" ராகவ் ..."
என்று ரஞ்சித் இழுக்க, கடுப்பான கிருஷ்
" டேய் , எல்லாம் உன்னாலதான். சொல்லி தான கூட்டிட்டு வந்தேன், அவளுக்கு முன்னாடி பார்த்துப் பேசுன்னு "
என்று எகிறினான்.
"முதல்ல எல்லாத்தையும் சரி பண்ணு."
ரஞ்சித்தும் ஆற்றாமையில் கத்தினான்.
அது கிருஷ்ஷை இன்னும் கோபப்படுத்தியது.
" எதைடா சரி பண்ணனும் ? நீ அழிச்சியே பொண்ணுங்களோட வாழ்க்கையை , அதை சரி பண்ணுவியா நீ ? "
" ராகவ் , அதையே சொல்லாத திரும்பத் திரும்ப . அதுதான் முடிஞ்சு போச்சே.
நடக்கவேண்டியதைப் பத்தி யோசி "
கோபமாக ஆரம்பித்துத் தன்மையாக முடித்தான் ரஞ்சித் .
இருக்கையில் சாய்வாக அமர்ந்த கிருஷ் , நெற்றிப்****** அழுத்திவிட்டுக் கொண்டான்.
சில நொடிகள் கழித்து ,
"ஹ்ம்ம் . நடக்க வேண்டியதைப் பார்த்துத்தான் ஆகணும் "
என்று சொல்லிவிட்டு ராஜஷேகரின் எண்ணிற்கு அழைத்தான். அவர் ஒரு முக்கிய விசாரணையில் இருந்தததால் அழைப்பை எடுக்காமல் இருந்தார்.
விடாமல் மீண்டும் அழைத்துகொண்டே இருந்தான் கிருஷ். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் அழைப்பை ஏற்ற ராஜஷேகர் ,
" ஹலோ , ஃபோன் அட்டெண்ட் பண்ணலன்னா பிசியா இருக்கேன்னு தெரிஞ்சுக்க முடியாதா உன்னால ? "
" அதை விட முக்கியமான வேலை இருக்குன்னு தான் கால் பண்ணிட்டே இருக்கேன்னு புரிஞ்சுக்க முடியாதா உங்களால ?"
நக்கலுடன் கிருஷ் வினவ ,
" சீக்கிரமா சொல்லு " என்று எரிச்சலுடன் அவர் மொழிந்தார் .
" நான் என்னத்தை சொல்லுவேன். டிவி பார்த்துட்டு பேசுங்க "
என்று அழைப்பைத் துண்டித்தான் கிருஷ்.
அவனின் தொனியே சிக்கலுக்கான சிக்னல் போலத் தெரிய , அவசரமாக ஃபோனில் நியூஸை ஓடவிட்டார் .
அதில் ரஞ்சித்தைக் குறித்து ஏதேதோ கூறிக்கொண்டிருந்தனர் .
தில்லுமுல்லு வேலை பல செய்து தலைமறைவு ஆன தில்லு தொழிலதிபர் என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.
ரஞ்சித் இப்படி எல்லாம் செய்தானா என்று அவருக்கு பெருத்த சந்தேகம் தோன்றியது .
உடனே அவனுக்கு கால் செய்தார் ராஜஷேகர்.
இந்தப் பக்கம் ஃபோன் அடித்ததும் ரஞ்சித் அதை எடுக்கப் போனான்.
அதற்குள் கிருஷ் தன்னிடம் தருமாறு கேட்க , எதுவும் பேசாமல் தந்துவிட்டு மேஜையின் மேல் கவிழ்ந்தான் அவன்.
" ரஞ்சித் , எங்க இருக்க ? நியூஸ்ல நீ அப்ஸ்காண்ட் ஆனதா சொல்லறாங்க."
"அட பரவால்லயே கமிஷனர் , ரஞ்சித் மேல எவ்ளோ அக்கறை உங்களுக்கு ! "
கிருஷ்ஷின் குரலைக் கேட்டதும் ரஞ்சித் தலைமறைவான ரகசியம் புரிந்து போனது அவருக்கு .
" ஓஹ் , நீ தான் எல்லாத்துக்கும் காரணமா ?"
" இல்லை , நீங்க தான் காரணம். கம் டு மை ஆஃபீஸ் சூன்."
என்று சிரித்தவாறே கூறினான் கிருஷ் .
ராஜஷேகருக்கு திடீரென ஒரு விதமான தைரியம் பிறந்தது. அவரின் காரும் RR எண்டர்ப்ரைஸ் நோக்கிப் பறந்தது .
அடுத்த அரை மணி நேரத்தில் , ராஜஷேகர் உள்ளே நுழைந்தார்.
நிம்மதியுடன் ரஞ்சித் அவரை நோக்க , கோபத்துடன் அவர் முறைத்தார்.
"வெல்கம் கமிஷனர். சீக்கிரமா தான் வந்திருக்கீங்க. இதோ தலைமறைவான ரஞ்சித் இருக்கான் பாருங்க."
கிருஷ் சொல்ல ,
"எதுக்கு இப்படியெல்லாம் பண்ற ராகவ்?" என்று ராஜஷேகர் அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டார்.
"கர்மா வில் பூமராங்."
" என்ன சொல்லற நீ ? புரியல "
அவரின் கண்கள் கூர்மை பெற்றன.
"நிஜமா புரியல? இல்லை புரிய கூடாதுன்னு நடிக்கிறீங்களா மிஸ்டர் ராஜஷேகர் "
என்று கிருஷ் எகத்தாளமாக வினவினான். அவனின் தொனியில் உள்ளுக்குள் உதறல் எடுத்தது அவருக்கு. எனினும் வெளியே காட்டிக்கொள்ளாமல் இருக்கப் பிரயத்தனப்பட்டார்.
அதுதான் முன்னமே ஸ்டேஷனுக்கு வந்து கிருஷ் அவனின் வருகை எதனால் என்று தெளிவாகக் கூறாமல் கூறிவிட்டிருந்தானே.
" சரி , நீ எவ்ளோ கேட்டாலும் தரேன். இதைப் பெருசு பண்ணாத"
என்று தோரணையுடன் கூறினார் ராஜஷேகர்.
" ஓஹ் , நீங்க கமிஷனர் தான . ப்ளீஸ் ஹாவ் யுவர் சீட் சர். "
திடீர் பணிவுடன் கிருஷ் கூற , அதிலே நக்கல் தூக்கலாக இருந்தது நன்றாகவே தெரிந்தது.
இருந்தும் அவனின் எண்ணத்தைக் கணிக்க இயலாமல் மெதுவாக அமர்ந்தார் அவர் .
முன்னே வந்து மேஜையின் மேல் கையை ஊன்றியபடி ,
"இப்பவும் அதே ஸ்டேட்மெண்ட் தான? . எவ்ளோ கேட்டாலும் தருவீங்களா ? இல்ல, பொதுவா டேபிளுக்கு கீழ காசு வாங்க கையை நீட்டி தான உங்களுக்குப் பழக்கம் . அதான் கேட்டேன். "
அவன் கூறியதும் கோபம் மேலோங்க படக்கென எழுந்தார் ராஜஷேகர்.
"மைண்ட் யுவர் வோர்ட்ஸ். யாரைப் பார்த்து என்ன பேசற ? நானெல்லாம் காரியம் ஆக காசு வாங்கவே மாட்டேன்.
யாரோ கொஞ்ச பேரு அப்படி இருக்கலாம் . அதுக்காக ஒட்டுமொத்த போலீஸ் டிப்பார்ட்மெண்டும் இதே மாதிரி தான்னு சொல்லுவியா நீ ? "
இவர்கள் பேசுவதை அத்தனை நேரம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த தர்ஷினி ,
ராஜஷேகர் இவ்வாறு கூறியவுடன் சீறி எழுந்தாள்.
"போதும் நிறுத்துங்க சர். ரொம்ப பெரிய உத்தமர் மாதிரி பேசாதீங்க. ஒட்டுமொத்தமா ஒன்னும் குறை சொல்லல.
உங்களைத் தான் சொல்லறோம். நீங்க காசு வாங்கி காரியத்தை முடிச்சு தந்ததே இல்லையா?"
சரியான டென்ஷனுடன் வந்தவர் அறையினுள்ளே தர்ஷினி இருந்ததையே பார்த்திருக்கவில்லை.
அவள் வந்து இவ்வாறு கேட்பாள் என்று அவர் நினைத்தே பார்த்ததில்லை .
ஒரு நொடி அவரின் பார்வை ரஞ்சித்தை எரிச்சலுடன் தொட்டு மீண்டது .
அதைக் குறித்துக் கொண்ட தர்ஷினி ,
" அவன் அம்பு தான் சர் . அதுல விஷத்தை தேய்ச்சு விட்டது நீங்க தான்னு இப்ப தான் எங்க அண்ணா சொன்னான் . "
என்று ஆராயும் பார்வையுடன் கூறினாள் .
ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை வெளிப்படுத்திய ராஜஷேகர் , இதை இன்றே முடிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.
"சரி , அதான் சொல்லிட்டான்ல . இப்ப என்ன பண்ணனும்னு சொல்றீங்க ரெண்டு பேரும் ? சுத்தி வளைக்காம பேசுங்க "
என்க, அடுத்த நொடி பக்கென தர்ஷினி சிரித்தாள் .
" நீங்க எதுவும் பண்ண வேண்டாம் சர் . நாங்க தான் பண்ணனும் இப்ப . என்ன கரெக்ட் தான அண்ணா !? "
என்று அவள் கிருஷை நோக்க , அவனும் கட்டை விரலை உயர்த்திக் காட்டிப் புன்னகைத்தான்.
ரஞ்சித் அதைக் கண்டு , எதுவும் செய்ய வேண்டாம் என்று பழைய பல்லவியையே பேசி படுத்தி எடுக்க , ராஜஷேகரோ என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார்.
அப்பொழுது ராஜஷேகருக்கு டி.ஜி.பி கால் செய்ய , பதறி அடித்துக் கொண்டு அழைப்பை எடுத்தார் அவர்.
அந்தப் பக்கம் என்ன சொல்லப்பட்டதோ , ராஜஷேகரின் முகம் வெளிரிப் போனது . அவர் ஃபோனை வைத்ததும் ,
"என்ன கமிஷனர்?ரொம்ப நல்ல செய்தி போல" என்று கிருஷ் ஆர்வமுடன் கேட்டான்.
"டிஜிபி வரைக்கும் போயிட்டியா ? அவர் கிட்ட எல்லாம் எப்படி பேசுன இதைப் பத்தி ?"
அவர் கடுப்பின் உச்சத்தில் கத்தினார் .
" அட, அவர் நம்ம தோஸ்த் தான். அதுனாலதான் இன்னமும் நீங்க உயிரோட இங்க நின்னு பேசறீங்க.
இல்லன்னா இத்தனை நேரம் எமலோகத்துல என்டர்டெயின்மெண்ட் பண்ணிட்டு இருந்திருப்பீங்க தெரியுமா "
ராஜஷேகரை ஆழமான பார்வை பார்த்துக் கொண்டே அவன் சொல்ல , பிரமிப்பின் உச்சத்தில் தர்ஷினி இருந்தாள்.
சொல்லப்போனால் அவளுக்கு மிகவும் பெருமையாகக் கூட இருந்தது.
"போதும் ராகவ். திஸ் இஸ் யுவர் லிமிட் . சும்மா பூச்சாண்டி காட்டாத.
என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும் . உன்னை உண்டு இல்லைன்னு பண்ணியே தீருவேன்"
என்று ராஜஷேகர் வெறி வந்தது போல் கூறிவிட்டு விடுவிடுவென வெளியேறப் போனார்.
" உங்க பொண்ணு இப்ப என் கஸ்டடில தான் இருக்கா மிஸ்டர் கமிஷனர் "
என்ற கிருஷ்ஷின் குரலில் அப்படியே ரிவர்ஸ் கியர் போட்ட காரைப் போல் திரும்பி வந்தார்.
"சொல்லு , என் பொண்ணு எங்க இருக்கா ? மவனே அவளுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு , உன்ன சும்மாவே விட மாட்டேன் "
" அடடே உன் பொண்ணுன்னா பதறுதோ ! இதுவே ரெட் லைட் ஏரியாக்கு அப்பாவிப் பொண்ணுங்களைக் கடத்தி அவங்க வாழ்க்கையை ஒரே அடியா அழிச்சப்போ ஒன்னும் தெரியலையோ??
இதோ இவனெல்லாம் ஒரு ஆளு . இவன்கிட்ட காசு வாங்கிட்டு கம்பிளைண்ட் வந்தாலும் கண்டுக்காம இருந்து , சம்பவத்தை மூடி மறைச்சுட்டு இருக்க நீ .
உனக்கென்ன வந்துச்சு அதுனால??? காசுக்கு காசு , இவனுக்கென்ன சுகத்துக்கு சுகம். கேவலமா இல்லயாடா உங்களுக்கெல்லாம். "
என்று அங்கிருந்த பூச்சாடியைத் தூக்கி வீசி எறிந்தான் கிருஷ்.
செந்தணலைப் போல் முகம் மாறிவிட்டிருந்தது அவனுக்கு.
ஆனாலும் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ரஞ்சித் மெல்லப் பேசினான் .
" ராகவ் , இதைப் பாரு . நான் பண்ணது பெரிய தப்புதான். ஆனாலும் திருந்தி வாழ ஒரு சான்ஸ் எவ்ளோ பெரிய குற்றவாளியா இருந்தாலும் தரலாம்."
" இப்ப வரைக்கும் வெளில நீ பண்ண இந்த அசிங்கமான வேலைய நான் சொல்லலை.
எல்லாரும் நீ ஏதோ கொள்ளையடிச்சுட்டு ஓடிப் போனதா நினைச்சிட்டு இருக்காங்க .
ஆனா நீ கொள்ளையடிச்சது காசு இல்ல , பெண்களோட மானத்தன்னு நான் சொன்னேன்னு வை , நடக்கறதே வேற. "
என்று சொல்லியவன் , அங்கிருந்த பாட்டிலில் இருந்து நீரை வேகமாகப் பருகினான் .
தர்ஷினியிடம் சென்று ஏதோ கேட்டவன் , ராஜஷேகரை நோக்கி,
"இவனுக்கு ஒரு சான்ஸ் தரேன். குற்றவாளிக்கு சான்ஸ் இருக்காமே!! அவனா செத்து போறானா இல்லை நீங்க சுட்டு சாகறானான்னு கேட்டு சொல்லுங்க .
உங்க பொண்ண அப்ப தான் கண்ணுல காட்டுவேன் "
என்று சொல்லிவிட்டு தர்ஷினியிடம் ,
"தர்ஷு, இவங்களை நம்ம RS புரம் பங்களால தங்க வைக்கணும். ஒன் டே டைம் தரலாம். அதுக்குள்ள நல்ல முடிவு வரட்டும் "
முடிவு என்பதை அழுத்திக் கூறிவிட்டு ரஞ்சித்தின் கதறலையும் ராஜஷேகரின் பொருமலையும் கேட்காமல் யாரிடமோ பேசினான்.
அடுத்த சில நொடிகளில் குண்டுகட்டாக இருவரையும் அங்கிருந்து சிலர் அப்புறப்படுத்தி RS புரம் பங்களாவை நோக்கி வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்றனர்.
இங்கே நடந்தது என்ன என்று அறியாமல் , நடப்பது என்ன அறிய முடியாமல் நடக்கப்போவதை அறிய முற்படாமல் படாரெனக் கதவைத் திறந்து புயலென வீட்டினுள் நுழைந்தாள் வைஷாலி.
மனம் முழுவதும் ஆத்திரம் நிரம்பி வழிய பேகைத் தூக்கி எறிந்தபடி அங்கே இருந்த சோபாவில் அமர்ந்தாள்.
சத்தம் கேட்டு கிச்சனில் இருந்து வந்த சிவசங்கரி சடன் பிரேக் போட்டு நிற்க , பின்னோடு வந்த சத்யவதி சிலை போல் சமைந்தார்.
" ம்மா , ஒரு கப் டீ . நல்ல சூடா போடு "
நிமிர்ந்து பாராமல் அவள் கூற , இரு தாய்மார்களும் வெவ்வேறு மனநிலையில் அப்படியே நின்றனர்.
பதில் வராமல் போகவே கண்களை உயர்த்திப் பார்த்த வைஷாலி , அடுத்த நொடி
" ம்மா "
என்று கூவியபடி ஓடினாள் .
சொக்கட்டான் பார்வை தொடரும்...