• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Solladi sivasakthi - 10,11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
சிவசக்தி இல்லம்


பல நதிகள் ஒன்றிணைந்த சமுத்திரமே சிவசக்தி இல்லம் என்று சொல்லலாம். எங்கேயோ பிறந்து பல கரடு முரடான பாதைகளில் பயணித்து பின்னர் தூற்றப்பட்டு தூய்மையிழந்து பயணப்பட்ட அந்த நதிகள் எல்லாம் சமுத்திரத்தில் சென்று சங்கமிக்கிறது. அதே போல் பல மோசமான சூழ்நிலைகளை கடந்து வழித்தவறி வலியோடு ஒன்றிணைந்த பல பெண்கள் சங்கமித்தது சிவசக்தி இல்லத்தில்.

அங்கே வாழும் எல்லாப் பெண்களுமே தங்களுக்கென்ற ஒரு உறவுமுறையை வளர்த்துக் கொண்டு ஜாதி மத இன வேறுபாடுகளின்றி ஒரு சமுத்துவம் நிறைந்த குடும்பமாய் திகழ்ந்தனர். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் நிறைய சோகப் பின்னணிகள் இருந்த போதும் அவற்றை எல்லாம் அந்த வீடு மறக்கடித்தது. அங்கே யாரையும் கண்ணீரோடு பார்க்கவே முடியாது. எங்கே பார்த்தாலும் பேச்சு சத்தமும், சிரிப்பு சத்தமும் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

பார்வதியம்மாள் அந்த இல்லத்தின் மூத்த பெண்மணி. அங்கே இருக்கிற எல்லாப் பெண்களுக்கும் தாயென்றே சொல்லலாம். ஆனால் தன் வாழ்வில் இல்லற சுகத்தை அனுபவிக்காத முதிர் கன்னி. குடும்பத்திற்காக ஓடி ஓடி தன் வாழ்க்கையையும் வயதையும் தொலைத்துவிட்ட பார்வதி திருமணம் ஆன தன் தம்பி தங்கையால் நிராகரிக்கப்பட்டாள். அவள் பிறகு விரக்தியோடு சிவசக்தி இல்லத்தில் இணைந்து கொண்டாள். இன்று அந்த வீட்டின் எல்லாப் பெண்களையும் வழிநடத்துபவள்.

மரியா அந்த இல்லத்தில் எல்லோருக்குமான தமக்கை. பதினைந்து வயதில் காதலெனும் மாயைக்குள் சிக்குண்டு தாயாகியவள். தாய்மை என்பது கடவுள் பெண்களுக்கு அளித்த வரமா சாபமா என்பது புரியாத புதிர்தான். அவளின் மகள் ஆனந்தி இன்று மருத்துவ படிப்பின் கனவோடு பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள்.

ஞானசரஸ்வதி குழந்தையைப் பெற்றெடுக்க முடியாமல் மலடி என்ற பட்டம் சூட்டப்பெற்று கணவனால் கைவிடப்பட்டவள்.

கமலம் குடிகார கணவனுக்கு வாக்கப்பட்டு கடைசியில் அவன் நோய்வாய்ப்பட்டு இறந்து போக பாதுகாப்புக்கென அந்த இல்லத்தை வந்தடைந்தாள். இன்று அந்த இல்லத்தில் உள்ளவர்களுக்கு ருசிகரமான சமையல் செய்யும் காரிகை.

வனிதா காதலித்து குடும்பத்தை எதிர்த்து திருமணம் முடித்தவள். மாமியார் கொடுமை, கணவனின் கண்டு கொள்ளாமை அவற்றைச் சகித்து கொள்ளமுடியாமல் துணிவோடு திருமண உறவை உதறி எறிந்தாள். பலமுறை அவள் கணவன் அழைத்தும் நான் காதலித்தவன் நீ இல்லை என்று நிராகரித்துவிட்டு நம்பிக்கையோடு வாழ்பவள். அவளின் மூன்று வயது மகன் கண்ணன் அந்த வீட்டின் ஒரே ஆண் பிள்ளை. எல்லாருக்கும் செல்ல பிள்ளை. நிறையத் தொல்லை செய்யும் பிள்ளை. வீட்டில் உள்ள எல்லாப் பெண்களையும் ஆட்டிவைக்கும் சேட்டைக்காரன்.

இவர்கள் தாம் இப்போதைய சக்தியின் ஆதரவான நெருங்கிய உறவுகள். அவர்கள் எல்லோரும் தங்களின் சுயவேலைகளின் மூலமாகச் சுதந்திரமாக செயல்பட்டு வந்தனர். இன்னும் சில பெண்கள் சிவசக்தி இல்லத்திற்கு வந்த பின் அவர்கள் வாழ்க்கை சீரமைக்க பெற்று அவர்கள் குடும்பத்தோடு இணைந்திருக்கின்றனர்.

விமான நிலையத்தில் இருந்து பயணித்து சக்தி இரவு வெகுநேரம் கழித்து இல்லத்தை வந்தடைந்தாள். சக்தி கதவினை தட்ட ஆனந்தி கதவை திறந்தாள். திறந்த மாத்திரத்தில் சிவசக்தியின் கழுத்தை கட்டிக் கொண்டு "உங்களை நான் ரொம்ப மிஸ் பண்ணேன் அக்கா" என்றாள்.

சக்தி அவள் முதுகினில் தடவியபடி "இன்னுமா நீ தூங்கல ஆனந்தி" என்றாள்.

"நாளைக்கு எக்ஸேம்...அதான் படிச்சிட்டிருந்தேன்"

"ம்.. நீ போய் படி " என்று சக்தி அவள் எடுத்து வந்த பேகை ஓரமாய் வைத்து விட்டு அந்த அறையிலிருந்த சோபாவில் சாய்ந்தபடி அமர்ந்து கொண்டாள்.

"இன்னைக்கு வரன்னு சொல்லவே இல்ல... ஏன் டல்லா இருக்கீங்க... என்னக்கா... மூட் ஆஃபா... " என்று ஆனந்தி சக்தியின் அருகில் வந்தமர்ந்தபடி கேட்டாள்.

"நான் இன்னைக்கு வருவேனான்னு எனக்கே தெரியாது...... எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு... அவ்வளவுதான்... இப்படியே கொஞ்ச நேரம் உட்கார்ந்திருக்கேன்..." என்று சோர்வோடு சொன்னாள் சக்தி.

"சரி சாப்பாடு எடுத்துட்டு வரவா" என்று ஆனந்தி பரிவோடு கேட்டாள்.

"எனக்கு ஒண்ணும் வேண்டாம்... நீ போய் படி" என்று அவள் தோள்களை தட்டி போகச் சொன்னாள் சக்தி. நம்முடைய உறவுமுறைகளே பல நேரங்களில் இயந்திரத்தனமாய் இருக்க ஆனந்திக்கும் சக்திக்குமான சகோதரத்துவம் அற்புதமாய் இருந்தது.

இருளெனும் போர்வையை விலக்கிக் கொண்டு ஆதவன் விழித்தெழச் சக்தியின் மனோநிலை வீட்டில் உள்ள எல்லோரின் அக்கறையாலும் விசாரிப்பினாலும் கொஞ்சம் தெளிவுபெற்றாள்.

சக்தி தன் அறையில் உள்ள கப்போர்ட் கதவிலிருந்த பொருட்கள் எல்லாம் கலைக்கப் பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியானாள்.

சக்தி வனிதாவிடம் நேராய் வந்து "அந்தக் கண்ணன் எங்க... என் திங்க்ஸ் எல்லாத்தையும் கலைச்சதில்லாம என் புக்ஸ் எல்லாத்திலயும் கிரயான்ஸ்ல கிறுக்கி வைச்சிருக்கான் கா... "என்று கோபம் கலந்த வருத்தத்தோடு சொன்னாள்.

"எனக்கு இதுக்கும் சம்பந்தமில்ல சக்தி... அவன் எப்போ இதெல்லாம் செஞ்சான்னு எனக்கும் தெரியல... ஆள வேற காணோம்" என்று வனிதா பதிலுரைத்தாள்.

அந்த வீட்டில் அத்தனை பெண்கள் இருந்தும் அவன் ஒருவனை சமாளிக்க முடியாமல் எல்லோருமே திணறினர். சக்தி வீட்டைச் சுற்றிலும் தேட அவன் எங்கே ஒளிந்திருக்கிறான் என்று அவளால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

"டே... கண்ணா எங்க இருக்க?... வந்துரு.. அப்புறம் உதைதான்... பாத்துக்கோ" என்று சக்தி கோபமாய் அழைக்க அவன் கண்ணன் என்ற பெயருக்கு ஏற்றாற் போல் மாயமாய் தம் சேட்டைகளைச் செய்து விட்டு மறைந்து கொண்டான்.

"ஆனந்தி" என்று சக்தி அழைக்க

"என்னக்கா ?" என்று வினவியபடி வந்தாள் ஆனந்தி.

"நான் வாங்கிட்டு வந்த சாக்லேட்ஸ் பேக்ல இருக்கு எடுத்துட்டு வா" என்று சத்தமாய் சொல்ல சக்தியின் தந்திரம் நன்றாகவே வேலை செய்தது.

கண்ணா தானாகவே வெளியே வந்து "எனக்கு சக்தி" என்றான்.

"தர்றேன் நிறைய தர்றேன்.. மாட்டினாயா... கண்ணா பக்கத்தில வந்திரு..." என்று சக்தி அவன் பின்னாடி ஓட்டம் பிடித்தாள்.

"என் கப்போர்ட்டை எதுக்கடா கலைச்ச... ஓடாத... வந்தன்னே... நிறைய சாக்லேட்ஸ் தருவேன்" என்றாள். இந்த முறை அவன் சுதாரித்து கொண்டு "போ சக்தி... நீ பொய் சொல்ற" என்று சொல்லியபடி தோட்டத்திற்குள் ஓட அங்கே பார்வதியம்மா பின்னாடி ஒளிந்து கொண்டு "பாட்டி... சக்தி என்னை அடிக்க வர" என்றான்.

"என்ன சக்தி குழந்தை மாதிரி... அவன் கூட மல்லுகட்டிட்டு" என்று பார்வதிம்மா கேட்க சக்தி கண்ணனை பிடிப்பதிலேயே குறியாக இருந்தாள்.

"குழந்தைங்கனா அப்படிதான் இருக்கும்... சக்தி நீ போ" என்று பார்வதி கொஞ்சம் மிரட்ட இம்முறை சக்தி அமைதியானாள்.

"நோ சாக்லேட்ஸ் பாஃர் யூ..." என்று கண்ணனை பார்த்து உரைத்துவிட்டு சக்தி வீட்டிற்குள் சென்றாள்.

சக்தி சோபாவில் மூச்சு வாங்கியபடி அமர்ந்திருக்க "அவனுக்குச் செல்லம் ஜாஸ்தியா இருக்கு..." என்று புலம்பினாள். அந்தச் சமயத்தில் கண்ணன் பயந்து கொண்டே சக்தியை நெருங்கி வந்தான்.

"சாரி சக்தி" என்று மழலையாய் கேட்டபடி தோட்டத்தில் மலர்ந்திருந்த சிவப்பு வண்ண ரோஜா பூவை அவளிடம் நீட்டினான். சக்தியை சமாதானப்படுத்த பார்வதி அவனுக்கு சொல்லித் தந்த யுக்தி.

சக்தியின் முன்பு கண்ணன் ரோஜாப் பூவை நீட்டியபடி நிற்க அவள் தன்னை அறியாமலே கண்ணீர் வடித்தாள். கண்ணனின் செயல் சக்திசெல்வன் பற்றிய நினைவைத் தூண்டிவிட சக்தி எதுவும் பேசாமல் பூவை வாங்கிக் கொண்டாள்.

"சாக்லேட்ஸ்" என்று கண்ணன் கை நீட்டப் பதில் ஏதும் பேசாமல் சக்தி சாக்லேட் ஒன்றை அவனிடம் கொடுத்துவிட்டு அவள் அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டாள்.

இவ்வளவு நேரமாய் கட்டுப்படுத்தி வைத்திருந்த உணர்வுகள் எல்லாம் கண்ணீராய் வெளிப்பட்டது. அழக் கூடாது என்று தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ள எண்ணிய போதும் அது அவளை மீறிக் கொண்டு வெளிப்பட்டது. சக்திசெல்வனை தான் சுலபமாய் மறந்து விடுவோம் என்ற அவள் எண்ணம் பொய்யாகப் போனது. சக்தி தான் கடைசியாய் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அவனின் மனோநிலை என்னவாயிருக்கும் என்று அவள் வேதனையுற்றாள்.

சிவசக்தி அவனை வார்த்தைகளால் காய்ப்படுத்திவிட்டு இப்போது அவள் வலியால் துடிக்க, காயப்பட்டச் சக்திசெல்வனோ கோபம் குறைந்து இன்னும் திடமாகவே இருந்தான்.

எதையும் செய்யும் தைரியத்தைக் குணமாய் கொண்டு குறைவில்லா செல்வத்தோடு பிறந்த நம் நாயகனுக்கு அமைந்த சக்தி செல்வன் என்ற பெயர் வெகு பொருத்தமாய் இருந்தது.
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
பெரும் பணமும் எல்லோரையும் ஆட்டிவைக்கும் பதவியும் கொண்ட இத்தகைய பின்னணியில் வளரும் ஒரு ஆண் எத்தகையவனாய் இருப்பான் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். திமிரு, அலட்சியப் போக்கு, பொறுப்பின்மை, பெண் பித்து ,போதை பழக்கம் என இருப்பது வழக்கமான ஒன்றே. ஆனால் சக்திசெல்வன் வழக்கத்திற்கு மாறானவன். எல்லாவற்றிலும் பொறுப்போடும் துடிப்போடும் செயல்படுபவன். உதவி செய்வதில் வள்ளலாகவும் செலவு செய்வதில் கஞ்சனாகவும் இருப்பான். அவதார புருஷன் ராமனின் வாக்கியம் ஒன்று . "சிந்தையாலும் வேறொரு பெண்ணை தொடேன்"
சக்தியும் அந்த எண்ணம் கொண்டவனே. பெண்மையை மதிக்க தெரிந்தவன். ஒருவளிடமே தன் மனதை பறிகொடுத்து அவளையே திருமணம் முடிக்க வேண்டும் என்ற கொள்கை கொண்டவன். அந்த எண்ணத்தைதான் சிவசக்தி தூள் தூளாய் நொறுக்கிவிட்டுப் போனாளே. இத்தகைய மெய்சிலிர்க்க வைக்கும் குணங்களை சக்தி கொண்டிருப்பதன் காரணம் அவனின் தாய் மீனாக்ஷி. அரசியலில் ஈடுபட்ட போதும் தன் ஒரே மகனின் வளர்ப்பில் சின்ன தவறை கூட மேற்கொள்ளாமல் கவனமாய் பார்த்துக் கொண்டாள். சக்தி தன் தந்தை மோகன் ராமை பார்ப்பதும் ஏன் அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பதைக் கணிப்பதுமே இயலாது காரியம். சக்தியின் முன்னோடி அவன் தாய் மட்டுமே. மீனாக்ஷி வாசுதேவன் அரசியல் சதுகரங்கத்தில் கை தேர்ந்தவள் . மோகன் ராமின் பணம் தம் அரசியல் வாழ்க்கையின் பலமென அவனைத் திருமணம் முடித்தாள். அவள் திருமணம் ஆனபின்பு தன் தந்தையின் பெயர் வாசுதேவனை தான் மாற்ற மாட்டேன் என்ற வைராக்கியம் கொண்டவள். பல ஆண்களை திறமையாய் அரசியல் விளையாட்டில் கையாளும் ஆளுமை திறமையை கொண்ட தன் தாயினை பார்த்து வளர்ந்தவன் சக்திசெல்வன். அத்தகைய பெண்ணாய் சிவசக்தி தோற்றமளிக்க அவளிடம் காதல் வயப்பட்டான். இன்று காயமும் பட்டு அதற்கான தீர்வை தீவரமாய் யோசித்துக் கொண்டிருந்தான்.

சக்தி செல்வன் அவனின் விசாலமான அறையிலிருந்த கண்ணாடித் தொட்டியில் நீந்திக் கொண்டு இருக்கும் மீன்களை பார்த்துக் கொண்டிருந்தான்.

சிவசக்தி சொன்ன வார்த்தையை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திப் பார்த்தான்.

அவனின் ஞாபகங்களைத் தடைசெய்தபடி கதவு தட்டும் ஓசை கேட்க "கம்மின்" என்று தன் பார்வையை மீன்களின் மீதிருந்து எடுக்காமலே குரல் கொடுத்தான்.

ஒரு பெண் மரியாதையும் கொஞ்சம் மிரட்சியையும் ஏற்படுத்த மடிப்பான சேலையும் தலையில் கொண்டையும் கம்பீரமாய் உள்ளே நுழைந்தாள். அந்த நடையும் அந்த மிடுக்குமே சொன்னது அவர்தான் மீனாக்ஷி வாசுதேவன் என்று.

"என்னாச்சு சக்தி... எனி பிராப்பளம் ?" என்று மீனாக்ஷி தன் மகனை நோக்கி கம்பீரமாய் கேட்க

"நத்திங்..." என்று அவரை நிமிர்ந்து பார்க்காமலே உரைத்தான்.

"நீ பொய் சொல்ற... சக்தி.. ஏதோ விஷயம் இருக்கு... " என்று மீனாக்ஷி தீர்க்கமாக உரைத்தாள்.

இப்போது சக்தி சிரித்தபடி "யூ ஆர் ரைட் மாம்... பட் அதை எப்படி ... " என்று சொல்லத் தடுமாறினான்.

மீனாக்ஷி புன்னகை செய்தபடி அவன் அருகில் வந்து "என்கிட்ட சொல்ல யோசிக்கிறன்னா... ஆச்சர்யமா இருக்கு... என்ன விஷயம் சக்தி" என்றார்.

"ஒரு பெரிய டெசிஷன் எடுத்திருக்கேன்... அதுக்கு நீங்க ஒகே சொல்லனும்" என்றான்.

"ம்... சொல்லு சக்தி"என்றார் புன்னகை மாறாமல்...

"நான் கொஞ்ச நாளைக்கு இன்டிப்பென்டெட்டா இருக்க விரும்பிறேன்மா ... ஒரு சாதாரணமான வாழ்க்கையை வாழ ஆசைப்படறேன்... தட் மீன்ஸ் இந்த மனி, ஸ்டேட்டஸ், லக்ஸூரி, எக்ஸ்ஸட்டிரா... எக்ஸ்ஸட்டிரா... இதெல்லாம் இல்லாம... நான் நானா" என்று சக்தி சொல்ல மினாக்ஷியின் கண்கள் அகல விரிந்தன.

மீண்டும் அவன்


மீனாக்ஷி தன் மகன் சக்தி சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியானார். அம்மாவின் முகம் மாறி இருப்பதை அவனும் கவனித்தான். யோசனையோடு நின்றிருந்த தன் அம்மாவின் தோள்களை பிடித்து
"என்னம்மா... ஷாக்காயிட்டீங்களா ?" என்று கேட்டான்.

"நீ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னதெல்லாம் ... " என்று மீண்டும் சந்தேகமாய் கேள்வி எழுப்பினார் மீனாக்ஷி.

சக்தி சிரித்து கொண்டே "உண்மையாதான் சொன்னேன்... நீங்க ஒகே சொல்வீங்கன்னு எனக்குத் தெரியும்..." என்றான் தலைகளை அசைத்தபடி!

"என் டெசிஷனை நீ எடுக்காத சக்தி" என்று இம்முறை கொஞ்சம் கோபமாக உரைத்தார்.

"மா... கூல்..இப்ப எதுக்கு டென்ஷனாகிறீங்க"என்று சக்தி தன் புன்னகை மாறாமல் உரைத்தான்.

"சக்தி... ஏற்கனவே எனக்கு நிறைய பிரஷர்.. இதுல நீ வேற இப்படி எல்லாம் பேசி என்னை இரிடேட் பண்ணாதே... " என்றார் மீனாக்ஷி .

"மா...நான் திரும்பியும் சொல்றேன்... நான் இந்தச் சொத்து ஆடம்பரங்கள் இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ ஆசைப்படறேன்... இதுவரைக்கும் என்னோட எந்த ஒரு முடிவிலயும் நீங்க தடையாய் இருந்ததே இல்லை... " என்று சக்தி சொல்லிக் கொண்டிருக்க மீனாக்ஷி அவன் முகத்தைப் பார்த்து "திடீர்னு ஏன் இப்படி ஒரு முடிவு... " என்றார்.

தன் மனதில் உள்ள உண்மையான காரணத்தை மறைத்து விட்டு
"சேலஞ்சிங்கான அனுபவம் கிடைக்கும்... எந்தவொரு பிரச்சனை வந்தாலும் பதவி, பணம் இப்படி எதுவும் இல்லாம என் திறமையை மட்டுமே கொண்டு சமாளிச்சி பார்க்கனும்... தெரியாத விஷயங்களை தெரிஞ்சிக்கனும்... எனக்குள்ள இருக்கிற பிரிலியன்ஸ் லெவல்... டேலன்ட் இதை
எல்லாம் நானே அனலைஸ் பண்ணனும்மா... முக்கியமா இந்த ஆடம்பரமான வாழ்க்கையை விட்டு என்னால சராசரியான ஒருத்தனா வாழ முடியுமான்னு தெரிஞ்சிக்கனும்... தண்ணிக்குள்ள இருக்கிற மீன் தண்ணியை விட்டு வெளியே வந்து விட்டால் அதனால் உயிர் வாழ முடியாது... நான் அப்படி இல்லாம எப்படிப்பட்ட சூழ்நிலையிலயும் வாழ பழகிக்கனும்னு நினைக்கிறேன்... ப்ளீஸ்மா வேண்டாம்னு சொல்லி என்னை டிஸப்பாயின்ட் பண்ணாதீங்க" என்று முகத்தை இறுக்கமாய் வைத்துக் கொண்டு தீர்க்கமாய் சொன்னான்.

"சரி சக்தி..நாளைக்கு நம்ம ஹோட்டல் இன்னாகுரேஷன்.. அப்புறம் அட்மினிஸிட்டிரேஷன் ... இதெல்லாம் யார் பார்ப்பாங்க... போதாக் குறைக்கு நெக்ஸ்ட் வீக் உங்க டேட் வர்றாரு, மறந்திட்டியா..." என்று கேட்டார்.

"நாளைக்கு இன்னாகுரேஷ்னல நான் கண்டிப்பா இருப்பேன்... அட்மினிஸ்டிரேஷன் எல்லாத்துக்கும் நான் ஆள் ஏற்பாடு பண்ணிட்டேன்... நெக்ஸ்ட் வீக் டேட் வர்றாருன்னு சொன்னீங்க இல்ல... எப்பவுமே நான் டேட்டை மிஸ் பண்ணுவேன்... இந்தத் தடவை அவர் என்னை மிஸ் பண்ணட்டும்" என்றான்.

இப்பொழுது மீனாக்ஷி சிரித்தபடி "நீ முடிவு எடுத்துட்ட... அப்புறம் நான் சொன்னாலும் நீ கேட்க மாட்ட சக்தி... கோ ஹெட்... " என்று தன் மகனின் தீர்மானத்திற்கு தலையசைத்து சம்மதம் சொன்னார்.

"தேங்க் யூ மா... அப்புறம் நான் எங்க போறேன்... எப்ப வருவேன்னு கவலைப் பட வேண்டாம்...என்ன பிரச்சனையா இருந்தாலும் எனக்கு மெயில் அனுப்புங்க... நான் உங்களுக்குத் தேவை படற நேரத்துல நான் உங்க பக்கத்துல இருப்பேன்...டோன்ட் வொரி..." என்றான்.

"அப்போ நீ உன்னோட செல்போனையும் எடுத்துட்டு போகப் போறதில்லையா ?"

"இல்லமா... என்னால எந்த சிட்டுவேஷனையும்
ஹேண்ட்ல் பண்ண முடியும்... நம்புங்கம்மா" என்றான்.

"ஐ நோ யூ வெரி வெல்... பட் ஐ மிஸ் யூ மை மேன்" என்று மகனை கட்டிணைத்துக் கொண்டார்.

அவனும் முகம் பொலிவுற ஆனந்தம் நிரம்ப "ஐ லவ்யூ மாம்" என்று சக்தியும் உரைத்தான்.

அவர்கள் இருவரின் உரையாடல் சக்தியின் எண்ணத்திற்கு ஆதரவாகவே அமைந்துவிட்டது. மீனாக்ஷி சென்ற பின் சக்தி தன் செல்போனில் இருந்த தன் காதலியின் புகைப்படத்தை பார்த்தான்.

"மை டியர் சக்தி... ஐம் கம்மிங் பாஃர் யூ... எனக்குத் தெரியும்... உன் பிடிவாதமும் கோபமும் நிராகரிப்பும் பொய் ... தண்ணிக்குள் இருக்கிற மீன் நான் இல்ல சக்தி ... நீதான்... தண்ணியாக நான் இருக்கப் போறேன்... நான் இல்லாம போகும் போது தரையில கிடக்கிற மீன் மாதிரி நீ துடிக்க போறியே டியர்...சோ சேட்..." என்றான்.

சக்தி செல்வன் தன் காதலால் இப்படி எண்ணமிட்டானா இல்லை கோபத்தால் இவ்வாறு எண்ணிக் கொண்டானா என்பது அவனின் முகப்பாவனையை பார்த்து நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை.

சிவசக்தி தன்னை நோக்கி வரப் போகும் பிரச்சனையைப் பற்றி அறியாமல் வகுப்பறையில் நின்று கொண்டு அழகாகப் புடவையை நேர்த்தியாய் உடுத்தியபடி கைகளை ஆட்டி ஆட்டி முகத்தில் புன்னகையோடு பாடம் எடுத்துக் கொண்டிருந்தாள்.

ஜெயா அந்த வகுப்பறை வாசலில் வந்து நின்று, கைகளால் சைகை காண்பித்து எப்போ வந்த என்று கேட்டாள். சக்தி வகுப்பறையில் இருந்த மாணவர்களிடம் ஏதோ ஒரு கேள்வியை கொடுத்து எழுதச் சொல்லிவிட்டு வெளியே வந்தாள்.

"நேத்து நைட் வந்தேன்டி... " என்று சக்தி ஜெயாவிடம் உரைத்தாள்.

"சரி சக்தி.. நீ கிளாஸ் முடிச்சிட்டு வா.. நம்ம பேசுவோம்" என்று சொல்லிவிட்டு ஜெயா அங்கிருந்து அகன்றாள்.

ஜெயாவின் தந்தை நடத்திக் கொண்டிருந்த அந்தப் பள்ளியில் சிவசக்தி வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். ஜெயா அந்தப் பள்ளியின் நிர்வாகப் பொறுப்புகளை கவனித்துக் கொண்டிருந்தாள்.

அரிதாக அமையப்பெற்ற வரம் போல அந்த தோழிகளின் பயணம் கல்லூரி வாசலைக் கடந்தும் தொடர்ந்து கொண்டு இருந்தது.

அலுவலக அறைக்குள் ஜெயா உட்கார்ந்திருக்க சக்தி "ஜெயா"என்று அழைத்தபடி புன்னகையோடு உள்ளே நுழைந்தாள்.

"சக்தி வந்துட்டியா... மேட்டரை சொல்லு" என்றாள்.

"என்ன மேட்டர் ?" என்று சக்தி புரியாமல் விழிக்க

"ஹீரோ சாரை பார்த்தியா இல்லியா ?!" என்று ஆர்வம் பொங்க கேட்டாள் ஜெயா. சக்தியின் முகத்திலிருந்த புன்னகை மறைந்தது.

"நான் வராத போது என் கிளாஸ் பசங்களுக்கு நோட்ஸ் கொடுத்துட்டு போனேனே.. கொடுத்தியா ?!"என்று பேச்சை திசை திருப்பினாள் சக்தி

"நான் என்ன கேட்கிறேன் நீ என்ன சொல்ற"என்று ஜெயா கடுப்போடு கேட்டாள்.

"நான் கேட்டதுக்கு பதில் சொல்லு ஜெயா?"

"பாதிதான் கொடுத்தேன்... "

"ஏன்?" என்று சக்தி அதிகாரமாய் கேட்க இம்முறை ஜெயா கோபம் கொண்டவளாய்
"ஏன்டி இப்படி உசிரை எடுக்கிற" என்று பேசிக் கொண்டிருக்கும் போதே ஜெயாவின் தந்தை ஜோதி கிருஷ்ணன் உள்ளே நுழைந்தார்.

வழுக்கையான தலை , கோபமாகவே இருக்கும் முகம், நெற்றியில் கோடேன வரையப்பட்ட செந்தூரம், கஞ்சி போட்ட சட்டையும் என ஆள் பார்க்கவே மிரட்டலான தோரணையோடு உள்ளே நுழைந்தார். எல்லாருமே அவரை ஜோதி சார் என்று அழைப்பது வழக்கம். அதனால் நாமும் அவரை மரியாதை நிமித்தமாய் அப்படியே அழைத்து விடுவோம்.

"என்ன சக்திமா... உடம்பெல்லாம் நல்லாயிடுச்சா... " என்று உள்ளே நுழையும் போது ஜோதி சார் கேட்டுக் கொண்டே வந்தார்.

"நல்லாயிடுச்சுப்பா..." என்றாள் சக்தி இயல்பான புன்னகையோடு!

"என்னவோ ஜெயாக்கிட்ட கேட்டுக் கொண்டிருந்த போல..." என்று கேட்டபடி தம் இருக்கையில் கம்பீரமாய் அமர்ந்தார்.

ஜெயா பின்னோடு நின்று கொண்டு "நோட்ஸ் கொடுக்கலன்னு மட்டும் சொல்லிடாத தெய்வமே" என்று பின்னோடு நின்று கொண்டு சொன்னாள்.

"என் கிளாஸுக்கு நோட்ஸ்..." என்று சக்தி சொல்லிவிட்டு நிறுத்த ஜெயா "செத்தேன்" என்று மெலிதாக வாய்க்குள்ளேயே புலம்பினாள்..

"சொல்லு சக்தி" என்று ஜோதி சார் சக்தியை நிமிர்ந்து பார்த்து கேட்டார்.

"என் கிளாஸுக்கு ஜெயா நோட்ஸ் கொடுத்ததினால என் வேலை குறைஞ்சிடுச்சு" என்று சக்தி சொல்ல, ஜெயா பெருமூச்சுவிட்டாள்.
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
சில நிமிடங்கள் ஜோதி சார் சிவசக்தியிடம் உரையாடினாள். அந்த அறையை விட்டு இருவரும் வெளியே வந்த பின் ஜெயா சக்தியின் கையை அழுத்தமாய் பற்றி "ஹீரோ சாரை பாத்தியா இல்லயா... இப்போ பதில் சொல்லு ?" என்றாள்.

"நீ விடமாட்டியா... இரு உங்கப்பாக்கிட்ட நோட்ஸ் விஷயத்தை சொல்லட்டுமா ?" என்று சிவசக்தி மிரட்டினாள்.

"ஜோதி கிட்டதானே... போய் சொல்லு... அதுக்கு முன்னாடி உன் மேட்டரை என் கிட்ட சொல்லு" என்று தந்தை முன்னாடி இல்லாத துணிச்சலில் ஜெயா உரைத்தாள்.

சக்தி கோபமாக "நான் பேசாம தவிர்க்கிறேனா, அந்த விஷயத்தை பத்தி பேச எனக்குச் சுத்தமா விருப்பமில்லன்னு நீ புரிஞ்சிக்கோ ... நான் அந்த ஹீரோ சாரை பத்தி நினைக்கவே விரும்பல... அப்புறம்தானே பேசிறதுக்கு... " என்றாள்.

ஜெயாவிடம் நடந்ததைப் பற்றி சொன்னால் அவள் தன்னிடம் கோபித்துக் கொள்வாள் என்று சக்தி எதையும் சொல்லாமல் மறைத்தாள். ஜெயாவும் சக்தியின் கோபத்திற்கான காரணம் என்னவென்று பலமுறை நச்சரித்துப் பார்த்தும் அவளிடம் பதிலை வாங்க முடியவில்லை.

சில நாட்கள் கடந்து செல்ல சக்தி அவனைப் பற்றிய எண்ணங்களில் இருந்து விடுபட்டிருந்தாள்.

அன்று எப்போதும் போல் பள்ளிக்கு ஆனந்தியை அழைத்துக் கொண்டு சக்தி வந்து சேர்ந்தாள். நேராக அலுவலகத்தில் உள்ள ரெஜிஸ்டரில் கையெழுத்து போடச் சென்றாள்.

உள்ளே அமர்ந்திருந்த ஜோதி சாரை பார்த்து "குட் மார்னிங்ப்பா" என்றாள்.
ஆனால் அவர் தீவரமான யோசனையில் ஆழ்ந்திருந்தார்.

"அப்பா... ஏதாச்சும் சீரியஸ் இஷு" என்று சக்தி புருவத்தை சுருக்கியபடி கேட்க

"வா சக்தி...குட் மார்னிங்" என்று அப்போதுதான் அவளை கவனித்து அழைத்தார்.

"ஏதோ யோசனையில இருக்கீங்க போல ?"

"ஆமாம் சக்தி ... சரி நீ உட்காரு சொல்றேன்... இந்த பயோடேட்டாவை பாரு... " என்று ஒரு பைஃலை நீட்டினார்.

"யாரோடது... என்ன மேட்டர் ?!" என்று கேட்டுக் கொண்டே அந்த பைஃலை வாங்கிப் பிரித்தாள்.

"ப்ளஸ் டூ மேக்ஸ் டீச்சருக்கு அட்வட்டைஸ்மன்ட் கொடுத்தோமே... அதுக்காக வந்த ரெஸ்ஸுயும்..." என்று ஜோதி சார் சொல்லும் போதே சக்தி படித்து விட்டு தலையில் கை வைத்துக் கொண்டாள்.

"என்ன சக்தி பண்ணலாம்... நம்ம எதிர்பார்த்த குவாலிபிஃக்கேஷனை விட இது ரொம்ப அதிகம் இல்ல.. வேண்டாம்னு ரிஜெக்ட் பண்ணவும் மனசு வரல ... நம்ம கொடுக்கிற சம்பளத்துக்கு அப்பாயின்ட் பண்ணவும் யோசனையா இருக்கு... நீ என்ன சொல்ற "

"இந்த ரெஸ்ஸுயும் கொடுத்தவர் எங்கே?"

"ஆபிஸ் கேபின்ல... " என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சக்திக்கு முகம் வியர்த்து கைகள் நடுக்கமுற்றது.

"பதில் சொல்லு சக்தி" என்று மீண்டும் ஜோதி சார் அழுத்தமாய் கேட்க சக்தி உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தபடி "அப்பாயின்மன்ட் பண்ணாதீங்க... இவங்கள மாதிரி ஆளுங்க பெரிய வேலை கிடைச்சதும் போயிடுவாங்க... அப்புறம் நமக்குதான் திண்டாட்டம்... எக்ஸேம் நெருக்கத்தில புது டீச்சரை தேடனும்.. என்னை கேட்ட அவாயிட் பண்ணிடுங்க"என்று சொன்னாள்.

ஜோதி சாருக்கு அவள் சொன்னது மேலும் குழப்பத்தை ஏற்படுத்த அவர் "நாம இதைப் பத்தி மிஸ்டர். சக்தி செல்வன்கிட்டயே கேட்டிருவோம்" என்று தன் முன்னே இருந்த போஃனை எடுத்து காதில் வைத்துப் பேசினார்.

சக்திக்கு இப்போது இன்னும் பதட்டமானது.

"ஒகேப்பா... நான் கிளாஸுக்கு போறேன்"என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே
"மே ஐ கம்மின்" என்ற ஒரு குரல் பின்புறமாய் கேட்க சிவசக்தி "திரும்பியுமா ?" என்று மனதில் எண்ணியபடி அவனைத் திரும்பி நோக்க முடியாமல் தவிப்புற்றாள்.
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
கோபமும் ஏளனமும்


சக்தி செல்வன் சற்றும் குறையாத கம்பீரத்தோடு அறைக்குள் நுழைய அவனை நேர் கொண்டு பார்க்க முடியாமல் சிவசக்தி தயங்கி நின்றாள்.

"உட்காருங்க சக்தி செல்வன்" என்று ஜோதி சார் உரைக்க அவனைப் பார்ப்பதை தவிர்க்க,

"அப்பா நான் கிளாஸுக்கு போறேன்" என்று வெளியே செல்ல யத்தனித்தாள்.

"இரு சக்தி" என்று ஜோதி சார் அவளைப் போகவிடாமல் தடுத்தார்.

அவள் தவிர்க்க முடியாமல் திரும்பி நோக்க அப்போது சக்திசெல்வன் அவன் முகம் தெரியாத வண்ணம் இருக்கையில் அமர்ந்திருந்தான்.

"வந்து நீயும் உட்காரும்மா... " என்றார்.

எதற்குத் தன்னை அழைக்கிறார் என்று தெரியாமல் சக்தி விருப்பமின்றி இருக்கைக்கு அருகில் வர சக்திசெல்வன் சிவசக்தியை பார்த்த பார்வையில் ஒருவிதமான வெற்றிப் புன்னகை தெரிந்தது. அவள் முதன் முதலில் அவனைச் சந்தித்த போது அவனிடமிருந்த ஆடம்பர தோற்றம் முற்றிலும் இன்று மாறி சாதாரணமான உடையில் காட்சியளித்தான். உடைதான் மாறி இருந்ததே ஒழிய அவனின் தோரணையில் அந்த ஆடம்பரமும் கம்பீரமும் துளி கூட குறையவில்லை.

சக்தி அவன் அருகிலிருந்த இருக்கையில் அமர முடியாமல் நின்றபடி "சொல்லுங்கப்பா" என்று கேட்டாள்.

"முதல்ல நீ உட்காரு" என்று ஜோதி சார் மீண்டும் அழுத்தமாய் உரைக்க, சக்தி மூச்சை இழுத்துவிட்டபடி விருப்பமின்றி அமர்ந்தாள்.

சிவசக்தி அவனருகில் அமர்ந்திருந்தும் பாரா முகமாய் இருந்தபடி "என்ன விஷயம்பா ?" என்று ஜோதி சாரை நோக்கியபடி கேட்டாள்.

"இவர்தான் சக்தி செல்வன்..." என்று ஜோதி சார் கை காண்பிக்க இப்போது அவனைப் பார்த்தே தீர வேண்டிய கட்டாயத்தில் வேறு வழியில்லாமல் இயந்திரத்தனமாய் புன்னகையை உதிர்த்தாள்.

ஜோதி சார் சக்தி செல்வனை நோக்கி "இவங்க பெயர் சிவசக்தி...ஸோசியல் டீச்சர்... என்னோட மகள் மாதிரி" என்றார்.

சக்தி செல்வன் அப்போதுதான் அவளைப் பார்ப்பது போல் "நைஸ் மீட்டிங் யூ சிவசக்தி" என்று அவளை பார்த்து வசீகரமாய் புன்னகையித்தான்.

இப்போது ஜோதி சார் தொண்டையைக் கனைத்துவிட்டு "இத பாருங்க சக்தி செல்வன்... உங்க பயோடேட்டா ரொம்ப இம்பிரஸ்ஸிவ்வா இருக்கு... ஆனா உங்க தகுதிக்கு நீங்க இன்னும் பெட்டரான இடத்தில வேலை செய்யலாம்.. இங்கே ஸேலரி கொஞ்சம் கம்மிதான்... நீங்க யோசிச்சு முடிவெடுங்க" என்றார்.

சக்திசெல்வன் கம்பீரத் தொனியில் "யோசிக்க வேண்டிய அவசியமில்ல... ஸேலரி நாட் அ பிராப்பளம்... நான் இங்க வொர்க்க பண்ண டிசைட் பண்ணிட்டேன்.. இனிமே நீங்கதான் நான் உங்க ஸ்கூல்ல வேலை செய்ய தகுதியானவனான்னு சொல்லனும்" என்றார்.

"தகுதி உங்களுக்கு நாங்க எதிர்பார்த்ததை விட அதிகமாவே இருக்கு... அதுவும் இல்லாம சக்திமா என்ன சொல்றான்னா.. நீங்க இன்னும் பெட்டர் ஜாப் கிடைச்சு பாதியிலேயே நின்னுட்டா... அப்புறம் டுவல்த் ஸ்டன்டட் வேற... எங்களுக்குத்தான் ரிஸ்க்" என்றார்.

சக்தி செல்வன் சிரித்துவிட்டு "அப்படி எல்லாம் எந்த வேலையையும் அறைகுறையாய் பாதியிலேயே விட்டுவிட்டு போற பழக்கம் எனக்கில்லை" என்று சக்தி செல்வன் சொல்லி முடித்து சக்தியை திரும்பிப் பார்த்த பார்வையில் அவன் சொன்னதன் உள்ளர்த்தம் வாசகர்களுக்குப் புரிந்ததோ தெரியவில்லை. ஆனால் சிவசக்திக்கு நன்றாகவே புரிந்தது.

சிவசக்தி ஜோதி சாரை நோக்கி "டுவல்த் ஸ்டான்டை எல்லாம் எக்ஸ்ப்பிரீயன்ஸ் இல்லாம மேனேஜ் பன்றது... ரொம்ப கஷ்டம்" என்றாள்.

"அப்போ என்னால முடியாதுன்னு சொல்றீங்களா சிவசக்தி" என்று அவளிடம் நேரடியாகவே திரும்பி சக்தி செல்வன் கேட்டான்.

சிவசக்தி உடனே அவன் புறம் திரும்பி "நான் யதார்த்தத்தை சொன்னேன்... எக்ஸம்ஸ்ல என்ன கேள்வி வரும்... மார்க் வெயிட்டேஜ்... இப்படி எதாவது தெரியுமா...உங்களுக்கு" என்று கேள்வி எழுப்பினாள்.

"எக்ஸேம் நோக்கத்தில படிச்சா மார்க் வாங்கலாம்... பட் எதிர்காலம் கேள்வி குறியாயிடும்... எக்ஸ்பிரீயன்ஸை விட ஒரு டீச்சர்கிட்ட சப்ஜக்ட் நாலேஜ் இருக்கான்னு பார்க்கனும்... "என்றான்.

"பிளஸ் டூ போஷன்ஸ் ரொம்ப நிறைய இருக்கும்... போன தடவை இருந்த டீச்சர் கம்பிளீட் வேற பண்ணல... எதுவும் தெரியாம இவரால் மேனஜ் பண்ண முடியாதுப்பா" என்று ஜோதி சாரை பார்த்து தீர்க்கமாக உரைத்தாள்.

சிவசக்தி இப்படி ஒருவரை நிராகரிக்க ஆர்வம் காட்டுவதை ஜோதி சாரால் நம்பவே முடியவில்லை. அவள் எதற்காக நிராகரிக்கிறாள் என்பது சக்திசெல்வனுக்கு நன்றாகவே புரிந்தது. ஆனால் அவன் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை.

சக்தி செல்வன் எழுந்து நின்றபடி
"முடியாதுங்கிற வார்த்தையே என் அகராதியில் கிடையாது... என் மேல நம்பிக்கை இருந்தா மட்டும் இந்த வேலையை எனக்கு கொடுங்க... " என்று சக்திசெல்வன் கர்வத்தோடு உரைக்க அவன் பேச்சில் ஜோதி சார் கவர்ந்து இழுக்கப்பட்டார்.

"சக்தி செல்வன்... எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு... ரொம்ப துடிப்பான ஆள் நீங்க... உங்களை மாதிரி ஒருவர் இந்த ஸ்கூலுக்கு தேவை... அப்பாயின்மென்ட் ஆர்டர் எடுத்துட்டு வரச் சொல்றேன்... ஆபிஸ் கேபின்ல வெயிட் பண்ணுங்க" என்று ஜோதி சார் உரைத்தார். சக்திசெல்வன் ஜோதி கிருஷ்ணனிடம் கை குலுக்கிவிட்டு வெளியே சென்றான்.

அவன் சென்ற பிறகு சிவசக்தி மீண்டும் ஜோதி சாரிடம் "டெமோ கிளாஸ் எடுக்க சொல்லுங்கப்பா... அதுக்குள்ள என்ன அவசரம்" என்றாள்.

"சக்தி... நான் பல வருஷமா இந்த ஸ்கூலை நடத்திட்டிருக்கேன்... பல பேரை என் வாழ்கைக்யில பாத்திருக்கேன்... அதனால ஒருத்தரைப் பார்த்ததும் என்னால் நிச்சயம் அவங்க தகுதியானவங்களான்னு தெரிஞ்சிக்க முடியும்... அதுவும் இல்லாம சக்தி செல்வன் பேச்சில் என்ன ஒரு தெளிவு, தைரியம் பார்த்தியா... இத்தனை வருஷ அனுபவத்தில் சொல்றேன்... சக்தி செல்வன் நிச்சயமா ரொம்பவும் தகுதியான பொறுப்பான ஆள்..." என்றார்.

சிவசக்திக்கு என்ன சொல்வதென்றே புரியாமல் "உங்ளுக்கு ஒகேன்னா சரிதான்... நான் கிளாஸுக்கு போறேன்... " என்று திரும்பியவள் மீண்டும் ஏதோ நினைவு வந்தவளாய் "ஜெயா ஏன் இன்னும் வரலப்பா ?" என்று கேட்டாள்.

"நான் சீக்கிரம் வந்துட்டேன்ல... அதனால அவ தூங்கி எழுந்து லேட்டாதான் வருவா... திருந்தாத ஜென்மம்" என்று ஜோதி சார் சொல்ல சக்தி சிரித்தபடி "ஒகேப்பா" என்று சொல்லிவிட்டு வெளியே வந்தாள்.

சிவசக்தி கையில் வாட்ச்சை பார்த்துவிட்டு விறுவிறுவென தன் வகுப்பிற்கு விரைந்தாள். அங்கே பெரிய கூச்சலும் குழப்பமும் நடந்திருந்தது. சக்தி உள்ளே வந்த நொடியில் அங்கே நிசப்தம் குடிகொண்டது. மேஜை மேல் இருந்த ரெஜிஸ்டரை புரட்டினாள். அவனைப் பற்றிய ஆயிரம் கேள்விகள் மனதில் சுழற்றிக் கொண்டிருக்க அன்று முழுவதுமே அவளால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.

மாலை நேரம் வேலை எல்லாம் முடிந்து சோர்வோடு கிளம்பும் நேரத்தில்தான் ஜெயாவை பார்க்கவே இல்லையே என்ற எண்ணம் தோன்றியது. நேராக அலுவலகத்திற்குச் சென்றவள் அங்கே ஜெயாவும் சக்திசெல்வனும் ரொம்ப நாள் பழகியவர் போலப் பேசி கொண்டிருந்தனர். ஜெயாவிடம் சக்தி செல்வன் எல்லா விஷயத்தையும் சொல்லி இருக்கக் கூடுமோ என்ற பயந்தபடி நோக்கினாள். ஜெயா சிரித்து கொண்டே சிவசக்தி வாசலில் நிற்பதை பார்த்துவிட்டு உள்ளே வரச் சொல்லி அழைத்தாள்.

சிவசக்தி உள்ளே சென்று அவனைச் சந்திக்க விருப்பமின்றி "நான் கிளம்பனும் ஜெயா... பை" என்று சொல்லிவிட்டு புறப்படப் பார்த்தவளை ஜெயா கையை பிடித்து உள்ளே அழைத்து வந்தாள்.

"விடு ஜெயா... நான் கிளம்பனும்" என்று சக்தி ஜெயாவின் கையை உதறினாள். ஜெயா சிவசக்தியின் தவிப்பைப் புரிந்து கொள்ளாமல் இருவரையும் அறிமுகம் செய்வித்தாள்.

"காலையிலேயே நாங்க அறிமுகமாயிட்டோம்" என்று சக்தி செல்வன் உரைக்க ஜெயா சிவசக்தியினை நிமிர்ந்து பார்த்து "அப்படியா சக்தி ?" என்று கேட்டாள்.

"ஆமாம்" என்று முகத்தை தொங்கப் போட்டபடி நின்றாள்.

"என்னோட பெஸ்ட் பிஃரண்டு" என்று சிவசக்தியின் தோள்களில் கை வைத்து ஜெயா பெருமையோடு சக்தி செல்வனிடம் உரைக்க, அதெல்லாம் அவன் முன்னமே அறிந்த கதைதானே.

"சக்தி... நான் கேட்க வந்ததையே மறந்துட்டேன்... உங்க ஏரியாவில ஏதாச்சும் வீடு வாடகைக்கு இருக்கா ?" என்று சிவசக்தியை நோக்கி ஜெயா கேட்க,

"எதுக்கு கேட்கிற ?" என்று சிவசக்தி வினவினாள்.

"மிஸ்டர். சக்திக்காகத்தான்" என்றாள்.

இப்போது சிவசக்தியின் புருவங்கள் சுருங்க சக்திசெல்வனை நோக்கி பொறுமை இழந்தவளாய் "இத பாருங்க சக்தி... இதுவரைக்கும் நீங்க விளையாடின விளையாட்டெல்லாம் போதும்... இனிமேயும் புதுசா ஏதாச்சும் ஆரம்பிக்காதீங்க... ப்ளீஸ் இங்கிருந்து போயிடுங்களேன்..." என்று கோபத்தோடு உரைக்க ஜெயாவிற்கு ஒன்றும் விளங்கவில்லை.

"ஒரு வாடகை வீடு கேட்டது தப்பா" என்று ஜெயா கேட்க "நீ வேற ஜெயா புரியாம ?" என்று சக்தி அலுத்துக் கொண்டாள்.

ஆனால் சக்தி செல்வன் எதுவும் பேசாமல் மௌனம் காத்தான்.

மீண்டும் சிவசக்தி அவனை நோக்கி "அன்னைக்கே நாம பேசி முடிச்சிட்டோம்... இப்போ புதுசா என்ன... உங்க பணக்கார விளையாட்டில எல்லோரையும் முட்டாளாக்க பார்க்காதீங்க..." என்று வெறுப்பைக் காட்டியபடி சொல்லும் போதும் அவன் இயல்பாகவே அமர்ந்திருந்தான். அவள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல ஆர்வம் காட்டவில்லை. ஏன் அவள் பேசியதை அவன் பொருட்படுத்தவும் இல்லை.

"நான் பேசிறது உங்க காதில விழலயா மிஸ்டர்... ஸே சம்திங்... " என்று சிவசக்தி சொன்ன போதும் அவன் கவனிக்காதது போலவே அமர்ந்திருந்தான்.

ஒருபுறம் சிவசக்தியின் திடீர் கோபம். மறுபக்கம் ஏளனமான பார்வையோடு திரும்பிக் கூட பார்க்காமல் அமர்ந்திருக்கும் சக்திசெல்வன். இருவரின் நடவடிக்கையும் ஜெயாவை பெரிதும் குழப்பமடையச் செய்தது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top