காதல் கடன்
(12)
வாசலில் அவளை அழைத்துச் செல்ல ஒரு கருப்பு நிற ரோல்ஸ் ராய்ஸ் நின்றிருந்தது. ராதிகா அதில் ஏறியதும் ஆவலுடன் துளசியும் பானுவும் ஏறிக்கொள்ள அரவிந்த் காரை ஓட்டிக்கொண்டு விழா நடக்கும் இடத்தின் வாயிலை வந்தடைந்தான்.
துளசி மற்றும் பானுவின் உதவியோடு காரிலிருந்து இறங்கியவள் நுழைவாயிலில் செய்யப்பட்ட அலங்காரத்தைப் பார்த்து மெய்மறந்து நின்றுவிட்டாள்...
கொஞ்சமே பூத்திருந்த தாமரை போல வடிவமைக்கப்பட்டிருந்தது அந்த நுழைவாயில். வெளிப்புறத்தில் தங்க நிறத்திலும், உட்புறத்தில் பிங்க் நிறத்திலும் வேலைப்பாடுகள் செய்யப்பட்டு, தரை விளக்குகளும் ஃபோகஸ் விளக்குகளும் ஒளிர ஒரு தேவலோக அரண்மனைக்குள் நுழையும் ஒரு உணர்வைத் தந்தது. “வாசலே இப்படி இருந்தா உள்ள இன்னும் எப்பிடி இருக்கும் ராதுக்கா,” என்று அதிசயித்த பானுவுக்கும் பதிலளிக்க நா எழவில்லை, ராதிகாவிற்கு. பிடிமானம் வேண்டுமென்று தோன்றியதோ என்னவோ...பானுவின் கையை சிறிது கெட்டியாகவே பிடித்துக்கொண்டாள்.
வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்த மூவரையும் வரவேற்றது, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட நடைபாதை. பூச்சரங்களாலேயே கூரை போல் வேயப்பட்டு பக்கவாட்டுகளில் எல்லாம் பூச்சரங்கள் தொங்கவிடப்பட்ட பாதையில் மெதுவாக அடிமேலடியெடுத்து வைத்து நடந்தவளை அப்பாதையின் முடிவில் வரவேற்றார் ரோஜாப்பூப்பந்துகளுக்கு இடையே ஒய்யாரமாகப் படுத்திருந்த பிள்ளையார். கழுத்தில் வண்ணப் பூமாலையுடன் விளக்குகளுக்கு மத்தியில் தலைக்கு ஒரு கையை அட்டம் கொடுத்து பக்கவாட்டில் படுத்திருப்பதுபோல் இருந்த அந்தச் சிலை “வாம்மா ராதிகா...உனக்காகத்தான் வெயிட்டிங்” என்று கூறுவது போலிருந்தது.
பிள்ளையாரின் முன் ஒரு நொடி கண்மூடி கை கூப்பி வணங்கியவளின் மனதில் இருந்த படபடப்பு சிறிது அடங்கியது போலிருக்க, மனம் அமைதியடைந்தது. ஆனாலும் “வாசல்லேயே காத்துண்டு இருக்கேன்னு சொன்னாரே, எங்கே காணோமே?” என்று பரத்தைத் தேடத் தொடங்கியது ராதிகாவின் கண்களும் மனமும்.
ஆனால் அவள் தேடிய அந்தக் கள்வன் விழா அரங்கில் ஏதோ ஒரு மூலையில் கையில் ஒரு காபி கப்புடன் தன் முன்னிருந்த எல்இடி திரையில் ராதிகாவின் ஒவ்வொரு அசைவையும் பார்த்துக்கொண்டிருந்தான் என்பது ராதிகாவுக்குத் தெரியாது. ராதிகாவின் கண்களில் தனக்கான தேடலைக் கண்டவன், அருகிலிருந்த சர்வரை சைகையால் அழைத்து கப்பை அவனிடம் கொடுத்துவிட்டு, அவளுடைய தேடலுக்கு விடையாக, மனைவியை வரவேற்கக் கிளம்பினான்.
பிள்ளையாரிடமிருந்து வலதுபக்கமாகத் திரும்ப, ரிசப்ஷனுக்கான அரங்கத்தை எதிர்பார்த்த ராதிகா அதற்கு பதிலாக மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட ஒரு நந்தவனத்தில் தான் நின்றுகொண்டிருப்பதைக் கண்டாள். “இங்கேதானா ரிசப்ஷன் நடக்கப்போறது?” என்று நினைத்தபடி அரவிந்தைப் பார்க்க...அவனோ முன்னால் பார்க்கும்படி ராதிகாவிற்கு சைகை செய்தான்.
பரத் மற்றும் ராதிகாவின் குடும்பம் முழுவதும் அங்குதான் குழுமியிருந்தது. “இதோ ராதிகா வந்துட்டாளே...” என்று அனைவரும் அவளைச் சூழ்ந்துகொள்ள...அவளுடைய கண்ணோ பரத்தை மட்டுமே தேடியபடி இருந்தது. சுற்றியிருந்தவர்கள் ஏதோ பேசியபடி இருக்க, அவ்விடத்தைக் கண்களால் துழாவியவளின் பார்வை ஓரிடத்தில் வந்து நிலைகொண்டது. அங்கே ஒரு மரத்தில் சாய்ந்தபடி பேன்டின் இரு பாக்கெட்டுக்குள்ளும் கையை விட்டபடி அவளின் அலைப்புறுதலைப் பார்த்தபடியே நின்றிருந்தான் பரத். அவனைக் கண்ட நொடி மூச்சுவிடவும் மறந்து அப்படியே சமைந்துபோனாள் ராதிகா. நேற்று அவள் கூறியது போலவே ஃபுல் ப்ளேக் சூட் அணிந்திருந்தான். கோட்டில் ஒரு சிறிய மஞ்சள் ரோஜாப்பூ வைத்திருந்தான். நேர்த்தியாக ஹேர்கட் செய்து, தாடியை அழகாக ட்ரிம் செய்திருந்தான். தாடியை ட்ரிம் செய்தவுடன் அவனுடைய முறுக்கு மீசை இன்னும் கொஞ்சம் முறுக்கலாகத் தெரிந்தது போலிருந்தது. அவனுடைய கன்னத்தில் விழுந்த குழி இப்போது தெளிவாகத் தெரிந்தது ராதிகாவிற்கு. அந்த மீசையில் தடுக்கி கன்னக்குழியில் ‘தொபுக்கடீர்’ என்று விழுந்து மூழ்கியே போனாள் ராதிகா.
ராதிகாவைப் பார்த்ததும் அவளை நோக்கி ஒரு மந்தஹாசமான புன்னகையுடன் நடந்துவந்தவன், “இப்போ ஓகேவா?” என்பதுபோல அவளைப் பார்த்து புருவம் உயர்த்த...அவளும் சுற்றியிருப்பவர்கள் கவனிக்கிறார்களா என்று எச்சரிக்கைப் பார்வை பார்த்தபடியே, “ஓகே” என்று தலையை அசைத்தாள். முகத்தில் ஒரு வெட்கப்புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது ராதிகாவிற்கு. அவளுடைய பிங்க் லேஹங்காவிற்கு மேட்சாக முகமும் வெட்கத்தில் பிங்க் நிறம் பூசிக்கொள்ள...அவனையும் அறியாமலே “பஞ்சு மிட்டாய்” என்று முணுமுணுத்தது பரத்தின் இதழ்கள்.
அதற்குள் அரவிந்த், “எல்லாரும் டிபன் சாப்பிட்டாச்சா, உள்ளே போலாமா,” என்று கேட்க, எல்லோரும் ஆமாம் என்று தலையசைத்தபடி உள்ளே செல்ல யத்தனிக்க, “மன்னி இன்னும் ஒண்ணும் சாப்பிடலை,” என்று துளசி கூறினாள். ராதிகாவிற்காக அவளிருந்த அறைக்கே மாலைச் சிற்றுண்டி அனுப்பப்பட்டிருந்தாலும், இருந்த டென்ஷனில் ராதிகாவால் எதுவும் சாப்பிட முடியவில்லை. “பரவாயில்லை, எனக்கு இப்போ எதுவும் சாப்பிடனும் போல இல்லை,” என்றவளைப் பார்த்து, “அச்சச்சோ, டின்னர் சாப்பிட ராத்திரி பத்து மணிக்கு மேல் ஆயிடும், பசி தாங்க முடியாது ராதும்மா, ஏதாவது கொஞ்சமாவது சாப்பிடு,” என்று கூறிய பர்வதம், பரத்தைப் பார்த்து, “நீ சாப்பிட்டியாடா?” என்று கேட்க, “இப்போதான் காபி குடிச்சேன்மா,” என்று பதிலளித்தான். விழாவின் இறுதிக்கட்ட ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்ததால் அவனும் எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை. “நன்னாருக்கு போ, ரெண்டு பெரும் ஸ்டேஜ்ல ஏறி நின்னு பசியில மயங்கி விழறதா ஏதாவது ப்ளான் இருக்கா என்ன? முதல்ல ரெண்டு பேரும் போய் ஏதாவது சாப்பிட்டுட்டு வாங்கோ, அழைச்சுண்டு போ பரத்,” என்று ராதிகாவை அவனோடு அனுப்பிவிட்டு அனைவரும் சென்றுவிட்டனர்.
பரத்தும் அரவிந்தை நோக்கி ஏதோ சைகை செய்துவிட்டு ராதிகாவை அழைத்துக்கொண்டு எதிர்திசையில் நடந்தான். அமைதியாக நடந்தவர்கள் பஃபே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்கே மையமாக பஃபே உணவு மேஜைகள் அமைக்கப்பட்டிருக்க அவற்றைச் சுற்றி பல்வேறு குழுக்களாக பல்வேறு வண்ணங்களில் பல்வேறு விதமாக மேஜை நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. இன்னொரு பக்கத்தில் டென்ட் போன்ற அமைப்பில் வரிசையாக மேஜை நாற்காலிகள் போடப்பட்டு, உணவு பரிமாறத் தயாராக மேஜை அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. “பஃபே இல்லாம உக்காந்து சாப்பிடனும்னு நெனைக்கறவாளுக்கு சாப்பிடறதுக்கு இந்த ஏற்பாடு என்று கூற, அந்த இடத்திற்கு நேரெதிராக இருந்த இன்னொரு டெண்டைக் காட்டி, “அங்கேதான் பாரம்பரிய சௌத் இந்தியன் வாழையிலை விருந்து பரிமாறப் போறோம், யார்யாருக்கு என்ன பிடிக்கறதோ சாப்பிட்டுக்கலாம்.” என்று கூறினான்.
பஃபே மேஜைகளிலேயே கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேலான உணவு வகைகள் வரிசையாக பெயருடன் அடுக்கப்பட்டிருக்க, அதைத் தவிர உட்கார்ந்து சாப்பிடும் விருந்து எனவும், மலைப்பாக இருந்தது ராதிகாவிற்கு. “கிட்டத்தட்ட மூவாயிரம் பேர் வரப்போறா, இப்பிடி அரேஞ் பண்ணினாதான் சரியா இருக்கும்,” என்று அவளுடைய மலைப்பிற்கு பதிலளித்தவனைப் பார்த்து, “இங்கே அத்தனை பேர் உக்கார இடம் இருக்கா?” என்று கேட்டாள் ராதிகா.
Last edited: