N.Palaniappan
மண்டலாதிபதி
ட்விட்டர்வெண்பாவின் ஆசைக்கு, மறுப்பு தெரிவிக்க வேண்டிய சூழ்நிலை உண்டானதை எண்ணி, மனதில் வருத்தத்தோடும், கண்களில் வலியோடும் மறுப்பாக வெண்பாவை பார்த்து தலை அசைத்தான் முரளி.
இவர்கள் முடிவை தெரிவிக்கும் முன்.., சூழ்நிலையை கையில் எடுத்துக்கொண்டு, "கண்டிப்பா வெண்பா வருவா...!! படித்த பொண்ணு, திறமையோடு எதற்கு வீட்டில் இருக்கணும். வேறு எங்கயோ வேலைக்கு போவதை விட, எங்க மருமக நீங்க இருக்கிற இடத்தில் இருந்தால் சந்தோசம் தானே...!!!", என்று அமுதவள்ளி உறுதியாக கூற, சுந்தரம் தன் மனைவி கூறுவதை ஆமோதிப்பது போல் தலை அசைத்தார்.
மற்றவர்கள்., அமுதவள்ளியை ஆச்சரியமாக பார்க்க, முரளி தன் தாயை கோபமாக பார்த்தான்.
சிறிது நேரம் பேசிவிட்டு, வெண்பாவின் தாயும் தந்தையும் கிளம்ப, "அம்மா.. நான் வேண்டாம்முனு சொன்னேன் இல்லையா..? நீங்க ஏன் தேவை இல்லாம சம்மதம் சொன்னீங்க..?", என்று முரளி தன் தாயை பார்த்து கோபமாக கேட்டான்.
"ஏன் வேண்டாம்..?", என்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தபடி அமுதவள்ளி கேட்க, "பிரச்சனை வரும்முன்னு நான் நினைக்கிறேன்..", என்று முரளி தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு கூறினான்.
"பிரச்சனைக்கு பயந்தவன், பணக்கார பெண்ணை காதலிச்சிருக்க கூடாது.. கல்யாணமும் செய்திருக்க கூடாது..", என்று அமுதவள்ளி முரளியின் முகம் பார்த்து கோபமாக கூற, முரளி தலை குனிந்து நின்றான்.
"செய்த ஒரு தவறுக்கு இத்தனை தலை குனிவா..?" , என்ற எண்ணத்தில், சித்ராவும், அசோக்கும் முரளியை பரிதாபமாக பார்க்க, "அத்தை அவங்களுக்கு பிடிக்கலைன்னா, நான் அங்கு போகவில்லை.. எதுக்கு வீண் பிரச்சனை ", என்று வெண்பா தன்மையாக கூறினாள்.
"நீ உங்க கம்பெனியில் வேலைக்கு போகணும் வெண்பா.. உங்க வீட்டிலிருந்து உன்னை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவத்தோடு இப்பொழுது தான் வந்திருக்காங்க.. இந்த நேரம் உங்க அம்மா, அப்பாக்கு மறுப்பு தெரிவிப்பது எனக்கு சரியாகப் படலை.. உனக்கு இதில் விருப்பம் தானே..?", என்று அமுதவள்ளி வெண்பாவின் முகம் பார்த்து கேட்க, வெண்பா முரளியின் முகத்தை ஏக்கமாய் பார்த்தாள்.
" உங்க எல்லாருக்கும் சரின்னு தோணுதுன்னா, எனக்கு சம்மதம்..",என்று முரளி வெண்பாவின் முகம் பார்த்து கூற, "எனக்கு முழு சம்மதம் அத்தை..", என்று சிரித்த முகமாக தலை அசைத்தாள் வெண்பா.
"அசோக், நாளை முதல் நான் உன் கூடவே ஆபீஸ் வந்திடுறேன்..", என்று வெண்பா கூற, அசோக் சந்தோஷமாக தலை அசைத்தான்.
முரளி புன்னகைத்து கொண்டான்.
அனைவரும் தங்கள் வேலையை தொடர, நாம் மதுசூதனன் வீட்டை நோக்கி பயணிப்போம்.
தென்றல் காற்று மெல்ல வீச, அதை அனுபவித்தபடி பால்கனி ஊஞ்சலில் சாய்ந்தமர்ந்தாள் நித்யா. அவளருகே மதுசூதனன் அமர, "இதில் நான் மட்டும் தான் உட்காருவேன்..", என்று நித்யா சட்டம் பேச, "அது அப்ப.. ", என்று கூறிக்கொண்டு அவள் அருகில் அமர்ந்தான் மதுசூதனன்.
நித்யா அமைதியாக அமர்ந்திருக்க, "நீ எனக்கு நாளை காலையில் யோகா சொல்லி கொடுக்கணும்..", என்று நித்யாவை வம்பிழுத்தான் மதுசூதனன்.
"குரு தட்சணை தர நீங்க தயாரா...?", என்று ஊஞ்சலில் சாய்ந்தபடி நித்யா வினவ, "அப்படி என்ன குரு தட்சணை?", என்று நித்யாவின் முகம் பார்த்து மதுசூதனன் தீவிரமாக வினவ, "தினமும் என் காலில் விழுந்து நீங்க ஆசிர்வாதம் வாங்கணும்... அதாவது உங்க குரு காலில்...", என்று நித்யா தோரணையாக கூற, மதுசூதனன் அவள் காதை திருகினான்.
"ஐயோ.. அம்மா..", என்று நித்யா ஊரை கூட்ட, "ஏன் இப்படி சத்தம் போடுற..", என்று முணுமுணுப்பாக கேட்டான் மதுசூதனன்.
"நீங்க என்னை இப்படி கொடுமை படுத்தினா..", என்று நித்யா ஊஞ்சலில் இருந்து எழுந்து சென்று பால்கனி சுவரோரமாக சாய்ந்து நின்று மதுசூதனனை பார்த்து கேட்க, "நான்.. உன்னை .. கொடுமை படுத்தறேன்.. ?", என்று மதுசூதனன் நிறுத்தி நிதானமாக நித்யாவின் அருகே சென்று அவள் முகத்தை தன் கையில் ஏந்தி நித்யாவின் கண்களை பார்த்து கேட்க, நித்யா வேகமாக தலையை இரு பக்கமும் அசைத்தாள்.
"அந்த பயம்...", என்று மதுசூதனன் கூறிவிட்டு ஊஞ்சலை நோக்கி செல்ல , "இப்படி என்னை மிரட்டினா கட்டம் கலர் மாறிடும்..", என்று நித்யா முகத்தை சுருக்கி கொண்டு செல்லமாக மிரட்டினாள்.
கம்பீரமாக சிரித்த மதுசூதனன், "ஆமாம், எனக்காக நீ போட்ட கட்டம் என்ன ஆச்சு..? உன் டைரியை எடு பார்க்கலாம்..", என்று நித்யாவிடம் ஆர்வமாக வினவ, "அதெல்லாம் காண்பிக்க முடியாது..", என்று கூறிவிட்டு அறைக்குள் நுழைந்து கொண்டாள் நித்யா.
உள்ளே நுழைத்த நித்யா, மீண்டும் மதுசூதனன் அருகே வந்து, "ரூபா விஷயம் பேசிட்டிங்களா..?", என்று தீவிரமான குரலில் மதுசூதனனிடம் கேட்டாள். "எல்லாம் பக்குவமாக பேசிட்டேன்.. இனி பிரச்சனை இல்லை..", என்று சிரித்த முகமாக கூறினான் மதுசூதனன். "இவளிடம் காயத்ரி விஷயத்தை எப்படி பேசுவது...?" , என்று சிந்தனையோடு உறங்க சென்றான் மதுசூதனன்.
மணி 11:30
மதுசூதனன் நித்திரையில் ஆழ, நித்யா சத்தம் எழுப்பாமல் கையில் ஒரு பையோடு மெதுவாக நடந்து சென்று முகிலன் அறைக்கதவை தட்டினாள்.
முகிலன் கதவை திறக்க, நித்யா அவனிடம் தான் கொண்டு சென்ற பையை கொடுத்து விட்டு, ரகசியமாக எதோ பேசினாள்.
முகிலன் மீண்டும் உள்ளே சென்று, அவன் கையோடு கொண்டு வந்த சிறு பெட்டி.., மிகப்பெரிய பையை கொடுக்க, அதை வாங்கி கொண்டு தன் அறையை நோக்கி நித்யா திரும்ப, "அண்ணி , தனியா சமாளிச்சிருவீங்களா...?", என்று முகிலன் வினவ, "இதெல்லாம் எங்களுக்கு ஜுஜுபி.. நான் எங்க வீட்டில் இருக்கிற வரைக்கும் என்னென்ன வேலையெல்லாம் பண்ணிக்கிறேன் தெரியுமா..?", என்று பெருமை பேசிவிட்டு தன் அறைக்குள் சென்றாள் நித்யா.
நித்யா அமைதியாக அறைக்குள் சென்று படுத்து சில மணித்துளிகளில் படாரென்று சத்தம் கேட்க, மதுசூதனன் பதட்டமாக கண் விழித்தான்.
கட்டங்கள் நீளும்....
நண்றி