NYC starting‘என்னடி ஆச்சு உனக்கு இப்படி அமர்ந்திருக்க..?! உனக்கு பிடித்தாலும், பிடிக்கவிட்டாலும் மாப்பிள்ளை இவர்தான்.. பிடிவாதம் பிடிக்காமல் கைகாட்டும் மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்ட பாரு..’ என்று ஒருமனம் கூறியது..
‘எனக்கு திருமணம் வேண்டாம்னு சொன்னால் கேட்கவே மாட்டியா..? இப்பொழுது திருமணம் செஞ்சி நான் என்ன பண்ண போகிறேன்..?! நான் இப்பொழுது தானே படிக்கவே ஆரம்பித்திருக்கிறேன்..’ என்று சலித்தபடியே கூறியது மற்றொரு மனம்..
‘இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.. எப்பொழுது பாரு வசந்த் வசந்த் வசந்த் மட்டும்தானா..?!’ என்று கேட்டதும் அவளின் முகத்தில் ஒரு புன்னகை அழகாக மலர்ந்தது.. வசந்த் கமழினியின் உயிர் தோழன். அவனின் நட்பு இன்று நேற்று ஆரமித்தது அல்ல.. அவளின் பள்ளிக்கூடத்தில் இருந்து தொடரும் நட்பு..
கொஞ்சம் வித்தியாசமான நட்பும் கூட.. என்னடா இவள் நட்பு என்று சொல்கிறாள்.. அதில் வித்தியாசம் என்று வேற சொல்கிறாள்.. என்று குழப்பிக்காதீங்க.. அவளின் அண்ணனுடன் படித்தவன் வசந்த். அண்ணனுக்கு தோழன் தனக்கும் தோழன் என்று வசந்தை தனது தோழனாக ஏற்றுக்கொண்டாள்..
‘உன்னோட அப்பா, அம்மா இந்த இடத்தையே ஓகே பண்ணிட்டாங்க இப்பொழுது என்ன பண்ணுவ..?’ என்று அவளை சோதித்துப் பார்க்க நினைத்தது அவளின் மனம்..
‘இது ரொம்ப நல்ல கேள்வி எங்க அம்மாவையே திருமணம் பண்ணிக்க சொல்வேன்..’ என்று மனதில் தோன்றிய குறுஞ்சிரிப்புடன்.. அவள் சொன்னதைக் கேட்டு அவளின் மனம் கேலியாக சிரித்தது..
‘அதை நீ என்னிடம் சொல்லலாம் உன்னோட அப்பாவிடமும், அம்மாவிடமும் சொல்ல உனக்கு தைரியம் இருக்கா..?’ என்று கேட்டதும் அவள் அமைதியாகிவிட்டாள்.. அவளின் மனமும், ‘இதுக்கு மட்டும் பதில் வராதே..’ என்று சொல்லிவிட்டு அமைதியாகிவிட அவள் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தாள்..
என்னதான் பெண்கள் படித்து பகுத்தறிவு பெற்று இந்த உலகத்தை ஆளும் பதவியில் இருந்தாலும் திருமணம் என்ற ஒன்றை மட்டும் அவர்களால் தடுக்கவே முடிவதில்லை.. திருமணம் என்பது இரண்டு மனம் இணையும் ஒரு மங்கல நிகழ்வு.. ஆனால் இப்பொழுது அது எல்லாம் மாறிவிட்டது..
மனசுக்கு பிடிக்குதோ.. இல்லையோ.. ஜாதகம் பொருந்தி வந்தால் அடுத்து திருமணம்.. இந்த திருமணத்தில் ஒருவர் மனதை ஒருவர் அறிய வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது..
காலை நேரத்தில் கடல்காற்று முகத்தில் மோத நேற்று நடந்த நிகழ்வுகளுடன் பயணித்த மனதை தடுக்கும் வழி அறியாமல் அங்கே காலை உடற்பயிற்சி செய்ய வந்தவர்களைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்..
அவளின் நினைவலைகள் அவனை நோக்கிப் பயணிக்க அந்த நினைவலையைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு, “ஏய் கமழினி..” என்று மணலைத் தூக்கி அவளின் மீது வீசினான் வசந்த்..
அவன் வீசிய மணலில் வசந்தை நிமிர்ந்துப் பார்த்த கமழினி, “டேய் எருமை ஏண்டா நீயும் என்னோட தலையில் மண்ணை அள்ளி போட்ற..” என்று எரிச்சலுடன் கத்தினாள்..
அவள் கத்தியதும், “டேய் வசந்த் உனக்கு நேரமே சரியில்ல..” என்று தனக்கு தானே சொல்லிக் கொண்ட வசந்தின் மனம், ‘இவள் ஏன் இப்படி சொல்ற..?’ என்று அவளைப் பற்றிய சிந்தனை அவனின் மனதில் ஓடியது..
அவளின் முகத்தை அவன் உற்று நோக்கியதும், “யாரு நான் உன்னோட தலையில் மண்ணை அள்ளிப் போடுகிறேனா..?” என்று கேட்டவன், “உன்னோட தலையில் வேற யாரோ கல்லைத் தூக்கிப் போட்டுட்டாங்க என்று நினைக்கிறேன்.. யாரது கல்லைத் தூக்கி உன்னோட தலையில் போட்டது..?” என்று கேட்டவனின் இடது புருவம் கேள்வியாக உயர்ந்தது..
அவள் தலைக்குனிந்ததும், “டேய் கமழி என்னடா ஆச்சு..” என்று கேட்டதும், “அப்பா போன் செய்தார்.. மாப்பிள்ளை பார்த்து எல்லாம் முடிவாகிவிட்டது..” என்று கூறியவளின் முகம் வாடி இருந்தது..
அவளின் அருகில் அமர்ந்த வசந்த், “கமழி யாரையாவது விரும்புகிறாயா..?!” என்று கேட்டதும் அவனின் முகத்தை நிமிர்ந்துப் பார்த்து முறைத்த கமழினி, “என்னைப் பார்த்தால் உனக்கு ரொம்ப நக்கலாக இருக்கா..? என்னைப்பற்றி தான் உனக்கு நல்லாவே தெரியுமே..” என்றவள் கோபத்தோடு கேட்டாள்..
“திருமணம் என்று சொன்ன இவளோட அப்பா, அம்மா எல்லாம் ரொம்ப நிம்மதியாக இருக்காங்க.. நண்பன் என்ற ஒரே காரணத்திற்காக என்னை மட்டும் உயிரையே வாங்குது இந்த லூசு..” என்று அவன் சொல்லவும்,
“என்னோட கோபத்தை எல்லாம் காட்டத்தான் நீ இருக்கிறாயே.. உன்னோட உயிரை நான் வாங்குகிறேனா..?” என்று அவள் வேகமாகக் கேட்டதும், “இந்த வாயை உங்க அப்பா, அம்மாவிடம் அடித்தால் இப்பொழுது இந்த பிரச்சனை வந்திருக்குமா..?” என்று அவன் கேட்டதும் கமழினியின் முகம் வாடிபோக தன்னுடைய பேச்சை நிறுத்திவிட்டு ஆர்ப்பரிக்கும் கடலைப் பார்த்தாள்..
அவள் அமைதியானதும் அவளைப் போலவே கடலைப் பார்த்த வசந்த், “நீ யாரையாவது விரும்புகிறாயா..?” என்று அவன் ஆழ்ந்த குரலில் தீவிரமாகக் கேட்டதும் அவனைத் திரும்பிப் பார்த்த கமழினி, ‘இவன் ஏன் இதே கேள்வியைக் கேட்கிறான்..?’ என்ற யோசனையுடன் அவனையே இமைக்காமல் பார்த்தாள்..
பிறகு, “இல்லடா எனக்கு யார் மீதும் காதல் இல்ல.. இப்பொழுது திடுதிடுப்பென்று திருமணம் என்றால் ரொம்பவே கவலையாக இருக்கு..” என்று கூறினாள்..
அவள் சொன்னதும் அவனின் மனமோ, ‘இவளின் சுதந்திரம் இங்குதான் சரி என்ற ஒரே வார்த்தையில் முடிந்தது.. இவளை திருமணம் செய்யும் இடத்திலாவது இவளுக்கு அந்த சுதந்திரம் கிடைக்குமா..?!’ என்று நினைத்தவன் நெற்றி யோசனையில் யோசனையில் சுருங்கியது..
அவன் யோசிப்பதைப் பார்த்த கமழினி, “இந்த போனில் தான் அவனோட போட்டோ இருக்கு.. என்னோட மெயில் ஓபன் பண்ணி பாரு..” என்று அவனின் கையில் செல்லைத் திணித்தாள்..
அவள் திணித்த வேகத்திலேயே அவளின் கோபம் அறிந்த வசந்த், “கமழி..” என்று அதட்டினான்.. அவளோ அவனின் அதட்டலை எல்லாம் கண்டு கொள்ளாது எழுந்து கரையை நோக்கிச் சென்றாள்..
வசந்த் அவளின் முகத்தைப் பார்த்துவிட்டு, “ஐயோ இவளை சமாளிக்க நான் படுபாடு பத்தாதா..? இதில் இன்னொரு ஜீவன் வேற வருகிறதா..?” தனக்கு தானே பேசிக்கொண்டே அவளின் செல்லை எடுத்து மெயிலை ஓபன் செய்து பார்த்தும் வசந்தின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது..
சிவந்த நிறமும், ஆறடி உயரத்திற்கும் சற்று குறைவான உயரமும், அலையலையாக கேசமும், நேரான நெற்றியும், அடர்ந்த புருவமும், எதைபற்றியும் கவலைபடாத அலட்சியமான கண்களும், கூர்மையான நாசியும், அழுத்தமான உதடுகளும், கட்டுகோப்பான உடலமைப்பும் பார்த்த வசந்த், “இவளுக்கு சரியான ஜோடிதான்..” என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டான்..
வசந்த் எப்பொழுதும் கமழினியின் நலம் விரும்பி. அவனுக்கு எப்பொழுதும் கமழினியின் மலர்ந்த முகம் ரொம்ப பிடிக்கும். தோழன் என்ற கண்ணோட்டத்தில் அவள் தன்னிடம் பகிரும் அனைத்து ரகசியத்தையும் தன்னோட மனதில் மட்டும் வைத்திருப்பவன்..
வசந்த் கமழினியை விட ஐந்து வருடம் பெரியவன். ஆனால் இருவரும் அந்த வயது வித்தியாசத்தை இது வரையில் உணர்ந்ததே இல்லை.. இப்பொழுது அவளின் படிப்பு கூட அவன் இங்கே இருக்கிறான் என்ற தைரியத்தில் தான் திருச்சியில் இருந்து கன்னியாகுமரி அனுப்பி வைத்திருக்கின்றனர்..
அவளின் மனதிற்கு எது பிடிக்கும் எது பிடிக்காது எல்லாம் அறிந்தவன் வசந்த். அவளிடம் அவனுக்கு பிடித்த ஒரே விஷயம் அவளின் அமைதியும் அவளிடம் இருந்து அடிக்கடி வெளிவரும் சரி என்ற வார்த்தையும் தான்..!
வசந்த் இப்பொழுது டாக்டர் படிப்பை முடித்துவிட்டும் கன்னியாகுமரியில் ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தைகள் நல டாக்டராக பணிபுரிகிறான்.. அவன் பிறந்தது, படித்தது எல்லாம் திருச்சியில் தான்.. ஆனால் திருமணம் மட்டும் பெற்றோரின் கையில் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக இருக்கும் வாலிபன்.
துகிலனின் முகம் பார்த்த வசந்த் ஆச்சர்யத்தில் மெய் மறந்து அமர்ந்திருக்க ஆர்ப்பரிக்கும் கடலோடு விளையாடிக்கொண்டு இருந்தாள் கமழினி..
ம(ண)னம் நிறைந்தவ(ளே)(னே) தொடரும்...