வீடு வாசலில் நின்ற ரோஹித் தனது வீட்டைப் பார்த்துக் கொண்டிருக்க, “ஏய் ரோஹித் இந்த ஊர் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது..” என்று கீர்த்தி சந்தோசமாகச் சொல்ல, காரை விட்டு இறங்கினாள்..
கார் வந்து நின்றதும் அங்கே கூடிய ஊர் மக்கள், கீர்த்தி அணிந்திருந்த ஜீன்ஸ், டாப் இரண்டையும் பார்த்துவிட்டு, “டேய் பெரியவன் தான் தாய் தகப்பனிடம் சொல்லாமல் திருமணம் செய்துக் கொண்டான்.. இவன் சொல்லாமலே வெளிநாட்டில் இருந்து பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டு வந்துவிட்டான்..” என்று ஒருவர் சொல்ல,
அவர் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த கீர்த்தி, “ரோஹித் அந்த பெருசை கம்முன்னு இருக்க சொல்லு.. நான் பேச ஆரமித்தால் அப்புறம் என்ன நடக்கும் என்று உனக்கே தெரியும்..” என்று பல்லைக் கடித்துக் கொண்டே கூறியவள், ரோஹித் அவர் சொன்ன வார்த்தையின் அர்த்தம் புரிந்து, அவன் கண்டுக் கொள்ளாமல் இருக்க,
“ஐயா பெரியவரே எனக்கு தமிழ் நல்ல பேசவும் தெரியும் எழுதவும் தெரியும்.. அதனால் நீங்க சொல்வது எனக்கு நல்ல புரியும்.. கொஞ்சம் நீங்க யோசித்துப் பேசுங்க..” என்று அவரைப் பார்த்து நக்கலாகக் கூறிய கீர்த்தி,
“ஒரு பொண்ணு உங்க ஊருக்கு வந்தால் இப்படித்தான் வரவேற்பு கிடைக்குமா..?! நல்ல வரவேற்பு..” என்று சொல்ல அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் நின்றிருந்தனர்..
“கீர்த்தி கொஞ்சம் பேசாமல் இரு..!” என்று ரோஹித் அவளைக் கண்டிக்க, அவளோ அவனை முறைத்தாள்..
“டேய் மாணிக்கம் யாருடா இந்த பொண்ணு..?” என்று பெரியவர் கேட்க, “அவள் ரோஹித்தின் தோழி இந்த ஊரைச் சுற்றிப் பார்க்க வந்திருக்கிறாள்..” என்று மாணிக்கம் அவருக்கு விளக்கம் கொடுத்தார்.
அதற்குள் கல்யாணி ஆரத்தி தட்டுடன் வந்து மகனுக்கும், மகளுக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றார்
சரவணன் அவளின் கேள்வியையும் அவளின் துணிச்சலையும் கண்டு கொஞ்சம் பிரமித்து, ‘சரியான வாயாடி போல, போட்டால் பாரு ஒரே போடாகா! அம்மாடியோ இவளிடம் கொஞ்சம் ஜாக்கரதையாக இருக்க வேண்டும்..’ என்று மனதில் சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தான்..
ரோஹித்துடன் கீர்த்தி வருகிறாள் என்று முதலிலேயே தெரிந்த காரணத்தால் மாடியில் அவளுக்கு என்று தனியாக ஒரு அறையை ஏற்பாடு செய்திருந்தனர் ரோஹித்தின் பெற்றோர்..!
வீட்டிற்குள் நுழைந்த கீர்த்தி வீட்டை நுணுக்கமாக பார்க்க ஆரமித்தாள்.. அந்த வீட்டில் உள்ளே நுழைந்தவுடன் முதலில் சமையல் அறை, அதற்கு பக்கத்தில் டைனிங் ஹால், அதைக் கடந்து உள்ளே சென்றால் சாமி ரூம், அதற்கு பக்கத்தில் ஹால், ஹாலைத் தாண்டி மாணிக்கம், கல்யாணி இருவரின் படுக்கை அறை, பக்கத்திலேயே விருந்தினர் அறை இருந்தது
மேலே மாடியில் ரோஹித்தின் அறை, அதற்கு பக்கத்திலேயே புத்தகம் அடுக்க தனியாகவே ஒரு அறை.. மற்றும் இன்னும் இரண்டு மூன்று விருந்தினர் அறையும் இருந்தது..
கீர்த்தியின் பக்கம் திரும்பிய கல்யாணி, “நீ மேலே உள்ள விருந்தினர் அறையில் தாங்கிக்கொள் கீர்த்திம்மா..” என்று சொல்ல
“சரிம்மா..” என்று சொன்னவள் அவளின் உடமைகளை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்
“ரோஹித் நீயும் போய் குளித்துவிட்டு ரெஸ்ட் எடுப்பா..” என்று மாணிக்கம் சொல்ல, அவரின் முகத்தை ஒரு அழுத்தத்துடன் பார்த்தான் ரோஹித்
அப்பொழுதான் வீட்டின் உள்ளே நுழைந்த சரவணன், அவனின் பார்வைக்கண்டு அப்படியே நிற்க, “அப்பா அண்ணா எங்கே..? அவன் எங்கே இருக்கிறான்..?” என்று மெதுவாக ஆனால் அழுத்தமாகக் கேட்டான்
அவனின் கேள்வியில் அவனின் தந்தை மாணிக்கம், ஒன்றும் சொல்லாமல் அமைதியாக நிற்க, கல்யாணி கண்ணீர் வடித்தார்.. இந்த கேள்வியை இவனிடம் எதிர்பார்த்த சரவணனும் அமைதியாகவே இருந்தான்..
“அவன் இங்கே இல்லை ரோஹித்.. அவன் எங்களுக்கே தெரியாமல் திருமணம் செய்துக் கொண்டான்..” என்று அவர் கூற
“அப்பா அவனுக்கு தான் தன்னோட வாழ்க்கை முக்கியம் என்று திருமணம் செய்துக் கொண்டான்.. நீங்கள் ஏன் அவனை ஏற்றுக்கொள்ளவில்லை..?” என்று தந்தை நோக்கி அடுத்த கேள்வியைக் கேட்டான்
“நான் ஒன்றும் காதலுக்கு எதிரி கிடையாது ரோஹித்! அதை முதலில் நீ தெரிந்துக்கொள்.. அவன் மேல் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.. அவன் எங்களிடம் சொல்லியிருந்தால் கண்டிப்பாக அந்த பெண்ணையே திருமணம் செய்து வைத்திருக்க மாட்டோமா..?” என்று ஆதங்கத்துடன் கேட்டார்..
அவரின் கேள்வியில் இருந்த நியாயம் அவனின் மனதிற்கும் புரிந்தது.. அவனின் மனம், ‘அவன் எந்த நேரத்தில் பின் விளைவைப் பற்றி யோசித்திருக்கிறான்..?’ என்றே கேட்டது
“சரிப்பா அவன் தப்பே செய்திருந்தாலும் இப்படித்தான் அவனை ஒதுக்கி வைப்பதா..? அவனை அழைத்துவர வேண்டியது தானே..?” என்று கேட்டான் ரோஹித்
“ஏன் அவன் இருக்கும் இடம் உனக்கு தெரிந்தால் அழைத்து வா.. நாங்கள் வேண்டாம் என்று சொல்லவே இல்லையே..” என்று கல்யாணி கணவனை முந்திக்கொண்டு மகனுக்கு பதில் கொடுத்தார்
இவர்களின் உரையாடலைக் கேட்ட சரவணன், ‘அவனை அழைத்துவர முடியாதே.. அவன் இந்த பூலோகம் விட்டு மேல் லோகம் சென்றே இரண்டு வருடம் ஆகிவிட்டதே..!’ என்று அவனின் மனம் ஊமையாக அழுதது
“சரிம்மா நான் அவன் எங்கே இருக்கிறான் என்று தேடிப்பிடித்து உங்களின் கையில் ஒப்படைக்கிறேன்..” என்று சொன்னவன் மாடியின் படிகளில் ஏறியவன்,
“அம்மா நான் தாத்தா – பாட்டி இருவரையும் சென்று பார்த்துவரவா..?” என்று கேட்டான்
“ம்ம் சரிப்பா.. அப்படி போகும் போது கீர்த்தியையும் உடன் அழைத்துச் செல்.. அவள் அங்கே இருக்கும் இடங்களைச் சுற்றிப் பார்க்கட்டும்..” என்று சொல்ல
“ம்ம் சரிம்மா.. இரண்டு நாள் இங்கே இருக்கிறேன்.. அப்புறம் நான், கீர்த்தி இருவரும் குற்றாலம் செல்கிறோம்.. பாட்டி தாத்தாவிடம் சொல்லாதீங்க.. சப்ரைஸ் ஆக இருக்கட்டும்..” என்று சொல்லி புன்னகை சிந்தியவன் அவனின் அறைக்கு சென்றான்
மாணிக்கம் அவரின் வேலையைப் பார்க்க செல்ல, கல்யாணி சமைக்க சென்றார்.. சரவணன் யோசனையுடன் நின்றிருந்தான்..
அவனின் அறைக்குள் நுழைந்தவுடன், அந்த அறையில் இருந்த அவனின் அலைமாரியை திறந்து அதில் ஒரு போட்டோவை எடுத்தான்
அந்த போட்டோவில் புன்னகை சிந்திக்கொண்டிருந்தாள் மதுமிதா.. அந்த போட்டோவை தனது நெஞ்சோடு வைத்து அணைத்துக் கொண்டவன்,
“இந்த உலகத்தில் எங்கே சென்றாலும் உன்னை நேசித்த இந்த நெஞ்சம் மட்டும் வேறு யாரையும் நேசிக்க விடுவதே இல்லை..” என்று சொன்னவன்,
“ஏழுவருடம் போராடி போராடி அந்த போராட்டத்தில் தோற்று திரும்பவும் வந்திருக்கிறேன்.. என்னைப் போலவே நீயும் எனக்காகவே காத்திருப்பாய் என்ற நம்பிக்கையில்..!”
“நீ சொன்ன ஒரு வார்த்தைக்கு நான் கொடுத்த தண்டனை காலம் முடிந்தது.. நான் உன்னை தேடி வருவேன்..” என்று சொல்ல அவனின் கண்கள் அவனின் கட்டுப்பாடுகளை மீறிக் கலங்கியது
அதேநேரம் வாசலில் நிழலாட, அங்கே திரும்பிப் பார்த்தான் ரோஹித், அங்கே சரவணன் நின்றுக்கொண்டு இருந்தான்
தனது கண்களில் இருந்த கண்ணீரை அவன் காணாமல் மறைத்தவன், “வா சரவணா..” என்று அழைத்தான்
“நான் வருவது இருக்கட்டும் கையில் என்னடா வைத்திருக்கிறாய்..?!” என்று கேட்டான் சரவணன்
“உன்னிடம் சொல்ல முடியாது சரவணா! நான் கண்டிப்பாக ஒருநாள் சொல்கிறேன் அதுவரை இந்த விஷயம் பற்றி என்னிடம் கேட்காதே..” என்று அவனுக்கு பதில் கொடுத்தான்
“சரிடா இங்கே என்னடா நடக்கிறது..? அண்ணனுக்கு திருமணம் நடந்தது உனக்கு தெரியுமா..? நீ மதுரையில் தானே இருந்தாய்..? நீ எப்பொழுது இங்கே வந்தாய்..? நீ காதலித்த சஞ்சனா எங்கே..?” என்று அவனிடம் தனது கேள்விக் கணைகளைத் தொடுத்தான் ரோஹித்
“இந்த கேள்விக்கு என்னிடம் பதில் கிடையாது ரோஹித்..” என்று சொன்னவன், ‘காலம் யாருக்கு எங்கே என்ன வைத்திருகிறது என்று யார் கண்டார்..?’ என்று மனதில் நினைத்தவன்
“நீ திரும்பவும் அமேரிக்கா போக போகிறாயா..?” என்று மட்டும் கேட்டான் சரவணன்
“இல்லடா நான் இங்கேதான் இருக்க போகிறேன்..” என்று சொன்னவன், “நான் கேட்ட ஒரு கேள்விக்கு கூட உன்னிடம் பதில் இல்லை என்று நீ சொல்வது பொய் என்று எனக்கு நல்லாவே தெரியும் சரவணா.. நானே இதற்கு உண்டான பதில்களைக் கண்டுபிடிக்கிறேன்..” என்று கூறிய ரோஹித் குளிக்க சென்றான்
அவன் செல்வதற்கு முன்னால் அந்த போட்டோவை எடுத்து பத்திரமாக வைத்தான்..