Vathsala Raghavan
மண்டலாதிபதி
- Joined
- Jan 17, 2018
- Messages
- 239
- Reaction score
- 3,372
ப்ரியங்களுடன் முகிலன் 13
அன்றைய இரவை முகிலன் மகாலிங்கபுரம் இல்லத்திலேயே கழித்துக்கொண்டிருக்க இங்கே வருண் வீட்டில் அமுதன். அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தார் .பெரிதாக உறக்கம் வந்துவிடவில்லை வருணுக்கு.
அவருக்கென ஒதுக்கப்படிருந்த மாடி அறையில் உறங்கிக்கொண்டிருந்தார் அமுதன். அவருக்கு எப்போதுமே தூக்கத்தில் நடக்கும் வியாதி உண்டு என்பதை வருண் அறிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் கண்டிப்பாக அதை செய்திருக்க மாட்டான்
உறங்கிக்கொண்டிருந்த அமுதனுக்கு வந்தது அந்த கனவு. படுக்கையில் இப்படியும் அப்படியும் புரண்டவர் சட்டென படுக்கையில் எழுந்து அமர்ந்து குழப்பத்துடன் சுற்றும் முற்றும் பார்க்க துவங்கினார்.
திடீரென படுக்கையை விட்டு இறங்கி அப்படியே பால்கனியை நோக்கி நடக்க ஆரம்பித்தார். கண்கள் பெரிதாக திறந்து இருக்க மூளை மட்டும் உறக்கத்திலேயே இருந்தது.
‘மாதவா என்னை மன்னிச்சிடு மாதவா. என்னை மன்னிச்சிடு மாதவா. என்ன அண்ணான்னு கூப்பிடு மாதவா’ கத்திக்கொண்டே நடந்தார் மனிதர்.
பக்கத்து அறையில் அரைகுறை உறக்கத்தில் புரண்டுக்கொண்டிருந்த வருணுக்கு இவரது குரல் கேட்க குழப்பத்துடன் எழுந்து அமர்ந்தான் அவன் ‘இவர் யாரை மாதவன் மாதவன் என அழைக்கிறார்?’
உறக்கத்தில் நடந்துக்கொண்டிருந்தவருக்கு ஏதேதோ கனவுகளும் வந்துக்கொண்டிருந்தது.
‘கண்ணா நான் வேணும்னே செய்யலைடா. எனக்கு இப்படி எல்லாம் நடக்கும்னு தெரியாதுடா’ கத்திக்கொண்டே மாடிப்படி ஏறலானர் அமுதன். தனது அறைக்கதவை திறந்துக்கொண்டு வெளியில் வந்தான் வருண். அவரது அறைக்கு வந்து அவன் விளக்கை போட்டு பார்க்க படுக்கையில் இல்லை அவர்.
‘முகிலா... என்னை ஒண்ணும் பண்ணிடாதே முகிலா வேண்டாம் முகிலா. நான் கீழே விழுந்திடுவேன் முகிலா. விட்டுடு முகிலா’ கத்திக்கொண்டே இருந்தவர் மாடியின் கைப்படி சுவற்றின் மீது ஏறி இருந்தார்.
‘சார்...’ அலறினான் சரியாக அந்த நேரத்தில் மாடிப்படி ஏறி வந்த வருண். இதயமே நின்று விட்டதை போன்றதொரு உணர்வு அவனுக்கு. ‘சார் என்ன சார் பண்றீங்க? அவரை பிடித்து இழுத்து தன்னோடு தாங்கிக்கொண்டான் அவன். ‘என்னாச்சு சார்?
‘மாதவா... நீயா.. மாதவா இது? நிஜமாவா மாதவா? நிஜமாவா? கத்திக்கொண்டே இருந்தார் அமுதன்.
அவர் தூக்கத்தில் நடக்கிறார் என்றும் இன்னமும் கனவில் இருக்கிறார் எனவும் புரியவில்லை வருணுக்கு. தலை முதல் கால் வரை உச்சகட்ட பதற்றம் பரவியது அவனுக்குள்
‘சார்... யாரு சார் மாதவன்... சார் ஒரு நிமிஷம் என்னை பாருங்க. நான் வருண்’ உலுக்கினான் அவரை. அவர் தன்னிலை பெறுவதாகவே தெரியவில்லை. அவரை அப்படியே தூக்கிக்கொண்டு வந்து படுக்கையில் படுக்க வைத்தான் வருண்.
அடுத்து அவர் முகத்தில் கொஞ்சம் தண்ணீரை அவன் தெளிக்க சற்றே தெளிந்தார் மனிதர். படுக்கையில் எழுந்து உட்கார்ந்து சுற்றும் முற்றும் பார்த்தார்.
‘சார் நான் வருண் சார்.’ என்றான் அவர் அருகில் அமர்ந்தபடியே ‘என்னாச்சு சார் திடீர்னு. எதுவும் கனவு கண்டீங்களா?’
‘ம்?’ குழப்பத்துடன் அவன் முகம் பார்த்தார் அவர். ‘இப்போ மணி என்ன?
மணி இப்போ ஒண்ணு ஆச்சு. சரி எதுவும் குடிக்கறீங்களா?’ என்று கேட்டான் மாதவன்.
பதில் ஏதும் சொல்லாமல் அவர் அவன் முகத்தையே பார்த்திருக்க இண்டர்காமில் சமையல்காரரை அழைத்து இரண்டு காபிகள் கொண்டு வர சொல்லிவிட்டு அவர் அருகில் வந்து அமர்ந்தான் வருண்.
வாஞ்சையுடன் அவர் கையை பிடித்துக்கொண்டே கேட்டான் ‘யார் சார் அது மாதவன்?’
‘ஆங்? மாதவனா?’ யோசனையுடனே அவன் முகம் பார்த்தார் அமுதன்
‘ம்’ என்றான் வருண் ‘ நீங்க அப்படியே தூக்கத்திலேயே நடந்து போயிட்டீங்க போல சார்’ என்றான் அவன் மெதுவாக. ‘அப்போ அந்த பேர்தான் நீங்க சொன்னீங்க’
‘மாதவனா? மாதவன்தானே? ‘அவன்... அவன்.... ரொம்ப... நல்லவன் வருண். என்னை அவனுக்கு ரொம்ப பிடிக்கும்’ சொன்னவர் ஒரு நிமிடம் ஏதோ யோசனையில் விழுந்தார் அமுதன்.
பின்னர் ‘அவனுக்கு என்னை அண்ணான்னு கூப்பிடணும்னு ரொம்ப ஆசை’ தெரியுமா வருண்?’ ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைவெளி விட்டு விட்டு பேசினார் அமுதன்.
‘ஓ...அப்படியா? அவர் பேசும் போது அவர் முகத்தில் வந்து வந்து போன பலவித பாவங்களை படித்தபடியே கேட்டான் வருண்.
அதற்குள் காபி வர அதை வாங்கி அவர் கையில் கொடுத்தான் வருண். ‘நீங்க கொஞ்சம் காபி குடிங்க.’
காபியை குடித்துவிட்டு அவர் படுத்துக்கொள்ள வருணும் அவர் அருகிலேயே படுத்துக்கொண்டான். அவரை விட்டு செல்ல மனமே இல்லை வருணுக்கு. அவருக்கு ஒன்று என்றால இவன் உள்ளம் பரிதவித்துதான் போகிறது. ஆனால் அது ஏன் என்று அவனுக்கு புரியவில்லை
‘வருண். நான் கொஞ்சம் தூக்கத்திலே நடப்பேன். தினமும் இல்லை. திடீர் திடீர்னு. அதனாலே எங்க வீட்டிலே யாரையாவது பக்கத்திலே வெச்சுப்பேன். மாடியிலே எல்லாம் படுக்க மாட்டேன்.’ தெளிந்திருந்தார் அமுதன்.
‘ஓ,,, எனக்கு தெரியாது சார். இனி நான் வீட்டிலே இருந்தா கண்டிப்பா உங்களோட படுத்துக்கறேன் சார். நான் இல்லைனா வேறே யாரவது உங்களோட இருப்பாங்க சார் சரியா?’ என்றான் இதமாய்.
‘ரொம்ப பயந்துட்டியா வருண். ரொம்ப சாரிப்பா’
‘அய்யோ என்ன சார். நீங்க எனக்கு எந்த பிரச்னையும் இல்லை சார் நீங்க நிம்மதியா தூங்குங்க அவர் முகம் பார்த்து புன்னகைதான் வருண்’
இருவருக்குமே உறக்கம் வரவில்லை. அமுதனுக்கு குழப்பமாய் ஏதேதோ சிந்தனைகள். அவருக்கு வந்த அந்த கனவு ஏதோ ஒரு புகை போல் அவர் நினைவில் ஆடியது.
‘என்ன கனவு அது? என்ன கனவு? கனவில் வந்தது மாதவன்தானே? ஆம் அவனேதான். ஏதோ சொன்னானே? என்ன சொன்னான்? என்ன சொன்னான் அவன்? என்ன தோன்றியதோ? எது நினைவில் வந்ததோ சட்டென எழுந்து அமர்ந்தார்.
அவனும் எழுந்து அமர அவன் முகத்தை கைகளில் ஏந்திக்கொண்டார் அமுதன். அதை பார்த்துக்கொண்டே இருந்தார் சில நொடிகள்.
‘என்ன சார் புதுசா பார்க்கறீங்க?’
‘நீ வருண்தானே?’
‘ஆமாம் சார் ஏன் உங்களுக்கு சந்தேகம்’
‘இல்லபா. நீ நிஜமா வருண் இல்லையோன்னு தோணுது. என்னவோ என்னென்னவோ கனவு அதான். குழப்பமா இருக்கு.’
‘என்ன சார் குழப்பம்? என்கிட்டே சொல்லுங்க’
‘வருண். நான் இதுவரைக்கும் யார்கிட்டேயும் சொன்னது இல்லை. ஆனா உன்கிட்டே சொல்றேன். ‘என்னனவோ. எனக்கு உண்மையிலேயே முகிலனை பார்த்தா மனசுக்குள்ளே ரொம்ப பயமா இருக்கு அவன் என்னை ஏதாவது பண்ணிடுவனோன்னு பயமா இருக்கு’. அவன் கண்களை பார்த்துக்கொண்டே சொன்னார் அவர். ‘அதை வெளியிலே காட்டிக்காம இருக்கத்தான் நான் அவனோட எப்பவும் சண்டை போடறேன்’
திகைத்தே போனான் வருண் ‘என்ன சார் நீங்க. நீங்க பெத்த பையன் அவன். அதுவும்...’ என்று நிறுத்தியவன் சற்றே இடைவெளி விட்டு சொன்னான் ‘முகிலன்’ சார் அவன். அவன் அப்படி எல்லாம் பண்ணுவானா. யாருக்கு இருக்கோ இல்லையோ எனக்கு அவன் மேலே நிறைய நம்பிக்கை உண்டு?’
‘இல்லப்பா இல்ல. அவன் சித்திரை மாசம் சித்திரை நட்சத்திரத்திலே பிறந்த பையன். அவனை பொறுத்தவரை அவன் ராஜாவா இருப்பான். எல்லாரும் அவனுக்கு அடங்கித்தான் போவாங்க. ஆனா அப்பனை மட்டும் தெருவிலே நிறுத்திடுவான். அதுதான் அவன் ஜாதகம்’
‘அய்யோ சார்’ தலையில் அடித்துக்கொண்டான் வருண். ‘நீங்க இந்த காலத்திலேயும் ஜாதகம் எல்லாம் நம்பறீங்களா?
‘இல்லப்பா. ஜாதகம் மட்டும் காரணம் இல்லை. நான் நம்பற வேறே ஒரு பெரிய காரணம் இருக்கு’ படபடத்தார் அவர்
‘என்னது சார்? என்றான் வாஞ்சையுடன் அவர் கைகளை பிடித்தபடியே.
‘அது... அது வந்து.... எல்லாத்துக்கும் அந்த கண்ணன்தான் காரணம்.’.’
‘கண்ணனா அது யாரு சார்?’ அவர் எங்கே இருக்கார்?
‘முதலில் மாதவன் இப்போது கண்ணன் என்னடா இது விளையாட்டு?’ புரியவே இல்லை வருணுக்கு.
‘அவன் அவன்.. இருக்கான். அவன் இருக்கான். அவன் வந்து.. கண்ணன் என்னை அழிக்க போறான்’ சொல்ல சொல்ல அவருக்கு உடல் வியர்க்க ஆரம்பித்தது. மூச்சு அடைப்பது போல் ஒரு உணர்வு
‘சார்.. சார்...’ என்றான் கொஞ்சம் பதற்றம் சேர்ந்த குரலில் ‘நீங்க முதல்லே ரிலாக்ஸ்டா தூங்குங்க. தேவை இல்லாம நீங்க ரொம்ப யோசிக்கறீங்களோன்னு தோணுது. நாளைக்கு காலையிலே நாம எல்லாத்தையும் பேசுவோம். இப்போ நீங்க படுங்க. ப்ளீஸ் படுங்க’ அமுதனை ஆசுவாசப்படுத்தி படுக்க வைத்தான் வருண்.
அவர் ஆழ் மனதில் மிகப்பெரிய பயம் ஏதோ ஒன்று இருப்பது மட்டும் நன்றாக புரிந்தது வருணுக்கு. அவருக்கு போர்த்தி விட்டுவிட்டு தானும் படுத்துக்கொண்டவன் அவர் கையை தனது கைகளுக்குள் வைத்துக்கொண்டு தூங்க முற்பட்டான்.