கோவை ரேஸ்கோர்ஸ், காலை ஆறு மணிக்கு...
கார்த்தியின் அறையில் அவனது போன் விடாமல் அலறியது... இரவு பதினோரு மணிவரை தன்
கம்பெனியின் புதிய வெளிநாட்டு ஆர்டர்காக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தாமதமாக
தான் உறங்கியிருந்தான்...
அவனது காஸ்மெடிக்ஸ் இயற்கையானது என்பதால் பக்கவிளைவுகள் இல்லாமல் அனைத்து
சருமத்திற்கும் பொருந்தியது. ஆகையால் ஏற்றுமதி செய்ய வெளிநாட்டு வாடிக்கையாளர் ஒருவர்
கேட்க... அதன் பொருட்டு இரவு நேரமாகியது.... இந்த மகிழ்ச்சியில் மாலை வந்து தன் வீட்டில்
தங்கியிருக்கும் முத்ராவை மறந்தே போனான்.
இப்பொது போனை எடுத்ததும்... அவனது மேனேஜர்...
“சார்.. நேற்று பேசிய ஆர்டர் சம்மந்தமா மறுபடியும் பேச நினைக்குறாங்க... இன்னும் ஒரு
மணிநேரத்தில் கான்பரன்ஸ் கால் பண்றாங்களாம்... புது கம்பெனி அப்படிங்கறதால அவங்க சீப்
நம்ம கிட்ட பேசணும் என்று விருப்பபடுறாங்க... கொஞ்சம் சீக்கிரம் வாங்க சார்..”
என்றான். தொழிலாளர்களிடம் சகஜமாக அதே நேரம் கண்டிப்பாகவும் நடந்துக்கொள்வதால் தான்
இவ்வளவு உரிமையாக மேனேஜரால் கால் பண்ணி சொல்ல முடிந்தது. கார்த்தியும்...
“என்னாது... இப்போவா... ? வெயிட்... வெயிட்... ஐ வில் பி தேர் இன் 30 மினிட்ஸ்... நீங்களும்
வந்துருங்க...”
என்றவன் அவசர அவசரமாக கிளம்ப ஆரம்பித்தான்.
வீட்டின் மொட்டைமாடி...
மூன்று ஜீவன்கள் சூர்யனுக்கு நமஸ்காரம் செய்துக்கொண்டிருந்தது. ( ஆரம்பிச்சிட்டாங்கைய்யா
ஆரம்பிச்சிட்டாங்கைய்யா )
யாருடா அது புதுசா என்று பார்த்தால்.. அட அது நம்ம காயுகுட்டி... இரு ஜீவன்கள் உற்சாகமாகவும்
ஒரு ஜீவன் தூக்கக் கலக்கத்திலும் இருந்தது. தூக்கக் கலக்கத்தில் இருந்த ஜீவன் சாட்சாத்
ருத்ராவே தான்... ஒரு வாரம் தொடர்ந்து நன்றாக தூங்கியதால் இந்நேரம் அவளிற்கு தூக்கம்
சொக்கியது.
இரண்டு நாளாக ஆபீஸ் வேலை பார்த்து ரூமில் தனியாக தூங்கிய ருத்ராவிற்கு தான் தெரியும்...
முகிலனை அவள் எவ்வளவு மிஸ் செய்கிறாள் என...
ஆம்... காலை எழுந்ததும்... இரவு தூங்கும் முன்பும் பார்த்து பழகிய முகம்... பேசிய பேச்சுக்கள் பாதி
வாக்குவாதம் தான் என்றாலும் அவனின் ஆளுமையான குரல் இன்றி எதுவோ குறைவது போல்
இருந்தது. என்ன இது... நாமும் தான் இருபத்து நான்கு வருஷம் பார்த்து பழகிய பெற்றோர்,
தங்கையை பிரிந்தோம்... இப்படி உணரலையே... என்று மனதை சுயபரிசோதனை செய்து
கொண்டிருந்தாள்.
மாலை தங்கை வந்தது மகிழ்ச்சி தான் என்றாலும்... அதையும் தாண்டி எதையோ எதிர்பார்த்தது
மனது.
நேற்றைய இரவு ருத்ரா... முத்ரா.. காயு மூவரும் அரட்டை அடிக்கையில் முத்ரா தான்... தன் புது
தோழியிடம் கேட்டாள்...
“காயு காலையில் யோகா செய்யலாமா...? அதுவும் கோயம்புத்தூர் கிளைமேட்டே செமையா
இருக்கும்”
என்று அழைக்க...
ருத்ரா ஜெர்க்கானாள்... அவள் அதை மறந்து தான் ஒரு வாரம் ஆயிற்றே... மீண்டுமா... என்று
அரண்டு... காயுவை முத்ராவிற்கு தெரியாமல் கை அசைத்து மறுக்க சொல்வதற்குள்...
“ஹய்... யோகாவா... நான் ரெடி... எனக்கும் செய்யணும்னு ஆசை தான்... நாம நாளைக்கு
காலையில் செய்யலாம்”
என்று கூற..
ருத்ராவின் டெபாசிட் காலியாகியது... அதை மேலும் அதிகரிக்கும் விதமாய்...
“அண்ணி முத்ரா இங்கயே என்கூட படுக்கட்டும்... அண்ணன் தான் ஊருக்கு போயிருக்காங்கல...
அவங்க வர வரைக்கும் எங்க கூட படுங்க”
என்று அங்கேயே படுக்க வைக்க...
முத்ராவும்,
“ஆமாக்கா... இங்கயே படு... காலையில் எல்லாரும் ஒன்றாக செய்யலாம் மொட்டை மாடிக்கு
போய்... ஓகேவா...”
என்று விட...
மூவருக்கும் தாராளமாக இடமிருந்த அந்த பெரிய கட்டிலில் உறங்கி, காலையில் சொன்னபடி
தொடங்கியிருந்தனர்.
செய்து முடிக்கையில் அந்த குளிரிலும் இவர்களுக்கு வியர்த்து வழிந்தது. மூவரும் ஓய்வாக
உட்கார்ந்திருக்க...
காயு தன் வழக்கமான வேலையான செல்பி எடுப்பதை தொடங்கினாள்.
“இவ்ளோ காலையிலா...?”
என்று முத்ரா கிண்டல் அடிக்க...
“ஆமா... இதெல்லாம் இப்போ டைரி மாதிரி... இன்று நம்ம செஞ்சத கொஞ்ச நாள்ல
மறந்துருவோம்... இதுவே போட்டோ எடுத்து வைச்சா... அதை பார்க்கும் போதெல்லாம்... நமக்கு
எல்லாம் நியாபகம் வரும்ல... அதுவும் இதெல்லாம் என்ன... நாம யாருக்காவது காமிக்கவா
போறோம்... நமக்கே நமக்கான சுகமான நினைவுகள் முத்ரா...”
என்று செல்பிக்கு புது விளக்கம் கொடுத்தால் காயு.
அதை ஒத்துக்கொண்ட முத்ரா...
“ரைட்டு... எல்லாரையும் எடு பாப்போம்...”
என்று அக்காவையும் சேர்த்து போஸ் குடுக்க தொடங்கினாள்.
அதை முடித்து கீழே அனைவரும் ஏதேனும் ஆகாரம் அருந்த வர...
முத்ரா தான்... ஓட்ஸ் கஞ்சியும் பாலும் மட்டுமே இருப்பதை பார்த்து கூழ் இல்லையோ என்று
விழிக்க...
ருத்ரா,
“மூன்று காபி சவிதாம்மா”
என்றாள்.
அதை கேட்டதும் முத்ரா ருத்ராவிடம் சென்று...
“ஏய்... அக்கா... கல்யாணம் முடிஞ்சா பழக்க வழக்கம் எல்லாம் மறந்துருவியா... யோகா செய்யல...
கூழ் விட்டாச்சு... அந்த வெள்ளைக்காரன் ஓட்ஸ விட நம்ம நாட்டுக்காரன் ராகி குறைஞ்சு
போச்சா... ?”
என்று காதை கடிக்க...
இவள் பின்னாலேயே வந்து தன் காதை இவர்களிடம் வைத்திருந்த காயு... ஓட்ஸ் கஞ்சியை
தந்தைக்கு எடுத்து சென்ற தாயை,
“அம்மா... ஆஆஆ”
என்று கத்தி கூவியபடி தாயிடம் விரைய...
இருவரும் திடுக்கிட்டு திரும்பினர்... அவளோ
“இங்க வாங்க... முத்ரா”
என்று சொல்ல வர...
பாய்ந்து சென்று அவளின் வாயை பொத்தியவள்...
“அம்மா.. தாயே தெரியாம சொல்லிட்டேன்... போட்டுக்குடுத்து கெட்ட பேர் வாங்கி குடுத்துராத...
நான் ரெண்டு நாள் ஒரு ஓரமா இருந்து ஹாஸ்டல் ஓடிருறேன்...”
என்று கெஞ்ச...
இவர்கள் நடத்திய கூத்து டைனிங் ஹாலில் என்பதால்... அப்போது தான் அவசர அவசரமாக
சாப்பிட வந்துக்கொண்டிருந்த கார்த்தியின் காதில் இவளது குரல் நுழைந்தது.
“ஒஹ்... நீலப்பயித்தியம் வந்துருக்கு போல...”
என்று நினைத்து ஆவலாக பார்த்தான். ஆனால் அந்தோ பரிதாபம் இன்று நீலநிறம் இடம்
மாறியிருந்தது. அவள் வெள்ளை மற்றும் கோல்டன் கலந்த சல்வார் அணிந்திருக்க... இவன் தான்
மீட்டிங்கிற்காக கிளம்புகையில் கையில் கிடைத்ததை போட்டு வந்திருந்தான். அது வெள்ளை
பான்ட் ஷர்ட் என்று இருந்தாலும்... அதன் மேல் போடும் கோட் இளம் நீலத்தில் இருந்தது.
அதை கவனிக்காமல் மீட்டிங்கிற்கு நேரமாகவே... அங்கு இருந்த இட்லி சாம்பாரை ஊற்றி
வேகமாக சாப்பிட ஆரம்பித்தான். மற்றவர்களை போல் சாப்பாடை புறக்கணித்து ஓடும்
தொழிலதிபன் இல்லை இவன்.
ஒரு நேரம் சாப்பிட எவ்வளவு நேரம் ஆகிட போகுது... ஒரு பத்து நிமிஷம் ஆகுமா..? அதற்குள்
ஒன்றும் மூழ்கிவிடாது என்பது இவன் வாதம். இவனின் கொள்கைகள் அனைத்தும் தந்தை
மற்றும் அண்ணன்மாருக்கு எதிரானவை... ஆனால் தாயிற்கு சாதகமானவை.
இவன் எப்படி முன்னேறுவான் என்ற அவர்களின் மனதின் மறைமுக கவலையை கம்பெனியின்
முன்னேற்றம் மூலமாகவே துடைத்து எறிந்திருந்தான்.
இப்பொது மாணிக்கவேல் சொல்கிறார்...
“அவனைப்போல் உடம்பையும் பிசினஸயும் எனக்கு சரிசமமாக பார்க்க தெரியவில்லை” என...
அம்மா... என்று காயு கத்தியதும் அவசரமாக வந்த அபிராமி...
“என்னடி...”
என்று கேட்க... முத்ரா அவரை பார்த்ததும் தன் கையை கீழே இறக்கி இருந்தாள்.
அவர் கையில் இருந்த ஓட்ஸ் கஞ்சியை வாங்கி டேபிளில் வைத்தவள்...
“இந்த வெள்ளைக்காரன் ஓட்ஸ விட நம்ம நாட்டுக்காரன் ராகி குறைஞ்சு போச்சா...?”
என்று முத்ராவின் கேள்வியை தன் தாயிடம் கேட்க...
அபிராமி ஒன்றும் புரியாமல் முழித்தார்...பின்,
“என்னடி உன் பிரச்சனை... காலங்காத்தால ஆரம்பிக்குற..” என்று புரியாததால் சலிக்க...
“அப்படின்னு முத்ரா கேட்குறா மா அண்ணிக்கிட்ட...”
என்று போட்டும் குடுத்தாள்.
பத்த வச்சிட்டியே பரட்டை... என்ற பார்வை பார்த்த முத்ரா... இதற்கு மேல் அமைதியா இருக்க
கூடாது என்று ராகியின் அருமை பெருமைகளை அள்ளி விட ஆயித்தம் ஆனாள்.
“அத்தை நான்... அது வந்து”
என்று திணறியவள்... பின் எது நடந்தாலும் பரவால்ல என்றெண்ணி...
“ஓட்ஸ் உடம்புக்கு நல்லது தான்... அப்படின்னு டாக்டரே சாப்ட சொல்வாங்க தான்... ஆனா இதை
விட நாலு மடங்கு அதிகமான சத்து நம்ம நாட்டு ராகி, கம்புன்னு விளையுற தானியங்கள்ல இருந்து கிடைக்குது... ஒரு டம்ளர் ராகி கூழ்ல இருக்குற சத்து வேற எந்த பானத்திலும் ஒரு டம்ளர்
குடிச்சா நம்ம உடம்புல சேராது... தவிர ஓட்ஸ் ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாட்டு பயிர்...
அதை அவங்க நாட்டுலேயே அதிகமா சாப்பிட மாட்டங்க... நாம ஏன் ஒன்றுமே இல்லாத
சக்கையை வாங்கி சாப்பிடனும்... அதான் சொன்னேன்...”
என்று படபடவென்று பேசி கடைசியில் தயக்கத்தோடு முடிக்க...
அபிராமி தான்...
“அச்சோ... இது எங்களுக்கு தெரியாதே மா... இவங்க தாத்தா டெய்லி அதை தான் குடிப்பாங்க...
நாங்க எல்லாரும் பால் தான் குடிப்போம்... இந்த ஒரு மாசமா தான் உன் மாமாக்கு உடம்பு சரி
இல்லாம போன பிறகு டாக்டர் ஓட்ஸ் குடிக்க சொன்னாரு... இல்லையென்றால் அவரும் பால்
தான் குடிப்பாரு”
என்று கூற...
“நாங்க கூழ் தான் குடிப்போம் வீட்டுல... அப்புறம் வேணும்னா பால் குடிச்சிபோம்...”
என்று ருத்ரா இப்பொது தங்கைக்கு சாதகமாக கூற...
“அதுகென்ன... இங்கயும் சொல்லுங்க ராகி மாவு இருக்குமே... சவிதாம்மா இவங்க ரெண்டு பேருக்கும் கூழ் குடுத்துருங்க... நான் உங்க மாமா கிட்ட கேட்டு...”
என்பதற்குள்,
“எனக்கும் சேர்த்தே கூழ் சொல்லு அபிராமி..”
என்றவாறே வந்து கார்த்தியின் அருகில் அமர்ந்தார்.
“எனக்கும்..”
என்று காயுவும் சொல்ல...
“எல்லாருமே வா... சரி எனக்கும் சேர்த்து செய்யுங்க...”
என்று சிரித்தபடி சொன்னார் அபிராமி.
கார்த்தி அப்போது தான் சாப்பிட்டு எழுந்தான்... கூடவே...
“இன்று நேரமில்லை... முக்கிய மீட்டிங்... நாளையில் இருந்து நானும் ஜெயின் பண்ணிக்குறேன்...
பாய் பா... பாய் மா... பாய் அண்ணி... பாய் குட்டிப்பிசாசு..”
வரிசையாக சொல்லிவந்தவன்... முத்ராவை குறும்புடன் பார்த்து...
“பாய் ராகி கூழ் அம்பாஸ்டர்”
என்று விட்டு சென்றிருந்தான்.
அதுவரை அவனை....அவனது புன்னகை தளும்பும் முகத்தை... கொஞ்சம் சதை இருந்தாலும் அந்த நீலநிறகோட்டில் துளி கம்பீரம் குறையாமல் கண்ணை பறித்த அவன் ஆண்மையின் அழகினை வைத்த கண் வாங்காமல் பார்த்த முத்ராவிற்கு கடைசியில் அவன் ராகி கூழ் அம்பாஸ்டர் என்றதும் தான் சுயநினைவே வந்தது.
“அடச்சே... இப்படியா பார்ப்ப...”
என்று மூளை சாட...
“இல்ல இல்ல... இவன் நமக்கு பிடிச்ச கலர் கோட் போட்ருக்கான்... அதான் அழகா தெரிஞ்சிருச்சி...
இல்லன்னா நான் இப்படி பண்ணுவேனா...”
என்று மூளை கேட்ட கேள்விக்கு மனம் சமாதானம் உரைத்தது. அதற்கு மேல் அதை பற்றி
யோசிக்க பிடிக்காமல் இல்லை முடியாமல் அத்தோடு தன் எண்ணத்திற்கு தடை விதித்தாள்
முத்ரா. ( பிடிச்ச கலர் டிரஸ் போட்ட அத்தனை பேரையுமா நீ இப்படி பார்த்த... சமாதானம்
என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா மா )