spr...........mughilan and varun illa kannan and mathavan spr.....meera@muyura luvvlyy character‘முகிலன்?” மெதுவாக கேட்டார் வெங்கட்ராமன்.
‘தெரியலை சார். அவன் இன்னும் கிடைக்கலை. ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு’ சொன்னான் வருண்.
‘எங்கே அடித்தால் எங்கே யாருக்கு வலிக்கும் என இறைவன் வகுத்து வைத்த விதியிலிருந்து தப்பிக்க மூடியாமல் தளர்ந்து போயிருந்தனர் இரண்டு தந்தையினரும். பேசக்கூட சக்தி அற்றுப்போயிருந்தனர் மயூராவின் அம்மாவும், அண்ணனும்.
‘செய்தது பாவம் என்று உணர்ந்துவிட்டால் அந்த பாவத்துக்கு கொஞ்சமேனும் விமோசனம் கிடையாதா இறைவா? எதாவது மாயம் செய்து என் முகிலனை எனக்கு தர மாட்டாயா? கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார் அமுதன்.
இந்த சம்பவத்தில் தமிழகமே ஆடிப்போயிருந்தது. முகிலனது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி. எல்லாரும் கண்ணீரில் மிதந்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் அவன் உடல் கிடைக்காதது அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்திருந்தது. அங்கங்கே அவனுக்காக பிரார்த்தனைகள் துவங்கி இருந்தன.
மறுநாள் அதிகாலை நேரம். இன்னும் இருள் விலகி இருக்கவில்லை. அமுதன் அழுது அழுது அரை உறக்கத்திற்கு சென்றிருந்தார்.
‘ஷ்யாம்; என்றான் வருண் ‘அவன் விழுந்த இடத்திலே போய் பார்த்திட்டு வரலாம் வரியா? நிச்சியமா அங்கே எங்கேயாவது மயக்கமா இருப்பான்.’
‘கண்டிப்பா தலைவா. போவோம்’ கிளம்பினர் இருவரும்.. அங்கே சென்று பார்த்ததில் மேலிருந்து அவன் விழுந்த இடத்தின் நேர் கீழே இருந்தது அந்த நீர்நிலை.
‘தலைவா., தலைவா கண்டிப்பா சாருக்கு ஒண்ணும் ஆகி இருக்காது தலைவா. அவர் நேரே தண்ணியிலே தான் விழுந்திருக்கணும் தலைவா. அவர் நீச்சல் ரொம்ப நல்லா அடிப்பார் தலைவா. எப்படியும் எழுந்து வந்திடுவார் தலைவா’ உற்சாக மிகுதியில் பைத்தியம் போல் கூவினான் ஷ்யாம்.
ஆனாலும் சில மணி நேரங்கள் அந்த இடம் முழுவதும் தேடித்தேடி தோற்றிருந்தனர் வருணும், ஷ்யாமும். முகிலனின் சுவடே தெரியவில்லை.
மறுபடியும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்திருந்தனர் இருவரும். ஆனாலும் இன்னமும் சொல்லிக்கொண்டிருந்தான் வருண் ‘முகிலனுக்கு ஒண்ணும் ஆகி இருக்காதுடா’
அதே நேரத்தில் ஐ. சி. யூவில் படுத்திருந்த மயூராவின் செவிகளில் விழுந்தன அந்த வார்த்தைகள்
‘மயூரா. ஹேய்.. ரஸ்னா கொஞ்சம் கண்ணை திறந்து பாரேன்’ அந்த குரலில் அவள் உடல் மொத்தமும் குலுங்கி ஓய்ந்தது.
மறுபடியும் சிறிது நேரம் கழித்து அதே அழைப்பு ‘மயூரா. கண்ணை திறந்து பாரு. நீ என்கிட்டே ஆசைப்பட்டு கேட்டது இதுதானே. நான் உன்னை மயூரான்னு கூப்பிடனும்னுதானே. இதோ கூப்பிடறேன் பாரு. உனக்கு ஒண்ணுமில்லை கண்ணை திறந்து பாருடி ரஸ்னா’
சில நிமிடங்கள் கடக்க ஐ.சி. யூ விலிருந்து வருணிடம் ஓடி வந்தாள் அந்த நர்ஸ் ‘சார் மயூராவுக்கு முழுசா நினைவு திரும்பிடுச்சு. நல்லா கண்ணை திறந்து பார்க்குறாங்க’
திக்கு முக்காடிப்போனான் வருண். விழுந்தடித்துக்கொண்டு ஓடினான் உள்ளே. அவனை பார்த்ததும் புன்னகைத்தாள் மெல்ல. அவள் உச்சரித்த முதல் வார்த்தை ‘முகிலன்’
‘முகிலனா? அவன்..’ தடுமாறினான் வருண். அவளிடம் என்ன சொல்ல? எப்படி சொல்ல? குலை நடுங்கியது வருணுக்கு.
இல்லை அவனுக்கு எதுவும் ஆகி இருக்காது தன்னை தேற்றிக்கொண்டவன் மெல்ல சொன்னான் அவளிடம்.
‘முகிலன் நல்லா இருக்கான். ஒரு வேலையா கோவை வரைக்கும் போயிருக்கான். நாளைக்கு வந்திடுவான்.’ அந்த பதிலில் அவள் புருவங்கள் கேள்வியாய் சுருங்க அங்கே அருகிலிருந்து கேட்டது அந்த குரல்
ஆஹா....ன்’ முகிலன் கோவை போயிருக்கானா?
அந்த குரலில் வருணுக்குள் என்ன ஆனது என்று தனியாக சொல்ல வேண்டுமா என்ன? குரல் வந்த திசையில் ஆனந்தத்தின் மொத்த உருவமாய் திரும்பியவனின் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை.
அங்கே மயூராவின் அடுத்த படுக்கையில் ஆயாசமாக படுத்திருந்தான் முகிலன்.
‘டேய்... மு...கி... லா!!!’ ஐ.ஸி.யூ என மறந்து கூவினான் வருண்.
‘டேய்... டேய்.. கையிலே ட்ரிப்ஸ் ஏறுதுடா டேய்...’ என்று முகிலன் கத்தியதை கூட கண்டுக்கொள்ளாமல் அவனை இழுத்து தன்னோடு சேர்த்துக்கொண்டான் நண்பன். அவன் கண்களில் வெள்ளம்.
‘என்னடா முகிலா இப்படி பயமுறுதிட்டே?’ உனக்கு என்னமோ ஏதோன்னு நான் பைத்தியக்காரன் மாதிரி.... தெருத்தெருவா சுத்திட்டு வரேண்டா... நீ இங்கே ஒய்யாரமா படுத்திருக்கே... எங்கேடா போனே??? உனக்கு ஒண்ணுமில்லையே... ரொம்ப பயந்துட்டேன்டா நான்... நீ.. நல்லா இருக்கே இல்லே... உனக்கு ஒண்ணும் ஆகக்கூடாதுடா.... நீ என் முகிலன்டா...’ அவனை விட்டு தன்னை விலக்காமல் கதறும் நண்பனை ஆதரவாக முதுகில் வருடிக்கொடுத்தான் முகிலன். இதை ரசிப்பான புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் மயூரா.
சில நிமிடங்கள் கழித்து வருண் சுதாரித்த பிறகு நடந்ததை சொன்னான் முகிலன் ‘மலை மேலிருந்து தண்ணியிலே விழுந்துதுட்டேன் வருண். எப்படியோ நீச்சல் அடிச்சு ஏதோ ஒரு கரைக்கு போயிட்டேன். அங்கே போய் மயக்கமா கிடந்தேன் போலிருக்கு. அங்கே ஆள் நடமாட்டம் அதிகம் இல்லை. போன் தண்ணிக்குள்ளே போயிடுச்சு. அதுக்கு அப்புறம் ராத்திரி ரெண்டு மணிக்கு என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்காங்க. இப்போதான் கண் திறந்து பார்த்தா பக்கத்திலே நம்ம மயூரா வெங்கட்ராமன் படுத்திருக்காங்க..........’ அவன் அவளை பார்த்தபடியே கண் சிமிட்ட
உடல் முழுதும் வலியில் அழுந்தியபோதிலும் கஷ்டப்பட்டு அவனை முறைத்துவைத்தாள் மயூரா.
‘முகிலன் சார்..’ கூவிய படியே ஆனந்த கடலில் மூழ்கினான் அவனை வந்து பார்த்த ஷ்யாம்.
அருமையான பொக்கிஷத்தை கைக்கெட்டாத தூரத்தில் தொலைத்துவிட்டேன் என்று கதறிக்கொண்டிருந்த வேளையில், இதோ தந்தேன். வைத்துக்கொள் என இறைவன் அதை திருப்பி தந்தால் அங்கே கண்ணீர் ஒன்றே மொழியாகுமா? முகிலனின் மடியில் படுத்துக்கொண்டு அரை மணி நேரம் அழுது தீர்த்தார் அமுதன்.
இது நடந்து முடிந்து சரியாக இரண்டு மாதங்கள் கடந்திருந்தன. சென்னையில் களை கட்டி இருந்தது வெங்கட்ராமனின் வீடும் அதற்கு அருகில் இருந்த அமுதனின் மகாலிங்கபபுரம் பங்களாவும்.
தேவதையாய் தன்னை அலங்கரித்துக்கொண்டிருந்தாள் மயூரா. .புது மாப்பிள்ளையின் தோரணையில் கம்பீரமாக வலம் வந்துக்கொண்டிருந்தான் முகிலன். சினிமாக்காரர்களும் பத்திரிக்கையாளர்களும் நிரம்பி வழிந்துக்கொண்டிருந்தனர் அங்கே.
மகழ்ச்சி, ஆனந்தம், சந்தோஷம் என்றெல்லாம் வார்த்தையில் வர்ணித்துவிட முடியாத ஒரு பரவச உணர்வில் இருந்தாள் மயூரா. அவளது வாழ்கையில் இந்த நொடி இவ்வளவு சீக்கிரம் வருமென அவள் நினைக்கவில்லை. இவனுடன் எத்தனை போராட வேண்டி இருக்குமோ இதற்கெல்லாம் எனதான் நினைத்துக்கொண்டே இருந்தாள் அவள்.
சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார் வெங்கட்ராமன். அவரை இந்த நிலையில் பார்த்த பின்பு சத்தியமாய் நடந்தது எதையுமே நினைக்க தோன்றவில்லை முகிலனுக்கு. வாழ்கை எத்தனை நிலையற்றது என்பது மட்டும் தெளிவாக புரிந்திருந்தது அவனுக்கு.
சுற்றி இருக்கும் எல்லோர் மனமும் மகிழ்ச்சியில் நிரம்பி இருக்க, மங்கள வாத்தியங்கள் முழங்க மனம் நிறைந்த புன்னகையுடன் மாங்கல்யத்தை ஏற்றுக்கொண்டாள் அவன் ரஸ்னா.
ஜென்ம ஜென்மமாக வந்த கனவுகளும் ஏக்கங்களும் கைகூடி விட்ட ஆனந்தத்தில் இருவர் கண்களிலும் கண்ணீர். உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆடிக்கொண்டிருந்தான் நம் மாதவன், இல்லை இல்லை நம் வருண். இதை காணத்தானே அவனும் ஜென்ம ஜென்மமாய் காத்திருந்தான்.
அவளது அப்பா, அம்மா, அண்ணன் என அனைவரது கண்களும் நிரம்பியே விட்டிருந்தன. இமைக்க கூட விரும்பாமல் மேடையையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார் அமுதன். தனது அன்பு கணவனின் கைப்பற்றி அக்னியை வலம் வந்தாள் மயூரா.
‘வருண் சார்...’ அப்போது அங்கே ஓடி வந்து அழைத்தாள் மயூராவின் உதவி இயக்குனர் வித்யா.
‘சூப்பர் ஸ்டார் வந்திருக்கார் சார்.. அவரை வெல்கம் பண்ண வரீங்களா?’ என்றாள் அவள் அவசரமாக.
‘எஸ். பேபி இதோ வந்திட்டேன்’ சொல்லிவிட்டு அவசரமாக வாசல் நோக்கி ஓடினான் வருண். அந்த பேபியை அவன் உச்சரித்ததை அவனே அறிந்திருக்கவில்லை. சில மாதங்கள் கழித்து அவளே அவன் பேபி ஆகப்போகிறாள் என்பதை அவளும் அறிந்திருக்கவில்லை.
இரவின் தனிமை
அந்த மகாலிங்கபுரம் வீட்டு மொட்டை மாடியில் முகிலன் மார்பில் படுத்துக்கிடந்தாள் மயூரா.
‘இந்த உலகத்திலேயே மொட்டை மாடியிலே ஃபரஸ்ட் நைட் கொண்டாடுற ஆளு நீங்கதான்’ அவன் அணைப்பில் கசங்கி, முத்தத்தில் கரைந்துக்கொண்டே சொன்னாள் மயூரா. ‘பாருங்க நிலா பார்க்குது’.
அவள் வார்த்தைகளில் வெட்கத்துடன் சிரித்து மேகங்களின் பின்னால் ஒளிந்துக்கொண்டது அவர்கள் வருத்தங்கள், சோகங்கள் இப்போது மகிழ்ச்சி என எல்லாவற்றக்கும் சாட்சியாக நிற்கும் அந்த வெண்ணிலவு.
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே
அவளது கைப்பேசி இனிமையாய் இசைத்துக்கொண்டிருந்தது.
நிறைந்தது