MithraPrasath
SM Exclusive
இடைவிடாத இன்னல்கள்
அத்தியாயம் 19
சுந்தரம் அபியை வண்டியில் கொண்டு விட சம்மதம் சொன்னான். அபி பட்டு புடவை அணிந்திருந்ததால் ஒரு புறமாக அமர்ந்தாள். அமர்ந்த உடன் வண்டியை எடுத்தான் சுந்தரம். உடனே அவள் இடுப்பில் கை வைத்து மார்போடு அவனை இறுக்கி பிடித்து கொண்டாள்.
அவளது தொடுதலில் அவனுக்கு உள்ளுக்குள் எதோ செய்ய, சட்டென வண்டியை நிறுத்தினான்.
“என்னாச்சு...?” என்று அவள் சாதரணமாக கேட்டாள்.
“கையை எடு... யாராது பார்த்தா என்ன நினைப்பாங்க..?!! கையை எடு.., வண்டிய பிடி..” என்று சொன்னான்..
“நான் டபுள் சைடு உட்கார்ந்து இருந்தா உன்னை பிடிச்சுருக்க மாட்டேன்... இப்போ ஒரு சைடா ல உட்கார்ந்து இருக்கேன், அதான் விழுகாம இருக்க உன்னை பிடிச்சுட்டு இருக்கேன். வண்டிய பிடிச்சேன்.. ஆனா அது சரி வரல, அதான் உன்னை பிடிச்சேன்..” என்று அவன் நம்புமாறு சொல்லவிட்டு அவனை பார்த்து உள்ளுக்குள் சிரித்தாள்.
அவனும் வேறு வழி இல்லாமல் ஒப்புகொள்வது போல் சொல்லி விட்டு, ஆனால் உள்ளுக்குள் அது பிடிக்கவே செய்ததால், அனுபவித்து கொண்டே வண்டியை ஓட்டினான். முதல் முதலாக ஒரு பெண்ணின் ஸ்பரிஷம் அவனை என்னன்னவோ செய்தது. சொல்ல தெரியாத, புரியாத அன்பு அவள் மேல் அதிகரித்தது.
இது காலத்துக்கும் நீடித்து இருக்கும் என்று நினைத்து பார்க்கும் போதே, மனதினுள் ஆசை வந்து அவனை குதுகலிக்க செய்தது. அவளை பார்க்க பார்க்க உள்ளுக்குள் அவளுடனான வாழ போகும் வாழ்க்கை இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்க வேண்டும் என்ற கற்பனையை வளர்த்து வாழவே தொடங்கியிருந்தான்.
பாதி தூரம் சென்ற நிலையில் அவர்களை சுற்றி போகிறவர்கள் எல்லாரும் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டு கற்பனையில் இருந்து வெளி வந்தவன், அபிநயா அவனை இறுக்கி பிடித்தவாறு முதுகில் சாய்ந்து அமர்ந்திருப்பதை கண்டு வண்டியை உடனடியாக ஓரமாக நிறுத்தினான். நிறுத்திய உடன் அவள் நிமிர்ந்து, “என்ன..?” என்று கேட்டாள். அப்போதும் அவன் மேல் இருந்து கையை எடுக்கவில்லை.
“கையை எடு... எழுந்திரி... விட்டா நீ அப்டியே என் மீதே தூங்குற..” என்று சொல்லி அவளது கையை எடுத்து விட்டு கண்ணாடி வழியாக பார்த்தான்.
அவள் முறைத்து பார்க்கவும், “வண்டி ஓட்ட கஷ்டமா இருக்கு... அதுக்கு தான் சொன்னேன்..” என்று சமாளிக்க சொல்லி திரும்பி கொண்டான்.
“சரி அதுக்கு...?!!” என்று கேட்டாள்.
“தோளுல கை வச்சுட்டு வா.., போகிற வரைக்கும்...” என்று கூறவும்
கோபத்தை அடக்கி கொண்டு, “சரி..” என்று கூறிவிட்டு கையை தோளில் வைத்து கொண்டாள்.
வண்டியை எடுத்தான் சுந்தரம்.
“நான் காலைல சாப்பிடும் போது உன்கிட்ட ஒன்னு கேட்டேன்.. நீ பதில் சொல்லாம இப்போ வரைக்கும் என்னை ஏமாத்திட்டு இருக்க..” என்று அவனை கண்ணாடி வழியாக பார்த்து கொண்டே கேட்டாள்.
அவன் சிரித்து கொண்டே பதில் இப்போதும் சொல்லாமல் வந்தான். உன்னை எப்படி சொல்ல வைக்கணும்ன்னு எனக்கு தெரியும்., என்று மனதில் நினைத்து கொண்டு,
“சரி, சரி... வண்டிய அந்த கடை கிட்ட நிறுத்து..” என்று சொன்னாள்.
“எதுக்கு..?”
“நீ தான் நான் தூங்குறதா சொல்லுற.. அதுக்கு தான் அங்க போய் ஏதாது வாங்கி குடிப்போம்.” என்று சொல்லி நிறுத்த சொல்லி கட்டாய படுத்தினாள்.
அவனும் அந்த ஹோட்டல் வாசலில் வண்டியை நிறுத்தினான்.
இறங்கிய உடனே அபி உள்ளே சென்று ஒரு ஷேரில் அமர்ந்து விட்டாள். இவன் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்ததும்,
“சீக்கிரம் ஏதாது வாங்கி சாப்பிடு.. லேட் ஆகுது., வீட்டுக்கு போகணும்..” என்று அவசர படுத்தினான் சுந்தரம்.
“இப்போ தான வந்திருக்கு.. உட்காரு.. ஏதாது சாப்பிட்டு கிளம்பலாம்..” என்று கூறினாள்.
“நான் உட்கார்ந்து சாப்பிட வரல... உனக்காக தான் வந்தேன். சீக்கிரம் சாப்பிடு கிளம்பலாம்..” என்று கூறி அப்படியே நின்றிந்தான்.
அவள் வேகமாக எழுந்து அவனது கையை பிடித்து இழுத்து வந்து அருகில் இருந்த ஷேரில் அமர வைத்தாள். அவன் பதறியவாறு முறைத்து கொண்டே, சுற்றி சுற்றி அனைவரையும் பார்த்தவாறே அமர்ந்தான்.
அவள் சாதரணமாக, “என்ன சாப்பிடுற..? ஜூஸ் சொல்லவா..?” என்று கேட்டாள்.
“எனக்கு எதுவும் வேண்டாம்ன்னு சொல்றேன்ல.. உனக்கு வேண்டும்னா வாங்கி சாப்பிடு..” என்று சொல்லி கோபமாக அவளை பார்த்தான்.
பின் அவள் தனக்கு ஒரு ஆரஞ்சு ஜூஸ் சொல்லிவிட்டு, அவன் புறம் திரும்பினாள். அவன் சுற்றி இருப்பவர்கள் யாரும் கவனிக்கிறார்களா என்று நோட்டம் விட்டவாறே அமர்ந்திருந்தான்.
“எதுக்கு நீ இப்படி பயந்துட்டே இருக்கே...? இங்க என்னை பாரு... உன்னோட பொண்டாட்டி நான்... என்னை பார்க்காம மற்றவங்கள பார்த்துட்டு இருக்க..? என்ன ஆம்பள நீ..?” என்று சீண்டினாள்.
அவள் பொண்டாட்டி என்று சொல்லியதை கேட்டு சற்று அதிர்ச்சியாகினான். அவளையே தான் பார்க்க வேண்டும் என்று அவள் ஆசை படுகிறாள் என்று புரிந்து கொண்டான்.
“நமக்கு நிச்சியம் தான் ஆகிருக்கு.. அதுவும் காலைல தான் ஆகிருக்கு. அதுக்குள்ளே இப்படி வெளி இடங்கள சுத்துறத யாராது பார்த்தா என்ன நினைப்பாங்க..? அதுக்கு தான் சொல்றேன்.., சீக்கிரம் சாப்பிடு கிளம்பலாம்...”
“நிச்சியம் தான் ஆகிருச்சுல.. நிச்சியம் ஆகிட்டாளே பாதி பொண்டாட்டி தான்...” என்று சிலுப்பிக் கொண்டாள். அதற்குள் ஜூஸ் வரவும், அதை குடித்து கொண்டே,
“நானும் கேட்டுட்டே இருக்கேன்.. எனக்கு பதிலே சொல்லாம தப்பிச்சு ஓடுற.. நான் அப்போ கேட்டதுக்கு நீ இப்போவே பதில் சொல்ற.. இல்ல அப்பறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது...”
சுந்தரம் அவளது மிரட்டலை பார்த்து சிரித்தான். அவள் புரியாமல் அவனையே பார்க்கவும், “என்னோட தம்பி, தங்கைக்காக தான் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டேன். மற்றபடி உன்ன போல அடாவடி பெண்ணலாம் எனக்கு பிடிக்காது...” என்று விளையாட்டுக்கு சொன்னான்.
அடாவடி பெண் என்று சுந்தரம் அபியை சொல்லவும் அவளுக்குள் கோபம் அதிகரித்தது.
“நான் அடாவடி பொண்ணா...? அப்டி நீங்க யாருக்காகவோ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க வேண்டாம். நான் வீட்டுல பேசி கல்யாணத்த நிறுத்திடுறேன்...” என்று அவளும் சொல்ல,
இவள் நிஜத்திலே வீட்டில் சொன்னாலும் சொல்லுவாள் என்று பயந்து, “ஏய்.. என்ன பேசுற..? கல்யாணம் நடக்கும்... இப்போ பிடிக்கல.. அதுக்காக...? பின்னாடி ஒத்துவரும்., ஒரு பிரச்சனையும் இல்ல...” சமாளித்து சொன்னான்.
“ஹ்ம்ம்.... அப்டியா... அப்போ சரி.. ஒத்துவரும் போதே கல்யாணம் பண்ணிக்கலாம்..” என்று விடாமல் அவனை சீண்டினாள்.
“இப்போவே கொஞ்சம் கொஞ்சம் பிடிக்க தான் செய்யுது... கல்யாணம் இப்போவே பண்ணிக்கலாம்..” என்று ஒருவழியாக தானாக அவளை பிடிக்கும் என்று சொன்னான்.
“உனக்கு என்னை பிடிச்சுருக்குன்னு நான் நம்புற மாதிரி நீ ஏதாது பண்ணனும்...” என்று கூறி அவனை ஒருமாதிரி பார்த்து கண்ணடித்தாள்.
அவள் கண்ணடிக்கவும் சுந்தரத்திற்கு உள்ளுக்குள் ஏதோ செய்தது. அவனது முகத்தில் தானாக சிரிப்பு வந்தது.
“நீ சொல்ற எதையும் பண்றதுக்கு இது இடம் கிடையாது.. கிளம்பு ஜூஸ் குடிச்சுட்டா... போகணும்.. ஆனந்த், தங்கச்சி வர்றதுக்கு முன்னாடி நான் போய் எல்லா ஏற்பாடுகளையும் பண்ணனும்...” என்று பொறுப்போடு பேசினான்.
“எந்த ஏற்பாடா இருந்தாலும் போய் பார்த்துக்கலாம்... இப்போ நீ ஐ லவ் யூ ன்னு சொல்லணும்... சொல்லு அப்பறம் கிளம்பலாம்..” என்று சாதாரணமாக கூறி விட்டு அவனது முக பாவங்களை ரசித்து கொண்டே அமர்ந்திருந்தாள்.