ஜுஹீ பீச் வந்ததும் இந்தர் இறங்கவும் அவன் பின்னே ரிஷாவும் இறங்கினாள். அது ஒரு பிரபலமான பொழுது போக்கு இடம் என பார்த்தவுடனே அறிந்துக் கொண்டாள். அவ்வளவு சுத்தம் சுகாதாரமாக பராமரிக்கப் படாவிட்டாலும் கூட அங்கே கூட்டம் நெருக்கி தள்ளியது.
வகை வகையான உணவு வகைகளும், அவைகளை சுவைப்பதற்கான கூட்டமும் அங்கே நெருக்கி தள்ளியது. இரவு சூழ்ந்துக் கொண்டிருந்ததால் செயற்கை வெளிச்சம் பளீரிட்டது, கவலையின்றி சிறார்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். கடலுக்கு கால்களைக் கொடுத்து சிலர் நின்றிருக்க, கடலுக்குள்ளாக சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர்.
இந்தரை தவற விடக் கூடாது என்ற சிந்தனையில் அவனையே பின் தொடர்ந்துக் கொண்டிருந்த ரிஷாவுக்கு எதுவுமே கருத்தில் படவில்லை. எப்படியாவது இந்தரை தனக்கு துணையாக அழைத்துக் கொண்டு அந்த முகவரிக்கு செல்ல வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டிருந்தது.
அதே நேரம் சற்று நேரம் முன்பாக அவன் அவளை திட்டியிருந்தது நினைவிற்குள் நிரடியதால் அவனிடம் உடனடியாக சென்று உதவி கேட்க அவளால் முடியவில்லை.
ஆண்கள் உருப்படாமல் போவதே பெண்களால் தான், பெண்கள் எப்போதும் உதவி தேவை என்றால் ஆண்கள் வந்து செய்து கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்று முழங்கியவன் தானே அவன்.
சற்று நேரம் கழித்து அருகில் செல்லலாம் என அவன் தனியாக அமர்ந்திருந்த அந்த கடற்கரையில் பகுதியில் சற்று அப்பால் அவளும் அமர்ந்திருந்தாள்.
யாரோ கடலுக்கருகாமையில் தங்கள் மகளை அழைத்திருக்க வேண்டும் போலும்.
" மிஷா பேட்டி" எனும் குரல் கேட்கவும் , சற்ரு முன் கேட்ட ரிஷா பாப்பா எனும் ருத்ர பாண்டி அங்கிளின் குரல் வந்து மோதியது. மனதை சோர்வுறச் செய்தது. வழக்கம் போல மனம் சோர்ந்ததும் தன் சிந்தனைக்குள்ளாக அமிழ்ந்து போனாள் அவள்.
ரிஷாவின் தந்தை சண்முகம் மற்றும் அவரது இரு நண்பர்களான ருத்ர பாண்டி மற்றும் கனகவேல் இவர்களின் SKR Garments ல் கனகவேல் தான் தனியாக நிறுவனம் ஆரம்பிக்கவிருப்பதாகச் சொல்லி தன் பங்கைக் கேட்கையில் தான் ருத்ர பாண்டி அந்நாள் வரை செய்திருந்த தகிடு தித்தங்கள் தெரிய வர, தொடர்ந்த நாட்களில் கனகவேலின் ஒரே மகன் இறந்து பட ருத்ர பாண்டியின் மீது திரும்பியது கொலைக்கான காரணம்.
கனகவேல் அங்கிளின் மகன் மரணித்த சில நாட்களில் நடந்த சம்பவங்கள் ஏராளம். விசாரணையில் தனக்கு ருத்ரபாண்டி மேல் சந்தேகம் இருக்கிறது என கனகவேல் சொல்லிவிட ருத்ரபாண்டியின் வீட்டினர் மேல் விசாரணை ஆரம்பித்தது.
கனகவேலின் ஒற்றைக்கோர் மகவு இறந்துபட்டதில் அவர்கள் வெகுவாக மனமுடைந்து போயிருந்தனர். ருத்ரபாண்டி எதிராக எந்த ஆதாரமும் கிடைக்காத காரணத்தால் போலீஸ் அவர் மீது கொலை வழக்கு பதிய முடியாமல், அவ்வழக்கு விபத்து என்றே விசாரணையின் இறுதியில் முடிவானது.
மனம் வெறுத்துப் போன கனகவேல் குடும்பத்தினர் தங்கள் பங்குகளின் மதிப்பினை வாங்கிக் கொள்ளாமலும் கூட தங்களது கிராமத்திற்கு சென்று விட்டனர், தனி நிறுவனம் ஆரம்பிக்கும் அளவிற்கு இருந்த அவரது ஆசைகள் , ஆர்வம் மங்கிப் போயிற்று. ஆனால், அவரை அப்படியே விட முடியாதே.
அவரது முதலீட்டினால் வரும் லாபத்தினை அவரது வங்கிக் கணக்குக்கே போய் சேரும்படி செய்தார் சண்முகம். அன்றைய நிலை படி அவர்களது எக்ஸ்போர்டை பொருத்தவரையில் கனகவேல் ஸ்லீப்பிங்க் பார்ட்னர் ஆகிவிட சண்முகமும், ருத்ர பாண்டியும் ஆக்டிவ் பார்ட்னராக இருந்தனர்.
குழறுபடியாக இருந்த கணக்கு வழக்குகளை சரிவர சமர்ப்பித்து விட்டார் ருத்ர பாண்டி. மனதிற்குள் ஆயிரம் இருந்தாலும் மூவரும் அத்தனை நல்ல நண்பர்களாக இருந்தவர்களாயிற்றே. எல்லாவற்றையும் நல்லபடியாக்கி கொண்டு வரும் வரையில் சண்முகத்தின் வேலைப் பளு கூடி விட்டிருந்தது.
அவரால் நண்பர்கள் இருவரில் யாரையும் விட்டுக் கொடுக்க இயலவில்லை. யார் தவறு செய்தார்? யார் தவறு செய்யவில்லை? என சிந்திக்க அவருக்கு சற்றும் நேரமில்லை. தடுமாறிப் போயிருக்கும் இரண்டு நண்பர்கள் குறித்த குழப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுப்போமானால் தொழிலை கைவிட வேண்டி வரும் என மனதிற்குள்ளாக அபாய மணி அடித்ததே அதற்கு காரணம்.
ஆம், ஒரு நிறுவனத்தின் உள்ளார்ந்த குழப்பங்கள் வெளியே தெரியாமல் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது இல்லையென்றால், நம்பகத் தன்மை இழந்து வாடிக்கையாளரின் விலகலையும், பெருமளவு நஷ்டத்தையும் சந்திக்க நேரிடலாம். அதனால் தான் சண்முகம் வெளியே தெரியாமல் அத்தனையும் தனியாளாய் சமாளிப்பதற்குள்ளாக இரவும் பகலுமாக உழைத்து ஒரு வழியாகினார். அ ந் நேரம் மட்டும் அவருக்கு வலக்கையாக அவரது அக்கா மகன்களான அரங்க நாதனும், சந்திரனும் இராவிட்டால் வெகுவாக சிரமப் பட்டிருப்பார்.
சண்முகத்தின் அக்கா பையன்கள் மாமா , மாமா என உயிரையே விடும் வண்ணமாக அவரிடம் பயபக்தியோடு இருந்தனர். ஒன்றுக்கும் உதவாமல், உருப்படாமல் இருந்த தங்களை சென்னைக்கு அழைத்து வந்து தொழில் கற்றுக் கொடுத்த மாமா மேல் அவர்களுக்கு வெகு பிரியம். அவர்களைப் பொருத்தவரை அவர்களது மாமாதான் அவர்களுடைய ரோல் மாடல். அந்த பயபக்தி கூடத்தில் சமீபத்தில் இன்னொருவன் சேர்ந்திருந்தான். அவன் சுந்தர் . சண்முகத்தின் அக்காவின் மூன்றாவது மகன்.
சில வருடங்கள் தன் கீழ் அரங்க நாதனையும், சந்திரனையும் பணி புரிய வைத்திருந்த சண்முகம், தன் பார்ட்னர்கள் உதவியோடு அவர்களுக்கு பொறுப்பான பதவிகளை அளித்திருந்தார். அக்கா மகளான லலிதா திருமண வயதிற்கு வந்தும் அக்காவின் கணவர் "கண்டதே காட்சி, கொண்டதே கோலம்" என்றிருக்க தகப்பனின் ஆதரவு அற்ற அந்த குடும்பத்திற்கு பெரியவராய் லலிதாவின் திருமணத்தை அரங்க நாதன் மற்றும் சந்திரன் இவர்களது சேமிப்பு பணம் மற்றும் தனது பணத்தையும் செலவழித்து மனைவி மகளோடு முன் நின்று சிறப்பாக திருமணம் செய்து வைத்தார்.
அவர்கள்திரும்பிய போது அவரோடு தொற்றிக் கொண்டு வந்து விட்டிருந்தான் சுந்தர். துரு துருப்பானவன் ஆனால் வெகுளி. சென்னை பாஷை புரியாமல் அவன் திரு திருவென முழிப்பது ரிஷாவுக்கு வெகு ஜாலியாக இருக்கும். வேண்டுமென்றே அவனிடம் சென்னை பாஷையில் பேசுவாள் அவள்.