அடுத்த எபி சீக்கிரமே போடுங்கஎந்த நாளைக்கும் ஈன்றருள் தாயென
வந்த சீரருள் வாழ்கஎன் றுன்னுவேன்
சிந்தை நோக்கந் தெரிந்து குறிப்பெலாந்
தந்து காக்குந் தயாமுக்கண் ஆதியே
எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
கந்தா, கதிர் வேலவனே, குமரா
உமையாள் மைந்தா, மறை நாயகனே
கொடியே இளவஞ்சிக் கொம்பே
எனக்கு வம்பே பழுத்த படியே
மறையின் பரிமளமே பனி மால் இமயப் பிடியே
பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.
நானிலத்தில் பல பிறவி எடுத்து
திண்டாடினது போதாதா தேவி உந்தனுக்கு
நான் ஒரு விளையாட்டு பொம்மையா
ஜகன் நாயகியே உமையே உந்தனுக்கு
அருளமுதைப் பருக அம்மா அம்மா என்று
அலறுவதைக் கேட்பதானந்தமா
ஒருபுகலின்றி உன் திருவடி அடைந்தேனே
திருவுள்ளம் இறங்காதா தேவி உந்தனுக்கு
நான் ஒரு விளையாட்டு பொம்மையா
ஜகன் நாயகியே உமையே உந்தனுக்கு...
(கர்நாடக சங்கீதம் கேட்பதற்குப் பொறுமை உள்ளவர்கள் இந்தப் பாடலை இந்த லிங்கில் கேட்கலாம். மனதை உருக்கும் பாடல், மிகவும் அருமையாகப் பாடப்பட்டிருக்கிறது, நிச்சயமாக ராதிகாவின் மனக்குமுறலுக்கு இந்தப் பாடல் ஒரு உருவம் கொடுக்கும்)
ராதிகா பாட்டுப் பாடும் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் பூஜையறையில் கூடிவிட்டனர். அவள் நெக்குருகிப் பாடிய பாடல் அனைவரின் மனதையும் தொட்டிவிட்டிருந்தது. பிறந்த வீட்டினரின் பிரிவால் ராதிகா மனவருத்தத்தில் இருக்கிறாள் என்று நினைத்துக்கொண்டனர் அனைவரும்.
ராதிகாவின் மனமுருக்கும் இந்தப் பாடல் அம்பிகையின் உள்ளம் தீண்டியதோ என்னவோ, தீண்டவேண்டியவனின் மனதை நிச்சயமாகத் தீண்டியிருக்க வேண்டும். அவளுடைய பாடலின் வரிகள் அவனுடைய உள்ளம் தைத்திருக்க வேண்டும். வெளியே போகலாம் என்று பைக் சாவியை எடுத்துக்கொண்டு மாடிப்படி இறங்கிக்கொண்டிருந்தவன், ராதிகாவின் பாடல் கேட்டு அப்படியே மாடிப்படியில் உட்கார்ந்துவிட்டான்.
ராதிகா அம்பிகையிடம் கேட்ட கேள்விகள் அனைத்தும் தன்னிடமே கேட்கப்பட்டது போல் உணர்ந்தான் பரத். எந்தத் தவறுமே செய்யாமல் சூழ்நிலைக் கைதியாய் தன் வாழ்வில் வந்திருக்கும் இந்தப் பெண்ணுக்கு என்ன பதில் சொல்லப்போகிறோம் என்ற கேள்வி அவன் முன்னால் பூதாகாரமாய் எழுந்து நின்று தாண்டவமாடியது.
பிரளயம் வெளியில் இருந்தால் அதிலிருந்து தப்பி ஓடலாம், மனதுக்குள் உண்டாகிக் கொந்தளித்துக் கொண்டிருக்கும் பிரளயத்திலிருந்து தப்பி எங்கே ஓடமுடியும்?
ராதிகாவின் கேள்விகளுக்கெல்லாம் விடையானவனே விடையறியா சிக்கலறைக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தான்.
பாடலைப் பாடிமுடித்த ராதிகா எழ மனமின்றி பூஜையறையிலே உட்கார்ந்திருக்க, அவளுடைய பாடலைக் கேட்டுக்கொண்டிருந்த துளசி மெதுவாக அவளுடைய தோளைத் தட்டி அவளின் மோனத்தைக் கலைத்தாள். அப்பொழுதுதான் அங்கு குடும்பத்தினர் அனைவரும் குழுமியிருப்பதை உணர்ந்த ராதிகா, யாரும் பார்த்துவிடும் முன்னரே கண்களைத் துடைத்துக்கொண்டு, நமஸ்காரம் பண்ணிவிட்டு எழுந்துகொண்டாள்.
தாயறியா சூலில்லை என்ற கூற்றை உண்மையாக்குவதுபோல், ராதிகாவின் கலங்கிய கண்களைக் கண்டுகொண்ட பர்வதம், ராதிகாவின் முதுகில் ஆறுதலாகத் தட்டி, “என்னமா, அம்மா அப்பா நியாபகமா இருக்கா? அவாள்லாம் ஊருக்குப் போய் சேர்ந்துட்டாளான்னு ஃபோன் பண்ணிக் கேளேன், அவாளோட குரலைக் கேட்டால் உனக்கும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்,” என்றார்.
ராதிகாவுக்குமே அம்மாவின் குரலைக் கேட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்ற, சரி என்பது போல் தலையாட்டிவிட்டு தனது ஃபோனை எடுக்க மாடிக்குச் செல்ல முற்பட்டாள்.
அங்கு அவளுடைய பாடலைக் கேட்டு வெறித்த பார்வையுடன் சிலையாய்ச் சமைந்து மாடிப்படியில் அமர்ந்திருந்த பரத்தை எதிர்பார்க்காமல் திடுக்கிட்டவள், எதுவும் பேசாமல் அவனைச் சுற்றிக்கொண்டு மாடியேறிச் சென்றுவிட்டாள்.
ராதிகா அவனெதிரில் வந்து நின்றதை அவளுடைய கொலுசுகளின் சலனம் உணர்த்தினாலும், அவளை நிமிர்ந்து பார்க்காமலே உட்கார்ந்திருந்த பரத்தும், ராதிகா தன்னைக் கடந்து சென்றதும் எழுந்து வெளியில் சென்றுவிட்டான்.
மாடியில் அவர்கள் அறைக்குச் சென்று தனது ஃபோனை கைப்பையிலிருந்து வெளியில் எடுத்த ராதிகாவிற்கு அப்போதுதான் தனது பழைய சிம்கார்டை உடைத்து குப்பைத்தொட்டியில் போட்டதும், அதற்கு பதிலாக அத்தையின் மருமகள் அம்பிகா கிளம்பும் தருவாயில் ஒரு புதிய சிம்மைக் கொடுத்து அதைப் பயன்படுத்துமாறு கூறியதும் நினைவுக்கு வர, இருக்கும் கவலை போதாதென்று முன்னமே வருத்திய கவலையும் சேர்ந்துகொண்டது.
விதி விளையாடும் விளையாட்டில் இன்னும் என்னவெல்லாம் திருப்பங்களைச் சந்திக்க நேரிடுமோ என்ற எண்ணமே ஆயாசாமாக இருக்க, ஃபோனை அப்படியே வைத்துவிட்டு, அறையின் பால்கனி கதவைத் திறந்து கொண்டு வெளியில் சென்றாள் ராதிகா.
பால்கனி போல் சிறிதாக இல்லாமல் மொட்டைமாடித் தோட்டம்போல இருந்தது அந்த இடம். வாயிலில் இருந்து வெளியே வந்தவுடன் இருந்த வராண்டாவில் ஒரு பக்கம் சிப்பி வடிவில் வடிவக்மைக்கப்பட்ட ஒரு தாழ்வான மூங்கில் சோபாவும், இன்னொரு பக்கத்தில் ஒரு ஊஞ்சலும் இருந்தது. தோட்டத்தின் ஒரு ஓரத்தில் ஒரு சிறிய நீர்வீழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது, அதனடியில் தேங்கியிருந்த நீரில் சில கோய் மீன்கள் நீந்திக்கொண்டிருந்தன. தோட்டம் முழுவதும் பச்சைபசேலென புல்தரையும், ஆங்காங்கே திட்டமிட்டு சரியான இடங்களில் பூச்செடிகளும் க்ரோட்டன்சும் நடப்பட்டு, பார்ப்பதற்கு மிகவும் ரம்யமாக இருந்தது. மற்றொரு மூலையில் தொங்கும் தாவரங்களுடன் கூடிய கசிபோ எனப்படும் ஒரு சிறிய மண்டபம் அமைக்கப்பட்டு, உட்கார்வதற்கான பெஞ்சும் போடப்பட்டிருந்தது.
மெதுவாக அந்தத் தோட்டத்தின் ஊடாக நடந்து சென்ற ராதிகா எதிரே இருக்கும் கடலைப் பார்க்கும்படியாக அமைக்கப்பட்டிருந்த கசிபோவில் உள்ள பெஞ்சில் சென்று அமர்ந்துகொண்டாள். திருமணமான நாளிலிருந்து இப்போதுதான் தனியாக உட்கார்ந்து சிறிது யோசிக்கும் நேரம் கிடைத்திருந்தது ராதிகாவிற்கு. கண்ணெதிரே தெரிந்த ஆர்ப்பரிக்கும் கடலின் அலைகளைப் போலவே அவளுடைய மனமும் ஓய்வொழிச்சலின்றி அலைபாய்ந்து கொண்டிருந்தது. ஆழ்ந்த பெருமூச்சுக்களை விட்டு தன்னைத்தானே சமன்படுத்திக் கொண்டவள், தன்னிலையை எப்படி சமாளிப்பது என்ற சிந்தனையில் ஆழ்ந்தாள்.
எந்த நிலைக்குமே எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்கும் ரகமில்லை அவள். எந்த சிக்கலுக்கும் ஒரு தீர்வு இருக்கும் என்று தீர்க்கமான நம்பிக்கை கொண்டவள், காரணமில்லாமல் காரியமில்லை என்பது ராதிகாவின் அசைக்கமுடியாத நம்பிக்கை. சிரிப்போ அழுகையோ கோபமோ பாசமோ எளிதில் உணர்ச்சிகளுக்கு ஆட்படுபவளும் இல்லை, வயதுக்கு மீறிய பக்குவமும் பண்பும் நிறைந்த பெண் ராதிகா.
ஆனால் இப்போது அவளுக்கு வந்திருக்கும் சிக்கலுக்கு தீர்வு காணமுடியாமல் திக்குமுக்காடிப் போயிருந்தாள் அவள். மனிதர்களால் ஏற்படும் சிக்கலுக்குத் தீர்வு காணலாம், மனிதர்களே சிக்கலாக இருக்கும்போது எப்படித் தீர்வு காண்பது. என்ன செய்வது என்று தெரியாமல் ஒவ்வொரு நாளையும் அது வரும்பொழுது வரும்படி எதிர்கொள்ளலாம் என்று ஒருவாறாக முடிவெடுத்து, நிம்மதியாக கீழே இறங்கிச் சென்று சமையலறையில் இரவு உணவு தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த பெண்களுடன் சென்று இணைந்துகொண்டாள்.
மனதில் ஏகப்பட்ட குழப்பங்களுடன் அவனுடைய ராயல் என்பீல்ட் பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய பரத், இலக்கென்பதே இல்லாமல் மனம் போன போக்கில் வண்டியைச் செலுத்தினான். வண்டியின் கட்டுப்பாடு பரத்தின் கையில் இருந்தாலும், மனமென்னும் குதிரையின் கடிவாளம் அவன் வசம் இல்லை. எல்லா திக்குகளிலிருந்து அலைமோதிய எண்ணங்களை கட்டுப்படுத்தும் வழி தெரியாமல், தன்னை எதிர்நோக்கியிருக்கும் சிக்கல்களுக்கு உடனடியாக ஒரு தீர்வைக் காண்பது இயலாத காரியம் என்ற ஒரு முடிவிற்கு வந்திருந்தான். பாலம் வரும்போது அதைக் கடந்துகொள்ளலாம், இப்போதே அதைப்பற்றி கவலைப்படவேண்டாம் என்று முடிவெடுத்தவன், வீட்டை விட்டு வெகுதூரம் வந்துவிட்டதை உணர்ந்து வண்டியை வீடுநோக்கித் திருப்பினான்.