்று பவித்ராவின் மனம் தன்னவனுக்காக அவளிடமே வாதாடியது.
ஒருவர் தவறு செய்யும் பொழுது, அவர்கள் செய்த நல்லதை எண்ணி பார்க்கும் உயரிய குணம் நம்மில் எத்தனை பேரிடம் இருக்கிறது?
பவித்ரா உயர்ந்த குணம் படைத்தவள். வாசுதேவனும் அவளுக்குச் சளைத்தவன் இல்லை என்பதே பவித்ராவின் எண்ணம்... சூழ்நிலை தானே நம்மை நகர்த்திச் செல்கிறது.
தன் மௌனத்தை கைவிட்டு,"நாளைக்கு மறுவீட்டுக்கு வரணும்..." என்று பவித்ரா பிடிவாதமாக கூற, "நாளைக்கி பிரச்சனையை நாளைக்கி பார்ப்போம்... பழைய கதை பேசுவோம்..." என்று கூறி பவித்ரா சமாதானமாக பேசிவிட்ட சந்தோஷத்தில், உற்சாகமாக அவள் முன் சம்மணமிட்டு அமர்ந்தான் வாசுதேவன்.
"ஆக... நீங்க ஒரு வேளை என் கிட்ட சண்டை போட்டுட்டு உங்க வீட்டுக்கு போய்ட்டா... உங்க தங்கை வாழ்க்கைக்குப் பிரச்சனை ஆகிருமோன்னு தான் வேறு வழி இல்லாமல்... என்னைப் பிடிக்காமல்... என்னைப் பார்க்க வெறுப்பா இருந்தாலும்.... என்னை சகிச்சிட்டு நீங்க இங்க பொறுமையா இருக்கீக...” என்று கேலி போல் கூறினான் வாசுதேவன்.
"நான் கூட என் பொஞ்சாதி இந்த அத்தான் மேலுள்ள ஆசையில் தான் பட்டணத்தை விட்டுட்டு இந்த கிராமத்தில் இருக்கானு நினைச்சிட்டு இருக்கேன்... இனி நீங்க இங்கன இருக்கணுமுன்னு அவசியமில்லை... தோது படலைனா கிளம்பிரலாம்... அப்படித் தானே?" என்று வாசுதேவன் பவித்ராவின் கண்களைப் பார்த்த படி கேள்வியாக நிறுத்தினான்.
வாசுதேவனின் குரலில் கேலி இருந்தாலும், அவன் கண்களில் வலி இருந்தது.
வாசுதேவனின் கண்களை பார்ப்பதைத் தவிர்த்து, "அத்தான்... நான் ஏதோ கோபத்தில் ஒரு வார்த்தை சொன்னா... நீங்க நாலு வார்த்தையா இட்டுக் கட்டி பேசுறீங்க..." என்று கூறி பவித்ரா தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
"நான் மண்டபத்தில் உன்னை வையக்கூட இல்ல... ஏதோ ஒரு வார்த்தை கோபத்தில் ஒரு தடவை சொல்லிட்டேன்... நீ வால் வால்ன்னு நாலு தடவை சொல்லலை..." என்று வாசுதேவன் பிடிவாதமாக கேட்டான்.
"எனக்கு உண்மையில் உங்க கூட சண்டை போடற தெம்பில்லை... காலையிலிருந்து பயங்கர வேலை... சாயங்காலம் பயங்கர மன உளைச்சல்... என்னைத் தூங்க விடுறீங்களா..." என்று கூறி பவித்ரா வாசுதேவனையும் மனதில் கொண்டு, சுவரோரமாக விரிக்கப்பட்ட பாயில் படுத்தாள்.
சில நிமிடங்களில் கண்ணுறங்கினாள் பவித்ரா.
'சோர்வா தெரியுறா... காலையில் இருந்து இவ உட்காரவே இல்லை..." என்றெண்ணி தன் இடது கையை தலைக்கு அண்டைக் கொடுத்து, பவித்ராவை பார்த்தபடி அவள் அருகே படுத்திருந்தான் வாசுதேவன்.
ஜன்னல் வழியாக வந்த நிலவொளியில் பவித்ராவின் முகம் ஜொலித்தது.
ஆனால் அவள் முகத்தில் அழுததற்கான கண்ணீர் ரேகைகள்...
வாசுதேவன் அவள் தலையை அன்பாய் அரவணைப்பாக கோதினான்.
"எனக்காக இன்னக்கி நீங்க மணமேடைக்கு வந்திருக்கலாம் அத்தான்..." தூக்கத்தில் முணுமுணுத்தாள் பவித்ரா.
"இது இவ்வளவு பெரிய விஷயமுன்னு நான் நினைக்கலை டீ... வரலைனா விட வேண்டியதுதானே... நீ ஏன் பிடிவாதம் பிடிக்கறன்னு தான் தோணுச்சு..." வாசுதேவனின் குரல் அந்த அறையில் உடைந்து ஒலித்தது.
பவித்ரா வாசுதேவனின் கைவளைவில், ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றிருந்தாள்.
வாசுதேவன் தூக்கம் வராமல் விட்டத்தைப் பார்த்து படுத்திருக்க, இதே தோட்டத்து அறையில், அவனும் சந்துருவும் அடித்த கோட்டம் நினைவு வந்து பாடாய் படுத்தியது. மறைந்திருந்த சந்துருவின் நினைவுகள் பல நாட்களுக்குப் பின் இன்று விஸ்வரூபம் எடுத்தது. அதைப் பின்னுக்கு தள்ளி, 'யார் மனதையும் புண்படுத்தாமல் நாளைய பொழுதை எப்படிச் சமாளிப்பது?' என்று சிந்தித்தான் வாசுதேவன்.
உரலுக்கு ஒரு பக்கம் இடி...
மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி...
இதுவே வாசுதேவனின் கதி
இதைச் சரி செய்யுமா விதி....
என்ற புலம்பலோடு நாம் புதுமண தம்பதியரை நோக்கிப் பயணிப்போம்.
ஆவுடையப்பன் வீட்டில், தோட்டத்தில் செல்வி கலங்கிய கண்களோடு அமர்ந்திருந்தார்.
"என்ன செல்வி... ஏன் ஒரு மாதிரி இருக்க?" என்று ஆவுடையப்பன் கேட்க, "இல்லை... வீடே ரொம்ப வெறிச்சோடி இருக்கு..." என்று கண்கலங்க கூறினார் செல்வி.
"ம்..." தலை அசைத்தார் ஆவுடையப்பன்.
"பவித்ராவுக்கும் மாப்பிள்ளைக்கும் ஏதோ சண்டை..." என்று செல்வி கம்மலான குரலில் கூறினார் செல்வி.
"ம்... பார்த்தேன்... எந்தப் புருஷன் பொஞ்சாதி சண்டை இல்லாம இருக்காங்க? உனக்கும் எனக்கும் சண்டை வந்ததில்லையா?" என்று கேள்வியாக நிறுத்தினார் ஆவுடையப்பன்.
"மாப்பிள்ளை வெளி இடத்தில் எல்லாரும் பாக்குற மாதிரி கோவப்பட்டிருக்க வேண்டாம்... இப்படி நம்ம பொண்ணு கண் கலங்குற அளவுக்கு..." என்று செல்வி சற்று மனத்தாங்கலோடு கூற, "மாப்பிள்ளை நல்லவர் தான்... கொஞ்சம் அவுக அம்மா மேல் பாசம் ஜாஸ்த்தி..." என்று மெல்லிய புன்னகையோடு கூறினார் ஆவுடையப்பன்.
"ம்..." என்று செல்வி மெலிதான குரலில் கூற, "ரொம்ப யோசிக்காத... இந்நேரம் உம்பெண்ணை சமாதானம் செய்திருப்பார்..." என்று வாசுதேவனின் மீதுள்ள நம்பிக்கையில் கூறினார் ஆவுடையப்பன்.
"நாளைக்கி சரியா வந்திருவாங்கல்ல?" என்று செல்வி பதட்டத்தோடு கேட்க, "அதெல்லாம் பவித்ரா கூட்டிட்டு வந்திருவா..." என்று தன் மனதில் சில குழப்பம் இருந்தாலும் அதை மறைத்து தன் மனைவியை சமாதானப் படுத்தினார் ஆவுடையப்பன்.
தலை அசைத்த செல்வி, "நந்தினி வாழ்க்கை எப்படி இருக்குமோ?" என்று அவர் யோசனையாகக் கூற, ஆவுடையப்பன் சிரித்துக் கொண்டார்.
"அது சரி... என் பொழப்பு உங்களுக்குச் சிரிப்பா சிரிக்குதா?" என்று தன் மகள்கள் இல்லாத கடுப்பை தன் கணவன் மீது காட்டியபடி வீட்டுக்குள் சென்றார் செல்வி. ஆவுடையப்பனும் உள்ளே செல்ல, உறவினர்களின் சத்தம் எங்கும் கேட்டுக் கொண்டிருந்தது.
அவர்கள் பேச்சில், நந்தினி ராம் பிரசாத் இங்கு இருப்பது நமக்குத் தெரிகிறது.
நந்தினி எந்தவித ஒப்பனையுமின்றி அழகாக இருந்தாள். ராம் பிரசாத் ஜன்னல் வழியாக வானத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.
நந்தினி, தன் பெட்டியின் மேல் பகுதியில் ராம் பிரசாதுக்குச் செய்திருந்த ரோபட் பொம்மை கொண்ட Gift box யை கையில் எடுக்க, "நான் உங்க கிட்ட பேசணும்..." என்று ராம் பிரசாத் எங்கோ பார்த்தபடி கூறினான்.
"உங்க..." என்ற சொல்லில் இருந்த விலகலை உணர்ந்த நந்தினி, அந்தப் பொம்மையை வெளியே எடுக்கவில்லை.
ராம் பிரசாத் தன் ஒட்டு மொத்த தைரியத்தையும் திரட்டி… நந்தினியின் முகம் பார்ப்பதை தவிர்த்து, வைஷ்ணவி சம்பந்தப்பட்ட மொத்த விஷயத்தையும் கூறி முடித்தான்.
பெட்டியின் மேல் பகுதியில் இருந்த பொம்மையை, ஒரு பையில் சுருட்டி, பெட்டியின் கீழ் பகுதிக்குச் செல்லுமாறு அழுத்தினாள் நந்தினி.
சிறு இடைவெளிக்குப் பின், "ஆக, பெயரில் தான் ராம்... செயலில் இல்லைன்னு சொல்லுங்க..." என்று ஏளன நகையோடு நந்தினி கூற, அத்தனை நேரம் இருந்த குற்ற உணர்ச்சி மறைந்து நந்தினியின் நக்கலான கேள்வியில் கோபம் மேலோங்க, அவளை முறைத்துப் பார்த்தான் ராம் பிரசாத்.
இரண்டல்ல ஒன்று இணையாக பயணிக்கும்…
Next episode on Wednesday friends....