Tamilsurabi
நாட்டாமை
"பிருந்தா கல்யாணத்த பத்தி நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்"என்றார் ஜகந்நாதன்.
அந்த அறையில் புத்தகம் படித்தபடி இருந்த பிருந்தாவும் அப்போதுதான் காபி கப்புகளுடன் வந்த அவள் தாய் வேணியும் அவர் சொன்னதைக் கேட்டு அவரை உற்றுப் பார்த்தனர்.மனைவியின் கையிலிருந்து ஒரு கப்பை எடுத்து சுடான காபியைக் குடித்தவர் பிருந்தாவைப் பார்த்தார்.அவளோ அவர் சொல்லி முடித்தப் பின் படிப்பதற்கு தயாராக புத்தகத்தின் மத்தியில் தன் விரலை வைத்துக் கொண்டிருந்தாள்.அதை பார்த்துக் கடுப்புடன்,
"பிருந்தா!மொத்தல்ல அந்த புத்தகத்தை கீழ வை"என்றார்.
அவர் அப்படி சொல்லவும் புத்தகத்தின் பக்கத்தை சரி பார்த்தப் பின் அதை ஓரமாக வைத்தாள்.அதை பார்த்த அவருக்கு அவள் மேல் கட்டுக்கடங்காத கோபம்தான் வந்தது.புத்தகம்....புத்தகம்...எப்பொழுதும் புத்தகம் படிப்பது இல்லையென்றால் தோட்டத்தில் பூக்கள் வானில் சிறகடிக்கும் பறவைகள் இவற்றை வேடிக்கைப் பார்ப்பது இதுதான் அவள் அன்றாட வாழ்க்கையாக இருந்தது.பிஸ்னஸ் புலியான அவர் மகளுக்கும் அதை போதிக்க பங்கு மார்க்கெட்டைப் பற்றியும் உற்பத்தியை பற்றியும் கற்பிக்க வந்தால் அதற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் தேன் சிட்டுக்கள் தன் குட்டிக்கு உணவூட்டுவதை காண்பிப்பாள்.
இப்படிப்பட்டவளுக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினார் அவர்.முதலில் வந்த வரன் இந்தியா முழுவதும் தன் பிஸ்னஸை விரிவாக்கியிருக்கும் இளம் தொழிலதிபன்.அவனின் நேரமின்மையும் மீறி அரைமணிநேரம் பெண் பார்க்க வந்தவனை தோட்டத்தில் பூத்திருக்கும் சாமந்தியின் விதவிதமான வண்ணங்களைப் பற்றி பேசி பத்து நிமிடங்களில் ஓட வைத்தாள்.
தோட்டத்தில் இருந்தால் ஆகாது எனக் கண்டு இந்த முறை வந்தவனை ரூமில் உட்கார வைத்தார்.அவனிடம் அங்கிருந்த ஷேக்ஸ்பியர் ஷெல்லி எழுதிய புத்தகங்களை காட்டி அவள் விவாதிக்கத் தொடங்கிய போது பாதியில் எழுந்து சென்றவன் ஜகந்நாதன் எத்தனை முறை போன் செய்தாலும் இவரோடு பேச மறுத்தான்.அதன்பின் ஊரெங்கும் பிருந்தாவின் குணம் பிரசித்தி அடையவே அவளுக்கு மாப்பிள்ளைத் தேடுவதில் அவர் படுதோல்வியைக் கண்டார்.அதனால் அதற்கு ஒரு முடிவு அன்று கண்டுபிடித்திருந்தார்.
"பிருந்தா கல்யாணத்தப் பத்தி என்ன முடிவு செய்திருக்கீங்க?என்றார் வேணி கவலையோடு.
"முடிவு என்ன முடிவு இவளுக்கு இன்னும் மாப்பிள்ளை தேட முடியாது என்னால"
"விடுங்க!அதான் பெரிய மாப்பிள்ளை பாக்றேன்னு சொல்லியிருக்கார் இல்ல!"
"அவர் பாக்கற பையன் அவருக்காக இவள பண்ணிக்குவானே தவிர இவளுக்காக இல்ல."
"எப்படியோ கல்யாணம் ஆனா சரி!"
"ஆகனும்.இல்லேன்னா..."
அதுவரை பேசாமல் இருந்த பிருந்தா,"
இல்லேன்னா?"என்றாள் சந்தேகத்தோடு.
அவளை கூர்மையாக பார்த்தப் படி,"இன்னும் மூணு மாசத்துல இவ கல்யாணம் செட்டில் ஆகனும்.இல்லேன்னா நா சொல்றவனோடு இவ கல்யாணம் நடக்கும்"
அதே கூர்மையோடு அவரைப் பார்த்த பிருந்தா,"அது யாரு?"என்றாள்.
அழுத்தமான குரலில்,"மாதவன்... அவன்தான் என் செலக்சன்"
அதைக் கேட்டு அதிர்ச்சியான வேணி,"மாதவனா?!ஏங்க நம்ம அந்தஸ்து என்ன?அவன் அந்தஸ்தென்ன?வீடு வாசல் சொத்து சுகம் எதுவும் இல்லாதவனுக்கா நம்ம பொண்ண கொடுக்கறது?"
அவள் வார்த்தையில் கொதித்த அவர்,"ஏன் அதெல்லாம் விட அவன் திறமை பெரிசு.அவன போல ஒரு பையன சல்லடைப் போட்டு சலிச்சாலும் கெடைக்காது....தெரிஞ்சுக....அவன் குணம் சாமர்த்தியம் முன்னால நம்ம ஆஸ்தி அந்தஸ்து எல்லா தூசி"
"இருந்தாலும்..."
"இருந்தாலும் இல்ல ஒண்ணும் இல்ல.மூணு மாசம் டயம் அதுக்குள்ள வேற வரன் கெடைக்கலேன்னா என் இரண்டாவது மாப்பிள்ளை மாதவன்தான்.இதுல எந்த மாற்றமும் இல்லை"என கண்டிப்பாக பேசியவர் அங்கிருந்து வேகமாக சென்றார்.
கல்லாக சமைந்திருந்த மகள் அருகில் வந்த வேணி அவள் தலையை கோதியவாறு,
"பிருந்தா!நீ கவலைப்படாதே...கண்டிப்பா நா இந்த கல்யாணம் நடக்க விடமாட்டேன்.உங்க அக்காவும் உன் பக்கம் தான் இருப்பா!"என்றவர் காலி கப்போடு அங்கிருந்து அகன்றார்.
பிருந்தா எவ்வளவு முயன்றும் மாதவனின் முகம் அவளுக்கு நினைவிற்கு வரவில்லை.அவள் அவனை கடைசியாகப் பார்த்தது அவள் அக்கா புவனாவின் திருமணத்தின் போது.அதுவும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு.அப்போது நெடு நெடு என்று ஒட்டடை குச்சியைப் போல் இருந்தான்.முதலிலிருந்தும் பிருந்தாவிற்கு மாதவனைக் கண்டால் பிடிப்பதில்லை.தன் தந்தையைக் காக்காய் பிடித்து அவரின் நம்பிக்கையை வென்று இன்று அவரின் வலக்கையைப் போன்று இருக்கிறான் என்று அவனை வெறுத்தாள்.
ஆனால் அவரின் அந்த கண்மூடித்தனமான நம்பிக்கை தம் மகளையே அவனுக்கு கொடுக்கும் அளவிற்கு போகும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.
'இல்ல இது நடக்காது!நடக்க விட மாட்டேன்.எப்படியாவது இந்த கஷ்டத்திலேந்து தப்பனும்.ஏதாவது ஐடியா கண்டுபிடிச்சே ஆகனும்.அக்காவ கேட்டா?!.... அதுதான் சரி"
உடனே தன் மொபைலில் புவனாவின் நம்பரை அழுத்தியவள் அவள் போனை எடுக்கவும்,"அக்கா!நா உடனே உன்னப் பாக்கனும்.நாம யூஷ்வலா போற ஹோட்டலுக்கு அத்தான கூட்டிட்டு இப்பவே வா"என்றாள்.
"நீ இருக்கற நிலைமைல உன்ன படுத்தக் கூடாதுன்னு தான் நினைச்சேன்...ஆனா இந்த அப்பா அடிக்கிற கூத்துல உன்ன கூப்பிடும்படி ஆயிடுச்சு"என்றாள் பிருந்தா தன் அக்கா புவனாவைப் பார்த்து.
புவனா தன் மூன்றாவது மாதத்தில் இருந்தாள்.திருமணமாகி ஐந்து ஆண்டுகள் பின் தாயாகும் மகிழ்ச்சி அவள் அழகை அதிகப்படுத்தி இருந்தது.அத்தோடு மசக்கையின் விளைவாக தலைசுற்றலும் வாந்தியும் அவளைப் படுத்தி எடுத்தது.சோர்வாக கணவனின் தோளிலில் சாய்ந்தவாறு தங்கையைப் பார்த்தவள் மெல்லியக் குரலில்,
"என்னடா பிருந்தா!என்ன பிரச்சினை?"என்றாள்.
சொல்வதற்கு வாய்யெடுத்த பிருந்தா அத்தான் தினகரின் கையசைவில் நிறுத்தி தன் அக்காவைப் பார்த்தாள்.வரும் வாந்தியை தடுக்க தன் கையால் வாயைப் பொத்தியப்படி இருந்தாள் பிருந்தா.அவள் முதுகை தடவிக் கொடுத்த தினகர் ஆர்டர் செய்த எலுமிச்சை சாறை சிறிது சிறிதாக தன் காதல் மனைவிக்கு புகட்டினான்.அவள் போதும் எனவும் நிமிர்ந்து மைத்துனியைப் பார்த்த பார்வையில் சிறிது மனத்தாங்கல் தெரிந்தது.இருக்காதா?!தன் உயிரான மனையாள் மசக்கையினால் அவதியுறும் போது அது அவள் தங்கையே ஆனாலும் அவளை தொந்தரவு கொடுப்பது அவன் அனுமதிக்க முடியாதது.
பிருந்தா அவ்வளவு அசடல்ல.அத்தானின் பார்வை கூறும் எச்சரிக்கை அவளுக்கு புரிந்தே இருந்தது.அவளுக்கும் தன் தமக்கையை தொல்லைக் கொடுப்பதற்கு சிறிதும் இஷ்டமில்லை.ஆனால் தலைக்கு மேல் கத்தி ஆடும் போது அதையெல்லாம் பார்க்கும் நிலைமையில் அவள் இல்லை.