காதல் கடன்
(11)
ராதிகா தன்னருகில் வந்து அமர்ந்துகொண்டதை அறிந்தாலும், அவள் பக்கம் திரும்பிப் பார்க்காமல், இதழ்களில் லேசான புன்னகையுடன் காரைக் கிளப்பினான் பரத்...
முதல்முறையாக எந்தவிதமான குழப்பங்களின் தாக்கமும் இல்லாமல் காருக்குள் ஒரு இதமான அமைதி சூழ்ந்தது. என்ன பேசுவது என்று தெரியாததால் எதுவுமே பேசிக்கொள்ளவும் முயற்சிக்கவும் இல்லை இருவரும். இருவர் மனத்திலும் ஒரு இனம்புரியாத குறுகுறுப்பு. ஆனாலும் அமைதியாகவே கடந்துகொண்டிருந்தது அந்தப் பயணம்.
திடீரென்று, “அப்பறமா சாப்பிடறேன்னு சொன்னாரே...என்ன சாப்பிட்டார்ன்னு தெரியலையே?” என்று நினைத்தவள், அதைக் கேட்க அவனை நோக்கித் திரும்பியவளைப் பார்த்து, “நான் அத்திம்பேரோட கிச்சன்லையே சாப்பிட்டுட்டேன்,” என்று பதிலளிக்க...தன் மனதில் தோன்றிய கேள்விக்கு இவன் எப்படி பதிலளிக்கிறான் என்ற வியப்போடு கண்கள் விரிய அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
“உங்களுக்கு மைன்ட் ரீடிங் தெரியுமா? எப்படி நான் நினைச்சதுக்கு நீங்க பதில் சொல்றேள்?” என்று வியப்பு மாறாமலேயே ராதிகா கேட்க...அதைக் கேட்டு வெடித்துச் சிரித்தவன்...”அதெல்லாம் ஒண்ணும் இல்லை, என்னவோ நீ அதைத்தான் கேக்கப்போறேன்னு தோணித்து, அதான் பதில் சொன்னேன்” என்று சாலையிலிருந்து விழியகற்றாமல் அவளுக்கு பதிலளித்தான்.
ஆனாலும் ராதிகா வியப்பாகவே அவனைப் பார்த்துக்கொண்டிருக்க...(கள்ளிடி நீ ராதிகா...நீ வியப்பா எல்லாம் ஒண்ணும் பாக்கலைடி...இதுதான் சான்ஸ்னு என்னோட ஹீரோவ சைட் அடிக்கற அவ்வளவுதான்...)பரத்தும் திரும்பி அவள் விழிகளைச் சந்தித்தான்...மீண்டும் ஒருமுறை அவனுடைய பார்வை வீச்சால் தாக்கப்பட்டவள்... “அப்பாடி, என்ன பார்வை பாக்கறார்...அப்படியே முழுங்கறா மாதிரி...”என்று நினைத்தபடி தனது பார்வையை விலக்கிக்கொள்ள முயல, “மனுஷாள முழுங்கற பழக்கமெல்லாம் நேக்கு இல்லை...” என்று கூறினான் பரத் குறும்பாகப் புன்னகைத்தபடி.
அவனுடைய பதிலில் திகைத்தவள்...முகம் சிவந்து முகத்தை ஜன்னல் பக்கமாகத் திருப்பிக் கொண்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்...இல்லை இல்லை, வேடிக்கை பார்ப்பதுபோல நடிக்க ஆரம்பித்தாள். “எப்பிடி நான் நினைக்கிறதுக்கெல்லாம் இவர் பதில் சொல்றார்? ஒருவேளை மனசுல நினைக்கிறதா நெனைச்சுண்டு சத்தமா பேசிட்டோமோ? என்று அவள் மனதுக்குள் தனக்குத் தானே கேட்டுக்கொள்ள...”இல்லை இல்லை, நீ சத்தமால்லாம் பேசலை...” என்று அதற்கும் பதிலளித்தான் பரத்.
அதற்கு மேல் அவன் பக்கம் திரும்பிப் பார்க்கும் தைரியம் ராதிகாவுக்கு வருமா என்ன? இன்னும் நன்றாக ஜன்னல் பக்கமாகத் திரும்பி உட்கார்ந்துகொண்டு நிஜமாகவே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
காரில் மீண்டும் அமைதி சூழ்ந்துகொள்ள...இப்பொழுது ராதிகாவைப் பார்க்கும் முறை பரத்துடையதானது.
பின்னலை வலதுபக்கம் முன்னால் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தாள் ராதிகா. அவளே அறியாமல் அவளுடைய கை விரல்கள் ஜடை நுனியில் இருந்த கூந்தலை அளைந்தபடி இருந்தது. மருதாணி சிவப்பேறிய நீண்ட வெண்டைப்பிஞ்சு விரல்களில் அடர்த்தியான பிங்க் நிறத்தில் நெயில்பாலிஷ் போட்டிருந்தாள். மூக்கின் வலது பக்கத்தில் போட்டிருந்த வைர மூக்குத்தி கடந்து சென்ற வண்டிகளின் ஒளியைப் பிரதிபலித்து மின்னியது. ஏசி போடாமல் ஜன்னலைத் திறந்து வைத்திருந்ததால் அடித்த காற்றில் அவளுடைய பிரெஞ்சு பின்னலில் இருந்து சில கூந்தல் கற்றைகள் விடுபட்டு அவள் கன்னங்களில் நடனமாடிக்கொண்டிருந்தன. கன்னம் வருடிய கூந்தலால் கூச்சம் ஏற்பட அவற்றை எத்தனை முறை காதுக்குபின்னால் ஒதுக்கி அடக்க முயன்றாலும் முடியாமல் தோற்றுக்கொண்டிருந்தாள். அவளுடைய இந்த முயற்சியில் காதில் அணிந்திருந்த ஜிமிக்கி ராதிகாவின் கைபட்டு லேசாக அசைந்துகொண்டிருந்தது...
காற்றுடனான இந்த ஸ்ருங்கார நாடகத்தை சுவாரசியமாக ரசித்துக் கொண்டிருந்த பரத்தின் பார்வை, அப்பளிங்குக் கன்னத்தில் வழுக்கி பொன்சங்குக் கழுத்தில் இறங்க...மிடறு விழுங்கினாள் போலும்...அதனால் ஏற்பட்ட லேசான அசைவில் கழுத்தில் நகர்ந்த அந்தப் பச்சை நரம்பு உன்மத்தமேற்ற... அதற்கும் கீழிறங்கத் தாவிய பரத்தின் மனம்...காருக்கு அருகில் ஹார்ன் அடித்தபடி விரைந்து சென்ற வாகனத்தின் சப்தத்தால் தன்னிலைக்கு வந்தது...
“என்ன பண்ணிண்டு இருக்கே பரத்...பிஹேவ் யுவர்செல்வ்ஸ்” என்று தன்னைத்தானே சாடிகொண்டவன் கைகள் ஸ்டியரிங்கில் இறுக...மனதைக் கட்டுப்படுத்தி கார் ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.
அறிமுகமற்ற பெண்ணிடம் அத்துமீறியது போன்ற குற்றஉணர்வு தோன்ற, தன்மீது தனக்கே உண்டான கோபத்தை அடக்கமாட்டாமல் அதைக் காரின் வேகத்தில் வெளிப்படுத்தினான் பரத்.
திடீரென்று கார் வேகமேடுத்ததை உணர்ந்த ராதிகா, என்னவாயிற்று என்பதுபோல் திரும்பி பரத்தைப் பார்க்க, அவனுடைய இறுகிய கடுமையான முகம் “தள்ளி நில்” என்று அவளிடம் கூறாமல் கூற... எதுவும் பேசாமல் அமைதியாகிப்போனாள். ஒரு இனம்புரியாத கலக்கம் வந்து மனதில் கல்லாய் உட்கார்ந்துகொண்டது.
இதே இறுக்கத்துடன் வீடு வந்து சேர, காரை நிறுத்திய பரத், வேகமாக இறங்கி, அவளுக்காகக் காத்திருக்காமல் விடுவிடுவென்று வீட்டிற்குள் சென்றுவிட்டான். ராதிகாவும் வெளியில் எதுவும் காட்டிக்கொள்ளாமல், மற்றவர்களுடன் இணைந்து உள்ளே சென்றாள்.
எங்கும் நிற்காமல் மாடியேறிய பரத், திரும்பி இறங்கி வந்து ராதிகவுடன் வந்துகொண்டிருந்த பர்வதத்தைப் பார்த்து, “அம்மா, லேசா தலை வலிக்கறாப்ல இருக்கு, ஒரு கப் காபி மட்டும் குடுக்கமுடியுமா?” என்று கேட்டான்.
“என்னடா பரத், மணி பத்தரையாறது, இப்போ போயி யாராவது காபி குடிப்பாளா? பேசாம கொஞ்சம் அமுர்தாஞ்சனத்தை தடவிண்டு படுத்துக்கோ சரியாயிடும்...”என்று அவர் கூற, தலையை இருவிரல்களால் தேய்த்தபடி, “இல்லைம்மா, கொஞ்சம் வேலையிருக்கு, தலைவலியோட செய்யமுடியாது, விடுங்கோ, நானே போட்டுக்கறேன்,” என்று சமையலறையை நோக்கிச் செல்ல எத்தனிக்க... “அதெல்லாம் வேண்டாம், நீ போ நான் போட்டு குடுத்தனுப்பறேன்,” என்று அவனை அனுப்பிவைத்தார்.
“நீங்க இருங்கோம்மா, நான் போட்டுக் குடுக்கிறேன், எவ்வளவு சக்கரைன்னு மட்டும் சொல்லுங்கோ?” என்று கேட்ட இளைய மருமகளை அன்பாய்ப் பார்த்த பர்வதம், “ரெண்டு ஸ்பூன் சக்கரை போடு ராதும்மா, கார்த்தால நாம சாப்டோமே அதைவிட கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கணும் அவனுக்கு...” என்றார்.
சமையலறைக்குச் சென்ற ராதிகா, புதிதாய் டிகாக்ஷன் போட்டு, ப்ரிட்ஜிலிருந்து பாலை எடுத்து காய்ச்சி, இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து, ஒரு ஸ்ட்ராங் காபியைக் கலந்தவள், மாலையில் பரத்திற்கு காபி கொண்டு சென்ற இன்சுலேட்டட் கப்பில் அதை ஊற்றி மூடியிட்டு பரத்தின் அலுவலக அறைக்குக் கொண்டுசென்றாள்.
அறைக்குள் நுழையுபோதே மாலையில் பரத் தன்னிடம் செய்த வம்பு நினைவுக்கு வர...அதை நினைத்துப் புன்னகைத்துக்கொண்டே அறைக்குள் நுழைந்தவளை இருட்டே வரவேற்றது. “எங்க இவரைக் காணோம், வேலையிருக்குன்னா இங்கதானே வந்திருக்கணும், இல்லைன்னா ரூமுக்குப் போயிட்டாரா?’ என்று நினைத்து திரும்பப் போனவளின் பார்வை அதற்குள் அந்த இருளிற்குப் பழகியிருக்க, பிரெஞ்சு விண்டோவின் அருகில் நின்று வெளியே வெறித்துக்கொண்டிருந்த பரத்தின் மீது விழுந்தது.
இருளில் அவனுடைய முகத்தில் இருந்த உணர்ச்சிகள் தெரியாவிட்டாலும், அவன் நின்றிருந்த விதத்திலேயே அவனுடைய ஒதுக்கமும், விலகலும் தெள்ளத் தெளிவாகப் புரிய...ஏதோ ஒன்று உடைந்தது போல் இருந்தது ராதிகவினுள்.
“காபி” என்ற ராதிகாவின் மெல்லிய குரல் பரத்தின் சிந்தனையைக் கலைத்தது. தலைவலியினாலோ அல்லது மண்டையைக் குடைந்த எண்ணங்களின் தாக்கத்தாலோ, பரத்தின் கை தன்னிச்சையாக நெற்றியைத் தேய்த்துக்கொண்டது. மெதுவாக வந்து காபியை வாங்கிக்கொண்டவன், “தேங்க்ஸ்” என்று கூறிவிட்டு திரும்பிச் சென்று ஜன்னலருகிலேயே நின்றுகொண்டு காபியைக் குடிக்கலானான்.
“ம்ம்...தலைவலி ஜாஸ்தியா இருந்தா ஒரு மாத்திரை வேண்ணா போட்டுக்கறேளா?” என்று கேட்டவளைப் பார்த்து, “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம், காபியே போறும், மறுபடியும் தேங்கஸ், குட் நைட்” என்று கூறிவிட்டு திரும்பிக்கொண்டான். இதற்குமேல் தனக்கிங்கு வேலையில்லை என்று உணர்ந்த ராதிகா, மெளனமாக அங்கிருந்து வெளியேறினாள்.
அவள் வெளியே செல்லத் திரும்பியதும் அவளை நோக்கித் திரும்பிய பரத், ராதிகா விட்டுச்சென்ற வெற்றிடத்தையே வெறித்தபடி நின்றிருந்தான்.