"கெட்டிமேளம் கெட்டிமேளம்" என அய்யர் கூற நாதஸ்வரம், மேளம் இசைக்க ஸ்வேதா கழுத்தில் கவியரசன் தாலி கட்டினான்.
மறுபுறம் ஆதித்யா வெண்பாவின் கழுத்தில் தாலி கட்ட வெண்பாவோ இறுக்கமாக அமர்ந்திருந்தாள்.
சந்தோஷத்தில் திளைக்க வேண்டிய தருணம் இது. ஆனால் வெண்பாவினால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை.
ஆதித்யாவும் தன் காதலை ஏற்றுக் கொண்டு இருவர் மனதிலும் காதலோடு இந்த திருமணம் நடந்திருந்தால் வெண்பாவினால் சந்தோஷமாக இருந்திருக்க முடியும்.
ஆனால் இன்று நடந்ததோ முற்றிலும் அவள் எதிர்பாராதது.
அய்யர் குங்குமத்தை நீட்ட அதை எடுத்து வெண்பாவின் நெற்றியில் வைக்கும் போது அவள் உடலில் ஓர் சிலிர்ப்பு ஓடி மறைந்தது.
குனிந்தவாறே அமர்ந்திருந்த வெண்பாவின் கண்கள் கலங்கியிருந்தது சூழ உள்ளவர்களுக்கு தெரியாமல் இருந்தாலும் அருகில் இருந்த ஆதித்யாவிற்கு தெரியாமல் இல்லை.
வெண்பா காலில் மெட்டி அணிவிக்கும் போது அவன் புறங்கையில் அவள் கண்ணீர் துளிகள் பட்டு சிதறியது.
அந்த கணமே அவளை அணைத்து ஆறுதல் படுத்த அவன் கைகள் பரபரத்தாலும் ஆதித்யாவினால் எதுவும் செய்ய முடியாது.
வெண்பா தற்போது ஆதித்யாவின் மனைவியாக இருந்தாலும் ஆதித்யாவினால் அவள் மேல் அந்த முழு உரிமையை காட்ட முடியாது.
வெண்பா இன்னும் தன் மேல் கோபமாக இருக்கிறாள் என்பது அவனுக்கு தெரியும். தன் காதலை அவளிடம் எப்படி அவளிடம் புரிய வைப்பது என்று தான் அவனுக்கு தெரியவில்லை.
வெண்பா அவள் காதலை கூறிய போது அவன் அதை ஏற்றுக் கொள்ளாமல் அவள் மனதை காயப்படுத்தினான்.
கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் என்பது போல காலம் கடந்த பின்பே அவள் மேல் இருந்தது நட்பு அல்ல காதல் என்பதை உணர்ந்தான்.
எப்படியாவது தான் செய்த தவறுக்கு வெண்பாவிடம் மன்னிப்பு கேட்டு விட வேண்டும், தன் காதலை அவளிடம் கூறி விட வேண்டும் என ஆதித்யா முடிவெடுத்தான்.
ஆனால் அவன் மனசாட்சியோ நீ செய்தது மன்னிக்ககூடிய தவறா? என அவனைக் கேள்வி கேட்டது.
எதுவாக இருந்தாலும் வெண்பா தனது மனைவி, அவனின் சரி பாதி அவளின் சுக துக்கங்கள் எல்லாவற்றிலும் அவன் துணை இருக்க வேண்டும்.
இதுவரை அவள் சிந்திய கண்ணீரே போதும்.
இனியும் அவள் மனதை நோகடிக்க கூடாது. வெண்பா என் உயிர் அவளின்றி நான் இல்லை என பலவாறு மனதினில் முடிவெடுத்து கொண்டான் ஆதித்யா.
வெண்பா நடப்பதெல்லாம் கனவா? நனவா? எனப் புரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.
அவள் விலகிச் சென்றாலும் அவளது விதி அவளை மீண்டும் மீண்டும் பலவீனமாக்கிக் கொண்டிருக்கிறது.
"பெரியவங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோங்கோ" என அய்யர் கூறவும் கவியரசன்-ஸ்வேதாவைத் தொடர்ந்து ஆதித்யா-வெண்பா கலையரசி,வெங்கடாசலத்திடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர்.
பின்பு மஞ்சுளா,கோபால கிருஷ்ணனிடம் ஆதித்யா-வெண்பா ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர்.
வெண்பாவை ஆரத் தழுவிக் கொண்ட மஞ்சுளா "அம்மா மேல உனக்கு கோபமாடா?" எனக் கேட்கவும் "இல்லம்மா அப்படிலாம் எதுவும் இல்ல" எனப் புன்னகயுடன் கூறினாள் வெண்பா.
அந்த புன்னகை அவர்களை சமாதானப் படுத்துவதற்காக என்று ஆதித்யா புரிந்து கொண்டான்.
"சரி கொஞ்சம் ரெஸ்ட் எடு" என்று அவளை அறைக்குள் சென்று விட்டு வந்தார் மஞ்சுளா.
வெண்பா செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்யா.
கலையரசி வந்து "போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு ஆதி" எனக் கூறவும் "சரிமா" என்றவாறே ஆதித்யாவும் அறைக்குச் சென்றான்.
அறைக்குள் வந்த வெண்பாவோ அதுவரை தேக்கி வைத்திருந்த மொத்த சக்தியும் வடிந்து போக கால்கள் தள்ளாட கீழே அமர்ந்தாள்.
தனக்கு கிடைக்காமல் போய்விட்ட வாழ்க்கை என நேற்று வரை நினைத்துக் கொண்டிருக்க இன்று அவளே எதிர்பாராது அந்த வாழ்க்கையை பெற்று விட்டாள்.
கழுத்தில் ஆதித்யா கட்டிய தாலிக்கயிறு இருக்க அதை எடுத்து பார்த்தவள் கண்கள் கண்ணீரை சிந்தியது.
நடுங்கும் விரல்களால் நெற்றியில் கை வைத்து பார்த்தவள் ஆதித்யா வைத்த குங்குமம் இருக்க அந்த நொடியை எண்ணி மகிழ்ந்தாலும் அவன் தன் காதலை மறுத்த விதம் நினைவு வர அவள் முகம் பாறையாக இறுகியது.
அவள் கண் முன் காலையில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் காட்சியாக
தோன்றியது.