Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
இதயங்கள் பேசியது
தமிழ் படப்படப்போடு "ப்ளீஸ் அப்படி எதுவும் பண்ணிடாதீங்க" என்று அவர்களிடம் இறங்கி பேசினாள்.
அவன் குரூர புன்னகையோடு "அப்போ அந்த பொக்கிஷம் எங்க இருக்குன்னு சொல்லு ?!" என்றான்.
இப்போது உண்மையை உறைப்பதை தவிர வேறுவழியும் இல்லை. இனி பொய்யுரைத்தால் அவர்கள் விபரீதமாய் ஏதேனும் செய்ய கூடும் என்று சிந்தித்திருந்தவளின் முகவாயை அழுத்தி பிடித்து நிமர்த்தியவன் "சொல்ல போறதில்லைன்னா... விடு... நான் என்ன செய்யனும்னு எனக்கு தெரியும்" என்று சொல்லிவிட்டு அலட்சியமாய் திரும்பி தன் ஆட்களிடம் ஏதோ சொல்ல யத்தனிக்க,
இயலாமையோடு "சொல்றேன்... " என்றதும் அவன் ஆர்வமாய் திரும்பினான்.
இப்போதைக்கு அரண்மனையை காப்பதே முக்கியம் என்று அவளுக்கு தோன்றியது. ஆதலால் அவள் தயக்கத்தோடு பொக்கிஷத்தை குறித்த அனைத்து தகவலையும் உரைத்தாள்.
அவள் சொன்ன தகவல்களை கேட்ட நொடி, அவன் முகம் பிரகாசமானது. இருந்தும் லேசான சந்தேகம் எழ "பொய் இல்லயே ?!"என்று கேட்க
அவள் தளர்வோடு "உம்ஹும்" என்றபடி தன் தாத்தாவின் படத்தை பார்த்தாள்.
அப்போது அவள் விழிகளில் கண்ணீர் துளிர்க்க 'நான் உங்களுக்கு செய்த கொடுத்த சத்தியத்தை மீறட்டேன் தாத்தா... என்னை மன்னிச்சிடுங்க... உங்க நம்பிக்கையை உடைச்சிட்டேன்..." என்று எண்ணி குற்றவுணர்வில் ஆழ்ந்தாள்.
அவன் தான் நினைத்ததை அடைய போகிறோம் என்ற ஆனந்தம் பெருகிட நின்றவன் உடனே தன்னோடு இருந்தவர்களிடம் "இவ வாயை கட்டி... கீழே இருக்கிற ரூம்ல கட்டி போடுங்க... அந்த ரூம்லயே பாமை செட் பண்ணுங்க" என்றான்.
அவள் அதிர்ந்து போனபடி அவனை நோக்க, அவன் ஏளனமாக பார்த்து "உன்னை உங்க தாத்தா எப்படி காப்பாத்த போறார்னு நானும் பார்க்கிறேன்" என்றான் சவலாக!
அவள் வெறுப்பை உமிழ்ந்தபடி "யூ பாஸ்டட்... உன்னை" என்று சீற்றமடைந்தபடி அவனை எரிப்பது போல் பார்த்தாள்.
அவன் பயந்த பாவனையில் "அய்யோ நிறுத்தும்மா... அன்னைக்கு தர்மாவிற்கு சாபம் விட்ட மாறி எனக்கும் விட்டிறாத...." என்றான்.
அவள் புருவங்கள் சுருங்க சந்தேகமாய் பார்க்க அவன் சட்டென தன் பார்வையை மாற்றி வன்மத்தோடு சிரித்தான்.
"என்ன பார்க்கிற ?!... நீ தர்மாவுக்கு விட்ட சாபம் எனக்கு எப்படி தெரியும்னா... அந்த சாபத்தை பளிக்க வைச்சதே நான்தானே... நீ அந்த கேஸ்ல எப்படியாச்சும் சிக்குவன்னு பார்த்தேன்... நடக்கல... ஆனா இப்ப நீ தப்பிக்கவே முடியாது... அதுவும் புரிஷனும் பொண்டாட்டியுமா சேர்ந்து பரலோகம் போகப் போறீங்க... உங்களுக்கு கல்யாண ஆன இடத்துலயே உங்க விதி முடியப் போகுது" என்றான்.
"உனக்கு என்னை கொல்லனும்னா ஷுட் பண்ணு... இந்த அரண்மனையை மட்டும் எதுவும் பன்னிடாதே" என்று அவள் கோபத்தோடு உரைக்கவும்
அவன் பயங்கரமாய் சிரித்தான்.
"ரொம்ப தைரியம்தான்டி உனக்கு...ஆனா எனக்கு நீயும் இந்த அரண்மனையும் டார்கெட் இல்லயே... என்னோட ஒன்லி டார்கெட் அந்த ஏசிபி மட்டும்தான்... எஸ்... அவன் இந்த தர்மா கேஸ்ல ஆரம்பிச்சி தேவையில்லாத விஷயத்தை எல்லாம் ஆராய்ச்சி செஞ்சிட்டிருக்கான்.. அவன் இருந்தா இந்த பொக்கிஷத்தை நாங்க எடுக்கவும் முடியாது.. ஒண்ணும் பண்ணவும் முடியாது... அவனை கொல்லனும்... அதுவும் அவன்தான் எங்க டார்கெட்னு யாரும் கண்டுபிடிக்காத மாதிரி கொல்லனும்... அப்பதான் தேவையில்லாம எங்க பக்கம் கவனம் திரும்பாது... உன்னை கடத்தினது... அந்த பொக்கிஷத்துக்காக மட்டும் இல்ல... அந்த ஏசிபியை கொல்லனும்னுதான்... அதனாலதான் உன்னை காஞ்சிபுரம் வரவைச்சி கடத்தனோம்..." என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவனின் ஆட்களில் ஒருவன் "அந்த ஏசிபி வந்துட்டான்" என்றான்.
உடனே தன் கைப்பேசியை பார்த்துவிட்டு "இவளை வாயக்கட்டி கீழே இருக்கிற ஸ்டோர் ரூம்ல யாருக்கும் தெரியாத மாதிரி அடைச்சிட்டு... பாமை 9 மணிக்கு வெடிக்கிற மாதிரி செட் பண்ணுங்க... அப்புறம் நம்ம பிளேன்படி பின்புறம் போக வேண்டாம்... இந்த சுரங்க பாதை வழியாய் போயிடலாம்... யார் கண்ணலயும் சிக்கவே மாட்டோம்" என்றான்.
அவன் சொன்னபடியே தமிழின் வாயை கட்ட, அவளோ அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருந்தாள்.
அவன் பேசியதை வைத்து பார்க்கும் போது அவர்கள் முன்னமே இந்த திட்டத்தை தீட்டியிருக்கிறார்கள் என்று தோன்றியது.
அப்போது தான்தான் வலிய வந்து இவர்களிடம் சிக்கியிருக்கிறோமா ?
அந்த சமயத்தில் அந்த கூட்டத்தின் தலைவன் தன் ஆட்களிடம் கண்ணசைக்க, தமிழை இருவர் வலுகட்டாயமாக இழுத்து சென்று பழமையான பொருட்கள் இருந்த அறைக்குள் அடைத்தனர்.
அவளை முழுங்கால் போடச் செய்து அவள் கால்களை பிணைத்துவிட்டு,
அவளருகாமையில் அந்த வெடிகுண்டை தயார் செய்து வைத்தவர்கள் "சாவுடி" என்று சொல்லிவிட்டு வெளியேறினர்.
யாரு அவளை தேடினாலும் அவளை காண்பது கஷ்டம்தான்.
அங்கே இருந்த பொருட்களோடு பொருட்களாய் அவள் கிடத்தப்பட்டிருந்தாள்.
அருகிலே இருக்கும் வெடிகுண்டில் நேரம் வேகமாய் முன்னேறி போய் கொண்டிருந்தது. எதுவும் செய்ய முடியாத இயலாமை.
இருளில் அவள் பார்வைக்கு ஒன்றும் புலப்படவில்லை.
எத்தனை காலங்களாய் கட்டியாண்ட அரண்மனை...
சீரும் சிறப்பமாய் பல வெற்றி முழக்கங்களையும் பல விழாக்களையும் பார்த்திருக்கும்...
இன்னும் அதே பலத்தோடும் கம்பீரத்தோடும் நின்றிருப்பதில் தன் முன்னோர்களின் மீது அவளுக்கு எப்போதும் அலாதியான பெருமை...
இன்றோடு...
இன்னும் சிற்சில நிமிடங்களோடு...
அந்த பெருமிதம் எல்லாம் மண்ணோடு மண்ணாய் போக போகிறது...
இந்த அரண்மனையோடு சேர்த்து... தன்னோடு சேர்த்து...
இரண்டும் வேறு வேறு அல்லவே...
இது வெறும் கல்லாய் மண்ணாய் கட்டிடமாய் மட்டுமே பலருக்கு தெரிந்திருக்கும்...
ஆனால் தனக்கு அப்படியல்ல... ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு மூளை முடுக்குகளிலும் அவள் தாத்தாவும் அவளுமாய் சுற்றிதிரிந்த நினைவுகள்...
அவள் குழந்தையாய் வளைய வந்தபடி...
ஒவ்வொரு தூணையும் ஆசையாய் கட்டி கொண்டபடி...
ஒவ்வொரு மூளை முடுக்குகளில் எல்லாம் ஒளிந்து கொண்டபடி...
நடந்து... ஓடி...ஆடி சுற்றி திரிந்து குதித்த விளையாடிய இடங்கள்...
இந்த அரண்மனையை விட்டு வெகுதூரம் செல்லப் போகிறோம் என்றறிந்து போது ஒவ்வொரு தூணையும் அவள் கட்டிகொண்டு அழுதிருக்கிறாள்...
கட்டுபடுத்த முடியாமல் கண்களில் இருந்து கண்ணீர் ஊற்றாய் பெருகி கொண்டே இருக்க வாய் விட்டு கதற வேண்டும்...
அதுவும் முடியாத இயலாமையோடு...
அப்போது எங்கிருந்தோ வீரேந்திரன் அழைத்தான்.
"தமிழச்சிசிசிசிசிசிசிசி"
ஆழமாய் அழுத்தமாய் உயிரோட்டமாய் உணர்வுபூர்வமாய் அழைத்தான்.
அந்த அழைப்பு அவளின் ஒவ்வொரு செல்களிலும் உயிர்ப்பையும் சிலிர்ப்பையும் ஏற்படுத்திவிட்டது.
அந்த அழைப்பு ஊற்றாய் பெருகி கொண்டிருந்த அவள் கண்ணீரை உறைந்து போகச் செய்திருந்தது.
அந்த குரலில் அத்தனை வலியும் காதலும் பதட்டமும் வேதனையும் கலந்திருந்தது.
அதனை உணர்ந்து கொண்ட நொடி அவனை ஓடிச் சென்று அணைத்து கொள்ள துடித்தது அவளுக்கு...
அவனின் அணைப்பில் மூழ்கி திளைக்க எண்ணியது...
இதே அரண்மனையில்தான் அவன் முதல்முறையாய் அவளை அணைத்திருக்கிறான்... அவளை உறவாக்கி கொண்டிருக்கிறான்... அவன் பார்வையாலயே அவளின் உணர்வுகளை தீண்டி உயிர்பிக்க செய்திருக்கிறான்... ஆனால் தான் அவனை அற்பமாய் உதாசீனப்படுத்தி பேசிருக்கிறோம்...
'இந்த கல்யாணம் நடந்தா என் லைஃபே லாஸாகிவிடுமே' இங்கே நின்றபடி இந்த வார்த்தையை தீயாய் உதிர்த்தாள்.
அந்த வார்த்தையெல்லாம் இன்று வலியாய் இருந்தது...
மனதார அவற்றிற்கெல்லாம் அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எண்ணி வருத்தமுற்றாள்.
அவனை காதலிக்க வேண்டும். சலிக்க சலிக்க காதலிக்க வேண்டும். அவனோடு வாழ வேண்டும். அவனை மனதிலும் அவன் உயிரை தனக்குள்ளும் சுமக்க வேண்டும்.
ஏங்கி தவித்தது அவள் மனம்...
அவள் உயிர் வரை பாய்ந்த வலி...
தலைகவிழ்ந்து அழுதவள் இதெல்லாம் இனி முடியுமா ?! என்ற கேட்டபடி
என்று துவண்டு போனாள்.
அப்போதுததான் தோன்றியது. அவனும் இங்கேதான் இருக்கிறான். அவனுக்குமே ஆபத்து. அவனுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதே !
அந்த எண்ணம் தோன்றிய மறுகணம் அவள் மனோதிடம் மீண்டும் கம்பீரமாய் தலைதூக்கியது.
'முயற்சி செய்யாம பின்வாங்கிறதும்... தோல்வியும் ஒத்துக்கிறதும்... தமிழச்சிக்கு பழக்கமில்லையே... இதென்ன புதுசா...' கேட்டு கொண்டாள்.
அந்த ஒற்றை வாக்கியம் அவளை தைரியப்படுத்த, எப்போதும் அவளை பிரச்சனையிலிருந்து காக்கும் தன் ஆபந்பாந்தவனை அழைத்தாள்.
'தாத்தா எங்க இருக்கீங்க ?!...ஏதாவது ஒரு வழி காட்டுங்க' என்று மானசீகமாய் கேட்டு கொண்ட அந்த நொடி அவளின் அறை கதவு திறந்து ஒருவன் நுழைந்தான்.
அவன் போலீஸ் உடையில் இருந்தான்.. அவனிடம் தன்னை காட்டிக் கொள்ள அவள் முயற்சி செய்ய, அவனோ அந்த அறையின் இருளில் அவன் கையிலிருந்து அலைப்பேசி வெளிச்சத்தால் அந்த அறையை நோட்டமிட்டு கொண்டிருந்தான்.
அப்போது வெளியே இருந்து ஒரு அழைப்பு கேட்டது.
'எல்லோரும் உடனே அரண்மனையை விட்டு வெளியே போங்க'
அவனும் இதை கேட்டு அவசரமாய் அந்த வெளிச்சத்தை அவளை சுற்றிலும் படரவிட்டு மீண்டும் இருளில் அவளை மூழ்கடித்துவிட்டு சென்றான்.
மீண்டும் ஏமாற்றமே மிச்சமானது. துவண்டு போனவளுக்கு அப்போது அவன் காண்பித்த வெளிச்சத்தில் பார்த்த விஷயங்கள் நினைவுக்கு வர, அத்தனை நேரம் இதை அவள் கவனிக்கவில்லை. பழைய பொருட்கள் இருக்கும் இடமல்லவா இது.
அவன் காட்டிய வெளிச்சத்தில் அவளருகிலேயே இருந்த பழைய கத்தி சொருகிய கேடயத்தை பார்த்த நினைவு வர பின்புறம் பிணைத்திருந்த கரத்தால் அதனை தொட்டு உணர்ந்து கையில் எடுத்து அந்த பிணைப்பை விடுவிக்க எண்ண, அது வெறும் மெல்லிய துணி என்பதால் நொடி பொழுதில் அது கிழிந்து போனது.
அவசரமாய் தன் கால் கட்டையும் வாய் கட்டையும் அவிழ்த்தவள், அந்த அரண்மனையின் நிசப்தத்தை கிழித்து கொண்டு "ஏ தமிழச்சி... எங்கடி இருக்க ?" என்று வீரேந்திரனின் குரல் ஓலிக்க ,
அவளும் பதிலுக்கு குரல் கொடுக்க எண்ணினாள்.
ஆனால் அந்த பாம்... அதனை பார்த்தவளுக்கு 8. 58 என்று இரண்டு நிமிடம் மட்டுமே மீதமிருப்பதாய் அவளுக்கு சொல்லாமல் சொல்ல, இப்போது தன்னவனையும் தன் அரண்மனையையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது...
அதற்கு பிறகு அவள் செய்ய நினைத்ததை செயலாக்கம் செய்தாள்.
அந்த பாமை மனோதிடத்தோடு தன் கரத்தில் ஏந்தி கொண்டு அந்த அரண்மனையை விட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணி, அவசரமாய் செல்லும் போது இருளில் ஏதோ அவள் தட்டிவிட, அந்த அறை முழுக்க அந்த சத்தம் எதிரொலித்தது.
வீரேந்திரன் வந்துவிடப் போகிறானே என்ற பதட்டம் தொற்றி கொண்டது.
அவன் தன்னை பார்த்துவிட கூடாது.
பின் அவன் தன்னை காப்பாற்றுவதிலேயே குறியாய் இருப்பான். அதே நேரத்தில் அவனை ஆபத்தில் சிக்க வைக்க மனம் வராமல் தன்னை தைரியப்படுத்தி கொண்டு அந்த அறையை விட்டு அகன்றாள்.