Aparna
அமைச்சர்
Nan poi latest ud ya padikaporen,. Enathan inds suspensu.. avaluku ivana pidikalaya. Super amma direct ah paesita edulayum problem ila
enna oru ul kuthu vachirukka intha venba ponnu4. கதை ஒன்று ஆரம்பம்
விழியனின் டைரி
பிராஜெக்ட் டெட்லைன் தாண்டியதால் லேட் நைட் வேலையாக ஆபிஸில் பின் தங்கியிருந்தோம் நான்,அவள் மற்றும் மதன்.
பாதி வேலை தாண்டிய நிலையில்,மதன் வெளியில் சென்றிருக்க என் பக்கம் நெருங்கினாள்,
“ஐ லவ் யூ விழியன்” என்றபடி என் கன்னத்தில் முத்தமிட்டாள் . நான் திகைத்து , அவளை என்னிடமிருந்து விலக்கினேன்.
ஒர் தோழி போல் அதுவரை என்னிடம் பழகியவள் இப்படி செய்வாள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை!
—————————-
ஊர் வந்து சேர்ந்த போது இரவாகியிருந்தது. திருச்சி மாநகரின் மையப் பகுதியில் அமைந்திருந்தது அவன் மாமன் வீடு! அங்கு வந்து பல வருடங்கள் ஆகியிருந்தது! கல்லூரி இறுதியில் வந்திருப்போமோ! வேலையில் சேர்ந்த பிறகு லீவும் கிடையாது, இங்கு வருவதும் இல்லை! இப்போது வந்திருக்கிறான்.அடுத்த நாள் மாலையில் நிச்சயதார்த்த விழா ஏற்பாடு செய்திருந்தார்கள் என்றிருந்தாள் அவன் அன்னை.
வீடு புது பொலிவுடன் இருந்தது! வாசலில் அமர்ந்திருந்த சபாபதி அவன் வரவை கண்டதும் எப்போதும் போல் அன்பாய் வரவேற்றார்.
“வா பா விழியா! இத்தனை நேரமாகிட்டா?” அவரிடம் ஏன் தாமதம் என்று சொல்லக் முடியவில்லை.பொத்தாம் பொதுவாய் சிரித்து வைத்தான்!
அவர்களின் பேச்சுக் குரல் கேட்டு அவன் அன்னை ரேணுகாவும் ஓடி வந்தாள். அவள் பின்னே குடும்ப உறுப்பினர் மொத்தமும்! அவன் நினைத்து வந்த ஆளை தவிர! இலக்கியனும் தமிழும் அவனிடம் நலம் விசாரித்தனர்.
“ஏன் விழியா இவ்வளவு லேட்? நான் தான் காலையிலேயே போன் செய்திட்டேனே!” கேட்ட ரேணுகாவிடம், ஒன்றும் சொல்லாமல் கையிலிருந்த துணி கவரை அவரிடம் தர, மகனிடம் ஏதும் சொல்லாமல் அறைக்குச் சென்று பிரித்துப் பார்த்தார் ரேணுகா.
பட்டுச் சேலை, அவனுக்குப் பிடித்த மயில் பச்சை நிறத்தில் உடல் முழுவதும் ஆங்காங்கே ஜரிகை வேலைப்பாட்டுடன், பார்க்க அத்தனை அம்சமாய் இருந்தது.ரேணுகாவிற்கு மகன் செய்த இச்செயலில் அத்தனை பெருமிதம்!
அதனைக் கொண்டு வந்து சரஸ்வதிக்கும், தமிழ் செல்விக்கும் காட்ட பெண்கள் முகத்தில் புன்னகை!
அடுத்த திட்டத்தை தீட்ட ஆரம்பித்தனர், “அத்தை நான் போய் லைனிங் துணி எடுத்துட்டு வந்திடுறேன்.இரண்டு மணி நேரத்தில் நானே தைச்சிடுவேன். நாளைக்கு வெண்பா இதையே போட்டுகளாமே!” என்றாள் தமிழ்செல்வி.
சொன்னவள் உடனடியாக இலக்கியனுடன் கிளம்ப எத்தனிக்க, “இலக்கியா போய் வெண்பாவை கூப்பிடு, விழியன் அவ வேலையை பத்தி ஏதோ கேட்குறான் பாரு!”
அவன் தந்தை சொன்னதை அவன் போய் சொல்ல, அவன் அக்காள் பயங்கரமாய் முழித்தாள், ‘ஏன் இப்படி ஒரு பார்வை பார்க்குறா!’ என நினைத்தாலும் ஒன்றும் கேட்டு கொள்ளாமல் வெளியேறிவிட, வெண்பா கால் கட்டப் பட்டது போல் அறைக்குள்ளயே இருந்தாள்.
இலக்கியன் சொல்லிவிட்டு சென்று சில நிமிடங்கள் இருக்கும், அவள் வெளி வரவில்லை என்றதும், சபாபதி, “வெண்பா!”என்றழைத்தார்.தந்தை அழைத்தால் ஒரு குரலுக்குச் சென்று விடுவதே உத்தமம்! தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அவரிடம் வர,“என்னமா மாப்பிள்ளை எத்தனை நேரம் காத்திருப்பார்?”
“மாமா நீங்க எப்பவும் போல என்னைப் பேர் சொல்லிக் கூப்பிடுங்க” என்றவனிடம், சிரித்த முகமாய்
“சரி பா, நீ அவகிட்ட ஏதோ பேசணும்னு சொன்னியே, அதைக் கேட்டுட்டு இரு நான் இப்ப வந்திடுறேன்” என்று அவ்விடத்தை விட்டு எழுந்து போனார்.
மாமன் மகன்தான், மனதுக்கு நெருக்கமானவன் தான்! ஆனாலும் அன்னிய பெண் போல் அவனிடம் நின்றாள் வெண்பா!
விழியன் அவளது ஒவ்வொரு அசைவையும் பார்த்து கொண்டிருக்க, அவளோ தந்தை போவதை பார்த்துக் கொண்டிருந்தாள்.அவர் தலை மறையவும் இவள் திரும்பி அவனைப் பார்க்க,சிரித்து வைத்தான்.
வழக்கம் போல் எந்த பிரதிபலிப்பும் அவளிடம் இல்லை! விழியனுக்கு தான் எண்ணியிருந்தது போல் இந்தப் பெண்ணுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லையோ என்ற ஐயம்!
ஊரில் உள்ள கடவுளுக்கு எல்லாம் ஒரு வேண்டுதல் வைத்து விட்டு, “ஏன் நிற்கிற வெண்பா, உட்காரு” என்று அவனின் எதிரில் இருந்த இருக்கையைக் காட்ட ,தாமதிக்காமல் அமர்ந்து கொண்டாள்.
அமர்ந்தவள் அவனை தவிர்ப்பது போல் எங்கோ வெறித்திருக்க விழியனே, “சென்னையில் எந்த கம்பெணியில் உனக்கு வேலைக் கிடைச்சிருக்கு?”அவன் கேட்க, தயங்காமல் அவனிடம் பதில் சொன்னாள். அந்தக் கம்பெனியைப் பற்றி தனக்குத் தெரிந்தவற்றை அவனும் சொல்ல, இவளும் அதை மட்டும் ஆவலாய் கேட்டு கொண்டாள்!
அவளைத் தன்னிடம் பேச வைப்பதற்காக, நிரம்பவும் சிரமப்பட்டு தான் கேட்க வேண்டியதை விட்டுவிட்டு இவன் பொதுவாய் பேச, அவளும் பதில் சொல்லிக் கொண்டிருக்க அங்கு வந்தாள் பொற்பாவை. விழியனைக் கண்டதும், “சித்தப்பா ,வெண்பா ரொம்பவும் அமைதியா இருக்காளோ?”
ஏற்கனவே அந்தச் சூழ்நிலையில் மாட்டிக் கொண்டு முழிப்பதை போல எண்ணியிருந்த வெண்பாவிற்கு இப்போது ஆத்திரமாய் வந்தது!
“பெரியவங்க பேசிட்டு இருக்கோம்ல! உள்ளே போ!” என்றாள் கோபமாய்!
பொற்பாவை கேட்கிற ஆளா! அத்தனை செல்லம் கொடுத்து கெடுத்து வைத்திருந்தார்களே!
வெண்பாவை முறைத்துவிட்டு, “சித்தப்பா பதில் சொல்லுங்க” என்க
விழியன் வெண்பா தன்னை கவனிக்கிறாளா என்று ஓரக் கண்ணால் நோட்டம் விட்டு, புன்னகையுடன் பொற்பாவையிடம் இல்லை என்பது போல் தலையசைத்தான்.
அவன் செய்கையை பார்க்கக் கூடாதவள் பார்த்துவிட, பொற்பாவை பலமாய் சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்! அதில் கடுப்பின் உச்சிக்கு போன வெண்பா அவள் தலையில் கொட்டி, “எந்திரிச்சி உள்ள போடி” என்று விரட்டிவிட்டு அவளும் எழ
“வெண்பா! உன் கிட்ட கொஞ்சம் பேசணும் என்றான் விழியன்.
‘கோவமா இருக்கா போல டா, இப்ப வேணாம்’ என்ற அவன் மனசாட்சியின் அறிவுரையையும் மீறி. அதே நேரத்தில், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்தது என்பது போல சபாபதியும் அங்கு வந்துவிட்டார்.
“என்ன மா, எல்லாம் சொல்லிட்டியா?” என்க, அவனையே பார்த்தபடி, “ஆமாம் பா! நான் உள்ளே போறேன்” என்று விலகிக் கொண்டாள்.
இவள் இன்னும் தன்னிடமுள்ள பழைய பகையை மறக்கவில்லையா?! விழியனுக்கு அத்தனை நேரம் இருந்த சந்தோஷம் இப்போது அறவேயில்லை!
அவள் சென்றுவிட்ட பிறகு இவனும் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தஞ்சமடைந்து விட, உணவுக்காக அவனை அழைக்க வந்தாள் ரேணுகா.
“என்ன விழியா அதுக்குள்ள படுத்திட்டே, வா எல்லோரும் உனக்காக காத்திட்டுருக்காங்க!”
“எனக்கு பசியில்லை மா, நீங்க போங்க” என்றவனை உற்று நோக்கினார் ரேணுகா,‘நல்லாதானே இருந்தான்!’
“என்ன பா ஆச்சு,தலை வலிக்கிதா!” மகனை நெருங்கி நெற்றியில் கைவைத்து பார்க்க,“ம்ம்ம் ஒண்ணுமில்லை மா! என்னை கொஞ்சம் தனியா விடுங்க!”என்றான் எரிச்சலாய்.
ரேணுகாவிற்கு புரிந்துவிட்டது,ஏதோ பெரிய விசயம் என்று. அறையை விட்டு வெளியேறியவள் சரஸ்வதியிடம், "அவனுக்கு ஏதோ தலைவலியாம், நீங்க சாப்பிடுங்க, நான் அவனுக்கு ரூம்ல கொண்டு போய் தரேன்” என்றபடி
அவனுக்கானதை எடுத்து கொண்டு அறைக்கு வந்தவள், “விழியா! எந்திரி” என்றாள் அதட்டலாய்.
அவன் அமரவும், அவன் பக்கம் அமர்ந்து, இட்லியை அவனுக்கு ஊட்ட ஆரம்பித்தாள்.பல தடவைகள் சொல்லியிருக்கிறான் , தான் சின்ன பிள்ளை இல்லை என்று! கேட்பாளா?எதிர்ப்பு காட்டாமல் சாப்பிட்டான்.அவளுக்கு தெரியாதா அவனுக்கு பசிக்குதா இல்லையா என்று!
உண்டு முடிந்ததும்! “இப்போ சொல்லு, என்ன பிரச்சனை? எதுக்கு முகத்தை இப்படி முழு நீளத்துக்கு தூக்கி வச்சியிருக்க!”
சொல்லாமல் விட முடியாது! விட மாட்டாள்! அவனுக்கும் விடை தெரிய வேண்டும்!
“வெண்பாவிற்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை போல மா!”
“எப்படி சொல்றே?”
அவனுக்கு புரிந்ததே! எப்படி இதையெல்லாம் விளக்க? “எனக்குத் தோணுது!”
“உனக்கு என்னைக்கு டா சரியா தோணியிருக்கு?”
“மா! என் வாழ்க்கை பிரச்சனை மா! விளையாடாதீங்க!”
“உனக்கு என்ன இப்ப அவளுக்கு இஷ்டமா இல்லையான்னு தெரியனும் அவ்வளவுதானே! இதோ வரேன்”
“எங்க போறீங்க மா, மா!” சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆளைக் காணவில்லை. நேராக வெண்பாவின் அறைக்கு சென்றவள்,
“வெண்பா உன்கிட்ட கொஞ்சம் பேசணும், கொஞ்சம் என் கூட வா மா!”
அவளை அழைத்துக் கொண்டு , விழியனையும் கிளப்பினாள். வீட்டில் தமிழ் செல்வியை தவிர யாருக்கும் நடப்பவைகள் தெரியவில்லை. இருவரையும் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்ற ரேணுகா, இருக்கிற விளக்குகளை எல்லாம் எறியவிட்டாள்.
இருவரையும் எதிரெதிரே நிற்க வைத்தவள்,
“வெண்பா என்ன மா? உனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டமில்லையாமே,விழியன் சொல்றான். அப்படியா?”குனிந்திருந்தவள் நிமிர்ந்து அவனை பார்க்க, ரேணுகா தொடர்ந்தாள்.
“இந்தா டா, பேசணும்னு சொன்னியே, எதுனாலும் நேரிடையா கேட்டுக்கோ. சும்மா மூஞ்சிய தூக்காதே!”
டோட்டல் டேமேஜ். இந்த அம்மாவை வச்சிகிட்டு!
“சரி நீங்க கீழே போங்க, நாங்க பேசிட்டு வரோம்” என்றவனை
“நல்லா இருக்கு டா உன் நியாயம். நான் எங்கையும் போறதா இல்லை! ஒழுங்கா என் முன்னாடி என்ன பேசணுமோ அதை கேளு!”
அம்மா சொன்னால் சொன்னது தான்!
“வெண்பா உனக்கு இந்த கல்யாணத்தில் இஷடமில்லையா? ஏன்?”
வெண்பாவுக்கு. ‘இது தான் வாய்ப்பு, தானே தேடி வந்த வாய்ப்பை விடாதே’
“எனக்கு வேலைக்கு போகணும். இன்னும் நிறைய படிக்கணும்! கல்யாணம் இப்பவே செய்துக்க இஷ்டமில்லை.” ‘அதுவும் உன்னை’ என்று சொல்ல வந்ததை முழுங்கிவிட்டு “அப்பா கிட்ட இதை எல்லாம் சொன்னா ஒத்துக்க மாட்டிங்கறார்!”
அவனை பற்றி அவனிடமே சொல்ல வேண்டாம் என்பதால் இன்று சொல்லவில்லை. ஒரே ஒரு காரணத்தை மட்டும் சொன்னாள்.
விழியனுக்கோ இவள் சொன்னதும் , அப்பாடா என்றிருந்தது!
அன்னையை திரும்பி பார்க்க ,ரேணுகா இவர்களை விட்டு சற்று தள்ளி நடை பயின்று கொண்டிருந்தாள்.
“அவ்வளவுதானே!” அவன் சொன்னதில் அவனை நிமிர்ந்து வெண்பா பார்க்க
“நீ என்ன செய்யணும்னு நினைக்கிறியோ அதை தாராளமா செய்.நானோ அம்மாவோ உன்னை எதுவும் சொல்ல போவதில்லை!” என்றான்.
“ம்ம்”
அவன் வார்த்தையில் இனிமை கூடிவிட்டது. அவளுக்கு தன்னை பிடிக்கவில்லையோ என்ற ஐயம் இப்போதில்லை. அதற்காக வாக்குறுதிகளை அள்ளி வீசிக்கொண்டிருந்தான், ஒரு தேர்ந்த அரசியல்வாதியை போல!
“இதை தவிர வேற எதுவும் பிரச்சனை இல்லையே?நாளைக்கு நடக்க போறதில் உனக்கு சம்மதம் தானே?”
ஆமாம் என்பது போல் தலையசைத்தவளை அவன் நீண்ட நேரமாய் பார்த்துக் கொண்டே நிற்க, அவனிடம் வந்த ரேணுகா,
“போதும் டா மகனே. போலாமா? வா மா வெண்பா”
பேச்சுவார்த்தை வெற்றியடைந்தது!