“பிரகாஷுக்கும் கொடு மா”என்றார் அதை வாங்கியபடி.
அவனை கேள்வியாக பார்த்தாள், வேண்டுமா என்றபடி.கிடைத்த வாய்பை விடாமல் அவனும் ஆமாம் என்க, அவன் கையிலும் சுடசுட ஒரு காபி வந்தது. அவன் மனைவி இத்தனை நாளில் அவனுக்கு கொடுத்த அந்த முதல் காபி,
அத்தனை சுவையாக இருந்தது. சாரதியிடம் பேசியபடி அவன் அதை முடிக்க,
“என்ன டிபன் செஞ்சே ரதி இன்னிக்கு? ஏன் வீடெல்லாம் இப்படி இருக்கு? உனக்கு முடியலைன்ன வேலைக்கு ஆள் வைக்க வேண்டியது தானே?”
பிரகாஷும் ரதியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
“வந்து…ஆள் கிடைக்கலை மாமா”
“அதெப்படி இத்தனை பெரிய அபார்ட்மெண்டில் கிடைக்காம போகும்?நான் போய் என்னென்னு பார்க்குறேன். நீ டிபன் செய்” என்றபடி போனவரின் பின்னாடி ஓடினான் பிரகாஷ்.
இவரை வச்சிகிட்டு ஒண்ணும் பண்ண முடியாது. நொந்தபடி சமையல் வேலைகளை ஆரம்பித்தாள் அவள்.
போனவர் அந்த பிளாக்கின் கீழ் வரவே ஒரு அம்மாள் தென்பட்டார்.வீட்டு வேலைகளை முடித்து விட்டு போய்க்கொண்டிருந்தார்.அவளை பேசி பிரகாஷ் வீட்டுக்கு அழைத்து வந்தார்.இருவரும் திரும்ப வரவும், ரதி பிரகாஷிடம் ஒரு லிஸ்டை கொடுத்து இதெல்லாம் வேண்டும் என்று கடைக்கு அனுப்பினாள்.
‘என்ன இதெல்லாம் புதுசா இருக்கு?’
கையிலிருந்த காகிதத்தையும் ரதியையும் அவன் மாறி மாறி பார்க்க,
‘என்ன பண்றது? அவர் முன்னாடி நடிச்சு தான் ஆகணும்.வாங்கிட்டு வா சீக்கிரம்’
இருவரின் மனதில் ஓடிய எண்ணங்கள் இவை!
வேலையாள் வந்து வீட்டை அழகாய் பெருக்கி, துடைத்து விட , வீடு புது பொலிவாய் இருந்தது!அவள் கையில் பணம் தந்த சாரதி பதிவாய் அங்கு வந்து வேலை செய்து தரும்படி கூறிவிட்டு அவள் போன் நம்பரையும் பெற்றுக் கொண்டார்.இவர் ஒரு பக்கம் இவைகளை பார்க்க, இன்னொறு பக்கம் ரதி வீட்டுக்கு திரும்பிய பிரகாஷை அமர விடாமல், கிட்சனில் தனக்கு வேண்டிய வேலைகளை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டாள்!
கீரை சப்பாத்தி, காய்கறி குருமா, கூடவே சம்பா ரவை உப்மா எல்லாம் செய்து முடித்திருந்தாள் ரதி! சாப்பிடும் நேரத்தில் கூட, சாரதிக்கு மட்டும் அவள் எடுத்துக் கொண்டு வர, பிரகாஷுக்கும் என்று இழுத்து விட்டார் அவர்.
ரதி அவன் பதிலுக்கு காத்திருக்க,
“இல்லை நான் ஏற்கனவே சாப்பிட்டு விட்டே” என்றான்!
“இப்ப தானே அவ சமைக்கிறா! நீங்க எப்படி சாப்பிட்டீங்க பிரகாஷ்?”
சாப்பாட்டு பார்சல்களை எல்லாம் பார்த்திருந்தாலும் தெரியாததை போல் கேட்டு வைத்தார்.
“இல்ல வீட்டில் மாவு தீர்ந்து போச்சு, அதான் இட்லி வாங்கினேன்”
“பாருங்க பிரகாஷ், நீங்க படிச்சவங்க.நல்ல வேலையில் இருக்கீங்க! ஆனா நான் ஒரு டாக்டர் அதான் சொல்றேன், அடிக்கடி வெளியே சாப்பிடாதீங்க! வீட்டில் பொண்டாட்டி இருக்கிறப்ப நீங்க ஏன் இப்படி அவஸ்தை படணும்? அவளும் பிஸின்றதால கொஞ்சம் கூட மாட உதவி செஞ்சீங்கன்ன போதுமே!”
என்னவென்று சொல்வான்? “சரிங்க” என்றதோடு முடித்துவிட்டான்.
ரதியிடம் சாரதிக்கு எந்த பேச்சும் இல்லை. பிரகாஷிடம் மட்டும் வேலை, அரசியல் எல்லாம் பேசிவிட்டு ஒரு வழியாக கிளம்பினார்.பிரகாஷ் அவரை பேருந்து நிலையில் இறக்கி விட உடன் வர, விடைபெரும் முன்,
“இன்னும் எத்தனை நாளைக்கு இந்த நாடகம் போட போறீங்க பிரகாஷ்?”என்றார்.
அவர் சொன்னதை மறுக்க நினைத்தவன், அவர் கண்களை சந்திக்கவும் வாயை மூடிக் கொண்டான். சற்று நேரம் இருவருக்கிடையில் பேச்சில்லை.அதன் பின் என்ன நினைத்தானோ நடத்ததை எல்லாம் மறைக்காமல் சொல்லிவிட்டான் அவரிடம்.
“அவ்வளவு உறுதியா இருந்தவ, இப்ப அடங்கிட்டாளா? என்னால் நம்ப முடியலை!”
“ஆமா சார், இப்ப அந்த பேச்சு எதுவும் இல்லை. ஆபிஸ் , வீடு அதை விட்டா அடிக்கடி அன்பு இல்லம் வருவா.வேலையிலும் முன்னாடி மாதிரி கிரியேட்டிவ்வா யோசிக்கிறா!”
“அதெல்லாம் விடுங்க, நீங்க என்ன நினைக்கிறீங்க ரதியை பத்தி? அவளை மனைவியா ஏத்துக்க உங்களுக்கு இன்னமும் விருப்பம் தானே?”
பதிலில்லை அவனிடம்!
அவரை யோசனையாக பார்த்தபடி நின்றான் பிரகாஷ்!