எல்லாம் கொஞ்சம் நேரம் தான்…அழுகையை நிறுத்தியவள் விழியனை பற்றி எண்ணத்தை தன் மனதில் கொண்டு வந்தாள். அவனை நேரில் சந்தித்து விட முடிவெடுத்து அவன் இல்லம் கிளம்புகிறாள்.
அவன் வீட்டுக்கு இவள் சென்று அழைப்பு மணியை அடிக்க, தூக்கத்தில் இருந்து எழுந்து வந்தான்.ரேணுகா வீட்டில் இல்லை.
கதவு திறந்தவனை விழி அகல பார்த்துக் கொண்டிருந்தாள் ரதி. முன்னை விட களையாய் இருந்தான். திருமணத்தின் பின் மேலும் வசீகரமாகிவிட்டானோ?அவள் எண்ணப் போக்கை தடை செய்தன அவன் கேள்விகள்.
“யார் வேணும்?”தெரியாதவரிடம் கேட்பது போலவே கெட்டான்.
“நான் உன்னை பார்க்க தான் வந்தேன் விழியன்”
“உன்னை என் வாழ்க்கையில் மறுபடியும் பார்க்கவே நான் விருப்பலை, தயவுசெய்து போயிடு ரதி”
இவர்கள் பேசிக் கொண்டிருந்த சமையம், காம்பவுண்ட் பக்கம் வந்த பக்கத்து வீட்டு பெண்மணி,
“ஊரில் இருந்து வந்துட்டியா விழியா? வெண்பா அவ அம்மா வீட்டுக்கு போயிருக்காளாமே, ஆமா யார் இது?”
அடுத்தவர் விஷயத்தை அறிந்து கொள்ள எத்தனை ஆர்வம் இந்த நாட்டில்?இருந்த எரிச்சலில் என்னவோ சொல்லி சமாளித்தவன், ரதியை அனுப்பிட எத்தனித்து,
“நீ கிளம்பு ரதி.நீ இதுவரை செய்து வைத்த பிரச்சனை எல்லாம் போதும்!”
சட்டென்று அவனை தாண்டி வீட்டினுள் நுழைந்துவிட்டாள். செய்வதறியாது அவன் அவளை பின் தொடர,சோபாவில் மையமாய் அமர்ந்தவள்,
“எத்தனை நேரம் நிற்கிறது? கால் எல்லாம் வலிக்கிது!” என்றாள்.
எள்ளும் கொள்ளும் வெடித்தது அவன் முகத்தில்!
“ரதி எதுக்கு இப்ப உள்ளே வந்தே? கிளம்பு முதல்ல”
“என் வாழ்க்கைக்கு ஒரு பதில் சொல்லு, நான் போறேன்”
அழையா விருந்தாளியாக வந்ததோடில்லாமல் கேள்வியும் கேட்டாள்.
“ஏன் டா உனக்கு என்னை பிடிக்கலை? நீயா தானே என் கிட்ட வந்து பழகின? எதுக்கு அத்தனை பாசம் காட்டின? அப்புறம் ஏன் கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொன்னே? உன்னால என் லைஃபே போச்சு தெரியுமா?”
விழியன் வாயடைத்து போனான்.
எல்லா தவறுகளையும் அவள் செய்துவிட்டு தன்னை இப்படி குற்றவாளி கூண்டில் நிறுத்துவாள் என்று நினைக்கவில்லை.
“ரதி, நான் உன்னை பிரண்டா மட்டும் தான் முதலில் இருந்தே நினைச்சேன். எனக்கு வெண்பா தான்னு என்னைக்கோ முடிவெடுத்திட்டேன். தயவுசெய்து புரிஞ்சிக்கோ. பழைய கதையை எல்லாம் பேசி நம்ம ரெண்டு பேர் வாழ்க்கையும் நீயே கெடுத்துக்காதே!”
அழ ஆரம்பித்தாள், அவளின் கடைசி ஆயுதம் அது!
“விழியன் என்னால உன்னை மறக்க முடியலை! வெண்பாவையும் உன்னையும் சேர்த்து பார்த்தா, எனக்கு…எனக்கு செத்திடலாம் போல இருக்கு”
இவளிடம் பேசி புரிய வைக்க முடியுமா?
“ரதி உனக்கு கஷ்டமா இருந்தாலும் நீ ஏத்துகிட்டு தான் ஆகணும்!எல்லா விஷயமும் நாம நினைக்கிறது போல நடக்கிறது கிடையாது.நான் உனக்கானவன் இல்லை. எனக்கு கல்யாணம் ஆயிடிச்சு.அவ இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்லை.புரிஞ்சிக்கோ! ப்ளீஸ் இங்க இருந்து போ”
“முடியாது விழியன். இது தான் என் வீடு…நான் இங்க உன் கூட தான் இருப்பேன்!”
பொறுமையாக போனாள் ஆட்டம் காட்டுகிறார்கள், இவளும் அந்த வெண்பாவும்! கோபமாய் அவளை நெருங்கியவன் விட்டான் ஒரு அறை.அப்போதும் நகராமல் இருந்தவளை, கைப்பிடித்து அவன் தூக்க அவனை அப்படியே கட்டிக் கொண்டாள்.
திமிரி அவளை தன்னிடமிருந்து அவன் விலக்க, அதை அழகாய் தன் மொபைலில் பதிவு செய்து விட்டாள் அந்த நாடககாரி!
தான் நினைத்து வந்த வேலை முடிந்ததும்,
“என்னை விரட்டுறே இல்ல? நீ எப்படி வெண்பாவோட நிம்மதியா இருக்க போறேன்னு நான் பார்க்குறேன்”
“பாரு , நல்லா பார்.நான் அவளோட சந்தோஷமா இருக்க போறதை உன் ரெண்டு கண்ணால் நல்லா பாரு.. இப்ப மரியாதை கெடுறதுக்குள்ள வெளியே போயிடு…கெட் லாஸ்ட்”
அவளை தரதரவென்று கைபிடித்து வெளியே தள்ளியவன் , கதவை சாத்திவிட்டான்…ரதி தான் எடுத்த போட்டோவை வெண்பாவின் மொபைலுக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பி வைத்தாள்.