ம(ண)னம் நிறைந்தவளே(னே)...!
அத்தியாயம் – 1
நேற்று மாலையில் இருந்து அவளின் மனதில் ஏதோவொரு இனம்புரியாத உணர்வு எழுந்து எழுந்து ஏதேதோ யோசனையில் எல்லாம் இழுத்துச் சென்றது.. காரணமே இல்லாமல் ஓவென்று கத்தவேண்டும் போல தோன்றியது.. திடீரென்று வாய்விட்டு கதற வேண்டும் போல தோன்றியது..
அதற்கு எல்லாம் விடைதேடியவளின் மனதில் விடை கிடைக்காமல் இரவு முழுவது தூக்கத்தைத் தொலைத்துவிட்டு தன்னுடைய மனதின் கேள்விகளுக்கு விடைதேடி அந்த விடியலை நோக்கி பயணித்தாள் கமழினி..
அவளின் கேள்விக்கு விடைகளா..? இல்லை அவளின் வாழ்க்கைக்கு இருளா..? என்று தெரியாமல் இரவு முழுக்க விழித்திருந்தவள் மணியைப் பார்க்க அது காலை ஐந்து என்று காட்டியதும், தனது படுக்கையைவிட்டு எழுந்தவள் நேரடியாக கடற்கரைக்குச் சென்றாள்..
அவள் கடற்கரையை அடையும் பொழுது எல்லோரும் காலை உடற்பயிற்சிக்காக கடற்கரைக்கு வந்திருந்தனர்.. இது கடற்கரையில் தினமும் பார்க்கும் ஒரு விஷயம் தான் ஆனால் அதை அவளின் மனம் விரும்பவில்லை.. அவளின் விழிகளில் ஒரு தேடலுடன் கடற்கரை மணலில் அமர்ந்தாள்..
சிவந்தவானமும் வெண்ணிற மேகமும் நீலகடற்கரையும் பார்க்க பார்க்க மனம் தெவிட்டாமல் இருக்க காலைப்பொழுது விடியலில் தனது மனதை தொலைத்த வண்ணம் கடற்கரை ஓரம் அமர்ந்திருந்த கமழினியின் விழிகள் இரண்டும் கடலில் இருந்து எழுந்த கதிரவனின் மீது இருந்தது.. மெல்ல மெல்ல எழுந்த அலைகளும் அது வேகமாக வந்து கடலின் கரையை தழுவி செல்லும் வேகமும் பார்த்தவளின் மனதில் இருந்த இறுக்கம் மெல்ல குறைந்தது...
‘கதிரவன் கடலில் இருந்து எழுவது போல தோற்றம் அளித்தாலும் கூட அவனுக்கும் கடலுக்கு எந்த சம்மந்தமும் கிடையாது.. அது நம் மூளைக்கு தெரிந்தாலும் மனதிற்கு அது தெரியாதே..! என்ன நடக்குமோ நடக்கட்டும் இனி எல்லாம் இறைவன் விட்ட வழி..’ என்று நினைத்தவளின் மனம் முழுவதும் அவனின் மீதே இருந்தது..
அவளின் மனம் நேற்று நடந்த அனைத்தும் எண்ணிப் பார்த்தது.. நேற்று மாலை அவளின் அப்பா தீடிரென்று போன் செய்து, ‘உனக்கு திருமண ஏற்பாடு செய்திருக்கிறோம்.. மாப்பிள்ளை போட்டோ மெயில் பண்ணி இருக்கிறேன் பாரு..’ என்று சொன்னதும் அவளின் மனம் திக்கென்றது..
“அப்பா..” என்று அவள் ஏதோ சொல்ல வர, “கமழினி எல்லாம் பேசி முடிச்சாச்சு.. உனக்கு அவருக்கும் பத்து பொருத்தம் சரியாக இருக்குமா..! இதுக்கு மேல் உன்னோட விருப்பம் என்பது தேவை இல்ல.. இருந்தாலும் காலகட்டம் மாறிபோச்சு.. அதுதான் அவரோட போட்டோ வாங்கி உனக்கு மெயில் பண்ணி இருக்கிறேன்..” என்று அழகர் சொன்னதை மட்டும் கேட்டாள் கமழினி..
அந்தநேரம் அவளை சுற்றிலும் நாலாபுறமும் சுவர் எழுந்து தன்னை அதற்குள் வைத்து பூட்டுவது போலவே தோன்றியது.. அதன்பிறகு, “சரிங்கப்பா..” என்ற வார்த்தையைத் தவிர அவளால் வேறு எதுவுமே பேசமுடியாமல் போனது..
அவர் மற்றது எல்லாம் பேச அவளின் மனம் அவர் சொன்னதைக் காதிலேயே வாங்காமல், “அப்பா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. நான் அப்புறம் பேசுகிறேன்..” என்று சொல்லிவிட்டு அவர் சரியென்று சொல்லும் முன்னே அவளின் அழைப்பைத் துண்டித்து படுக்கையின் மீது வீசினாள்..
பிறகு ஏதோ நினைவு தோன்ற செல்லை எடுத்து மெயில் ஓபன் செய்து பார்த்தாள்.. அவனின் பெயர், படிப்பு, வேலை எல்லா விவரமும் இருக்க அவளின் மனமோ, ‘இது எல்லாம் எனக்கு ரொம்ப தேவை பாரு..’ என்று நினைத்தவளின் மனம், ‘துகிலன்...’ என்று சொல்லிப்பார்த்தது..
அவளுக்கு இப்பொழுது திருமணம் செய்யும் எண்ணமே துளியும் இல்லை.. அதற்காக அவள் காதலிக்கிறாளோ என்று நீங்களே நினைக்காதீங்க.. அவளுக்கு காதல் எல்லாம் இல்லை ஏதோ அவளுக்கு திருமணத்தில் ஒரு ஈடுபாடு இல்லாமல் போனது அவ்வளவுதான்.. அது ஏன் என்று கேட்டால் அந்த கேள்விக்கு அவளுக்கே விடை தெரியாது..
அந்தநொடியில் இருந்து அவளின் மனதில் இருந்த நிம்மதி தொலைந்தே போனது.. அவளின் மனம் முழுக்க ஆயிரம் கேள்விகள்.. பல குழப்பங்கள்.. அதுக்கு எல்லாம் விடைதேடியே இதோ கடற்கரையில் கடலில் ஆர்ப்பரிக்கும் அலையைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருக்கிறாள் கமழினி..!
கமழினி என்ற பெயர்க்கு ஏற்றது போலவே அவளின் குணமும்..! கமழினி ரொம்ப அமைதி என்று சொல்வதை விட ரொம்ப சாது.. அவளுக்கு கோபம் என்பதே வாராது.. அப்படியே வந்தாலும் அதை மற்ற யாரிடமும் காட்ட மாட்டாள்.. அப்பா, அம்மா சொல்வதுக்கு எல்லாம் சரியென தலையசைப்பு மட்டும் தான்..
அதுக்கு என்று எல்லா இடத்திலும் அப்படி இருக்க மாட்டாள்.. தனக்கு தேவைப்படும் இடங்களில் யார் என்ன எப்படி என்று யோசிக்காமல் தனக்கு வேண்டும் என்பதை தைரியமாக பேசி வாங்கிவிடுவாள்..
அவளின் அப்பா அழகர் ஒரு ஆசிரியர். அவருக்கு எல்லாவற்றிலும் ஒரு கண்டிப்பும், எல்லாத்தையும் ஒரு ஒழுக்கத்தோடு இருக்க வேண்டும் நினைப்பவர். அவளின் அம்மா வேணி ஒரு நல்ல குடும்ப தலைவி. கணவனின் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும் என்று நினைப்பவர்.
இருவருக்கும் முதலில் பிறந்த கண்ணன் வயது 27. நன்றாக படித்துவிட்டு பெங்களூரில் இருக்கும் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைப் பார்க்கிறான்..
அடுத்து பிறந்தது கமழினி கண்ணனை விட ஐந்து வருடம் சிறியவள். கமழினி வயது 22. சின்ன வயதில் இருந்தே அப்பாவின் கண்டிப்பிலும், அம்மாவின் அரவணைப்பிலும் வளர்ந்து பழக்கப்பட்ட கமழினி தன்னுடைய வாழ்க்கையில் முடிவை எடுக்கும் தருணம் நினைத்த பொழுது வாழ்க்கையில் பதினேழு வருடங்கள் ஓடிவிட்டது..
அதன்பிறகு அவளால் எதுவும் செய்ய முடியாமல் போக பெற்றோரின் கையில் முடிவை விட்டுவிட்டு அமைதியாக இருக்க பழகிக்கொண்டாள்.. அவர்கள் எது சொன்னாலும், “சரி..” என்ற வார்த்தையைத் தவிர வேற எந்த வார்த்தையும் அவளின் வாயில் இருந்து வந்ததே இல்லை..
மஞ்சள் நிறத்தில் சிவப்பு வண்ணத்தில் டிசைன் செய்யப்பட்ட சுடிதாரில் ஐந்தரை அடி உயரம், மாநிறம், அளவான நெற்றியும், அழகிய வில் போன்ற வளைந்த புருவமும், மனதை மறைக்கும் கண்களும், கூர்மையான நாசியும், சிவந்த இதழ்களும் அந்த இதழில் இருக்கும் அழகிய மச்சமும், இடைவரை வளர்ந்த கூந்தலும் பார்க்க பார்க்க ஒரு அரளி பூவின் மனம் போல அவளின் அழகில் அப்படி ஓர் மென்மை..!
தன்னுடைய படிப்பிற்கு மட்டும் அவர்களிடம் எதிர்த்து பேசி இப்பொழுது கன்னியாகுமரியில் இருக்கும் மருத்துவக்கல்லூரி இறுதி வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள்.. இப்பொழுது அழைத்து திருமணம் சொன்னால் அவளுக்கு இதுவரை இருந்த நிம்மதி பறிபோய் மனதில் குழப்பம் சூழ்ந்தது..
அவளின் மனதில் குழப்பங்கள் சூழ்ந்திருக்க அந்த குழப்பங்களுக்கு விடையைத் தேடியபடியே விடியலின் அழகில் மனதை தொலைத்து முக்கடலின் சங்கமத்தையும், கதிரவனின் உதயத்தையும் பார்த்தபடி மணலில் அமர்ந்திருந்தாள்.. அந்த காலைபொழுது மனதை வருட உதடுகள் தானாகவே அசைந்தது..
“நிழல் போல நானும்... ஆ... ஆ.. ஆ...
நிழல் போல நானும் நடைபோட நீயும்..
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்..
கடல் வானம்கூட நிறம் மாறக்கூடும்..
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது..” என்று பாடியது.. அவளின் விழிகள் இரண்டும் கதிரவனின் உதயத்தைப் பார்த்தது.. அவளின் மனதில் இருந்த இறுக்கம் தளர பாட்டு வரிகள் அழகாகவே வந்தது..
Last edited: