அதன்படி இவன் மட்டுமாய் கிளம்பிவிட்டான்.
அவன் சென்ற பின் சபாபதியை சமாளிப்பது ரேணுகாவுக்கு மற்றொரு பெரிய காரியமாய் போய்விட்டது.
எதற்காக நிச்சயம் செய்தோம் என்பதையே மறந்தவர் போல்
“கல்யாணத்துக்கு முன்னமே அவ எப்படி மா உன் வீட்டில் வந்து தங்க முடியும்? சரிவராது ரேணுகா” என்றார்
அவர் பேச்சில் கடுப்பானது வெண்பாவும் தான். காரணம் காட்டி நிச்சயம் செய்துவிட்டு, இப்போது வேலைக்கு போக வேண்டாம் என்பாரோ!
அங்கு நடந்த கூத்தை வேடிக்கை பார்க்க.ரேணுகா
“அண்ணே மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்காதீங்க! நான் வெண்பாவை கூப்பிட்டு போறேன், எங்க வீட்டிலிருந்து அவ வேலைக்கு போயிட்டு வருவா, அவ்வளவுதான்!”
யோசனையாய் இருந்தவர்,
“தமிழோட மாமியாருக்கு இதெல்லாம் தெரிஞ்சா சரிவராது மா…”
“அவங்க நீங்க என்ன செஞ்சாலும் குறை பேச தான் போறாங்க! அதுக்கெல்லாம் கவலைபடலாமா? விடுங்க! வெண்பா நீ போய் எல்லாம் எடுத்து வை”
அவள் தந்தையை பார்க்க அவரும் , “போ மா” என்று அரைமனதாய் அனுப்பினார்.அடுத்த நாள் கிளம்புவதற்கு ஆயுத்தமான ரேணுகாவை வேலை செய்ய விடாமல் பாடாய் படுத்தினான் விழியன்.
தனக்காக அவன் போன் செய்யவில்லை என்பது தெரியாதவளா என்ன?
“மா..நான் பஸ் ஸ்டேண்ட் வரவா உங்களை கூப்பிட?”
“ஆபிஸ் லீழ் போட்டு வீட்டில் இருக்கவா மா?”
“எந்த ரூமை வெண்பாவுக்கு ஒதுக்கி தரணும்?”
“காய்கறி என்னவெல்லாம் வாங்கி வைக்கட்டும்?”
ரேணுகாவுக்கு கண்ணை கட்டிக் கொண்டு வந்தது..!
“தம்பி நான் இதுநாள் வரை எப்படி செஞ்சேனோ அதே போல் பார்த்துக்குறேன்.நீ கவலை படாதே!”
“மா நான் என்ன சொல்ல வரேன்ன..”
“நீ சொன்ன வரைக்கும் போதும். போனை வை..வேலையிருக்கு டா மகனே!”
திட்டமிட்டபடி அவர்கள் கிளம்ப , சிங்கார சென்னை வெண்பாவை அன்புடன் வரவேற்றது! அதை விட மேலான அன்புடன் வீட்டில் ஒருவன் காத்திருப்பது அவளுக்கு தெரியாதே!
ஆட்டோவில் வந்து வீட்டு முன் இறங்கினார்கள்.கேட்டை திறந்த ரேணுகா,
“அவன் தினமும் எட்டு மணிக்கு மேல தான் வருவான் வெண்பா” சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வாசல் கதவை திறந்தான் அவளின் மைந்தன்!
அத்தனை புன்முகம்.தன் மகனை ஒரு நாளும் இப்படி கண்டதில்லை ரேணுகா!
‘எல்லாம் யாருக்காக?! நீ நடத்து டா!’
“என்ன விழியா அதுக்குள்ள வந்துட்டே?பைக்கை கூட காணலையே!”
“சரிவீஸ்க்கு போயிருக்கு மா. வா வெண்பா!” வரவேற்றான்!
உள்ளே வந்தவர்களுக்கு காபி எல்லாம் அவன் போட்டு கொண்டு வர, ரேணுகா அதை குடிக்கவில்லை என்றால் மயக்கம் போட்டிருப்பாள்.
“நீ காபி போடுவேன்னு எனக்கு இப்ப தான் டா தெரியும்!”
அசடுவழித்தபடி அவர்களின் எதிரில் அமர்ந்தான்!
“புதன்கிழமை ஆபிஸில் பெர்மிஷன் போட்டிருக்கென். நானே உன்னை உன் புது கம்பெனியில் விட்டிடுறேன்!” அவளை பேச வைக்க அவன் சொல்ல
“நானே போயிடுவேன்.உங்களுக்கு ஏன் சிரமம்!”
அவன் பதிலளிக்குமுன்
“அது என்ன மா அப்படி சொல்லிட்டே! அவன் ஜென்ம பலனே அதுதானே!” என்றபடி ரேணுகா போகிற போக்கில் சொல்லிவிட்டு போக, வெண்பாவுக்கு பிடிக்காதவனை கேலி செய்த விளைவில் எழுந்துவிட்டது சிரிப்பு.அதை அடக்க வெகு சிரமமாயிற்று!
சிரித்தவளை சற்று நேரம் ரசித்த விழியனுக்கு அன்றிரவு உறக்கம் வரவில்லை.இதே வீட்டில் வெண்பாவும் இருக்கிறாள் என்ற எண்ணமே அவனை சந்தோஷம் கொள்ள வைத்தது! நீண்ட போராட்டத்துக்கு பிறகே நித்திரையில் ஆழ்ந்தான்!